Thursday, January 31, 2013

பொருள் என்பதற்கான பொருள்

பொருட்களின்
 பயன்பொறு த்து
அதன் பயன்பாடுபொறு த்து
 புனிதம் பொறு த்து
அதனதன் இடத்தில்
அந்த  அந்தப் பொருட்களை
தன் செயல்களுக்கு  உதவும்படி
வைப்பதுவும்
தன் வளர்ச்சிக்கு  அதனை
முறையாகப் பயன்படுத்துவதுவே
புத்திசாலித்தனம்

 மாறாக
 இடம் மாற்றிவைப்பது
குழப்பத்தை மட்டுமல்ல
கால விரயத்தை மட்டுமல்ல
பொருட்களின் பயன்பாட்டை மட்டுமல்ல
அந்தப் பொருளையே கூட
அதிகம் பாதிக்கக் கூடும்
அதன் மதிப்பையே கூட
முற்றாக அழிக்கக் கூடும்

ஆயினும்
பொருட்களுக்கு
கூடுதல்  இடத்தையும்
 எல்லா  இடத்தையும்
கொடுத்துவிட்டு
இடமின்றித் திரிவதும்
தடுமாறித்  தவிப்பதுவும்
நிச்சயம் புத்திசாலித்தனமில்லை

பொருள் என்பதற்கான பொருள்
கார் சாவி, செருப்பு ,பேனா எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன ?
அது ஜாதி மதம் அரசியல்
எனக் கூட
இருக்கலாம்தானே !

Wednesday, January 30, 2013

ஆணவமும் காற்றிடைப்பட்ட கற்பூரமும்

அதீத உடல் பலமும்
அனைத்தையும் அழிக்கும்
ஆதிக்கவெறியும் கொண்டு திரியும்
சிங்க இனமும் புலி இனமும்
தொடர்ந்து சிறுத்துக் கொண்டே போக

காற்றிடைப்பட்ட கற்பூரமாய்
தானே கரைந்து போக

காட்சிபொருளாக வேணும்
காத்துவைக்க வேணும்  என்கிற
அவல நிலைக்குப் போக

பயமொன்றே
பதுங்குதல் ஒன்றே அறிந்த
பலமற்ற
பாவப்பட்ட
அணில்களும் மான்களும்
பல்கிப் பெருகுவது கூட

வன்முறை குறித்த
அதீத பலம் குறித்த
ஆணவம் குறித்த
ஏதோ ஒரு செய்தியை
சொல்லித்தான் போகிறது

நல்லவர்களுக்கு புதியநம்பிக்கையைக்
கொடுத்துத்தான் போகிறது


சுயம்

குளங்களில் கண்மாயில்
விளைந்து கிடக்கிற
வளமான களிமண்ணெடுத்து
கையில் இருக்கிற அச்சினில்
திணித்துத் திணித்து எடுக்கிறேன்
கண்ணனும் சிவனும்
தொந்திப் பிள்ளையாரும்
 மிக மிக அழகான
பொம்மைகளாய்
என் எதிரில் சிரிக்கிறார்கள்

ஆயினும் வீட்டில்
எப்போதும் பூசைக்கு
என் பேரன் கைகளால் பிசைந்து
அரை நாள் செலவ்ழித்து
மீண்டும் மீண்டும் திருத்திப்
பிள்ளையாரைப் போலச  செய்திருக்கிற
விக்ரகத்தைத்தான் பயன்படுத்துகிறேன்

பிள்ளையர்ர் கூட
அதில் கு டியிருக்கத்தான்
விருப்பப்படுவார்ப்  போலப் படுகிறது
 எனக்கு


 மீள்பதிவு 

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் எடுக்கும் "விஸ்வரூபம் "

கோரிக்கை விளக்கக் கூட்டங்கள்
பெருந்த் திரள் ஆர்ப்பாட்டங்கள்
பேரணி வேலை நிறுத்தங்கள்
தராத பலனை
ஒரு வன்முறை மிரட்டல்
சாதித்துவிடுமோ . என்கிற எண்ணத்தையும்

