Thursday, August 29, 2013

பதிவர் சந்திப்பு கவுண்ட் டவுன்

தாமரைப் பூத்த தடாகம்
பார்க்கையில் கொள்ளை அழகுதான்
ஆயினும் அது தேக்கிவைத்திருக்கும் குளுமை
அதனினும் மிக அருமையானது
அது பார்வைக்குப் பிடிபடாதது
அந்த சொல்லுக்கு அடங்கா இனிமை
குளத்தினுள்  இறங்கிடத் துணிபவருக்குமட்டுமே
நிறைவாய் கிடைத்திட என்றும் சாத்தியம்

தத்தித் தவழும் குழந்தை
பார்க்கப் பார்க்க  அழகுதான்
ஆயினும் அது தன்னுள் கொண்டிருக்கும்
தெய்வீக மகிழ்வுப் பிரவாகம்
பார்வைக்குப் பிடிபடாதது
அதன் அருமை பெருமை
அதனை அள்ளிக் கொஞ்சத் தெரிந்தவர்கள் மட்டுமே
முழுதாய் அனுபவத் தறியச் சாத்தியம்

சன்னதிக்குள் காட்சிதரும் தெய்வம்
கண்கொள்ளா அருமைக் காட்சிதான்
அதனினும் அதன் அளவிடமுடியா அருட்திறம்
அறிவிற்குப் பிடிபடாததது
நிரூபிக்க இயலாதது
ஆயினும் அதன் அருளும் சக்தி
மாசற்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே
அறிந்து உணர்ந்து பெறச் சாத்தியம்

எழுத்தில் அறிந்த பதிவர்களை
எதிரில் காணுதல் மகிழ்வுதான்
அதனினும் அவர்தம் பண்பு நலம்
நட்புக்கென உயிர்தரும் உயர்குணம்
பதிவில் அறிய முடியாததே
விளக்கியும் புரிய முடியாததே
ஆயினும் அவர்தம் அருமை பெருமைதனை
சந்திப்பில் சந்தித்து  மகிழ்ந்திருப்போர் மட்டுமே
தெளிவாய்  முழுதாய் புரியச் சாத்தியம்

எனவே
பதிவர் அனைவரும் அவசியம் வருவீர்
சந்திப்பின் சக்தியை முழுதாய் உணர்வீர்

Tuesday, August 27, 2013

பதிவர் சந்திப்பு -கவுண்ட் டவுன் ஆரம்பம்-

 முகம் மட்டுமா மனம் காட்டும்
ஒருவரின் பேச்சும் எழுத்தும்
செயலும் கூடத்தான் துல்லியமாய் மனம் காட்டும்
உள்ளத்தில் உண்மை ஒளிஉண்டாயின் அது
வாக்கினில் உண்டாம் என்கிற கவிதையின்
 பொருள் கூட அதைத்தானே சொல்கிறது

கையில் கிடைத்த ஒரு முடியைவைத்து
சாமுத்திரிகா லட்சணத்தின் விதிகளின்படி
அந்தஅழகு நங்கையின் உருவை வரைந்து
அந்த மகாராணியைத் தேடிப்பிடித்த
விக்ரமாதித்தன் கதை நாம் அனைவரும்
அறிந்ததுதானே

அதைப்போன்றே முகக்கண்ணால் காணாது
 பதிவர்கள்அனைவரையும் அவர்களது
பதிவின் முலம் அவர்களது பரந்த உயர்ந்த
உள்ளத்தினை அகக்கண்ணால்
 புரிந்து கொண்ட நாம் அவர்களை
 நேரடியாகச் சந்தித்துஉரையாடவும் தொடர்ந்து
அவர்களுடன் பாசத் தொடர்பினை
ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த
 சென்னைப்  பதிவர் சந்திப்புத் திருவிழா
அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக
அமையவுள்ளது என்றால் அது மிகை அல்ல

அதற்காக பெரிதும் பாடுபட்டு மிகச் சிறப்பான
ஏற்பாடுகளைச் செய்துள்ள சென்னை பதிவுலக
நண்பர்களுக்கு மகிழ்வூட்டும் விதமாகவும்
நன்றி காட்டும் விதமாகவும்
இந்த திருவிழாவில்
பெருந்திரளாக கலந்து கொள்வதுடன்
 இந்த விழாமிகச் சிறப்பாக நடைபெற நம்மால் ஆன
உதவிகளை செய்வதுடன் நாம் நம்மை முழுமையாக
இந்த நிகழ்வுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வோமாக

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லட்டும்
இப்படை தோற்கின் எப்படைதான் வெல்லும் என
 "எப்படையும் " மனத்தினுள் பயம்  கொள்ளட்டும்

நாங்கள்தான் பதிவர்கள் (4 )

எம் படைப்புகள் எல்லாம்...
ஆற்று நீரை எதிர்த்துநிற்கும்  எனும்
அதீத  எண்ணம் ஏதும்
எங்களில் எவருக்குமில்லை

தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
மலர்ந்து சிரிக்கும் என்கிற
கற்பனையும் எங்களுக்கில்லை

எண்ணையில்லா தீபத்தை
எரியச்  செய்யவோ
அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ
 எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய்  சக்தியில்லைஎன்பது
எங்களுக்கும் தெரியும்

 சராசரித்  தேவைகளை அடையவே
 திணறும்அல்லல்  கதைகளை
நியாயமாக  நேர்மையாக வாழ
நாங்கள் படும் துயர் களை
எமக்குத் தெரிந்த மொழியில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் பெற்றுக் கொள்கிறோம்

அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை
உல்லாச அனுபவங்களை
கொஞ்சம் மசாலாக் கலந்து
விருந்தாக்கி   மகிழ்கிறோம்

எமது எல்லைக்கு  எட்டிய வகையில்
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
 "யாது ஊரே யாவரும் கேளீர்  "என
பண்புடன் வாழ முயலும்
 பதிவர்கள்  நாங்களெல்லாம்
இன்றைய  நோக்கில்
ஒரு சிறிய குழுவே

ஆயினும்
உலகுக்கு ஒரு நாள் புரியும்
எங்கள் அதீத அசுர  பலமே 

Sunday, August 25, 2013

பதிவர் சந்திப்பு- ( 3 )

பெண் :
வெத்தலைப் பாக்கு வச்சு உன்னை
அழைச்சாங்களா-இல்லை
வீடு வந்து  உனக்குத் தாக்கல்
சொன்னாங்களா
எதுக்கு நீயும் சென்னை போக
இப்படித் துடிக்கிறே-கேள்வி
கேட்டா மட்டும் என்னை எதுக்கு
இப்படி முறைக்கிறே

ஆண் :
காசு கொடுத்து கட்சி கூட்டும்
 கூட்டமில்லடி -இது
தலைவனாக நடிகன் கூட்டும்
கூட்டமில்லடி
காசு போட்டு நாம நடத்தும்
 நல்ல கூட்டமே-இதில
கலந்துக் காம நாம இருந்தா
நமக்கும் நட்டமே

செய்திக் குள்ளே கருத்தை நுழைச்சு
 குழப்பும் பேப்பரும்-தினமும்
தொடருக் குள்ளே விஷத்தை மறைச்சு
 பரப்பும் டி. வியும்
நல்ல வழியை நம்மை விட்டு
மறைக்கப் பார்ப்பதை-தினமும்
சொல்லிச் செல்லும் உறுதி இங்கே
யாருக்கி ருக்குது ?

இரத்தச் சூடு இருக்கும் வரையில்
கும்மாளம் போட்டு-பணத்தை
கறுப்பு வெள்ளை யென்று கணக்கில்
 மறைச்சுச் சேத்து
அரசுச் சின்ன மிரட்டல் போட
மக்களைப் பார்க்கும்-நடிகரின்
முகத்தி ரையினைக் கிழிக்கும் தெனவு
 யாருக்கி ருக்குது ?

விதியைச் சொல்லி மதியை மாற்றி
 பிழைக்கும் மனிதரை-அதையே
மாற்றிச் சொல்லி பிழைப்பை ஓட்டும்
தெளிந்த எத்தரை
சரிக்குச் சரியாய் கேள்வி கேட்டு
மடக்கும் தைரியம்-இங்கு
பதிவர் தவிர உலகில் வேறு
யாருக்கி ருக்குது ?

ஆண்கள் பெண்கள்  பாகுபாடு
ஏதும் இன்றியே-மயக்கும்
ஜாதி மதங்கள் பிரிக்க முடியா
 தனித்த வழியிலே
ஆண்டு இரண்டைக் கடக்கும் பதிவர்
அமைப்புப் போலவே
நல்ல அமைப்பு உலகில் வேறு
எங்கு இருக்குது ?

பெண்:
சொல்லிச் சொல்லி கேட்கக் கேட்க
இனிக்குது மச்சான்-இன்னும்
சொல்லச் சொன்னா நூறு சொல்வே
புரியுது மச்சான்
சட்டு புட்டுனு கிளம்பி நீயும்
போய்வா மச்சான் -வரும்போது
வாச  மல்லி நாலு முழமா
வாங்கிவா மச்சான்

Friday, August 23, 2013

சென்னைப் பதிவர் சந்திப்பு ( 2)

சிந்தையிலே சென்றஆண்டு
சந்திப்பு கமகமக்க
சென்னைநோக்கி சந்தோஷமா வாரோம்-எல்லோரையும்
சந்திக்கவே சென்னைநோக்கி வாரோம்

புலவரையா ஏற்றிவைத்த
சுடரொளியின் பரவசத்தில்
உழன்றிடவே சென்னை நோக்கி வாரோம் -எம்மை
உரமேற்றிக் கொள்ளவென்றே வாரோம்

எல்லையென்ற தொல்லையது
பதிவர்க்கில்லை என்பதனை
சொல்லிடவே சென்னை நோக்கி வாரோம்-உலகம்
முழுதிருந்தும் உற்சாகமாய் வாரோம்

