Tuesday, March 28, 2017

எனவே .....

சப்தம் செய்யாதிருங்கள்

குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது

பாதுகாவலனாகத்தான் இருக்கிறேன்
என்றாலும்
உரிமை கொண்டாடாது
ஒருபார்வையாளனாய்
அதன் விளையாட்டை
இரசித்துக் கொண்டிருக்கிறேன்

குழந்தையும்
இயல்பாய் அழகாய்
அதன் போக்கில்
அது விளையாடிக் கொண்டிருக்கிறது..


இடையூறு செய்யாதிருங்கள்

கவிதைஉருப்பெற்றுக் கொண்டிருக்கிறது

படைப்பாளியாகத்தான் இருக்கிறேன்
என்றாலும்
அதிக உரிமை கொள்ளாது
ஒருரசிகனைப்போல்
அதன் உருமாற்றத்தை
இரசித்துக் கொண்டிருக்கிறேன்

கவிதையும்
மிக இயல்பாய் அழகாய்
அதன் போக்கில்
தன்னை எழுதிக் கொண்டிருக்கிறது

எனவே........

4 comments:

ஸ்ரீராம். said...

இயல்பாய் இருப்பது, இருக்கவிடுவது இன்றி அமையாதது!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கவிதையும் மிக இயல்பாய் அழகாய் அதன் போக்கில் தன்னை எழுதிக் கொண்டிருக்கிறது//

எனவே ..... இது நம் ரமணி சாருக்கு மட்டுமே சாத்தியம் என்பது எனக்கும் புரிந்து போய் உள்ளது. :) அன்பான நல் வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

இயல்பாய் இருக்க விடுவதுதான் கவிதை

ராமலக்ஷ்மி said...

அருமை.

Post a Comment