Tuesday, January 21, 2025

வாணீ...என்னுள் வா நீ..

 நாவும் மனமும் இனிக்க

நவின்று மகிழ்ந்துச் சுகிக்க
ஊரும் நாடும் என்னை
உச்சி மோந்து இரசிக்க
பேரும் புகழும் நிழலாய்
விடாது என்னைத் தொடர
நூறு கவிகள் நாளும்
பாட வேணும் நானும்

நாளும் கண்டு இரசித்த
அழகுக் கோலம் எல்லாம்
நாளும் உணர்ந்துத் திளைத்த
நல்ல உணர்வு எல்லாம்
நீளும் எனது கவியில்
இயல்பாய் இணையும் வண்ணம்
நாளும் கவிகள் நூறு
நவில வேண்டும் நானே

கற்றுத் தேர்ந்தோர் உறவில்
கிடைத்தக் கேள்வி ஞானம்
குட்டுப் பட்டு நாளும்
கற்ற உண்மை ஞானம்
முற்றும் விடுதல் இன்றி
முழுமை பெற்ற தாக
நித்தம் நூறு கவிதை
படைக்க வேண்டும் நானே

வெள்ள நீரைப் போல
விரைந்து பெருகும் வண்ணம்
உள்ளம் தன்னில் கவிதை
பொங்கிப் பெருகும் வண்ணம்
வெள்ளைப் பூவில் அமர்ந்து
வீணை மீட்டும் வாணி !
எந்த னுள்ளும் அமர்ந்து
அருளைப் பொழிய வா நீ !

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நீங்கள் இயல்பிலேயே சிறந்த கவிஞர். அன்னை கலைவாணியின் அருளால் தினம் நூறு கவிகள் கண்டிப்பாக படைப்பீர்கள்.

/வெள்ள நீரைப் போல
விரைந்து பெருகும் வண்ணம்
உள்ளம் தன்னில் கவிதை
பொங்கிப் பெருகும் வண்ணம்
வெள்ளைப் பூவில் அமர்ந்து
வீணை மீட்டும் வாணி !
எந்த னுள்ளும் அமர்ந்து
அருளைப் பொழிய வா நீ !/

வாணியின் மேல் இயற்றிய கவிதை அருமையாக உள்ளது. சரஸ்வதி தேவியின் அருள் அனைவருக்கும் பூரணமாக கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன். வரிகள் ஒவ்வொன்றையும் ரசித்தேன். மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

உங்கள் பிரார்த்தனை நிறைவேறட்டும். வாணி அருள்புரிவாள்.

Post a Comment