ஜாதிமத சூதுவாது
ஏதுமில்லை எமக்கென்ற
சேதிசொல்ல சென்னை நோக்கி  வாரோம்-அதற்குத்
தெளிவானச் சாட்சியாக வாரோம்

இல்லையில்லை இதுபோன்ற
நல்லதொரு அமைப்பென்று
உறுதிசெய்ய சென்னைநோக்கி வாரோம் -நாங்கள்
உறுதியாக முதல்நாளே வாரோம்


(தொடரும்

Thursday, August 22, 2013

பதிவர் சந்திப்புக் கவிதை (1)

சித்தம் எல்லாம் சென்னை நோக்கித்
திரும்பிக் கிடக்குதே--இன்னும்
பத்து நாளு இருக்கு தேன்னு
புலம்பித் தவிக்குதே

நித்தம் நித்தம் பதிவில்  பார் த்து
ரசித்த பதிவரை-நேரில்
மொத்த மாகப் பார்ப்ப தெண்ணி
மகிழ்ந்து துடிக்குதே

நட்பைத் தொடர பதிவைத் தொடரும்
மொக்கைப் பதிவரும்-சொல்லும்
வித்தை அறிந்து வியக்க வைக்கும்
கவிதைப் பதிவரும்

சித்த மதனில் பேதங் களின்றி
சேரும் நாளிதே -உலகின்
ஒட்டு மொத்த பதிவர் மனமும்
நாடும் நாளிதே

கடவுள் பெருமை நாளும் எழுதி
கலக்கும் பதிவரும் -அதனை
மடமை என்று பதிவு போடும்
புரட்சிப் பதிவரும்

இடமாய் வலமாய் அமர்ந்து நட்பை
சுகிக்கும் நாளிதே
கடலில் நதியாய் விரும்பிச் சேரும்
இனிய நாளிதே

கடமை முடித்துக் கரையில் இருக்கும்
மூத்த பதிவரும் -மிரட்டும்
கடமை ஆற்றைக் கடக்கத் திணரும்
இளைய பதிவரும்

வயது மறந்து நட்பில் உறைந்து
மகிழும் நாளிதே-வாழ்வுப்
பயண நெறியைப் பகிர்ந்துப் புரிந்து
தெளியும் நாளிதே


(தொடரும் )

திசை மாறிடும் விசைகள்

ஆஸிட்டுகள்
கறையழிக்கிறதோ இல்லையோ
பல பெண்களின் உயிரழிக்கிறது

நிறுத்தங்களில்
பஸ் நிற்கிறதோ இல்லையோ
பல காதலர்கள் நிற்கிறார்கள்

கல்லூரிகளில்
பாடம் நடக்கிறதோ இல்லையோ
காதல் பாடம் நடக்கிறது

காலம்
அறிவை வளர்க்கிறதோ இல்லையோ
உடல் உணர்வை வளர்க்கிறது

இளமை
இலக்கை நினைக்கிறதோ இல்லையோ
நடுவில் குழம்பித் தவிக்கிறது

அரசியல்
நடுநிலை வகுக்கிறதோ இல்லையோ
ஊரினைப் பிரித்து எரிக்கிறது

காதல்
ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
காதலரை அழித்துச் சிரிக்கிறது

Wednesday, August 21, 2013

பயனுள்ள பொய் உயர்வானதே

திசைகள் என்பதுவும் கற்பனையே
வானம் என்பது வெட்டவெளியே
கதிரவன் உதிப்பது கிழக்கு எனவும்
தினமும் மறைவது மேற்கில் எனவும்
நாமாக வகுத்துக் கொண்டதெல்லாம்
பகுத்தறிவு நோக்கில் உற்றுப் பார்க்க
பட்டப்பகல் பித்தலாட்டமே

ஆயினும் என்ன செய்ய
அந்தப் பித்தலாட்ட திசைக்குறிகளின்றி
பூமியில் வாழ்க்கை நொண்டியாட்டமே

அட்சாம்சம் என்பதும் கற்பனையே
அது நாமாக வரைந்திட்ட கோடுகளே
படுக்கைக் கோடுகள் அட்சரேகையென்றும்
செங்குத்துக் கோடுகள் தீர்க்கரேகையென்றும்
நாமாக வரைந்து கொண்டதெல்லாம்
பாமரனின் நோக்கில் பார்க்க
படித்தவனின் ஏமாற்றுவேலையே

ஆயினும் என்ன சொல்ல
அந்தக் கற்பனைக் கோடுகளின்றி
ஊர்உலகை அறிதல் திண்டாட்டமே

அந்தவகையில்

ஆண்டவன் கூடக் கற்பனையே
நாமாக ஆக்கிவைத்த அற்புதமே
அவன்தான் உலகைப் படைத்தானென்றும்
அவன்தான் அதனைக் காக்கிறானென்றும்
ஆத்திகவாதிகள் சொல்லித் திரிவதெல்லாம்
நாத்திகவாதிகள் நோக்கில் பார்க்க
பகல்வேஷக்காரனின் பொய்ப்புலம்பலே

