Tuesday, June 23, 2020

நீரோடு செல்கின்ற ஓடம்...

நல்ல படிப்பு
நல்ல வேலை
என்னை
ஊரைவிட்டும்
உறவைவிட்டும்
பிரித்துப் போடும்

சம்பளத்தொகையே
என் இல்லத்திற்கும்
என் அலுவலகத்திற்க்கான
இடைவெளியை
நிர்ண்யித்துப் போகும்

வீட்டுக்கடன்
பிடித்தத் தொகையே
எனக்கான
சம்பாதிக்கும் பெண்ணை
முடிவு செய்துப்போகும்

யாரை அழைத்துக் கொள்வது
அல்லது
யாரிடம் பராமரிக்க அனுப்புவது
என்கின்ற தீர்மானமே
நான் தகப்பனாவதை
நிர்ணயிக்கும் காரணியாகிப் போகும்

திங்கள் காலை முதல்
வெள்ளி மாலைவரை
என் உணர்வுகளும்
என் செயல்களும்
அலுவலக திசை நோக்கியே நீளும்
இல்லம் கூட
அலுவலகம் போல வேகும்

அவசியப் பேச்சுக்கே
நேரமில்லை என்பதால்
எங்களுக்கான
அன்னியோன்னிய பேச்சுக்கள்
அடியோடு நசுங்கிப்போகும்

மறுவார தயாரிப்புக்கு
சனிக்கிழமை பலியாகும்
நாவுக்கு ருசிகாட்டவோ
உடலுக்கு சுருதி கூட்டவோ
ஞாயிறு ஒதுக்கீடாகிப்போகும்

என் இஷ்டப்படி எதுதான் நடந்தது என
அவ்வபோது முனங்கி
தொடர் ஓட்டத்தின்
துயர் தாங்காது
மன இறுக்கத்தின்
வலி பொறுக்காது
குறிப்பிட்ட கால இடைவெளியில்
என்னைக்
கடித்துக் குதறி சின்னா பின்னமாக்கி
தன் துயர் குைற்க்க முயன்று
தோற்று வீழ்வாள் துணை

என் இஷ்டபடியும்
இதுவரை எதுதான் நடந்தது
என்பதை விளக்கிச் சொல்லி
அவளுக்கு ஆறுதல் சொல்லி
நானும் ஆறுதல் பெறலாம் என
எத்தெனிக்கையில்
கடந்தகால இழப்புகளும்
எதிர்கால கவலைகளும்
நிகழ்கால பொறுப்புகளும்
என்னை
கையாலாகாதவன் ஆக்கிப்போகும்

இத்தனைக்கும் இடையில்......

ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல

"மின்னோடு வானம் தண் துளி தலை இ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆர் உயிர்
முறை வழிபடூஉம்..."என்ற
பூங்குன்றனின் அருள்வாக்கு
அவ்வப்போது ஆறுதல் சொல்லிப் போகும்

6 comments:

KILLERGEE Devakottai said...

நடுநிலையாளர்களின் வாழ்வு நிலையை சொல்லிய விதம் அருமை.

ஸ்ரீராம். said...

வாழ்க்கை, அதன் போக்கில்...

koilpillai said...

வாழ்வின் எதார்த்தத்தை பிரதிபலிக்கின்றது உங்கள் படைப்பு. கனியன் பூங்குன்றனாரை ஆறுதலுக்கு அழைத்தமை சிறப்பு.

திண்டுக்கல் தனபாலன் said...

ஏதோ ஒன்று - நம்பிக்கை எனும் வடிவில்...

திண்டுக்கல் தனபாலன் said...

தன் துயர் குைற்க்க முயன்று

தன் துயர் குறைக்க முயன்று...?

கரந்தை ஜெயக்குமார் said...

ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல

உண்மை
உண்மை

Post a Comment