மத நல்லிணக்கம் என்பது
பெரும்பான்மையினரின் சிறுமைகளை
எப்படி வேண்டுமாலும் தாக்கலாம என்பதுவும்
சிறுபான்மையினரின் சிறுகுறையினையும்
எந்த வகையிலும்  எந்த நிலையிலும்
சொல்லக் கூடாதோ என்கிற கருத்தினையும்

சகிப்புத்தனமை சகோதரத்துவம்
சமதர்மம் என்பதெல்லாம்
பொதுவானது என்பது
பொய்யானது போலியானது என்பதுவும்
ஒரு சார்பானது என்பதே
உண்மையானதுஎன்னும் நம்பிக்கையையும்

வனத்தோடு  வெறிபிடித்து வாழும்
விலங்குகள் மட்டுமல்ல
நாகரீகம் பேசி
நாட்டில் வாழ்வோரும்
இனத்தோடு இணைந்திருத்தலே
பாதுகாப்பனது என்கிற உணர்வையும்

இப்படி அல்லது அப்படி
இருப்பதே இனி சரியெனவும்
இப்படியும் அப்படியும் என்பதெல்லாம்
இனி கதைக்காகாது என
"மதவாதிகளின்" கூற்று இனி
எடுபட்டுவிடுமோ என்கிற கவலையையும்

கண்டு கொள்ளாது மழுங்கச் செய்யவேண்டிய
 "விஸ்வரூபத்தை "
அதன் வீரியம் அறியாது
விஸ்வரூபமெடுக்கவிட்டு
 நாமே உண்டாக்குகிறோமோ?
துவங்கத் தெரியாது துவங்கி
முடிக்கத் தெரியாது திணருகிறோமோ ?

சகித்துக் கொள்ளக் கூடிய
லேசான அரிப்புக்கு
கொள்ளிக் கட்டையை எடுத்து
சொறிந்து கொண்டு சுகம் காண்கின்றோமோ
பூத்துக் குலுங்கும் சமதர்மப் பூங்காவை
நாமே தீயிடத் துணிகிறோமோ

சிந்திக்கச் சிந்திக்க
 பூதாகாரமாய்விஸ்வரூபமெடுக்கிறது
வாமன விஸ்வரூபமே
இனியும்  எதிர்ப்பென்னும் போர்வையில்
அதனை விஸ்வரூபமெடுக்கவிடுவது
நிச்சயம் அறிவீனமே

Monday, January 28, 2013

மனிதனை விலங்காக்கும் "அது "

நான் அழகு எனச் சொல்லிக் கொள்வது
தற்பெருமை தான்
இருப்பினும்
அது ஒரு பெரும் பிரச்சனை இல்லை

நான் மட்டுமே அழகு என்பதுதான்
பெரும் பிரச்சனை
அது ஆணவம் மட்டும் இல்லை
அனைத்துப் பிரச்சனைகளுக்கும்
அதுவே மூல காரணமும் கூட

நான் அறிவாளி என
பறைசாற்றிக் கொள்வது கூட
பெரும் பிரச்சனை இல்லை

நீ முட்டாள் என அடுத்தவனை
கை நீட்டுவதுதான் பெரும் பிரச்சனை
அதுவே அனைத்து  மன முரணுக்கும்
காரணமாகிப் போகிறது

கடவுள் ஒருவனே என்பது கூட
புரிதலின்மைதான்
ஆயினும் அது கூட
பெரும் பிரச்சனையில்லை

கடவுள் ஒருவனே
அவன் இவன் மட்டுமே என்பதுதான்
அனைத்து சமூகக் கொந்தளிப்புக்கும்
காரணமாகிப் போகிறது

அன்புக்கடிமையாய் சகோதரனாய்
பூமிக்கு அழகு சேர்க்கும் மனிதனை க் கூட
திசை மாற்றிப் போகிறது
அவனை மிருகமாக்கியும் போகிறது