புலம்பலது பொய்யென க்கொண் டால்கூட
இல்லையென்ற எதிர்மறையைவிட
இருக்குதென்ற நேர்மறை உயர்வானதுதானே
பயனற்ற உண்மைக்கு பயனுள்ள பொய்
பலமடங்கு உயர்வெனில் அது நியாயம்தானே

Monday, August 19, 2013

விஷத்தில் ஏதன்னே உள்ளுர் வெளியூர்

உன்னதமானதை
ஊருக்கும் உலகுக்கும் பயனுள்ளதை
நகர் நடுவில் நாற்சந்தி மத்தியில்
ஒளிவு மறைவின்றி
சகாய விலையில் கொடுக்க முயலுகையில்
கண்டு முகம்சுளித்து விலகும் உலகு

பயனற்றதை
மனதிற்கும் உடலுக்கும் நலமற்றதை
அரண்மனையாய் உயர்ந்த மால்களில்
அலங்கார ஆடையிட்டு மறைத்து
கூடுதல் விலைவைத்துக் கொடுக்கையில்
துள்ளி ஓடி வரும் அள்ளிப் பெருமை கொள்ளும்

அமுதம் விற்பதாயினும்
கொஞ்சம் விளம்பரக் கஞ்சா கலக்கி
ஆர்கானிக் உணவாயினும்
கொஞ்சம் அகினோமோட்டோ சுவை கூட்டி
சந்தையும் விலையும் விளம்பரமுமே
நம் தேவைகளை முடிவு செய்ய விட்டபின்
இதில் உள்ளூர் விஷமென்ன
பன்னாட்டு பகாசுர விஷமென்ன ?

Saturday, August 17, 2013

எழுதுவது ஏன் ?

ஒலிகுறிப்பாய்ச்  சொன்னவரையில்
மிக நெருக்கமாய் இருந்த உணர்வுகள்
வார்த்தையானதும் மொழியானதும்
அன்னியப்பட்டுப் போனதால்

அகராதிக்குள் வராத
"அய்யய்யோ "சொல்கிற அவலமாய்
"ஆஹா "சொல்கிற வியப்பாய்
"அச்சச்சோ" சொல்கிற அதிர்ச்சியாய்
"க்க்கும்" சொல்கிற சிணுங்கலாய்

எந்த ஒரு வார்த்தையும்
எத்தனைப் பக்க விவரிப்பும்
மிகச் சரியாய்ச் சொல்லமுடியாது
தட்டுத் தடுமாறித் தத்தளிப்பதால்

அனுபவித்ததும்
உணர்ந்ததும்
சொல்ல நினைத்ததும்
சொன்னதும்
வெவ்வேறாகிப்போவதால்

ஒவ்வொரு படைப்பின் பின்னும்
பிண்டத்தைப் பெற்ற தாயாய்
கதிகலங்கிப் போகிறேன் நான்

ஒவ்வொரு படைப்பும் என்னை
வீழ்த்தி விட்டே போவதால்
காலமெல்லாம்
எழுந்திடவே  எழுதுகிறேன் நான்

Thursday, August 15, 2013

இழந்துபின் தேடுவதைத் தவிர்ப்போம்

சாலை கடக்கும் ஆடுகள்
கடித்துக் குதறிவிடாமல்
மரமாகி அது தன்னைத் தானே
காக்கும் சக்தி பெரும்வரை
அந்தச் செடிகளுக்கு
வேலியாக எப்போதும் இருப்போம்

தத்தித் தவழுதலன்றி
வாது சூது ஏதுமறியா
அந்தப் பச்சிளம் குழந்தை
தடுமாற்றம் ஏதுமின்றி
தன் காலில் தானாக நிற்கும்வரை
சோர்வில்லா பாதுகாவலனாய் இருப்போம்

நெடுந்தொலைவுப் பயணத்தில்
நடுவழித் தெருக்கூத்தில்
மனம் மயங்கித் தங்கிவிடாது
வாகனம் விடுத்து தேங்கிவிடாது
காத்திடும் துணையாக இருப்போம்
வழியறிந்த வழிகாட்டியாய் இருப்போம்

பருவ ஆற்றில் நீந்திக் களிக்கும்
பயமறியா பருவ  வயதினர்
உணர்வுச் சுழியினுள் சிக்கிவிடாது
காத்திடக்   கவனமாய்த் துடிப்போடு
கரையினில் எப்போதும் இருப்போம்
இழந்துபின் தேடுகின்ற வலியதனைத் தவிர்ப்போம்

Wednesday, August 14, 2013

பிரிவுகள் என்பது பிளவுகள் இல்லை

கலைவண்ணம் மிக்க ஓவியத்தில் அமைந்த
விதம் விதமான வண்ணங்கள்
அழகா இல்லை மருவா ?

