Thursday, September 6, 2012

எழுதாத எழுத்தாளர்களுக்கு....

அதிக அனுபவச் சேர்க்கையும்
அதீத வாசிப்பின் தாக்கமும்
இயல்பாக வசப்படும் வார்த்தைகளின் நேசமும்
எதையும் எழுதிவிடலாம் என்னும்
நம்பிக்கை இருந்த போதினும்..

.எத்தனை உயர்ந்த வாகனமாயினும்
எவ்வளவு வேகப் பயணமாயினும் 
இலக்கற்ற பயணம்
வெட்டி அலைச்சலே என
மனதினில் எண்ணம் கொண்டு

பொருளற்ற பேச்சில்
சந்தமும் அணிகளும்
அதிகமாய்க் கலந்திருந்தபோதும்
உளறலே என்ற
உறுதியினை அறிவில் கொண்டு

எத்தனைத் திறத்துடன்
செய்யப்பட்ட்டபோதும்
பயனற்ற செயல்கள்
விழலுக்கு இறைக்கும் நீரென்ற
கொள்கையினை  சிரமேற்கொண்டு

மிகச் ச்ரியாகச் சொன்னால்
கருவுறவே அல்லாது கொள்ளுகிற
உடல் சேர்க்கைக் கூட
காமக் களியாட்டமே என
வெறுத்தொதுக்கும் உறுதிகொண்டு

பிண்டத்தைப் பெற்று
தாயெனப் பெருமிதம் கொள்ளுதலை விட
மலடியாய் இருத்தலே மகத்தானது எனும்
மந்திரச் சொல்லினை
வேதமாய் மனதினில் கொண்டு

எழுதாது இருப்பதாலேயே
எங்களையும் எழுத்தாளர்களாக
தலை நிமிர்ந்து உலவ விடும்
தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே
உங்களுக்கே  சரண் நாங்களே 

35 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பலருக்கும் சாட்டையடி வரிகள்...

ஆத்மா said...

இது வாசகர்களுக்கா... இல்ல எழுத்தாளர்களுக்கா என்னு புரியல்லியே/.. த.ம 4

Unknown said...


// எத்தனை உயர்ந்த வாகனமாயினும்
எவ்வளவு வேகப் பயணமாயினும்
இலக்கற்ற பயணம்
வெட்டி அலைச்சலே என
மனதினில் எண்ணம் கொண்டு//


நல்ல கருத்தோட்டம் மிக்க கவிதை!மன்ப் பாடம் செய்யவேண்டிய வரிகள் என்றே சொல்வேன்!

வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அவர்கள் எழுதினால் நாம் அனுபவங்களும் படைப்புகளும் எடுபடாது.. தலைவரே...

அழகிய சிந்தனை

பால கணேஷ் said...

அவர்கள் இல்லையேல் நாம் எழுதுவது எவ்விதம்... அருமையான சிந்தனையில் முகிழ்த்த சிறப்பான வரிகள். நன்று.

சீனு said...

அருமையான சிந்தனை அருமையான கவி.. அருமை அய்யா

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

ஆழமான அர்த்தங்களைக் கொண்ட வரிகள். வாழ்த்துகள்

ADHI VENKAT said...

அருமையான வரிகள் சார்.

கும்மாச்சி said...

\\பொருளற்ற பேச்சில்
சந்தமும் அணிகளும்
அதிகமாய்க் கலந்திருந்தபோதும்
உளறலே என்ற
உறுதியினை அறிவில் கொண்டு //

ரமணி இது ஏதோ உள்குத்து போல் இருக்கிறது. அப்படி பேசினால தான் பாஸ் ஆட்சிக்கு வரமுடியும்.

மாதேவி said...

அருமையான சிந்தனைக் கவிதை.

குட்டன்ஜி said...

எதை எழுதினாலும் படிப்பார்கள் என்பதால் எழுதுவதெல்லாம் இலக்கியமாகாதுதான்.
அருமையான சிந்தனை.