குப்பை முதல் காவியம் வரை

சொல்வதற்கு ஏதுமற்று
சொல்லும் திறனுமற்று
சொல்லிச் செல்ல முயலுகையில்
 அது"குப்பை"யாகிப் போகிறது

சொல்வதற்கு  நூறிருந்தும்
சொல்லும் திறனின்றி
சொல்லி விட  எத்தனிக்கையில்
அது"கூளம் "ஆகிப் போகிறது

சொல்லுகிற திறமிருந்தும்
சொல்வதற்கு ஏதுமற்று
சொல்லிவிடத் துடிக்கையில்
அது"மொக்கை"யாகிப் போகிறது

சொற்திறத்தின் சிறப்போடு
கருப்பொருளும் உடனமைய
சொல்லிச் செல்ல முனைகையில்
அது"படைப்பாகிப் "போகிறது

ஆயினும்
பயனதனைப் பண்பாகக்
கொள்ளுகின்ற படைப்பொன்றே
காலம் கடக்கவும் செய்கிறது
அதுவே
"காவிய "மாகியும் போகிறது


Wednesday, January 23, 2013

கடுங் காஃபியும் கமலஹாஸனும்

காபி டிகாக்ஸனைப் போல
பல உண்மைகள் கசப்பானவைகளே
அதிலும்
நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மைகள்
அதீதக் கசப்பானவைகளே

பாலைப் போல
பெருகும் கற்பனைகள் ருசியானவைகளே
அதிலும்
யதார்த்தம் தொடாத கற்பனைகள்
அதிக ருசி கொண்டவைகளே

சர்க்கரையைப் போல
மகிழ்வூட்டும் சுவாரஸ்யங்கள் சிலிர்ப்பூட்டுவைகளே
அதிலும்
கிளுகிளுப்பூட்டும் சுவாரஸ்யங்கள்
அடி மனம் தொடுபவைகளே

நுனி நாக்கில் கசப்பினை நிறுத்தாத காஃபியை
சிலர் காஃபியென ஒப்புக் கொள்வதில்லை
சமூகத்தை புரட்டிப்போட முயற்சிக்காத
எந்தப் படைப்பினையும்
சிலர் படைப்பென ஏற்றுக் கொள்வதில்லை

அந்தச் சிலர் இப்போது வெகு சிலரே

பலராக  அந்தச் சிலர் பரவிப்பெருகும் வரை
பாலையும் சீனியையும் அதிகம் கூட்டி
காஃபியின் கலரை மட்டும் காட்டி
கல்லாக் கட்டுதலே இன்று பிழைக்கும் வழி
படைப்பாளிகள் விழிமூடி ஓடி
காலம் காலமாய் தொடர்ந்து நிலைத்த வழி

உலக நாயகனே

இந்தச்  சிறு மொழியை இனியேனும்
தெளிவாய்அறியா முயல்வாயா ?
உன் பங்காளியைப் போல்
மாயத் திரையுலகில் இனியேனும்
பிழைக்கும் வழியை அறிவாயா?


Tuesday, January 22, 2013

ஞானம் பெற எளிய ( ? ) வழி

தேவைகளை
எவ்வளவு சுமக்க முடியுமோ
எவ்வளவு குறைக்க முடியுமோ
அவ்வளவு குறைத்தபடி

சேர்த்தவைகளை
எவ்வளவு  இழக்க முடியுமோ
எவ்வளவு விலக்க முடியுமோ
அவ்வளவு விலக்கியபடி

நினைவுகளை
எவ்வளவு மறக்க முடியுமோ
எவ்வளவு துறக்க முடியுமோ
அவ்வளவு துறந்தபடி

அறிந்தவைகளை
எவ்வளவு எரிக்க முடியுமோ
எவ்வளவு புதைக்க முடியுமோ
அவ்வளவு புதைத்தபடி

திசைகளை
எவ்வளவு கடக்க முடியுமோ
எவ்வளவு  தகர்க்க முடியுமோ
அவ்வளவு தகர்த்தபடி

குருவற்ற  சீடனாய்
எவ்வளவு  ஓட  முடியுமோ
எவ்வளவு தேட முடியுமோ
அவ்வளவு தேடியபடி

அலைதல் ஒன்றே
உலகில் ஞானம் பெற
எளிய வழியென அறிவோம்
அதனைப் பயில்தலே
உண்மை ஞான நெறியென
அறிந்து தெளிவது கொள்வோம்

