Wednesday, August 5, 2020

இதையும் வாசித்து வைப்போம்...

*ஹிந்தியை தவிர்க்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவரா நீங்கள்🤔🤔 இந்த பதிவை ஒருமுறையாவது கட்டாயம் படியங்கள்*

உங்களுக்கு மாற்றுக்கருத்து தோன்றினால், அதையும் அலசுங்கள்.

உண்மை என்ன என்று அறிந்து கொள்வோம்.

#ஐம்பதாண்டு_திராவிட ஆட்சியின் மறுபக்க அவலம் இது. 

          திராவிடம் எந்த கொள்கைகளில் மிகவும் பிரதானமானது இந்தி எதிர்ப்பும், இந்தி பேசும் வடநாட்டவர் எதிர்ப்பும். 

       இவற்றை மையமாக வைத்தே திராவிடம் தமிழகத்தின் ஆட்சியை பிடித்தது. இந்த கொள்கைகளை இன்றளவும் உயர்த்தி பிடித்து வருகிறது. 

 திராவிட  தமிழன் அடைந்தது என்ன...? இழந்தது என்ன...? 
என்று எந்த அறிவாளியாவது யோசித்து பார்த்தது உண்டா...?

         தமிழகம் தனக்கு தேவையான எல்லா பொருட்களையும் தானே உற்பத்தி செய்யும் மாநிலம் அல்ல. 

       இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் மூலப்பொருட்கள், இயற்கை பொருட்கள், விவசாய விளை பொருட்களை கொண்டு பொருட்களை உற்பத்தி செய்து நாடு முழுவதும் அனுப்பி வர்த்தகத்தை செய்கின்றனர். 

          திருப்பூரின் பின்னலாடை, கோவையின் இயந்திரபொருட்கள், சென்னையின் ஆட்டோ மொபைல் பொருட்கள் இதெல்லாம் தமிழகத்தின் உற்பத்தி பொருட்கள். 

       அதே போல ஆந்திராவில் அரிசி.,  
குஜராத்தில் டைல்ஸ், வைரம், டெக்ஸ்டைல்ஸ்.,
 மேற்கு வங்கத்தில் சணல், பட்டு, பால் பொருட்கள்., 
பஞ்சாப்பில் கோதுமை, கனரக இயந்திர தயாரிப்பு.....
 என அந்தந்த மாநிலங்கள் தங்களுக்குள்ள வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி உற்பத்தி செய்கின்றன. 

 உற்பத்தி செய்த பொருட்களை இந்தியா முழுக்க விற்பனைக்கு அனுப்பி வைத்து வர்த்தகம் செய்கின்றன. 

       இதற்கும் திராவிடத்திற்கும் என்ன சம்பந்தம் என கேட்பது தெரிகிறது. பொறுமையாக அடுத்து படியுங்கள். 

        எந்த மாநிலத்திற்கு சென்று பார்த்தாலும் அந்தந்த மண்ணின் மைந்தர்கள் வர்த்தகத்தில் முன்னணியில் இருப்பார்கள்.

        மும்பை சென்றால் மராட்டி, குஜராத் சென்றால் குஜராத்தி, பஞ்சாப் சென்றால் பஞ்சாபி.......

         எல்லா மாநிலத்திலும் அந்தந்த மக்கள்தான் வர்த்தகம் செய்து கொண்டிருப்பார்கள். மிஞ்சிப் போனால் ஐந்து சதவிகிதம் பிற மாநில வியாபாரிகள் இருப்பார்கள். 

தமிழகத்தில் இது அப்படியே தலைகீழ். 
ஐந்து சதவிகிதம் தமிழர்கள் வியாபாரம் செய்கிறார்கள். 
95% பிற மாநிலத்தவர்கள் இங்கே வர்த்தகம் செய்கிறார்கள். 

உடனே நம்மூர் சில்லறை விற்பனை கடைகளை கணெக்கெடுக்க வேண்டாம். 
மொத்த விற்பனையாளர்களை கணக்கெடுங்கள் புரியும். 