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நல்லாருக்கு..

ஸாதிகா said...

அருமையான அவதானிப்பு.வாழ்த்துகக்ள் சார்.த.ம 10

இந்திரா said...

அருமையான நச்சென்ற பதிவு

Unknown said...

எல்லாமே ஒரு அனுபவம்தான்! எழுத்துகளும்..! அனுபவங்களே எழுத்துகளாகின்றன! தேவைகளே அனுபவத்தை தருகின்றன! அனுபவங்கள் சிலசமயம் அலைச்சலும் தரும்..அதிசயத்தையும் தரும்..எரிச்சலையும் தரும்!

தேவைகள் குறைவு எனில்..சிகரம் அடைந்துவிட்டது..என அர்த்தமாகிறது.அதன்பின்னர் அனுபவங்கள் பெற வாய்ப்பு குறைகிறது..எழுதுவதும் குறைந்து விடுகிறது!

வறுமையில் இருக்கும் அல்லது..புகழேணியில் ஏறத்துடிக்கும் ஒரு படைப்பாளி..இலக்கை அடையும் வரை கணக்கின்றி,அலுப்பின்றி படைத்துக் கொண்டு தான் இருப்பான்! அது தவறில்லை!

தி.தமிழ் இளங்கோ said...

ஓட்டப் பந்தயத்தில் யார் யார் ஓடுகிறார்கள் என்பதை மட்டுமே பார்ப்பார்கள். ஓட முடியாதவர்களைப் பற்றி யாரும் நினைப்பதில்லை. ஒரு கட்டத்தில் எல்லோருமே ஓட முடியாமல் நின்று விடுகிறார்கள். ஆனாலும் ஓட்ட பந்தயம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. நாம் ஓடும்வரை ஓடுவோம்.

அம்பாளடியாள் said...

எத்தனை உயர்ந்த வாகனமாயினும்
எவ்வளவு வேகப் பயணமாயினும்
இலக்கற்ற பயணம்
வெட்டி அலைச்சலே என
மனதினில் எண்ணம் கொண்டு

மனதைத் தொட்ட அழகிய சிந்தனை
இவைகள் அருமை!..தொடர வாழ்த்துக்கள்
ஐயா ...

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

எழுதாமல் இருந்தாலும் எழுதாளனுக்கு புகழ்தான் உங்கள் கவிதை மூலம்.

Thoduvanam said...

எழுதாது இருப்பதாலேயே
எங்களையும் எழுத்தாளர்களாக
தலை நிமிர்ந்து உலவ விடும்
தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே
உங்களுக்கே சரண் நாங்களே ..

NKS.ஹாஜா மைதீன் said...

ஆழ்ந்த கருத்துள்ள அருமையான வரிகள் ..நன்றி சார்

”தளிர் சுரேஷ்” said...

உண்மையான கருத்துள்ள கவிதைவரிகள்! எழுத்து உபயோகமாய் இருக்க வேண்டும் என்ற அறிவுரையை சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்! நன்றி!

இன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

அருணா செல்வம் said...

ஊமை மொழிகளுக்கு அர்த்தம் ஏது ஐயா?
உணர்ச்சிகளை வெளிக்காட்டினால் தான்
உள்ளுணர்வின் உண்மைகள் மற்றவர்க்குத் தெரியும்.
முடிவு நல்லதோ கெட்டதோ முயற்சித்தவர்களே முன்னேற முடியும் இல்லையாங்க...

நன்றி ரமணி ஐயா.

பழூர் கார்த்தி said...

உங்கள் கருத்தும், கவிதையான வெளியாக்கமும் நன்று..

//இலக்கற்ற பயணம்
வெட்டி அலைச்சலே//

மிகவும் உண்மை, அழகாகச் சொல்லி விட்டீர்கள்!

ராஜி said...