Saturday, January 19, 2013

பயணங்களும் அனுபவங்களும்-1

எப்படியும் அடிக்கடி திருமலை செல்கிற வாய்ப்பு
எனக்கு ஏற்பட்டுவிடும்.இந்தமுறை
அண்ணன் மகன் திருமணம்
திருமலையில் நடப்பதற்கு ஏற்பாடாகி இருந்ததால்
நாங்கள் குடும்பத்துடன் சென்றிருந்தோம்.

நான் ஏற்கெனவே  அங்கு ஒரு வாரம்
தங்கி இருந்து சேவா செய்தவன் என்கிற முறையில்
திருப்பதியின் நடை முறைகள் அத்துப்படி.எனவே
வெங்கடேஷனை தரிசிக்க மிகச் சரியான
திட்டமிடுதலுடன் செல்ல வில்லையெனில்
அதிக நேரம்காக்க வேண்டியிருக்கும்
என்பதால் அதற்கான பதிவுகள் எல்லாம் செய்து
மிகச் சரியாகப் போய் தரிசித்து வந்தேன்.

ஆயினும்
கூடுதலாக பிரசாத லட்டுகள் பெறுவது நாங்கள்
தொட்ர்ந்து புனே செல்ல ரயில் பிடிக்க
வேண்டி இருந்ததால்அத்தனை சுலபமாக இல்லை.
கிடைத்த லட்டுடன்புறப்பட்டுவிட்டாலும் கூட
பூனே மற்றும் பாம்பேஉறவினர் இல்லங்களுக்குச்
செல்கையில் எப்படிபிரசாதங்கள் இல்லாமல்
செல்வது என்கிற குழப்படி
இருந்து கொண்டே இருந்தது

சரி எப்படியும் இருப்பதில் சமாளித்துக் கொள்வோம்
 என நினைத்து திருமலையில் இருந்து
திருப்பதி செல்லும்பஸ்ஸில் ஏறி அமர்ந்து விட்டோம்.
ஆனாலும்அனைவருக்கும் கொடுக்கும்படியான
பிரசாதங்கள் வாங்கி வராதது கொஞ்சம்
மனச் சங்கடமாகவே இருந்தது

நான் அமர்ந்திருந்த சீட்டுக்கு அருகே
வட இந்தியர் ஒருவர் கையில் ஒரு
பெரிய பிளாஸ்டிக் பையுடன் அமர்ந்திருந்தார்
பஸ் ஐந்து மலைகளைக் கடந்து இறங்கிக்
கொண்டிருக்கையில்திடுமேன ஏதோ ஒன்று
சறுக்கி என் மடியில்விழுவதை ப் போலிருக்க
 திடுக்கிட்டு விழித்தேன்


நான்கு லட்டுகளுடன் கூடிய ஒரு பை
என் மடியில் இருந்தது.பக்கத்து இருக்கையில்
அந்தவட நாட்டவர் குறட்டைவிட்டுத்
 தூங்கிக் கொண்டிருந்தார்

