Tuesday, March 28, 2017

பிரம்மப்பிரயத்தனமின்றி....

காதலின்  மோகத்தில்
காதலன் மட்டுமே
காதலியை மெல்ல மெல்ல
உரச முயல்கிறான் எனக்
காதலித்தறியாதவன் கறுவ

விலகுவதுபோல் நடித்து உரசி
காதலனை உசுப்பேற்றுவதே
காதலிதான் என உணர்ந்து
அக்காட்சியைக்கண்டு இரசிக்கிறான்
காதலை ஆராதிப்பவன்

பிரசவகால உச்சத்தில்
சக்தி அனைத்தையும் திரட்டி
சிசுவினைப் புறம் தர
தாயவள்  மட்டுமே
பிரயத்தனப்படுவதாய்
மகப்பேறற்றவள் விளம்பி வைக்க

இனியும் தங்க இயலாதென
வெளிக் கிளம்பும் சிசுவின்
அதீத முயற்சியுமின்றி
சுகப்பிரசவம் சாத்தியமில்லையென
சத்தியம் செய்கிறாள்
மக்களைப் பெற்ற மகராசி

மனச்சிப்பிக்குள் துளியாய்
மகிழ்ந்து விழுந்த கரு
அற்புதக் கவிதையாய்
உருகொண்டு வெளியேற
முழுமுதற்காரணம்
கவிஞனே என வாதிடுகிறான்
ஒரு மெத்தப் படித்தப் பண்டிதன்

பூரணமடைந்த கவிதை
இனி நம் இடம் இதுஇல்லையென
வெளியேறச் செய்யும்
பிரம்மப்பிரயத்தனமின்றி
கவிபிறக்கச் சாத்தியம்
சத்தியமாய் இல்லையென்கிறான்
ஒரு கவித்துவம் புரிந்த பாமரன்  

5 comments:

V.GOPALAKRISHNAN said...

இனியும் தங்க இயலாதென
வெளிக் கிளம்பும் சிசுவின்
அதீத முயற்சியுமின்றி
சுகப்பிரசவம் சாத்தியமில்லையென
சத்தியம் செய்கிறாள் nice kavidhai

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான ஆக்கம். தெளிவான உதாரண விளக்கங்கள். பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

நான் ஹை-லைட் செய்து சொல்ல நினைத்த வரிகளை என் பெயர்கொண்ட வேறொருவர் மேலே சொல்லியுள்ளதைப் பார்த்து, வியந்தும் மகிழ்ந்தும் போனேன். :)

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

...அதுவும் தங்கள் பெயரிலேயே

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

இராய செல்லப்பா said...

ஆஹா, for every force there is an equal and opposite force என்ற அறிவியல் உண்மையைக் கவிதையாக்கி விட்டீர்கள் நண்பரே!

- இராய செல்லப்பா நியூஜெர்சி

Yarlpavanan said...

அருமையான வெளியீடு
உள்ளத்தைத் தொடும் கவிதை

Post a Comment