பிண்டத்தைப் பெற்று
தாயெனப் பெருமிதம் கொள்ளுதலை விட
மலடியாய் இருத்தலே மகத்தானது
>>
நிஜம்தான் ஐயா. சிலப்பேர் எழுத்தை படிக்கும்போது ஏண்டா அ, ஆ, இ, ஈ கத்துக்கிட்டோமோன்னு இருக்கு

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல வரிகள்.....

த.ம. 19

சிவகுமாரன் said...

ஆகா . வாழை பழத்தில் ஊசி.

Anonymous said...

''...ரமணி இது ஏதோ உள்குத்து போல் இருக்கிறது...''- கும்மாச்சி -
''...எதை எழுதினாலும் படிப்பார்கள் என்பதால் எழுதுவதெல்லாம் இலக்கியமாகாதுதான்..''-குட்டன்

'' வாழைப்பழத்தில் ஊசி'' என்பன நல்ல கருத்துகள் உங்கள் சிந்தனை போல.
அனைவருக்கும் நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

G.M Balasubramaniam said...


பதிவுலகின் வாசகர்கள் பெரும்பாலோர் எழுத்தாளர்கள்தானே ர்மணி சார். சிவகுமாரன் சொல்வது புரிகிறது. உங்கள் கவிதை ஊசி. வாழைப்பழம் யார், எது.?

G.M Balasubramaniam said...


பதிவுலகின் வாசகர்கள் பெரும்பாலோர் எழுத்தாளர்கள்தானே ரமணி சார். சிவகுமாரன் சொல்வது புரிகிறது.உங்கள் கவிதை ஊசி. வாழைப்பழம் யார் , எது. ?

கதம்ப உணர்வுகள் said...

ம்ம்ம்ம்ம்... எழுத்துகள் என்றும் உயிர்த்தே இருக்கிறது எழுத்தாளன் மறைந்துவிட்டாலும், எழுதாவிட்டாலும், எழுதாததற்காக எத்தனை காரணங்கள் இருந்தாலும்.... எழுத்துகள் எழுத்தாளருக்கான கௌரவங்கள்..... பரிசுகள்.... அன்புகள்.... நினைவுகள்... உயிர்த்தே தான் இருக்கிறது... நினைவு பெட்டகத்தில் சேகரிக்கும் நல்லவைகளாக, பொக்கிஷமாக உயிர்த்தே இருக்கிறது.... இதோ மீண்டும் களமிறங்கி இருக்கிறீர்கள்.... இம்முறை எழுத்தாளர்களுக்காக பண்புடன், பணிவுடன், அன்புடன் அவர்களுக்கு சமர்ப்பிக்கும் ஒரு பக்தனாக மிக அருமையாக இந்த கவிதை ஒரு சமர்ப்பணம்.....

அழகிய ஆழ்சிந்தனை தொடக்கம்....

