Sunday, January 14, 2018

..ஞாநி .பாசாங்குகள் அற்ற ஓர் மாமனிதன்

எண்பதுகளின் துவக்கம்.என் நினைக்கிறேன்
வங்கத்தில் பாதல் ஸ்ர்க்கார் அவர்களிடம் பயிற்சிப்
பெற்றப் பாதிப்பில் சென்னையில் ஞாநி அவர்களின்
சார்பாக பரிக்ஷா நாடகக் குழுவும்,முத்துச்சாமி
அவர்கள் சார்பில் கூத்துப்பட்டரையும் மதுரையில்
முனைவர் மு. இராமசாமி அவர்கள் சார்பாக
நிஜ நாடக இயக்கமும் துவக்கப்பட்டு தமிழகமே
கவனிக்கத் தக்க அளவில் நாடகத் துறையில்
பெரும் புரட்சிகர மாறுதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்த
காலக்கட்டம்.

அப்போது நானும் நிஜ நாடக இயக்கத்தில் என்னை
பிணைத்துக் கொண்டிருந்த நேரம்

முனைவர் மு.ரா அவர்கள் தயாரிப்பில்
இயக்கத்தில் தெரு நாடகமாக "ஸ்பார்ட்டகஸ்" என்னும்
உணர்வுப் பூர்வமான நாடகத்தை
தமிழகம் முழுவதும் நிகழ்த்திக் கொண்டிருந்தோம்

அந்தச் சூழலில் சென்னை லயோலா கல்லூரியில்
இந்த நாடகத்தை நிகழ்த்தும்படியாக அழைப்பு
வந்திருந்தது

மு.ரா அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்
கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த
காரணத்தால் என்னைப் போல ஒரு சிலரைத் தவிர
ஏனையோர் அனைவருமே பல்கலைக் கழகத்தில்
பட்டமேற்படிப்பு மாணவராக,ஆராய்ச்சி மாணவராக
இருந்தார்கள்..ஒத்திகை முதலான விஷயங்களுக்கு
அதுவே சாதகமானதாகவும் இருந்தது

அந்த வகையில் இந்த நாடகத்தில் முக்கியமான
பெண் கதாப்பாத்திரத்தை இரண்டு பட்டமேற்படிப்பு
மாணவியர் ஏற்று மிகச் சிறப்பாக
நடித்துக் கொண்டிருந்தார்கள்

அன்று மாலை சென்னை கிளம்ப அனைவரும்
புகைவண்டி நிலையத்தில் கூடிக் கொண்டிருக்கிற
நேரத்தில் முக்கியமான பெண்கதாப்பாத்திரத்தில்
நடிக்கும் மாணவியின் தந்தை "இங்கு
நடிப்பதால் ஒப்புக் கொண்டேன்.சென்னைக்கு
என்றால் எனக்கு அனுப்பச் சம்மதமில்லை"
எனும் ஒரு அணுகுண்டைத் தூக்கிப் போட்டார்
நாங்கள் அதிர்ந்து விட்டோம்

காரணம் இந்த தேட் தியேட்டர் எனும் பாணி
கொண்ட இந்த நாடகத்தில் வசன மொழியை விட
உடல் மொழியும்,அரங்கினை ஆளும் உடலசைவுகளும்
மிக மிக முக்கியமானவை.திடுமென பிற
மேடை நாடகங்களைப் போல வசனங்களை
மனப்பாடம் செய்து நின்று பேசிவிட்டுப் போகும்
பாணிக்கு இது முற்றிலும் மாறுபட்டது
என்பதால் உடனடியாக புதியவர் ஒருவரை
கதாப்பாத்திரத்துக்கு தயார் செய்வது அவ்வளவு
சுலபமானதில்லை

இது விவரம் அந்த மாணவியின் தந்தையிடம்
எப்படி விளக்கிச் சொல்லியும் அவர் ஏற்கிற
மன நிலையில் இல்லை

பாண்டியன் புகைவண்டி புறப்பட
ஒலி எழுப்ப ஆரம்பித்துவிட்டது

ஒன்று இந்த நாடகத்தை இன்னொரு நாளில்
நடத்துவதாக தந்தி கொடுத்துவிட்டு அனைவரும்
வீடு திரும்ப வேண்டும். அல்லது... அல்லது
என்ன செய்வது  எல்லோருக்கும்
ஒரு மாபெரும் குழப்பம்

அப்போதும் எவ்வித அதிர்ச்சியையும்
தன் முக பாவனையில் காட்டிக் கொள்ளாமல்
முனைவர் மு.ரா அவர்கள் "அனைவரும்
புகைவண்டியில் ஏறுங்கள்  எப்படியும்
நாடகம் நடத்துகிறோம் " எனச் சொல்லி
அனைவரையும் வண்டியில் ஏறச் செய்து
விட்டார்.

அனைவரும் மாணவர்கள் என்பதால்
என்ன செய்யப் போகிறோம்,எப்படிச்
செய்யப்போகிறோம் என அறியும்
பதட்டமிருந்தாலும் கேட்க அச்சம்

நான் ஒருவன் மட்டுமே அவர் வயதொத்தவர்
என்பதாலும்,அப்போது இயக்கத்தில் ஒரு
பொறுப்பில் இருந்ததாலும் மெதுவாக
"என்ன செய்யப்போகிறோம்,எப்படிச்
செய்யப் போகிறோம்." என மெதுவாக
பேச்சை ஆரம்பித்தேன்

அவர் வெகு நம்பிக்கையுடன் இப்படிச்
சொன்னார்."ஒரு வழி இருக்கிறது
நாம் இருவரும் நாளை சென்னை சென்றதும்
நேரடியாக ஞாநி அவர்கள் வீட்டுக்குப் போவோம்
நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும் " என்றார்

நிஜமாகவே அங்கு அவரைச் சந்தித்த போது
நாடகத்திற்கு ஒரு தீர்வு மட்டும் இல்லை
நிஜம் வாழ்விலும் எப்படி ஒரு பாசாங்கற்ற
சமரசங்களற்ற ஒரு கலைஞராய் ஒரு
தலை சிறந்த மனிதராய்
ஞாநி  அவர்கள் இருக்கிறார்
என்பதும் எனக்குப் புரிந்தது

(தொடரும் )

3 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஞானி பற்றி அதிகம் தெரியாது. அவரைப் பற்றி அறியவேண்டியது நிறைய உள்ளது என்பது புரிகிறது. தொடர்கிறேன். தாங்கள் நடிப்பிலும் திறமை காட்டி இருக்கிறீர்கள் என்பது புதிய செய்தி வாழ்த்துகள் சார்

Angel said...

பள்ளிக்கூட நாட்களிலேயே விண்ணிலிருந்து மண்ணுக்கு டிவி தொடரில் மனதில் இடம் பிடித்தார்.உண்மை அண்ணா பாசாங்கற்ற எதற்கும் வளைந்து கொடாத மனிதர் அவர் .

கரந்தை ஜெயக்குமார் said...

ஆழ்ந்த இரங்கல்கள்

Post a Comment