Thursday, June 8, 2023

கர்ப்ப காலக் கோளாறுகள்..

 எங்கோ ஒளிந்துகொண்டு  

நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
நூலின் நுனி

பயணத்தையே முடக்கிப் போகிறது
பயணத்தின் முன்
புறப்பட்ட குழப்பமும் சந்தேகமும்

எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருகத் துவங்குகிறது
ஒரு தூய காதல்

அனுபல்லவியும் சரணங்களும்
மிகச் சரியாக அமைந்தும்
பல்லவி அமைந்து தொலையாததால்
கண் திறக்கப் படாத சிற்பமாய்
சிற்பக் கூடத்திலேயே
சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது
விடிவு காலம் எதிர்பார்த்து
தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
கலையத் துவங்குகிறது
ஒரு கவிதைக் கரு

2 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

பதிவு அருமை. கவிதை வரிகள் நன்றாக உள்ளது. எத்தனை சிக்கலான கருவாக இருந்தாலும், தங்களின் சிறப்பான வார்த்தைகளின் உரம் கொண்டு வளர்ந்து முழுமையாகி விடும் தங்கள் கவிதைகள் காலத்தால் சிதைக்க முடியாதது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான ஒரு சிந்தனை. கவிதையை ரசித்தேன் .

Post a Comment