இரண்டு ரூபாய் மதிப்புள்ள 
பெண்கள் தலைக்கு அணியும் ரப்பர் பேண்ட் முதல் கோடிகளில் புரளும் பல தொழில்கள் அனைத்தும் நம்மாள் சேட்டுகள் என அழைக்கப்படும் ஹிந்தி பேசும் 
வட மாநில மக்களின் கைகளில் உள்ளன. 

 பல மாநிலங்களில் உற்பத்தியாகும் இடங்களிலிருந்து  கொள்முதல் செய்து வந்து 
நம்மூர் வியாபாரிகளுக்கு மொத்த விலைக்கு விற்கும் ஹோல்சேல் கடைகளை நடத்துகின்றனர். 

           ஏன் நம்மூர் வியாபாரிகள் அந்த மொத்த வியாபாரத்தில் பிரகாசிக்க முடியவில்லை....? 

         ஒரே காரணம் ஹிந்தி தெரியாது. 
சென்னையின் கும்மிடி பூண்டியை தாண்டினால் சிங்கிள் டீ வாங்க வேண்டுமானாலும் தெலுங்கு அல்லது ஹிந்தியில் தான் கேட்டு வாங்க முடியும். 

              நமக்குத்தான் ஹிந்தி பகையாயிற்றே...? 

        மொத்த விலையில் விற்பனை செய்யும் ஒரு பேன்சி கடை வைக்க வேண்டுமானாலும் கூட நான்கு வட மாநிலங்களுக்கு சென்று பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். 

 ஸ்டிக்கர் பொட்டுக்கு  மும்பை, கண்ணாடி வளையல்களுக்கு கொல்கத்தா, விலை மலிவான நக பாலிஸ் லிப்ஸ்டிக்களுக்கு டெல்லி,  கோன் மெஹந்திகளுக்கு ராஜஸ்தான், ஆடைகளில் வைக்கும் ஜரிகை ஜிகினாக்களுக்கு ஹைதராபாத் என உற்பத்தியாகும் இடங்களுக்கு சென்று கொள்முதல் செய்தால் தான் ஒரு மொத்த வியாபார பேன்சி கடை வைக்க முடியும். 

         நாம் தான் டுமீலர் பரம்பரையாயிற்றே ஹிந்தி நமக்கு தெரியாது. சென்னையை தாண்டினால் ஊமை மொழி தான் பேச தெரியும். இதில் எங்கே போய் உற்பத்தியாகும் பல மாநிலங்களுக்கு போய் 
கொள்முதல் செய்வது....? 

          இதைத்தான் குஜராத், ராஜஸ்தான் மாநில சேட்டுகள் பயன்படுத்தி மிக எளிதாக வர்த்தகம் செய்கின்றனர். 

          எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக், கட்டுமான பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட், பேன்சி, ஸ்டீல் தகடுகள், தோல் பொருட்கள், பொம்மைகள்........ என தமிழ்நாட்டில் நமக்கு தேவையான பொருட்கள் 90% சேட்டுக்களின் மொத்த விலை கடைகளிலிருந்தே கைமாறி சில்லறை விற்பனையாக நமக்கு வருகிறது. நமது தமிழக வியாபாரிகள் கிட்டத்தட்ட சேட்டுக்களை நம்பியே காலம் தள்ளும் நிலையில் உள்ளனர். 

 திராவிட  சாதனைகளில் ஒன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இதனால் தனி ஹிந்தி ஏரியாக்களே உருவாகி விட்டது. 

        சென்னையின் பாரிமுனை, சௌகார் பேட்டை போன்றவை மினி மும்பையாக மாறி விட்டது. உள்ளே சென்றால் முழுக்க முழுக்க ஹிந்தி பேசும் மக்கள் தான். 

       வடநாடுகளில் மட்டுமே கிடைக்கும் இனிப்பு கடைகள், மசாலா டீ கடைகள், ஹிந்தி DVD விற்கும் கடைகள், ஹிந்தி போஸ்டர்கள், ஹிந்தி சண்டைகள், பான் மசாலா கடைகள், வட இந்திய உணவகங்கள், ஹிந்தி மொழி பள்ளி......

        ஹிந்தியை விரட்டுவோம் என சொல்லிக்கொண்டு ஆட்சி செய்த திராவிட ஆட்சியாளர்கள் இந்தி பேசும் வட நாட்டவர்களுக்கு அந்தந்த பகுதிகளையே விற்று விட்டனர் என சொல்லலாம். 

          சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களும் அப்படித்தான் உள்ளன. 

       தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டை ஒட்டிய பகுதி, 
திருச்சி சிங்காரத்தோப்பு, 
மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் என வியாபார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அனைத்தும் சேட்டுகளின் கட்டுப்பாட்டில் வந்து விட்டன. 

     பதிவை பார்த்து யாரும் #தமிழ் தேசியம் பேசுகிறேன் என்று எண்ணி கம்பு சுத்த வேண்டாம். இந்தியாவில் எந்த இடத்திலும் எவரும் சட்டத்திற்குட்பட்டு எந்த தொழிலையும் செய்யலாம். சேட்டுகள் அதைத்தான் செய்கிறார்கள். 

        நம்மவர்கள் எதனால் தங்கள் மண்ணில் வர்த்தகத்தை கோட்டை விட்டார்கள் என்று சற்று சிந்திக்கவும். 

         திரைக்கடலோடி திரவியம் தேடிய நமது மூதாதையர்கள் தமிழை மட்டுமா அறிந்து வியாபாரம் செய்தனர். 

         இந்து மகா சமுத்திரம் தாண்டி ஐரோப்பிய நாடுகள், கிழக்காசிய நாடுகள், சீனம்  அனைத்திலும் கப்பலை செலுத்தி தமிழன் தனது வர்த்தகத்தை நடத்தினான் என்றால் பல மொழிகளையும் அவன் கற்றிருந்ததனால் அது சாத்தியமானது. 

       இன்றைக்கு  இந்திய மொழியான ஹிந்தியை கூட அறியாததால் தமிழகத்திற்குள்ளேயே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற கேவலமான நிலைக்கு வந்து விட்டது

        சற்று சிந்தித்து பாருங்கள். தமிழகம் முழுவதும் குறைந்தது ஐந்து லட்சம் சேட்டுகளாவது வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள். அவனும் உழைத்து தான் முன்னேறி சொந்த கடை, சொந்த வீடு என்று உயர்ந்த நிலைக்கு வருகிறான். 

       ஆனால் இது யாருக்கு கிடைத்திருக்க  வேண்டிய வாய்ப்பு என யோசியுங்கள். தமிழர்கள் உழைப்பதில், திறமையில் வடநாட்டு சேட்டுக்களை விட பல மடங்கு உயர்ந்தவர்கள். ஆனால் நாம் அவர்களிடம் ஏன்  தோற்றோம்...? 

        அவனுக்கு வியாபாரம் செய்ய தேவையான மொழி அறிவு உள்ளது.  திராவிடர்களின் பேச்சை கேட்டு வியாபார தொடர்பிற்கான இந்தி மொழியை நாம் இழந்தோம். 

      இன்று....,
 சேட்டு எலக்ட்ரிகல் கடை வைத்தால் அவனை அண்டி இரண்டு எலக்ட்ரீசியன்கள் இருக்கிறார்கள். ஸ்டீல் தகடு கடை சேட்டு வைத்தால் அவனை சார்ந்து  இரண்டு மீன் பாடி வண்டி லோடு  மேன்கள் தொழில் செய்கின்றனர். 

இதெல்லாம் நமது #தமிழகத்தின்_சாபக்கேடு
வேறு என்னத்தை சொல்ல....? 

இங்குள்ள மராத்தியர்களும் என்னிடம் அன்பாக கேட்பதுண்டு நீங்கள் ஏன்  ஹிந்தியை வெறுக்குறீர்கள் என்று..

ஆக,நாம் ஹிந்தியை கற்று தெரிந்து கொண்டால் ஒன்றும் குடிமூழ்கி போகாது. திராவிட கட்சிகளின் வண்டவாளங்களை நாம் தெரிந்து கொள்ளவும் உதவும். 
தெரிந்தால் இவர்கள் அரசியலில் அனாதையாக்கபடுவார்கள். 
அந்த பயத்தில்தான் ஹிந்தி பயின்றால் தமிழ் அழியும் என்று முட்டாளாக இருக்கும் தமிழனின் மனதில் விஷத்தை கலக்கிறார்கள்...

