Showing posts with label ஒரு ஜாலிக்கு. Show all posts
Showing posts with label ஒரு ஜாலிக்கு. Show all posts

Monday, October 16, 2017

முக நூல் சாரம்

எது பதியப்பட்டதோ அது நன்றாகவே பதியப்பட்டது
எது பதியப்படுகிறதோ அது நன்றாகவே பதியப்படுகிறது
எது பதியப்பட இருக்கிறதோ அதுவும் நன்றாகவே பதியப்படும்
உன்னுடையது என நீ எதைப் பதிந்தாய் ?
எதற்காக நீ பெருமிதம் கொள்கிறாய் ?
நீயாக எதைப் பதிந்தாய் பேரானந்தம் கொள்வதற்கு ?
நீயாக எதைக் கொடுத்தாய் பேருவகை கொள்வதற்கு ?
நீ எதைப் பதிந்தாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்ப்பட்டது
நீ எதைப் பகிர்ந்தாயோ
அதுவும் இதிலிருந்தே பகிரப்பபட்டது
எது இன்று உன்னுடையதோ அது
நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடையாதாகும்
இதுவே முக நூல் நியதியும்
முக நூலின் சாரமுமாகும்

முக நூல் பகவான்

( இடையிடையே கூட ஏதேனும் ஒன்றிரண்டு கூட
சுயமாக எழுதாது வெட்டி ஒட்டுதலை மட்டும்
செய்து கொண்டிருப்பவர்களுக்காக )

Friday, June 3, 2016

படித்ததில் பிடித்தது

ஒரு மனிதன் நீண்ட நாளைக்குப் பிறகு
கல்யாணம் பண்ணிக் கொண்டான்.

மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது
எப்படி? என்று யோசித்து ஒரு முடிவுக்கு
வந்தான்.

கடை வீதிக்குப் போனான். கடையில் ஒரு
பொருளைப் பார்த்தான்.

இதுவரையில்
அவனுக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு பொருள்
அது.
‘‘அது என்னங்க?’’ என்று விசாரித்தான்.

‘‘அதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’ என்றார்
கடைக்காரர்.

‘‘அப்படின்னா என்னங்க... அது எதுக்கு
உபயோகம்?’’

‘‘இதுக்குள்ளே சூடான பொருளை வெச்சா
சூடாவே இருக்கும்! குளிர்ச்சியான பொருளை
வெச்சா குளிர்ச்சியாவே இருக்கும்!’’

‘‘அப்படியா அப்படின்னா அதுலே ஒண்ணு
கொடுங்க!’’ வாங்கிக் கொண்டு உற்சாகமாக
வீட்டிற்கு புறப்பட்டான்.

மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க
வேண்டும் என்பது அவன் திட்டம். அந்தத்
திட்டப்படி மேலும் சில பொருள்களை வாங்கிக்
கொண்டு வேகமாக நடந்து வீட்டுக்குள்
நுழைந்தான்.

‘‘சீக்கிரம் இங்கே வா!’’ என்று மனைவியை
அழைத்தான்.

அவள் வந்தாள். பார்த்தாள்.
‘‘என்னங்க இது?’’

‘‘இது ஒரு புதுமையான பாத்திரம்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! இதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’

‘‘எதுக்கு இது?’’ என்று தெரியாதது போல
கேட்டாள்.

‘‘இது சூடான பொருளைச் சூடாகவும்,
குளிர்ச்சியான பொருளைக் குளிர்ச்சியாகவும்
அப்படியே வெச்சிருக்கும்!
மனைவி கேட்டாள்: ‘‘உள்ளே என்ன இருக்கு?’’

அவன் சொன்னான்: ‘‘ஒரு கப் காபியும் + ஒரு
கப் ஐஸ்கிரீமும்!’’

மனைவி மயங்கி விழுந்தாள்.

ஒன்றைத் தெரிந்து கொள்வது என்பது வேறு;
அதைப் புரிந்து கொள்வது என்பது வேறு!

ஆன்மீகமும் அப்படித்தான். புரிந்து கொள்ள
வேண்டிய ஒன்று. அதைத் தெரிந்து
கொள்வதோடு நிறுத்தி விடுகிறவர்களுக்
குத்தான் தேவை இல்லாத குழப்பங்கள்
எல்லாம் வந்து சேர்கின்றன...