எழுத என்னென்ன அவசியம் என்பதை எத்தனை துல்லியமாக சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள் என்பதை படிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது ரமணி சார்... உண்மையாக ஆமாம்... ஆமாம்... அனுபவச்சேர்க்கை ( மூத்த முதிய எழுத்தாளர்களிடமிருந்து கிடைக்கும் அற்புதம்), அதீத வாசிப்பின் தாக்கம் ( புத்தகப்புழுவாக இருப்பது... உண்ணும்போதும் உறங்கப்போகும்போதும், அம்மாக்கு தெரியாம புத்தகங்கள் ஒளித்துவைத்து படிப்பதும் படுத்த உடனே உறக்கம் வராமல் படித்த காரக்டர்கள் உயிர்த்து நம் சிந்தனைக்குள் கற்பனை உலகத்தில் நடமாடுவதும்..... அட அவர் அப்படி எழுதினாரே அதை நாம இப்படி மாத்தி யோசிச்சா என்ன ??? இப்படி செய்தால்??? இப்படி இருந்திருக்கலாமே??? ஏன் நாமே எழுத முயலக்கூடாது?? ) இயல்பாக வசப்படும் வார்த்தைகளின் நேசம்... ஆஹா ரசித்தேன் சார் இந்த வரிகளை... கரெக்ட் கரெக்ட்..... கவிஞன் சிந்திப்பான் தன் கவிதையை படைக்கும் முன் வார்த்தைகளை சிதறவிடுவான் காகிதத்தில்... பின் அதை அழகாய் கோர்ப்பான் கவிதை நடையில்... கருவை முதலாக்கி கவிதையை முழுமையாக்கி தானே வாசகன் ஸ்தானத்தில் வைத்து தன் படைப்பை வாசிப்பான்... வாசித்ததை ரசிப்பான்... ரசித்ததை அப்படியே படைத்துவிடுவான்... இது இதுவே தான்.... எதையும் எழுதிவிடலாம் என்ற நம்பிக்கை..... ஆனால் இங்கே கேள்விக்குறி ஏன்?? நம்பிக்கை இருந்த போதினும்...... கடைசி வரியில் இதற்கான பதில் கிடைக்கும்.... பார்ப்போம்...

கதம்ப உணர்வுகள் said...

அழகிய உவமை இது... கற்பனைக்கும் எட்டாத உவமை... யோசனைகள் நம்மை எத்தனை தூரம் அழைத்து செல்கிறது என்பதற்கு இது ஒரு அருமையான உதாரணம்.... பணத்தைக்கொட்டி அசத்தலா வண்டி வாங்கிவிட்டு அதை மற்றவருக்கு காட்டுகிறேன் என்ற பெருமை ஒரு பக்கம் இருந்தாலும், பார்க்கிறியா நான் முந்தியா நீ முந்தியான்னு வேகமாக ரேஸ் வைப்பதும்... ஆனால் போவது எங்கே?? எதற்கு?? ஏன்?? இதற்கு சரியான விடை இல்லை என்றால் அப்ப அந்த புது வண்டி தான் எதற்கு?? ரேஸ் தான் எதற்கு?? நம் செயல்கள், சிந்தனைகள், வார்த்தைகள் எல்லாமே அவசியமற்று வெளிவரக்கூடாது என்பதற்கு மிக அருமையான உதாரணம் இது....

கதம்ப உணர்வுகள் said...

எத்தனை பேசுகிறோம் எத்தனை எழுதுகிறோம் எத்தனை படைப்புகள் தருகிறோம் என்பது முக்கியமல்ல..ஆனால் என்ன பேசுகிறோம்... என்ன எழுதுகிறோம் என்ன படைப்பு தருகிறோம்.. இது எல்லோருக்கும் பயன் தர தகுதியானது தானா என்று ஒரு முறைக்கு பலமுறை சரி பார்த்துக்கொண்டு....இலக்கணமும் இலக்கியமும் எல்லோருக்கும் கைவந்த கலையில்லை... ஆனாலும் எழுதுவோர் உண்டு... எப்படி?? இலக்கணம் இலக்கியத்தில் ஒருசிலர் மரபு கவிதைகளில் அசத்தும்போது... இலக்கணமும் இலக்கியமும் தெரியாதவர்களும் கருத்து சொல்வது போல் கரு அமைத்து பொருள் தருமாறு கவிதை படைக்கும்போது ஆஹா நச்னு சொல்லிட்டார்பா ரெண்டு வரில.. இப்படியாக அசத்துவோரும் உண்டு....ஆனால் அதுவுமில்லாமல் இதுவுமில்லாமல் நானும் எழுதுகிறேன் என்று எதையோ எழுதுவதால் என்ன பயன் என்று கேட்கவைத்த மிக அருமையான பத்தி இது....