நிச்சயமாக அவர் விழித்து  எழுந்தாலும் கூட
பையிலிருந்தது விழுந்தது தெரியாத அளவு
பை பெரியதாக இருந்தது.எனவே  நாமே
வைத்துக் கொள்ளலாமா ?
நம்முடைய மனக் குறை அறிந்து வெங்கடேசன்தான்
இப்படி இந்த வட இந்தியர் மூலம் ஏற்பாடு செய்கிறாரா ?
இல்லையெனில் இப்படி மிகச் சரியாக பக்கத்தில்
அமர்ந்தஒருவரிடம் இருந்து லட்டு மட்டும் நமக்குக்
கிடைக்கும்படியானநிகழ்வு நடக்குமா என
எனக்கு சாதகமாக உள்ள அனைத்து
விஷயங்களயும் குரங்கு மனம்
பட்டியலிடத் துவங்கிவிட்டது

ஆனாலும் மனச் சாட்சி மட்டும் இதே நிகழ்வை
அவன் போக்கில்நினைத்துப் பார் .அவன் பிரசாதம்
இல்லாததை இழந்ததைஒரு அபசகுனமாக
நினைத்தால் அந்தப் பாவம்உன்னைத்தான் சேரும் என அறிவுறுத்திக்கொண்டே வந்தது

முடிவாக தவறு செய்வதற்குக் கூட
ஒரு தைரியம் வேண்டும் என்பார்கள்.
அந்தத் தைரியும் இல்லாததாலோ அல்லது
வழக்கம்போல மனச் சாட்சியே இம்முறையும்
வெற்றி கொண்டதாலோ என்னவோ
தூங்கிக்கொண்டிருந்த அவரை எழுப்பி
ஜாடையில் லட்டு விழுந்த விஷயத்தைச் சொல்லி
அவரிடம் அந்தப் பையைக் கொடுத்தேன்

அவர் நன்றி சொல்லும் முகமாக இந்தியில்
 ஏதோ ஒன்றைச் சொல்லிஅதை என்னிடமே
திரும்பக்கொடுத்து அதை வைத்துக் கொள்ளச்
சொல்லிவிட்டு பின்னால் அமர்ந்திருந்த
குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு
கீழே இறங்கிவிட்டார்

இறங்கியவர் ஏனோ திருமலை நோக்கித்
தரையில் விழுந்துஒரு கும்பிடு போட்டபடி
பின் என் பக்கம் திரும்பிப் பார்த்து
பின் திருமலை நோக்கி என்னவோ
 சொல்வது போல இருந்தது

அவர் முகக் குறிப்பை வைத்து நிச்சயம்
அந்தப் பி ரசாத லட்டுகள்அவரைச் சேர்ந்ததில்லை.
அவரும் எப்படியோ கிடைத்து
கொண்டு வந்திருக்கிறார் என புரிந்து கொண்டேன்.

நானும் கெட்டிக் காரத் தனமாக இதை கவர்ந்திருந்தால்
நானும் நிச்சயமிதை இழந்திருப்பேன் என
என் மனச் சாட்சிஅறிவுறுத்திக் கொண்டே வந்தது.

அந்த அறிவுறுத்தல் நம்பிக்கையின் விளைவா அல்லது
மூட நம்பிக்கையின் விளைவா என்கிற குழப்பம் மட்டும்
இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது

Sunday, January 13, 2013

தமிழர் திரு நாளிதன் உட்பொருள்........

விதைத்த  ஒன்றை
நூறாய் ஆயிரமாய்
பெருக்கித் தரும்
பூமித் தாய்க்கு
நன்றி சொல்லும் நாளிது

எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உடனுழைத்து
நம் உயிர்  வளர்க்க உதவும்
விலங்கினங்களுக்கு
நன்றி சொல்லும் நாளிது

இணைந்து இயைந்து
 இருப்பதாலேயே
வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்
உறவுகளுக்கு
நன்றி சொல்லும் நாளிது

அனைத்து இயக்கங்களுக்கும்
 மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது

நம்மிருப்புக்கு காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக  நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது 

ஜாதி மதம் கடந்து
உழைப்பின் பெருமை  சாற்றும்
 தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து  மகிழ்வோம் 
அதன் உன்னதம் காத்து உயர்வோம்

