Friday, June 19, 2015

பாவப்பட்ட ஆண்டிகள்

தன்னையொத்தவர்கள்
தன்னருகில் இருக்கக் கூட
அதிர்ஷ்டம் வேணுமோ ?

சிறுவயதில் கிராமத்தில்
தன் வீட்டுக்கு எதிரே
பண்ணையார் வீடிருக்க
தன் வீடு குடிசை போல் தெரிய
நொந்துதான் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த ஓட்டுவீடு
கண்ணில் படவே இல்லை

படித்து முடித்து
அரசு வேலைக்குப் போய்
குடியிருப்பில் குடியேற
அடுத்த வீடாய்
அதிகாரியின் வீடாய் அமைய
வெறுத்துப் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவன் வீட்டுக்கு எதிரிலிருந்த
தன்னொத்த வீடு
சரியாகத் தெரியவில்லை

முப்பது ஆண்டு கால சேமிப்பில்
சொந்தமாய் ஒரு வீடு கட்டி முடிக்க
நேர் எதிரே ஒரு அரசியல்வாதி
வீடுகட்டித் தொலைய
மனமொடிந்து போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த
அறு நூறு சதுர அடி வீடு
வீடாகவே தெரியவில்லை

எல்லாம் முடிந்து
சுடுகாட்டில் புதைத்துத் தொலைக்கையில்
ஒரு புறம
ஒரு ஐ.பி. ஸ் அதிகாரியின் சமாதியும்
மறுபுறம்
உள்ளூர் சேர்மன சமாதியும்
கம்பீரமாய் எழுந்து நிற்க
இரண்டாம் முறை
செத்தே போனான ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு எதிர் இருந்த
சமாதி மண்மேடு
சமாதியாகவேப் படவில்லை

முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும் எனும்
 ஒருசிறு படிப்பினையை அறியாததால்
ஆண்டி பாவம்
வாழும் போதும்
மகிழ்ச்சியாய் இல்லை
பாவம் ஆண்டி
இப்போது செத்துப் புதைத்தும்
நிம்மதியாய் இல்லை

பாவம் பாவப்பட்ட ஆண்டிகள்




9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இது சிறு படிப்பினை அல்ல... இது தான் படிப்பினை...

balaamagi said...

இது போல் தானோ, மனம் இருப்பதை நினைத்து மகிழ்வதில்லை,,,,,, நல்ல படைப்பு, வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...

எண்ணங்களிலும் ஆண்டிதான் .

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பாவப்பட்ட ஆண்டிகள்//

தலைப்பைப் பார்த்ததும் வேறு யாரைப்பற்றியோ என முதலில் நான் நினைத்துவிட்டேன்.

‘ஆண்டி’ தன் பெயருக்கு ஏற்றாற்போல இருந்தபோதும் இறந்தபிறகும் எப்போது ஆண்டியாகவே இருந்துள்ளான்.

ஒருவரின் எண்ணங்களால் ஏற்படும் விளைகளை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான படிப்பினை ஊட்டும் கவிதை! நன்றி!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல பாடம்.

சென்னை பித்தன் said...

சாவிலும் நிம்மதி இல்லை பாவம்!
ந்நான் தலைப்பை முதலில் ஆண்ty என்று படித்து விட்டேன்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அனுபவம் மிக்க பதிவு... பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும்

அற்புதமான வார்த்தைகள் ஐயா
நன்றி
தம +1

Post a Comment