Wednesday, May 18, 2011

பொதுவென வைத்தோம்......

நெருடுகிற நெருக்கத்தில்
வேறொரு பெண்ணுடன்
அவனைக்கண்ட சித்தப்பா
அரண்டுதான் போனார்

அவனா இப்படி......
வீடு பகைத்து
வீதி பகைத்து
ஊர் பகைத்து
உறவு பகைத்து....

தெய்வீக உறவென்றும்
பிரிக்கத் துணிந்தால்
சாதலே முடிவென்றும்
வேர்களை எரித்துப்போன....
அவனா இவன்
சித்தப்பா சிதைந்துதான் போனார்

அவன் சிறிதும் கலங்கவேயில்லை
அலட்டிக் கொள்ளவும் இல்லை
தெளிவாகவே இருந்தான்

அடுத்து அடுத்து இரண்டு குழந்தை
அதனை அடுத்து மூன்று அபார்சன்
அழகும் இளமையும் அடியோடு போனபின்
அவளொடு எப்படி நகர்வலம் கூடும்
சன்னதிக்கு அவள்
சாயங்க்காலத்திற்க்கு இவள்
இவன் சங்கடப்படவே இல்லை
தெளிவாகத்தான் இருந்தான்

நிற்பவர்கள் இருவரும்
நிற்பதில் மட்டும் இல்லை
நினைப்பிலும் வேறுவேறாக இருப்பது தெரியாமல்...

இரவு எட்டுமணிக்குள்
வீடு திரும்பவில்லையெனில்
சந்தேகம் கொள்வானே
தாலி கட்டிய புண்ணியவான் என்று
கண் கலங்கி நின்றாள்
அழகும் இளமையும் ததும்பிய இவள்

30 comments:

தமிழ் உதயம் said...

ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்...

Unknown said...

கண்களால் மட்டுமே பேசிக்கொண்ட 1980கள் ஞாபகத்திற்கு வருகிறது!

தனக்கு படிந்த பெண்களின் வரிசையை வெளியிடுகிறான், என்னுடைய நண்பர் குழாமின் புதிய வரவான 25 வயதோன்!

மாற்று உறவென்பது தற்போது அவ்வளவு, நெருடலானது அல்ல!
கடைபிடிப்பவருக்கும், கண்டுபிடிப்பவர்க்கும்!

Chitra said...

நிற்பவர்கள் இருவரும்
நிற்பதில் மட்டும் இல்லை
நினைப்பிலும் வேறுவேறாக இருப்பது தெரியாமல்...



..... சின்ன சின்ன வரிகளில் - எத்தனை அர்த்தங்கள்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

சந்தேகம் கொள்வானே
தாலி கட்டிய புண்ணியவான் என்று
கண் கலங்கி நின்றாள்//

ஆயிரம் அர்த்தம் தந்த இவ்வரிகள் ,

//அழகும் இளமையும் ததும்பிய இவள்//

முரணாக அமைந்ததேன்.?..

G.M Balasubramaniam said...

உறவுகள் பற்றிய ஒவ்வொருவர் சிந்தனையும், நியாயப்படுத்தும் முறையும், சூழலும், ஒவ்வொரு விதம் . அது சரி, வாழ்வில் மதிப்பீடுகள் என்று (values)சொல்லுகிறார்களே, அப்படி என்றால் என்ன.?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நிற்பவர்கள் இருவரும்
நிற்பதில் மட்டும் இல்லை
நினைப்பிலும் வேறுவேறாக இருப்பது தெரியாமல்...//

அவரவர் நிலைமையும் தவிப்பும் அவரவர்களுக்கே தெரியும் என்பதை அழகாக வெளிப்படுத்திய வரிகள்.

//அழகும் இளமையும் ததும்பிய இவள்//
இன்றைய இவள் நாளைய அவள்.
அன்றைய அவள் இன்றைய இவள் போலவே இருந்தவள்.

இளமையும் அழகும் என்றும் நிரந்தரமில்லை என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

அருமை!!!

Lali said...

தொடர் கதையான உறவுகள், தொடர்பில்லா ஒன்றாகிவிட்டன இந்நாளிலே... அமைதியான வெளிப்பாடு. வாழ்த்துக்கள்!

http://karadipommai.blogspot.com/

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மனதின் விகாரங்கள் வெளியில் தெரியாதவரை எல்லாம் சரிதான்.

ஆனால் சபல மனத்தால் தவறிழைத்துவிட்டுத் தவிக்கும் தவிப்பும் தவறிழைத்தபின் நேரும் துயரமும் சொற்களில் அடங்காதவை.

எண்ணங்கள் 13189034291840215795 said...

அழகும் இளமையும் அடியோடு போனபின்
அவளொடு எப்படி நகர்வலம் கூடும்//

அவளும் இவனைப்போல் செய்வாளானால் ?.. திருந்திடுவான்..

திருமணம் தாண்டிய உறவில் தன் துணையையும் அப்படி போக அனுமதிப்பார்களானால் அதில் கொஞ்சம் நேர்மை இருக்குன்னு எடுக்கலாம்..( வெறுப்பினால் )

காமத்துக்காக மட்டுமே என்பதுதான் ஏற்கமுடியாது..( அவன் செய்வதுபோல் )

அடிமைத்தனம் இருக்குமிடத்தில் நடக்கும் ..

விவாதத்துக்குறிய பொருள்..