( பதிவர்கள் அனைவருக்கும்
பொங்கல்  திரு நாள்
நல்வாழ்த்துக்கள்  )



Saturday, January 12, 2013

பதிவுகளும் பதிவர்களும்

பதிவெழுத்தினை நாட்குறிப்பு எனச்
சொல்ல முடிவதில்லை
ஏனெனில் அதில்
அந்தரங்களைப் பதிவு செய்வதில்லை
ஆயினும் அந்தரங்கங்களின்
சாரத்தைப் பதிவு செய்வதால்
இது நாட் குறிப்பினும் மிகச் சிறந்ததே

பதிவர்களின் பெரும்பாலோரின்
கவிதைகளை  கவிதைகள் எனச்
சொல்லமுடிவதில்லை
ஏனெனில் பதிவர்கள்
எதுகை மோனை சீர் செனத்திக்காக
அதிகம் மெனக்கெடுவதில்லை
ஆயினும் அவர்கள் சமூக நோக்கத்திலும்
கருத்தின் ஆழத்திலும்
அதிகம் கவனம் கொள்வதால்
பதிவர்களின் படைப்புகள்
கவிதையினும் அதிகச் சிறப்புடையதே

பதிவினை ஊடகம் என்றும்
வகைப் படுத்த இயலவில்லை
ஏனெனில் ஊடகம் போல அதிக வீச்சும்
ஜனரஞ்கத் தன்மையும் இல்லை
ஆயினும் சுயக் கட்டுப்பாடும்
ஒரு நொடியில் உலகைச் சுற்றி வரும் தன்மையிலும்
உடனுக்குடன் எதிர்விளைவுகளை
உண்டாக்கிப் போகும் திறத்தாலும்
பதிவுகள் ஊடகத்தினும் உயர்வானதே

பதிவர்கள் ஊடக எழுத்தாளர்களைப் போல
பிரபல்யமானவர்கள் இல்லை
ஆயினும் ஒருவர் நலத்தில்
ஒருவர் அக்கறை கொள்வதிலும்
பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்
எழுத்தாளர்களுக்கு நேர் எதிரானவர்களாய் இருப்பதால்
பதிவாளர்கள்  ஊடக எழுத்தாளரினும்
ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே

(பதிவுலக சகோதர சகோதரிகளுக்கு
இனிய பொங்கல்  திரு நாள் நல்வாழ்த்துக்கள் )

Friday, January 11, 2013

நம்மவரை வாழ்த்துவோம் வாருங்கள்

Add star


நாடக உலகில் தன்னை நன்றாக மெருகேற்றிக் கொண்டுதிரை உலகில் பல சானைகள் நிகழ்த்துகிற கலைஞர்களைப் போலபதிவுலகில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுபதிப்பக உலகிற்குள் வெற்றி வீர்ர்களாய் நுழைகிற"நம்மவர்கள்  " இப்போது பெருகி வருகிறார்கள்
பதிவர்கள் சந்திப்பில் முதன் முதலாக தனது அருமையானகவிதை நூலை வெளியிட்டு முத்திரை பதித்த கவிதாயினி சசிகலா அவர்களைத் தொடர்ந்துபுத்தகக் கண்காட்சியில்
 கவியாழி கண்ணதாசன் அவர்கள்"அம்மா நீ வருவாயா அனபை மீண்டும் தருவாயா "என்கிற அருமையான கவிதை நூலை வெளியிட இருக்கிறார்கள்
இவரிடம் போனால் நல்லவிதமாக நாலு வார்த்தை சொல்வார்என நம்பி பெரியவர்களிடம் நல்ல நாளில் ஆசி பெறுதலைப் போன்றேஅல்லது முழுவதும் படித்து விட்டுத்தான் கருத்தினைச் சொல்வார்என்கிற நம்பிக்கையிலோ கவிதாயினி சசிகலாவைத் தொடர்ந்துகவியாழி அவர்களும் தன்னுடைய கவிதைகளை எனக்குஅனுப்பி என்னுடைய கருத்தினைக் கோரி இருந்தார் 
மன்னர் வருகையின் முன்னால் " ராஜாதி ராஜ ராஜ கம்பீரராஜ  மார்த்தாண்ட ராஜகுல திலக "என மன்னரின்அருமை பெருமைகளைச் சொல்லிப் போதல்தானேசிறப்பு மற்றும் நமது மரபும் கூட. அந்த வகையில்அவருடைய கவிதைகளுக்கு  நான் அளித்த வாழ்த்துரையைஇங்கே பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன்அவர் மென்மேலும் பல கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுகவி உலகுக்கு மட்டுமின்றி பதிவுலகிற்கும் பெருமை சேர்க்கவேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
"கவிஞன் என்பவன் உணர்வுப்பூர்வமானவன்
அவன் கதாசிரியனைப் போல தனது கதாபாத்திரத்தையும்
சூழலையும் ஊதி ஊதிப் பெரிதாக்கி தான் சொல்லவேண்டிய
கருத்தை காது சுற்றி மூக்கைத்தொடுபவன் இல்லை