உயரிய நோக்கம் கொண்ட உன்னத காவியத்தில்
பலதரப்பட்ட கதைமாந்தர்கள்
சிறப்பா இல்லை இழிவா ?

கதம்ப மாலைக்குள் நேர்த்தியாய் இணைந்த
பல்வேறு வண்ணமலர்கள் மாலைக்கு
எழிலா இல்லை உறுத்தலா  ?

பல்வேறு சுவைகொண்ட நல் உணவென்பது
மகிழ்வான தருணத்து விருந்துக்கு
சுவையா இல்லை சுமையா ?

எதையும் ஏற்கும் பக்குவம் கொண்ட இந்தியனுக்கு
பலவகை இனமும்  மதமும்
படியா இல்லை தடையா ?

பிரிவுகள் என்பது  பிளவுகள் இல்லை
இனியேனும் அறிந்து தெளிவோம்
வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
தவறென ஒதுக்கி உயர்வோம்

Monday, August 12, 2013

கவிஞனாகிப் பயனற்றுப்போகாதே நீ

கண்ணில்படும் எப்பொருளையும்
கைவசப்படுத்திச் செம்மைப்படுத்தி
எப்படிக் காசாக்கலாம் என நினைக்கும்
வியாபாரிகளுக்கான உலகில்
வியாபாரத்திற்கான உலகில்....

அன்றாட நிகழ்வுகள் எதையும்
எப்படி ஊதி ஊதிப் பெரிதாக்கலாம்
எப்படி  ஓட்டாக்கலாம் என  நினைக்கும்
அற்பர்களுக்கான பூமியில்
அரசியல்வாதிகளுக்கான  பூமியில்...

சமநிலைதாண்டிப் பெருக்கெடுக்கும்
ஆசைகளை உணர்வுகளை
எப்படி அனுபவிக்கலாம் என எண்ணும்
கயவர்களுக்கு மத்தியில்
சுயநலமிகளுக்கு மத்தியில்...

கையிலகப்பட்ட அரியபொருளையும்
கண்ணிலகப்பட்ட புதிய நிகழ்வையும்
பொங்கிப் பெருகும் மன உணர்வுகளையும்
எப்படி ப் படைப்பாக்கலாம் என மட்டுமே எண்ணும்
அற்பக் கவிஞனாக மட்டும் ஆகிப்போகாதே நீ
உறவுக்கும் உனக்கும் பயனற்றுப் போகாதே நீ

Saturday, August 10, 2013

போதி மரத்துப் புத்தனும் நவீன புத்தனும்

தேவைகள் மூன்றும்
ஒழிந்து ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
குடிசை வாசல்களில்
சாக்கடை ஓரங்களில்
நாளும் பொழுதும்
செத்துச்  செத்து வாழ்ந்துகொண்டிருக்கும்
கோடிக்கணக்கானோருக்கு மத்தியில்

ஆசைகள் மூன்றும்
அடையமுடியாதுபோனதால்
அர்த்தமற்றுப்போனதால்
புண்ணிய ஸ்தலங்களில்
நதியோரக் கரைகளில்
ஒவ்வொரு நாளும்
சாவதற்காகவே  வாழ்ந்து கொண்டிருக்கும்
லட்சக் கணக்கானோருக்கு இடையில்

மூவாசையும் அனுபவித்தும்
அடங்காது திமிருவதால்
மாட மாளிகைகளில்
வஸந்த மண்டபவங்களில்
ஒவ்வொரு கணமும்
உணர்வாலும் உடலாலும்
வாழ்ந்துக்  களித்துக் கொண்டிருக்கும்
ஆயிரக் கணக்கானோருக்கு எதிரில்

முதல் பத்தில்
மாளிகைவாசியாய் உல்லாசமாய்
இரண்டாம் பத்தில்
குடிசை வாசல் பாவியாய்
மூன்றால் பத்தில்
ஞானியாய்ப் பரதேசியாய்
மாதத்திற்குள்ளே மூன்றையும்
அனுபவிக்கும் நடுத்தரவாசிகூட.

இளம் பிராயத்தில்
மன்னனாய் சுகவாசியாய்.
வாலிப வயதில்
தேடித்திரிந்த பரதேசியாய்
முடிவாக போதிமரத்தடியில்
ஞானமடைந்த புத்தனாகத்தான்
ஒருவகையில் தெரிகிறான் எனக்கு

இன்னும் ஆழமாகச் சிந்திக்கையில்
சிகரம் ஏறி உச்சத்தில்
இறங்காது நிலைத்திருத்தல் கூட எளிது
சிகரமும் சமதளமும்
மாறி மாறி ஏறி இறங்கியும்
இந்த நவீன புத்தன்போல்
மனம் சோராது இருத்தலும்
வாழ்வை விடாது நம்பிக்கையுடன் தொடர்தலும்
உச்சத்திலேயே நிலைத்துவிட்ட புத்தனாயினும் கூட
இன்றைய  நிலையில்
நிச்சயம் சாத்தியமில்லை எனவேப்படுகிறது எனக்கு

உங்களுக்கு ?