அந்தரங்கம் தேவரகசியம்.... அதை அறிய முயல்வோர் திருமண பந்தத்தில் விழைவதும்... குலக்கொழுந்தை உருவாக்கும் மிக அற்புதமான ஒரு பிரம்மாவாக தாய் தந்தை என்ற அந்தஸ்து கிடைக்க செய்யும் மிக தெய்வ முயற்சியாக சொல்ல கருவுறவு என்றச்சொல் மிக ரசித்தேன்... ஆனால் வெறும் உடல்சேர்க்கை இந்த அற்புத அர்த்தம் கொள்ளாது என்று அழுத்தமாக சொன்ன பத்தி மிக மிக சிறப்பு....



ஆஹா ஆஹா ரசித்து மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்... பிண்டத்தை பெற்று தாய் என பெருமிதம் கொள்வதை விட.... இதை விட வேறென்ன சொல்லிவிட முடியும்... தாயின் கண்ணுக்கு எல்லாக்குழந்தைகளுமே தன் குழந்தையாக தான் பார்க்கத்தோணும்.. அதனால் தாயின் கண்ணுக்கு துவேஷம் தெரியாது.. பாசம் மட்டுமே தெரியும்... அரக்கத்தனம் தெரியாது மனதுக்கு... அன்பு மட்டுமே பகிரும்... அந்த தாய் முதுமை அடைந்தப்பின்னர் மகன் தனக்கென ஒரு குடும்பத்தை பெற்றப்பின்னர் தாயை அந்நியமாக கருதி தன்னை விட்டு தூர விலக்கி வைத்துவிடுகிறான்... தான் இறந்தப்பின்னர் தனக்கு கொள்ளி வைக்க மட்டுமே உதவும் மகனைப்பெறுவதை விட இப்படி ஒரு மகவை பெற்று துன்பப்படுவதை விட பிள்ளை பெறாத மலடியாக இருத்தலே மகத்தானது என்று சாட்டையடி வரிகளாய் சொன்னது கைத்தட்ட வைக்கிறது...

கதம்ப உணர்வுகள் said...

இங்கே தன் படைப்புகளை தராத எழுதாது இருக்கும் எழுத்தாளர்களை கௌரவித்து தன்னை உருக்கி வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியைப்போல எழுதாமல் இருந்து எழுதிக்கொண்டிருப்போரை உயர்வித்து அவர்களை படைப்புகளை படித்து ரசித்து பகிரும் விமர்சனங்கள் எல்லாமே வைரக்கற்கள் பதித்த ஒரு க்ரீடமாக அந்தஸ்து பெறச்செய்கிறார்கள் என்று எழுதாத எழுத்தாளர்களை எத்தனை அருமையாக எத்தனை அழகாக எத்தனை உணர்ந்து தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே என்று எழுதி இருக்கிறீர்கள் அப்பப்பா.... தாயுள்ளம் என்றால் தன் வயிற்றுப்பசியை கவனிக்காது குழவியின் பசியைப்போக்கி குழவி சிரிக்கும் அந்த மழலைச்சிரிப்புக்காக காத்திருக்கும் அற்புதமான ஒரு பிறவி தான் தாய்... அந்த தாயின் உள்ளத்துக்கு நிகராக எழுதாமல் இருந்து எழுதுவோரின் எழுத்துகளை ரசித்து வாசிப்பதாலேயே வாசகர்களாகவும் உயர்த்தி அவர்களுக்கு அர்ப்பணித்த உங்கள் பண்பையும் பெருந்தன்மையையும் பணிவையும் நான் வணங்குகிறேன் ரமணி சார்....

அருமையான கவிதை அர்ப்பணிப்பு எழுதாத எழுத்தாளர்களுக்காக.....ஹாட்ஸ் ஆஃப் ரமணி சார்....

அற்புதமான இந்த கவிதை அர்ப்பணிப்புக்கு என் பணிவான அன்பு நன்றிகள்....

கதம்ப உணர்வுகள் said...

த.ம.20

Post a Comment