கவிஞன் நெத்தியடியாய் மனதோடு மட்டும்
 பேசக் கூடியவன்தனது கருத்தைச் சாதிக்கவேண்டும் என்பதற்காக கட்டுரையாளரைப்போல வாதத்தின் திறனையும் அறிவையும்  
வால் பிடித்துத் திரிபவன் இல்லை
இந்த இரண்டு விஷயங்களையும் மிகத் தெளிவாகத்
தெரிந்திருப்பதனால்தானோ என்னவோ 
கவியாழி அவர்களின்கவிதைகளில் சுற்றி வளைத்துப் 
பேசுபவையும்தேவையற்ற விளக்கங்களும் அறவே இல்லை 
தீமைகளைச் சாடுவதில் உள்ள புயல்போன்ற
 வேகமாகட்டும்மனிதாபிமானம் கொள்ளுமிடங்களில் 
கொள்ளுகிறமயிலிறகின் மென்மையாகட்டும் 
அவை வரிந்துதிணிக்கப் படாமல் இயல்பாகவே 
அமைந்து விடுவதேஅவரது கவிதைகளின் சிறப்பு
ஒரு சராசரி மனிதன் கவிஞனாக பிறப்பெடுக்கவேண்டும்
 எனில்அவன் காதலிக்கத் தெரிந்தவனாக இருக்கவேண்டும்,
காதலிப்பவனாக இருக்கவேண்டும்

 இன்னும் சிறப்பானகவிதைகள் அவனிடம் இருந்து 
வரவேண்டும் எனில்அவன் காதலில் தோற்றவனாக 
இருக்கவேண்டும் என்பார்கள்

கவியாழி அவர்கள் அப்படித் தோற்றவராகத் 
தெரியவில்லையாயினும்அவரது கவிதைகளில் 
சொட்டும் காதல் ரசம்உண்மையில்படிப்பவர்களை
 பிரமிக்கச் செய்வதோடுஇதுவரை காதல் உணர்வு
 கொள்ளாதவர்களையும்நிச்சயம் 

காதல் செய்யத் தூண்டும்அவரது கவிதைத் தொகுப்பில்
 இந்த மூன்று சுவைகளும்அதிகமாக விரவிக் 
கிடந்தாலும் நவரசங்களுக்குக் குறைவில்லை

பாயாசத்தில் முந்திரி என்றால் பொறுக்கி எடுக்கலாம்
அனைத்துமே முந்திரியெனில்அப்படியே தட்டோடு 
தருதல்தானேஅறிவுடமை,

எனவே தனித்தனியாக கவிதை வரிகளை
தேர்ந்தெடுத்து விளக்கிக் கொண்டிராமல்  
அவரது கவிதைகளைப்படித்து யான் பெற்ற  இன்பத்தை 
முழுமையாக  நீங்களும் பெறுவதோடுமேலும் 
கவியுலகுக்கு இன்னும் சிறப்பான பங்களிப்பை 
கவியாழி அவர்கள்தர வாழ்த்த வேணுமாய் 
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் "