Friday, August 9, 2013

வெத்து வேட்டு

கவர்ந்திழுக்கும்படியான
கவர்ச்சியான தலைப்பு
தொடர்ந்து படிக்கும்படியாக
சுவையாக முதல் வரிகள்
எரிச்சலூட்டாது ரசிக்கும்படியாக
இதமான தொடர்வரிகள்
ஆணித்தரமாய் மறுக்கும்படியாகவோ
முழுமனதாய் ஏற்கும்படியாகவோ
அருமையான  முடிவுரை

இவைகள் ஏதும்
கண்ணுக்கெட்டியவரையில் காணாததால்
நான் இன்றும் படைப்பாளி ஆகி
படிப்பவர்களை பரிதவிக்கவிடாது
படிப்பாளி ஆகிப்போகிறேன்

புத்தகக்காட்டிற்குள் நிச்சயம்
வீரிய விதைகள் சிதறிக் கிடக்கும் எனும்
வழக்கமான நம்பிக்கையிலும்...

சேகரிப்பின்றி கொடுக்க முயலுதல்
செல்வந்தனை வறியவனாக்கிவிடும் எனும்
மாற்ற முடியாத விதிப்படியும்...

Tuesday, August 6, 2013

இன்றைய நாளை நாமே கணிப்போம் ( தொடர்ச்சி ) அவல் 2 ( 3 )

என் நண்பன் வருவதற்கு முன்பாகவே  
மொட்டை மாடியில் தனியாக அமர்ந்து அதுவரை
நண்பன் சொல்லிய விஷயங்களை ஒருமுறை
சொல்லிப்பார்த்துக் கொண்டேன்

நிலவின் தேய்மானம் கிழக்கு நோக்கி இருப்பின் வளர்பிறை
அதுவே மேற்கு நோக்கி இருப்பின் தேய்பிறை
முழு வட்டத்திற்கான கோணம் 360 டிகிரி
நாம் நம் பூமியின் அரை வட்டத்தைத்தான் பார்க்கிறோம்
அதன் டிகிரி 180
சூரியன் ஒரு நாள் 1 டிகிரி வீதம் நகர்ந்து 30 டிகிரியை
ஒரு மாதத்தில் கடக்க
நிலாவோ ஒரு நாள் 12 டிகிரிவீதம் நகர்ந்து 30 நாளில்
360 டிகிரியையும்  கடந்துவிடும்

இதனை நான் முழுவதுமாக மனதில்
ஏற்றிக் கொள்ளவும் என் நண்பன் வரவும்
 மிகச் சரியாக இருந்தது

"நேற்று நான் சொல்லியவரையில்  எந்தக் குழப்பமும்
இல்லையே தொடரலாமா " எனச் சொல்ல
 நான் ஆர்வத்தில் வேகமாகத் தலையாட்டினேன்.
நண்பன் தொடர்ந்தான்

"வட்டத்தின் துவக்கப்புள்ளியும் முடிவுப் புள்ளியும்
ஒன்றுதானே.அப்போதுதானே அது வட்டமாக
 இருக்கமுடியும்

அதன்படி 0 டிகிரியும் 360 டிகிரியும் ஒரு புள்ளிதானே

இந்தப் புள்ளியில் அதாவது சந்திரனும் சூரியனும்
குறிப்பிட்ட இந்த புள்ளியில் அல்லது கோணத்தில்
இருப்பதை நாம் அமாவாசை என்கிறோம்

பின் சந்திரன்  0 லிருந்து ஒரு நாள் நகர்வதை
அதாவது சூரியனை விட்டு12 டிகிரி நகர்வதை
முதல் நாள் என்கிறோம்.இதை சமஸ்கிருதத்தில்
பிரதமை என்கின்றனர்

இப்படியே இரண்டாம் நாளை துவிதியை எனவும்
மூன்றாம் நாளை திரிதியை எனவும்
நாளாம் நாளை சதுர்த்தி எனவும்
ஐந்தாம் நாளை பஞ்சமி எனவும்
ஆறாம் நாளை சஷ்டி  எனவும்
ஏழாம் நாளை சப்தமி எனவும்
எட்டாம் நாளை அட்டமி எனவும்
ஒன்பதாம் நாளை நவமி எனவும்
பத்தாம் நாளை தசமி எனவும்

பதினோராம் நாளை ஏக் பிளஸ் தஸ்
என்பதுவாய் ஏகாதஸி எனவும்
பன்னிரண்டாம் நாளை தோ பிள்ஸ் தஸ்
என்பதுவாய் துவாதஸி எனவும்
பதிமூன்றாம் நாளை திரி பிளஸ் தஸ்
என்பதுவாய் திரியோதஸி எனவும்
பதி நான்காம் நாளை சதுர் பிளஸ் தஸ்
என்பதுவாய் சதுர்தஸி எனவும் குறிப்பிடுகிறார்கள்

