Tuesday, March 28, 2023

கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம்..

 கிடைக்கிற மூன்று கற்களை

சமமாய அடுக்கி
சுற்றி கிடைக்கும் சுள்ளிகளைப் பொறுக்கி
பற்றவைத்து
பேப்பருக்குள் எடுத்து வந்த
 மளிகைச்சாமானகளை வைத்தே
சமைக்கத் துவங்குகிறாள் ஆச்சி

சமமற்ற தரையோ
சுழன்றடிக்கும் காற்றோ
எடுக்க மறந்த பொருட்களோ
அவளுக்கு ஒரு பொருட்டாய் இல்லை
கொதிக்கிற குழம்பின் வாசம்
கோவில் வெளியெங்கும்
பரவி விரிகிறது
என்றுமில்லா பசி
குடலுக்குள் உருண்டு புரள்கிறது

நிழலிருக்கும் இடத்தைப் பெருக்கி
சமதளம்ற்ற தரையில்
இலையைப் போடுகிறாள் ஆச்சி
ஊட்டினாலும் முகம் திருப்பும்
பேரப்ப்பிள்ளைகளெல்லாம்
போட்டி போட்டு இலை நிரப்பி
சப்புக் கொட்டி உண்ணுகிறார்கள்

நவ நாகரீக அடுப்படி
அனைத்துப் பொருட்களும் உள்ள
அஞ்சறைப்பெட்டி
சுத்தீகரிக்கப் பட்ட தண்ணீர்
தேக்காலான சாப்பாட்டு மேஜை
இவைகளின்றி ஏதும் செய்ய இயலாத
மருமகள் கள் எல்லாம்
வரிசையாய் அமர
பரிமாறத் துவங்குகிறாள் ஆச்சி

சட்டிக் குழம்பும்
அண்டாச் சோறும்
கற்பூரமாய்க் கரைய
ஏனோ கண்கலங்குகிறாள்
வீட்டில் கேஸ் அடுப்பு கூட
பற்றவைக்கத் தெரியாத
 "அந்த க் காலத்து ஆச்சி "

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

மாதேவி said...

நல்ல கவிதை. இக்கால நிஜவாழ்க்கை.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல கருத்துள்ள கவிதை. அருமை...

கீதா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான கவிதை. மிகவும் ரசித்து படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Post a Comment