நாம் பல மொழிகள் கற்றால் நமது அறிவும், ஆற்றலும் பெருகுமே தவிர நமது தமிழ் மொழி அழியாது..
கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியான தமிழ் மொழி...

வேறு மொழி கற்றால் தமிழ் அழியும் என்பது கோமாளிகளின் கூற்று ...அவனுக்கு தமிழனை வெளியே எங்கும் செல்லமுடியாத படிக்கு அடிமையாகவே வைத்திருக்க ஆசை....


உயிரை விடவும் மேலாக தமிழ்மொழியை நேசிப்போம் சுவாசிப்போம்....
மற்ற மொழிகளையும் நேசித்து வாசிப்போம்..

நன்றி....இது யாரோ ஒருவரின் கருத்து என்று தாண்டிச் செல்லாமல் இனியாவது யோசித்து நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுங்கள்...மற்ற மொழிகளை வெறுக்காமல் குழந்தைகளுக்கு படிக்க கற்றுக் கொடுங்கள்...(படித்ததும் பகிரப்பிடித்தது...)

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எந்த மொழியும் கற்றுக் கொள்வது நல்லதே...
கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பது தான் பிரச்சனையே...

Jayakumar Chandrasekaran said...

DD அவர்கள் கூறியதை ஆமோதிக்கிறேன். ஹிந்தி கற்றுக்கொள்பவர்களை யாரும் தடுக்கவில்லையே. எத்தனை CBSE, KV போன்ற பள்ளிகள் உள்ளனவே. மேலும் ஹிந்தி பிரசார் சபா வழியாகவும் பலர் படிக்கிறார்கள். ஆனால் இந்த ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போன்று படிக்கும் ஹிந்தியும் பேச்சு ஹிந்தியும் வேறாக உள்ளன. நாம் தினமும் பழகும் மளிகை கடைக்காரரிடம் சுத்த தமிழில் பேசி பாருங்கள் புரியும். வட நாட்டவரும் இங்கு வந்தால் தமிழ் கற்றுக்கொள்கிறார்கள். நம் தமிழரும் வடநாட்டில் வேலை என்றால் ஹிந்தி கற்றுக் கொள்கிறார்கள்.
 அவசியம் எனும்போது எல்லாம் சுலபம். கட்டாயம் என்றால் கசக்கும். 

Jayakumar

Thulasidharan V Thillaiakathu said...

நான் ஹிந்தி தனியாகத்தான் கற்றுக் கொண்டேன். ஓரளவு சமாளிக்க முடியும், புரிந்துகொள்ளவும் முடியும். கொஞ்சமேனும். ஏனென்றால் படிக்கும் ஹிந்தியும் நடைமுறை ஹிந்தியும் வேறு வேறு. ஹிந்தி கற்காமலேயே வடக்கே செல்லும் பேசு பேசி பேசியே கற்றுக் கொண்டுவிடுகிறார்கள் நம்மவர்கள்.

வேண்டுமென்றால் கற்றுக் கொள்ளலாமே. பேசி பேசியே. இப்போது நான் பங்களூரில். இங்கும் கூட கன்னடம் இன்னும் நான் பேசும் அளவு கற்க முடியவில்லை. ஏனென்றால் பேசுபவர்கள் குறைவு. நம்மைச் சுற்றி தெலுங்கு, ஹிந்தி நிறைய.

பல மொழிகள் தெரிந்து வைத்திருந்தால் கூடுதல் நன்மையே

கீதா

G.M Balasubramaniam said...

\வட நாட்டவரும் இங்கு வந்தால் தமிழ் கற்றுக்கொள்கிறார்கள். நம் தமிழரும் வடநாட்டில் வேலை என்றால் ஹிந்தி கற்றுக் கொள்கிறார்கள்.
அவசியம் எனும்போது எல்லாம் சுலபம். கட்டாயம் என்றால் கசக்கும் இந்தக் கருத்துடன் உடன்படுகிறேன் .

நெல்லைத் தமிழன் said...