பதினைந்தாம் நாள் பௌர்ணமி ஆகிவிடும்
இது வளர்பிறை

பின் இங்கிருந்து மீண்டும் ஒவ்வொரு நாளாக
வந்து பதினைந்தாம்  நாளில் மீண்டும்
அமாவாசை வந்துவிடும்
இது தேய்பிறை

இதை மட்டும் நாம் சரியாகப் புரிந்து கொண்டால்
அன்றைய தின் நட்சத்திரத்தைக் கண்டுபிடிப்பது
மிக மிக எளிது

மிகச் சுருக்கமாகச் சொன்னால்
சூரியனிடம் இருந்து சந்திரன் இருக்கும் தூரம்
திதி எனச் சொன்னால்
சந்திரன்  மிகச் சரியாக இருக்குமிடம் நட்சத்திரம்
அவ்வளவே

இன்னும் விளக்கமாகச் சொன்னால்
மதுரையிலிருந்து வடக்கே 100 கிலோமீட்டரில் இருக்கிறேன்
எனச் சொல்வதும் நான் திருச்சியில் இருக்கிறேன் எனச்
சொல்வதும் ஒன்றுதானே
அது மாதிரிதான் இது " எனச் சொல்லி நிறுத்தினான்

எனக்கு புரிந்தது போலத்தான் இருந்தது

(தொடரும் )

Saturday, August 3, 2013

இன்றைய தினத்தை நாமே கணிப்போம்(தொடர்ச்சி ) அவல் 2 (2)

இன்றைய தினத்தை நாமே கணிப்போம்(தொடர்ச்சி )
அவல் 2 (2)

நான் ஆவலுடன் நிமிர்ந்து அமர்ந்ததைப் பார்த்த
நண்பனின் முகத்திலும் உற்சாகம் படர்ந்தது

"எளிதான விஷயங்களை கடுமையாகச்
சொல்லப் புகுந்தால்அதை கருத்தூன்றிக்
கவனிக்கிறவர்கள் அரிதானவிஷயங்களை
எளிமையாகச் சொன்னால்
அதனை அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்,
நல்லவேளை  நீ அப்படியில்லை" என என்னைப்
பாராட்டித் தட்டிக் கொடுத்த நண்பன் தொடர்ந்து
பேசத் துவங்கினான்

"கணக்கில் கூட்டல் கழித்தல் பழகுவதற்கு முன்னால்
மனப்பாடமாக வாய்ப்பாட்டை சொல்லிப்பழகுதல்
எப்படி அதிகப் பயன்தருமோ  அதைப்போல
திதி நட்சத்திரத்தை கணிக்க தெரிந்து கொள்ளும் முன்
நான் சொல்கிற கீழ்க்கண்ட  விஷயங்களை
கவனமாக மனதில் கொள்வது நல்லது

வட்டம் என்பது 360 டிகிரி என்பது நீ அறிந்ததுதான்
நாம் பூமியின் அரைவட்டத்தைத்தான் எப்போதும்
பார்க்கிறோம் என்பதும் நீ அறிந்ததுதான்
அது 180 டிகிரிதான் என நான் சொல்லி நீ
அறியவேண்டியதில்லை

சூரியன் தினமும் அதன் சுற்று வட்டப் பாதையில்
ஒரு டிகிரிமட்டுமே கடந்து ஒரு வருடத்தில்
ஒரு சுற்றை முடிக்கிறது,பூமி தன்னைத்தானே
சுற்றிச் செல்வதால் தினமும் அது 360 டிகிரியையும்
கடந்துவிடுவதுபோல் நமக்குப்படுகிறது

ஆனால் சந்திரன் ஒரு நாளைக்கு மிக விரைவாக
12 டிகிரி கடந்துவிடுகிறது.

இந்தக் கணக்குப்படி சந்திரன் ஒரு மாதத்தில் 360 டிகிரி
கடந்து விட சூரியன் 30 டிகிரி மட்டுமே நகரும் என்பது
எளிதாகப் புரிகிற கணக்குதானே

இதற்கு  உதாரணமாக நாம் தினம் பயன்படுத்தும்
கடிகாரத்தையே எடுத்துக் கொண்டால் இது
எளிதாகப் புரியும்

கடிகாரத்தில் எண்கள் நகராமல் இருக்க
கடிகாரத்தின் பெரிய முள் மிக வேகமாக ஓடி
ஒரு சுற்று சுற்றி வர சின்ன முள் ஒரு எண்ணை விட்டு
நகருதல் போல சந்திரன்  360 டிகிரியையும் கடந்து வர
ஒரு மாதத்தை எடுத்துக் கொள்ள சூரியன் ஒரு வருடம்
எடுத்துக் கொள்கிறான்

ஜாதகக கட்டத்தில் உள்ள பன்னிரண்டு கட்டங்கள்
பன்னிரண்டு மாதங்கள்தான்,மேஷம் என்பது சித்திரை
அப்படியே ரிஷபம் என்பது வைகாசி,,,
இப்படியே தொடர்ந்து சொல்லிவந்தால்
மீனம் என்பது பங்குனி என்பது
உனக்கு எளிதாகப் புரியும் தானே

