Sunday, August 9, 2015

முட்டுச் சந்து

 ஒவ்வொரு பண்டிகையின் போதும்
சட்டைக்கு அளவு கொடுக்கையில் 
"கொஞ்சம் வைத்துத் தை
வளர்கிற பிள்ளை " எனச் சொல்லி
கொஞ்சம் பெரிதாகவே தைத்துக் கொடுப்பாள் அம்மா
என்றைக்கோ...எவனோ..அதன் காரணமாய்
"தொள தொள மணி "என வைத்த பெயர்
இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது

கல்லூரிக்குள் நுழையும் நாள் முதலே

வேலைக்கான தயாரிப்புப் பணியில்
முழுவதுமாக என்னை முடக்கி வைப்பார் அப்பா
கல்லுரிக் கலாட்டா
நண்பர்கள் உல்லாசம் என
நான் கதைவிடுவதெல்லாம் கூட
சினிமா பார்த்துக் கற்றுக் கொண்டதுதான் 

சம்பாத்தியம் தந்த தெம்பில்

கொஞ்சம் நான்
நடுத்தரம் மீறிய உல்லாசத்தில்
மிதக்க நினைத்தாலும்
ஏன் நடக்க நினைத்தாலும் கூட
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து
உபன்யாசம் செய்து என்னை
ஓய்ந்து உட்காரச் செய்வாள் மனைவி.

நடுவயதில்

திமிறித் தாவிய தேவைகளை
அடக்கி ஒடுக்கிய மிதப்பில்
அல்லது அலுப்பில்
கொஞ்சம் ஓய்ந்து சாய எத்தெனிக்கையில்
பால் வைத்த நெற்பயிறாய்
பருவம் எய்தினின்று
என்னை பதறச் செய்வர் பிள்ளைகள்.
அதனால்
தொடரோட்டம் தொடர்ந்து தொடரும்.

அனைத்து கடமைகளையும்

செவ்வனே செய்து முடித்து
நிகழ்காலக் காற்றைக் கொஞ்சம்
சுவாசிக்க முயலுகையில்
செத்த நாக்கிற்கு கொஞ்சம்
சுவை காட்ட நினைக்கையில்
"பழைய நினைப்பா பேராண்டி.."என
பரிகாசம் செய்வான் நண்பன்.

எனக்கென்னவோ..இப்போதெல்லாம்...

கிழிந்த சாக்குப் பையில்
அடுக்கி வைக்கப்பட்ட அடுக்கு இலையை
எடுக்க முயலும் ஒவ்வொரு முறையும் 
"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது.

என்ன செய்வது...

உடலிருக்கும் இடத்திலேயே மனதை வைப்பதும்
எப்போதும்
நிகழ்காலத்திலேயே நிலைத்து நிற்பதுமே
"வாழுதல்"என்பது கூட
எதிர்காலத்தின் நீட்சி
ஒரு முட்டுச்சந்தில்
முட்டி நிற்கையில்தான்
எல்லோருக்கும் போல  
எனக்கும் புரியத் துவங்குகிறது.

8 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

முட்டுச்சந்தை சாதாரணமாக நினைக்கக்கூடாது. பலருக்கு ஞானம் பிறப்பதுஅங்கேதான்.

திண்டுக்கல் தனபாலன் said...

முட்டுச்சந்து - அனுபவத்தின் வளர்ச்சி...

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை எத்தனை முட்டுச் சந்துகள்.... ஆனாலும் அங்கே நமக்கு ஞானம் கிடைக்கிறதே!

கோமதி அரசு said...

மீள் கவிதையா? முன்பே படித்தது போல் இருக்கே!
வாழ்க்கையில் இப்படித்தான் முட்டுசந்துகள் நிறைய.
"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்"//

இப்படித்தான் நிறைய பேருக்கு வாழ்க்கை போகிறது.
எழுதிய அனைத்தும் உண்மை.
.

G.M Balasubramaniam said...

வாழ்க்கையை அனுபவிக்க இயலாமல் செய்வது.

Thulasidharan V Thillaiakathu said...

முட்டுச் சந்துகள் ஒவ்வொன்றும் நம் வாழ்வில் நிறைய அனுபவப் பாடங்களையும், வாழ்க்கைப்பாடங்களையும் கற்றுத் தருவதாகும்...நாம் நேற்றைய முட்டுச் சந்துகளையும், நாளைய முட்டுச்சந்துகளையும் நினைத்து இன்றைய நொடிகளை இழந்து விடுகின்றோம்....அருமை!

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு கருத்தை நயமாக எடுத்துச்சொன்ன கவிதை! ஏற்கனவே வாசித்த நினைப்பைத் தருகிறது. மீள்பதிவா?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒரு வித்தியாசமான பார்வை. சிந்திக்க வைக்கிறது . எதிர்காலத்துக்கு என்று நிகழ்காலத்தை தொலைப்பது தொடரத்தான் செய்கிறது

Post a Comment