Monday, June 22, 2015

தொலைக்காட்சியில் தோன்ற சுருக்கு வழி

 "தொலைக்காட்சியில் நீயும்
 உன் குடும்பமும் தோன்றவேண்டுமா ?
என்றான் நண்பன்

ஆர்வத்தில் "அதற்கு யாரைப் பார்க்கணும்
என்ன செய்ய வேண்டும் " என்றேன் நான்

"அதற்கு ஏஜெண்டுகளைப் பார்க்கவோ
சென்னை செல்லவோ வேண்டாம் "
என்றான் சிரித்தபடி

"பின் எப்படிச் சாத்தியம் "
என்றேன் எரிச்சலுடன்

அவன் பொறுமையாய்ச் சொன்னான்

"தொடர்ந்து தமிழில் வருகிற அத்தனை
தொடர்களையும் விடாதுப் 
பார்த்தாலே போதும் "

" பார்த்தால் போதுமா ?
நாம் பார்ப்பது எப்படி
அவர்களுக்குத் தெரியும் ?"
என்றேன் அவசரக் குடுக்கையாய்

"அவசரப்படாதே அவர்கள் நம்மைத் தெரிந்து
கொள்ள வேண்டிய அவசியமே இல்லை
நாம் கவனமாய்த் தொடர்களை தொடர்ந்து
கவனித்து வந்தால் மட்டும் போதும்

எப்படி எல்லாம் துரோகம் செய்யலாம்
எப்படி எல்லாம் ஒரு குடும்பத்தைக் கெடுக்கலாம்
என்பன போன்ற அற்புதமான
வித்தைகளையெல்லாம்
மிகத் தெளிவாக ஒரு குழந்தைக்குச்
சொல்வதைப்போலச் சொல்லி நமக்குப்
புரிய வைப்பார்கள்

தொடர்களில் முதல்  எபிஸோடில் சிரித்த
நல்லவர்கள் கடைசி
எபிசோடில்தான் சிரிப்பதும்..

இரண்டாம் எபிஸோடில் இருந்து
கடைசிக்கு முந்திய எபிஸோடுவரை
சந்தோஷமாய் இருக்கும் தீயவர்கள் எல்லாம்

உனக்குள்  நிச்சயம் ஒரு ஒரு மாற்றத்தை
ஏற்படுத்திப் போவார்கள் " என்றான்

"அப்புறம் என்ன "என்றேன் அப்பாவியாய்

அவன் மிகத் தெளிவாக

"அப்புறம் என்ன ?
சொல்வதெல்லாம் உண்மை  நிகழ்ச்சிக்கு
நீயும் கதாநாயகன்  போல ஆகி விடுவாய்
அப்புறம் உன்னை தொலைக்காட்சிக்காரர்கள்
தேடி வந்துதானே ஆகணும்  ? "
என்றான் தீர்மானமாக

Tuesday, November 18, 2014

அத்தைப் பெத்த அழகுப் பொண்ணே தங்க ரத்தினமே

அத்தைப் பெத்த அழகுப் பொண்ணே
தங்க ரத்தினமே-என்
மொத்த மனசும் சுருட்டிப் போகும்
சொத்துப் பத்திரமே-என்
சித்த மெல்லாம் கலங்கிக் கிடக்கு
கொஞ்சம் கிட்டவா-நாம
செத்த நேரம்  நெருங்கி இருப்போம்
பக்கம் ஒட்டிவா

வித்தை நூறு கத்து வச்சு
ஆசை மச்சானே-என்னை
இச்சைக் கூட்டி மடக்க நினைக்கும்
அன்பு மச்சானே-நான்
பச்சைப் புள்ள இல்ல எந்தன்
அருமை மச்சானே-கொஞ்சம்
எட்டி நின்னே விவரம் சொல்லு
புரியும் மச்சானே

சினிமா நூறு பாத்தும் உனக்கு
விவர மில்லையா-தினமும்
தனியாய்த் தவிக்கும் மாமன் மனசு
புரிய வில்லையா
பனிபோல் லேசா பட்டுப் போனா
மனசு குளிருமே-அந்த
இனிய சுகத்தில் கொஞ்ச காலம்
வண்டி ஓடுமே