உனது ஜாதக் கட்டத்தில் சூரியன் எந்த மாதத்தில்
குறிக்கப் பட்டிருக்கிறதோ நீ அந்தத் தமிழ் மாதத்தில்
பிறந்திருக்கிறாய் என அர்த்தம்

இன்று இதுமட்டும் போதும் என நினைக்கிறேன்
இதற்கு மேல் சொன்னால் கொஞ்சம் குழப்பும்
இன்று சொன்னது வாய்ப்பாடு போலத்தான்
இதை மட்டும் மிக கவனமாக மனதில் ஏற்றிக் கொள்
அப்போதுதான் காலண்டர் இன்றியே திதி நட்சத்திரம்
கணிப்பது மிக எளிதாக இருக்கும் "என்றான்

Thursday, August 1, 2013

இன்றைய நாளை நாமே கணிப்போம் அவல் 2 ( 1 ) சென்றபதிவின் தொடர்ச்சி


நிலவின் மங்கலான ஒளி லேசான குளிர்ந்த காற்று
மொட்டை மாடிச் சுகத்தைக் மேலும் கூட்டிக் கொண்டிருந்தது

நண்பனும் சுவாரஸ்யமாகத் தன் பேச்சைத் தொடர்ந்தான்

"சந்தியா காலங்கள் என்றாலே இரவும் பகலும்
பகலும் இரவும் சந்திக்கிற பொழுது என்பதுவும்
அந்த காலத்தில் செய்யப்படுகிற சூரியவந்தனம்
சந்தியாவந்தனம் என்பது அனைவருக்கும்
 தெரிந்ததுதானே

(அதனை காயத்திரி ஜெபம் எனச் சொன்னாலும்
அந்த ஜெபத்திற்கும் காயத்திரி தேவிக்கும்
 எந்த விதத்திலும் தொடர்பில்லை
என்பது வேறு விஷயம் )

முன்பின் போகாத ஊருக்குப் போனால் நமக்குத்
திசைக்குழப்பம் வருவது சகஜம்.அந்தக் காலத்தில்
ஒரு பிராமணன் எந்த ஊருக்குப் போனாலும்
காலையும் மாலையும் தவறாமல் சந்தியாவந்தனம்
செய்வதால் அவருக்கு திசைக் குழப்பம் வரச்
சந்தர்ப்பமே இல்லை

எப்படி அத்தனை ஜீவ ராசிகளும் உயிர் வாழ சூரியன்
அவசியமோ அதைப்போலவே அன்றைய
 நட்சத்திரம் திதிமுதலானவைகளைத்
 தெரிந்து கொள்ள முதலில்
கிழக்கு மேற்கு தெரிவது மிக மிக அவசியம்

கிழக்கு மேற்கு அறியும்போதே சூரியன்
 பயணிக்கும் நீள் வட்டப்பாதையும் அதில்தான்
 சந்திரனும் பயணிக்கும் என்பதுவும்
 உனக்கும் தெரிந்ததுதானே

இப்போது கிழக்கு மேற்கு தெரிந்துவிட்டால்
இன்று பிறையாகத் தெரிகிற சந்திரன் வளர்பிறையா
அல்லது தேய்பிறையா எனச் சொல்ல அதிகம்
மெனக்கெடவேண்டாம்

நிலவின் தேய்மானப் பகுதி
கிழக்கு நோக்கி இருந்தால் அது வளர்பிறை
தேய்மானப் பகுதி மேற்கு நோக்கி இருந்தால்
அது தேய்பிறை அவ்வளவுதான் " என்றான்

இப்படி எளிதாக வளர்பிறை தேய்பிறை
குறித்து அறிய முடிகிற நிலையில் அதனை
காலண்டரை  மட்டுமே பார்த்து சொல்லக்
கூடிய நிலையில்இத்தனை காலம் இருந்தது
 கொஞ்சம்அவமானமாகத்தான் இருந்தது

"சரி இப்போது நிலவைப்பார்த்துச் சொல்
இது வளர்பிறையா தேய்பிறையா எனச் சொல் "
என்றான நண்பன்

என் ஊர் ஆனதால் எனக்கு திசைக் குழப்பமில்லை
நிலவின் தேய்மானப் பகுதி கிழக்கு நோக்கி இருந்தது
எனவே சந்தேகமில்லாமல் "வளர்பிறை :என்றேன்

:மிகச் சரி ,இனி உனக்கு வளர்பிறை தேய்பிறை தெரிய
காலண்டர் தேவைப்படாது.அடுத்து திதி நட்சத்திரம்
குறித்தும் காலண்டர் இல்லாமல் அறிதல் எப்படி
எனச் சொல்லவா ? "என்றான் நண்பன்

நான் ஆவலுடன் நிமிர்ந்து அமர்ந்தேன்

(தொடரும் )