இக்பால் செல்வன் . வல்லவன் , மற்றும் லேமேன் அலசியுள்ளார்கள்

http://layman-fromindia.blogspot.com/2011/05/marriage-and-extra-marital-relationship.html

இராஜராஜேஸ்வரி said...

நிரந்தரமில்லாத மனதில் நெருடலான உறவுகள்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. மனிதனுக்குள் எத்தனை தான் முரண்பாடுகள்.

sakthi said...

மனிதன் மிருகத்திலிருந்து வந்தவன் தான் என்பதை உணர்த்தும் இச்செயல்கள் இப்போது என இல்லை எப்போதும் நடந்து கொண்டிருப்பது வருத்ததிற்குரிய விஷயமே. உங்களின் கவிதைகள் வித்தியாசமான கண்ணோட்டத்துடன் தாங்கள் படைப்பது பாராட்டுகுரியது
தொடருங்கள் ரமணி சார்

A.R.ராஜகோபாலன் said...

சன்னதிக்கு அவள்
சாயங்க்காலத்திற்க்கு இவள்
இவன் சங்கடப்படவே இல்லை
தெளிவாகத்தான் இருந்தான்

ஒற்றை வரியில்
கற்றை கருத்து சொல்லும் திறம்
உங்களுக்கே அமைந்த வரம்
ரமணி சார்.
நிகழ்காலங்களின் நெருடல்களை
சொல்லும் கற்பக கவிதை

மாலதி said...

//அவனா இப்படி......
வீடு பகைத்து
வீதி பகைத்து
ஊர் பகைத்து
உறவு பகைத்து....//
நெருடலான உறவுகள்!
நல்ல கவிதை
தொடருங்கள் ....

RVS said...

சன்னதிக்கு அவள்.
சாயங்காலத்திற்கு இவள்..

அவளும் இவளும் கண் முன்னே! அற்புதம் சார்! ;-))

vanathy said...

வழக்கம் போலவே அருமையான கவிதை. தொடர்ந்து எழுதுங்க படிக்க காத்திருக்கிறேன்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நாட்டு நடப்புகளை சின்ன சின்ன கவிதைகளால் சிந்திக்க வைத்து விடுகிறீர்கள், வாழ்த்துகிறேன்

Murugeswari Rajavel said...

விஷயம் எப்படிப்பட்டதாயிருந்தாலும்,வார்த்தைகள்,வரிகள் வழக்கம் போல் ரமணி சாரின் முத்திரை.

Unknown said...

அழகான வரிகள்

Unknown said...

இருவேறு உள்ளங்களின் எண்ணங்களை அருமையான கவிதையாக வெளிப்படுத்தி இருக்கீங்க சார்.வாழ்த்துக்கள்.

ஹேமா said...

சில விஷயங்கள் சந்தர்ப்பத்துக்கு ஏற்றதுமாதிரி அவரவர்களுக்குச் சரியாகவே இருக்கும் !

மதுரை சரவணன் said...

அருமையான கவிதை... வாழ்த்துக்கள்

எல் கே said...

இன்றைய காலத்தில் இது சகஜமாகி விட்டதே

போளூர் தயாநிதி said...

//இரவு எட்டுமணிக்குள்
வீடு திரும்பவில்லையெனில்
சந்தேகம் கொள்வானே
தாலி கட்டிய புண்ணியவான் என்று
கண் கலங்கி நின்றாள்
அழகும் இளமையும் ததும்பிய இவள்//
இன்றைய ஆணாதிக்கத்தின் கருத்தியலை அழகாக படம் பிடித்து கட்டுகின்றீர்கள் நல்ல ஆக்கம் உளம் கனிந்த பாராட்டுகள் தொடருங்கள் .

பாச மலர் / Paasa Malar said...

உறவுகளில்தான் எத்தனை நெருடல்கள்...அருமையாக உள்ளது...

சாத்தியமற்றவை என்று எண்ணப்படுபவை சாமான்யமாகிப்போகின்றன..

இராஜராஜேஸ்வரி said...

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

இராஜராஜேஸ்வரி said...
(1)நிரந்தரமில்லாத மனதில் நெருடலான உறவுகள்!
&
(2)//தீதும் நன்றும் பிறர் தர வாரா...//

சபாஷ்.....

(2) மிகச்சரியான
அசத்தலான
பொருத்தமான
பின்னூட்டம் ....
பாராட்டுக்கள் ! மேடம்

S.Venkatachalapathy said...

உங்கள் கவிதை நாயகன் கலங்கவேயில்லை, தெளிவாகவும் இருக்கிறான்.
இரண்டு குழந்தைகள் மூன்று அபார்சன்கள், கலங்காத தெளிவான சுய நலமா ? அழகையும், இளமையையும் கோட்டைவிட்டது அவளின் அறியாமையா, துரதிர்ஷ்டமா?
கவிதை நாயகியும் தாலிகட்டியவனின் சந்தேகத்தை சமாளிப்பதைப் பற்றித்தான் சிந்தித்துக்கண் கலங்குகிறாள். நாயகன், நாயகி இருவருக்கும் உணர்வுகளுக்கான வடிகால் திருமண சொந்தத்தில் இல்லாமல் போனதோ?

ரொம்ப ரிஸ்கீ சப்ஜெக்ட். பின்னூட்டம் அத்தனையிலுமொரு தடுமாற்றம் காண்கிறேன்.

'தற்காத்து தற்கொண்டார் பேணி தகைசார்ந்த
சொற்காத்து சோர்விலால் பெண்.'

ஆணாதிக்கத்தின் வெளிப்பாடா?

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Post a Comment