Tuesday, August 11, 2020

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

என் வலைப்பக்கத்திற்கு ஏன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன் என எனது  நண்பன் நேற்று எனக்கு செய்தி அனுப்பி இருந்தான்..ஏன் என நான் என் பாணியில் விளக்குவதை விட அந்த வரிகள் இருக்கும் முழுப்பாடலையும் விளக்கத்துடன் கொடுத்தாலே போதும் அவனே புரிந்து கொள்வான் என இப்பக்கத்தில் இதைப் பகிர்ந்துள்ளேன்..என் எண்ணம் சரிதானே.... *கணியன் பூங்குன்றனார்* 


சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அடுத்த மகிபாலன்பட்டி 

சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய  பழமையான பாடல் இது.


 *யாதும் ஊரே யாவரும் கேளிர்*


இதன் முதல் வரி மட்டுமே பிரபலம்.

பாடலின்

எல்லா வரிகளும் வாழ்வின்

முழு தத்துவத்தைச் 

சொல்கிறது.


முழு பாடலும் அதன் பொருளும்👇.


*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்,*

*தீதும் நன்றும் பிறர்தர வாரா,*

*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,*

*சாதலும் புதுவது அன்றே,*

*வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே,* 

*முனிவின் இன்னாது என்றலும் இலமே* 

*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*

*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*

*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*

*முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்*

*ஆதலின் மாட்சியின்*

*பெயோரை வியத்தலும் இலமே,*

*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*


*பொருள்*👇


*"யாதும் ஊரே யாவரும் கேளிர்"* 


எல்லா ஊரும் எனது ஊர்.

எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து,

அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று

வாழ்ந்தால், இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது, சுகமானது.


*"தீதும் நன்றும் பிறர் தர வாரா"*


'தீமையும் நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை' எனும் உண்மையை உணர்ந்தால்

சக மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை சார்ந்த வாழ்வு கிட்டும்.


*"நோதலும் தனிதலும்*

*அவற்றோ ரன்ன"*


துன்பமும் ஆறுதலும் கூட

மற்றவர் தருவதில்லை.

மனம் பக்குவப்பட்டால்,

அமைதி அங்கேயே கிட்டும்.


*"சாதல் புதுமை யில்லை"*


பிறந்த நாள் ஒன்று உண்டெனில்,

இறக்கும் நாளும் ஒன்று உண்டு.

இறப்பு புதியதல்ல. அது

இயற்கையானது.

எல்லோருக்கும்

பொதுவானது.

இந்த உண்மையை

உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்

எதற்கும் அஞ்சாமல்

வாழ்க்கையை வாழும் வரை ரசிக்கலாம்.


*"வாழ்தல் இனிது என* *மகிழ்ந்தன்றும் இலமே*

*முனிவின் இன்னாது என்றலும் இலமே"*


இந்த வாழ்க்கையில்

எது, எவர்க்கு, எப்போது,

என்ன ஆகும் என்று

எவர்க்கும் தெரியாது.

இந்த வாழ்க்கை மிகவும்

நிலை அற்றது.

அதனால், இன்பம் வந்தால்

மிக்க மகிழ்வதும் வேண்டாம்.

துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்.

வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்.


*"மின்னோரு* *வானம்* *தண்துளி தலைஇ* *ஆனாதுகல்பொருது* *இரங்கும்வ மல்லல்* *பேர்யாற்று நீர்வழிப்* *படூஉம் புணைபோல்* *ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்"*


இந்த வானம் நெருப்பாய்,

மின்னலையும் தருகிறது.

நாம் வாழ 

மழையையும்

தருகிறது. இயற்கை வழியில் அது அது

அதன் பணியை செய்கிறது.

ஆற்று வெள்ளத்தில்,

கற்களோடு, அடித்து முட்டி செல்லும் படகு போல,

வாழ்க்கையும், சங்கடங்களில் அவரவர் ஊழ்படி அதன் வழியில்

அடிபட்டு போய்கொண்டு

இருக்கும்.

இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்.


*"ஆதலின்* *மாட்சியின்*

*பெரியோரை வியத்தலும்* *இலமே;*

*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"*


இந்த தெளிவு

பெற்றால்,

பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து

மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்.

சிறிய நிலையில் உள்ள

சிறியவர்களைப் பார்த்து

ஏளனம் செய்து இகழ்வதும்

வேண்டாம்.

அவரவர் வாழ்வு

அவரவர்க்கு

அவற்றில் அவரவர்கள்

பெரியவர்கள்.


*இதை விட வேறு எவர்*

*வாழ்க்கைப் பாடத்தை*

*சொல்லித் தர முடியும்?*💐💐

12 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவரவர் வாழ்வு

அவரவர்க்கு
அவற்றில் அவரவர்கள்
பெரியவர்கள்.

தமிழிலக்கியக் கடலில் இல்லாத கருத்தா
அருமை அருமை ஐயா
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

இதையே முதலாவதாக எனது தளத்தில் வைத்துள்ளேன்...

ஐயனின் முப்பாலை மனதில் வைத்து :-

தீதும் நன்றும் பிறர் தர வாரா...
வலிகளை ஏற்றுக் கொள்...
இதுவும் கடந்து போகும்...

Thulasidharan V Thillaiakathu said...

நல்லதொரு கருத்துள்ள கணியன் பூங்குன்றனாரின் வரிகள்.

அடிக்கடி நினைத்துக் கொள்வதும்.

கீதா

Jayakumar Chandrasekaran said...

ஆனால் தீநுண்மி பிறர் தர வரும். 

ஸ்ரீராம். said...

எளிய உண்மைகள்..

Bhanumathy Venkateswaran said...

பத்தாம் வகுப்பில் படித்தது. இதில் வரும் 'பெரியோரைவியதாலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்னும் வரிகளும் மறக்காமல் இருக்கின்றன. முழுபி பாடலையும்,பொருளோடு  நினைவூட்டியதற்கு நன்றி. 

G.M Balasubramaniam said...

விளக்கங்கள் தேவைதான்

KILLERGEE Devakottai said...

விளக்கம் இன்று அறிந்தேன் நன்றி.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

ஆகா.. அருமையான விளக்கம். பள்ளிப் பாடங்களில் கற்றது. அப்போது புரியாத சில வரிகளின் பொருள் இப்போது முழுப்பாடலை நினைவூட்டி பொருள் தந்ததும் தெளிவாகப் புரிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

bandhu said...

அற்புதமான விளக்கம். முழுமையாக தெரியாத ஒன்றை கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி சார்!

Anonymous said...

அற்புதமான வரிகள்

Anonymous said...

அற்புதமான வரிகள்

Post a Comment