சார்... உங்க கட்டுரையை 'முன் முடிவு' எடுத்துள்ளவர்கள் ஆதரிக்கப் போவதில்லை. உங்க கட்டுரை சாரத்தை ஏற்கனவே புரிந்துகொண்டவர்கள் வெளிக்காட்டப் போவதில்லை.

ஜெயக்குமார் சார் சொல்லியிருப்பதுபோல தேவை இருந்தால் மொழி கற்றுக்கொள்வார்கள் என்பது எல்லாருக்கும் சரியா வராது. நான் ஹிந்தி பேசுபவர்களுடன் கிட்டத்தட்ட 25 வருடங்கள் பணி புரிந்திருக்கிறேன் (ஹிந்தி பேச முடிந்திருந்தால் இன்னும் பெட்டராக இருந்திருக்கும்). ஆனால் கற்றுக்கொண்டதே இல்லை.

ஸ்ரீராம். said...

கட்டாயப்படுத்தும் எதுவுமே மனதுக்கு ஒவ்வாது.  ஏற்காது.  சுயவிருப்பதில் கற்றுக்கொள்ள தடை இருக்காது.

bandhu said...

நாம் மொத்தமாக படிக்கும் 20 வருடங்களில் எவ்வளவோ விஷயங்களை பின்னால் உபயோகிப்பதே இல்லை. அதனால் கற்றுக்கொண்டால் குறைந்து விடாது. அதே போல் தான் இந்தியும். கட்டாயமாக்கினால் என்ன? கற்றுக்கொண்டால் என்ன குறைந்து விடும்? நான் வளர்ந்தது ஒரு சின்ன ஊரில். இந்தி எதிர்ப்பினால், இந்தி சொல்லிக்கொடுக்கும் ஒரு வாத்தியாரும் இல்லை. நானாக விரும்பி இருந்தாலும் கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை.

தேவையானால் கற்றுக்கொள்வோம் என்பது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. வடநாட்டில் 20 வருடத்துக்கு மேல் வாழ்ந்தும் இங்கிலீஷை நம்பியே வாழ்க்கை ஒட்டிய பலரை எனக்கு தெரியும்.

பள்ளியில் கற்றுக்கொடுக்கும் இந்தி வேறு. பேச்சு இந்தி வேறு என்பது கற்றுக்கொடுக்கும் பாடத்தில் உள்ள குறை. அதை சரிப்படுத்துவதை விட்டு கற்றுக்கொள்ளாமல் இருக்க காரணமாக சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன்.

என்னை பொறுத்தவரை, இந்தி படிக்காததால் இழந்தது மிக அதிகம். கட்டாயம் எல்லோரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்.

G.M Balasubramaniam said...

ஒரு முறை ரயில் பயணத்தின் போது :இந்த மதராசிகள் ஹிந்தி தெரியாதுஎன்று சொல்லியே அதில் வல்லுனர்களாக இருப்பர் என்றுஒரு சக வடக்கத்தி பயணிசொன்னது நினைவுக்கு வருகிறது

koilpillai said...

எந்த மொழியானாலும் அதை கற்றபிறகு ஏற்படும் மனோதிடமும் தன்னம்பிக்கையும் அளப்பரியது. பாஷை தெரியாமல், மத்தியபிரதேசம் வரை ரயிலில் சென்று வந்தபோது பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. கட்டாயமாக்காமல் இயல்பாகவே பள்ளிக்கூடங்களில் விருப்பப்பப்படமாக சொல்லிகொடுக்கப்பட்டால்,பெரும்பான்மையான மாணவர்களும் பெற்றோரும் மனமுவந்து கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிப்பார்கள்.,. யாதும் ஊரே யாவரும் கேளீர் எப்படி சாத்தியமாகும் ஒரே மொழி கற்றிருந்தால், திரை கடலோடி எப்படி திரவியம் தேட முடியும். யாமறிந்த மொழிகளிலே தமிழ் போன்ற இனிய மொழி வேறில்லை என்று வேறு எந்த மொழியும் தெரியாமல் எப்படி மார்தட்டி சொல்ல முடியும்?

நீங்கள் குறிப்பிடும் மொழி நமக்கு பகை மொழி அல்ல… பகையாக்கப்பட்ட மொழி.

Post a Comment