பஞ்சு கிட்ட வத்தி வச்சா
பத்திகிடும் மச்சான்-சுகம்
இஞ்சி அளவு கண்டா கூட
புத்திகெடும் மச்சான்-ஒரு
மஞ்சக் கயிறு மட்டும் கழுத்தில்
ஏறட்டும் மச்சான்-பின்னே
எந்தப் பொழுதும் உந்தன் மடிதான்
என்னிருப்பு மச்சான்

Sunday, August 24, 2014

பச்சைப் பாலும் சுட்டப் பாலும் வேற


சொட்டு ஒண்ண மேலே விட்டுப் போகும்-அந்த
மேகம் என்னுள் தாகம் கூட்டிப் போகும்
"லுக்கு" ஒண்ண என்மேல் விட்டுப் போகும் -அவ
மோகம் என்னுள் நாகம் போலச் சீறும்

குளத்து மேல புரண்டு வந்த போதும்-காத்து
அனலை கக்கி மனசை வாட்டிப் போகும்
எனக்கு என்று முடிவு செஞ்ச போதும்-கள்ளி
பிணக்குக் காட்ட மனசு வெந்துச் சாகும்

ஆசை கோடி நெஞ்சில் பூக்கும் போதும்-வண்டை
சுத்த விட்டு காற்றில் ஆடும் பூவு
நேசம் கோடி நெஞ்சில் நிக்கும் போதும்-பொய்க்
கோபம் காட்ட பெருகும் நோவு நூறு

பச்சைப் பாலும் சுட்டப் பாலும் வேற-இதை
புரியாது ஓடும் முட்டாள் பூனைப் போல
மெச்சும் காதல் நச்சுக் காமம் வேற-இது
புரியாத பாவி மகளை என்ன சொல்ல ?

Saturday, May 31, 2014

காதலின்றி கவிபிறக்கத் தகுமோ ?

மொழியின்றி ஒலிவாழக் கூடும்
ஒலியின்றி மொழிவாழத் தகுமோ ?
நினைவின்றி மனம்வாழக் கூடும்-உன்
நினைவின்றி நான்வாழத் தகுமோ ?

ஊரின்றி வழிசெல்லக் கூடும்
வழியின்றி ஊரிருக்கத் தகுமோ
நானின்றி நீயிருக்கக் கூடும்-இங்கு
நீயின்றி நானிருக்கத் தகுமோ ?

பயிரின்றி நீரிருக்கக் கூடும்
நீரின்றி பயிர்வாழத் தகுமோ ?
உழைப்பின்றி செல்வமதுவும் கூடும்-உன்
துணையின்றி மகிழ்ந்திருத்தல் தகுமோ ?

காடின்றி மழைபெய்யக் கூடும்
மழையின்றி காடிருக்கத் தகுமோ ?
கூடின்றி குயிலிருகக் கூடும்-உன்
காதலின்றி கவிபிறக்கத் தகுமோ ?

Thursday, May 8, 2014

கவிதைப் பெண்ணும் காதல் நண்பியும்

காக்க வைத்து தவிக்க விட்டுப்
பார்த்து ரசிப்பதில்-பின்பு
சேர்த்து  நிறையக் கொடுத்து நம்மைக்
கிறங்க வைப்பதில்

தூக்கம் கெடுத்து விழித்து நம்மை
நினைக்க வைப்பதில்-எதிர்
பார்ப்பு இல்லா நேரம் நம்முள்
தானாய் நிறைவதில்

கைக்கு எட்டும் தூரம் இருந்தும்
எட்டித்  திரிவதில்-கண்கள்
பார்க்க இயலா இடம் இருந்தும்
தெளிவாய்த் தெரிவதில்

ஈர்க்க வைத்துப் பித்தன் போல
அலைய வைப்பதில்-தானே
தேர்ந்த நல்ல அடிமைப் போலப்
பணிந்து நிற்பதில்

பார்க்கும் எதையும் தன்னைப் போல
தெரியச் செய்வதில்-நாம்
பார்க்கும் போது  மட்டும்  தன்னை
மறைக்க முயல்வதில்
 
கூர்மை யாக எண்ணிப் பார்க்க
கவிதைப் பெண்ணுமே -நாம்
தேர்ந் தெடுத்த    நண்பி(மனைவி ) தன்னை
நினைவில்   நிறுத்துமே