Thursday, January 5, 2017

அனுபவக் கனல்

ஒரு உணர்வாகவோ
ஒரு நிகழ்வாகவோ
ஒரு சொல்லாகவோ
என்னை அசைத்துப் போகிறது
ஒரு சிறு அதிர்வு

அதுவரை எங்கோ புதைந்துக்  கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரிக்கத் துவங்குகிறது

அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிப் போடுகிறது

என்னுள்
கேட்பாரின்றிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது

என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை

சிதறிக் கிடப்பவைகளைச்
சேகரித்து தருபவனாக  மட்டுமே இருப்பதால்
பெருமைப்படவும்  ஏதுமில்லை

ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
எப்போதும்போல
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தன்னடக்கத்துடன் பற்றிக்கொண்டு எரியும் அனுபவக் கனல் சுடாமல் சுகமளிப்பதாகவே உள்ளது. பாராட்டுகள்.

G.M Balasubramaniam said...

இம்மாதிரி படைப்புகளின் துவக்கமோ

Yarlpavanan said...


"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
எப்போதும்போல...

அருமையான பதிவு

ஜீவி said...

அத்தனையும் உண்மை.

//"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
எப்போதும்போல
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது.. //

லேசில் திருப்தை அடையாத மனசு!

================================================
திருப்தி அடைந்து விட்டவனுக்கும் செத்துப் போனவனுக்கும் வித்தியாசம் இல்லை.

--- ஜெயகாந்தன்
================================================

திண்டுக்கல் தனபாலன் said...

அத்தனையும் உண்மை...........

வெங்கட் நாகராஜ் said...

அருமை....

Post a Comment