அன்புடன் 
ரமணி

மறை பொருள்

புரிகிறபடி மிகத் தெளிவாகச்
சொல்லப்படுபவையெல்லாம் கவனமின்மையால்
மிகச் சரியாகப் புரிந்து கொள்ளப்படாதுபோக
புதிராக  துளியும் புரியாதபடி
சொல்லப்படுபவைகள்தான்
கூடுதல் கவனத்தால்
அதிகமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றனவோ ?

பட்டப் பகலில் வெட்ட வெளியில்
தெளிவாகத் தெரிபவையெல்லாம்
நம் கவனத்தைக் கவராது போக
நடுஇரவில்  கரிய இருளில்
மின்னித் தொலைக்கும் ஏதோ ஒன்று
கூடுதல் ஆர்வத்தால் தான்
நம் கற்பனையை அதிகம் தூண்டிப் போகிறதோ ?

அண்டசராசரங்களாயினும்
அதைப் படைத்ததாக நம்பப்படும் பேரறிவும்
நம் புரிதலுக்கும் கொஞ்சம் தள்ளியே நின்று
முழுமையாய் வெளிக்காட்டாது இருப்பது கூட
அவரவர்கள் தகுதிக்கேற்பவும் முயற்சிக்கேற்பவும்
தன்னைப் புரிந்து கொள்ளட்டும்
அதுவே சரியான புரிதலாய் இருக்கும் எனும்
முடிவான எண்ணத்தில் தானோ ?

Wednesday, January 9, 2013

ஊழினை உட்பக்கம் காணல்


காலச் சுற்றினுள்
அடங்காது தனித்து நிற்கும்
ஒரு தினத்தில் வாழ்ந்து பார்க்கவும்
அதன் காரணமாய் காலம் கடக்கவும்

உடல் கூட்டை
உடைத்து வெளியேறும் உயிர்பறவையை
ஒரு நொடியேனும் விழியால் காணவும்
அதன் மூலம் அழிவினை அழிக்கவும்

அண்ட சராசரங்களை
இம்மி பிசகாது இயக்கும் அந்த மாயக் காரனை
கை குலுக்கிப் பாராட்டி மகிழவும்
அவன் மூலமாகவே அவனை அறியவும்

பல காலம்
முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருப்பினும்
நாம் நம்பிக்கையை இழந்தா நிற்கிறோம் ?

வர்ணங்களையே
நீர்த்துப் போகச் செய்யும்
அழகிய ஓவியம் படைக்கத் தெரிந்த
ஓவியர்களாகிய நமக்கு

வார்த்தைகளையே
அர்த்தமற்றதாக்கிப் போகும்
வண்ணக் கவிதைகள் படைக்கத் தெரிந்த
கவிஞர்களாகிய நமக்கு

கற்பனைகளையே
அதிஅற்புத  படைப்புகளாக
உரு கொடுத்து அனுபவிக்கத் தெரிந்த
மனிதர்களாகிய நமக்கு

புரியாத புதிர்கள் எல்லாம்
என்றுமேயொரு   பொருட்டா என்ன ?
இன்னும் கொஞ்சம் முயன்றால்
ஊழினையும் உட்பக்கம் காணல்
அத்தனை கடினமா என்ன ?


Tuesday, January 8, 2013

அவரவர் அளவுக்கு

என் நண்பன் தன் மகனை
குச்சியால் விளாசிக்கொண்டிருந்தான்
தடுத்து நிறுத்திக்  காரணம் கேட்டேன்

"எத்தனைமுறை சொல்லியபோதும்
கேட்காது தொடர்ந்து
பக்கத்து பையனிடம்
பேனா பென்சில்
திருடிக்கொண்டு வருகிறான்
நான் அவனுக்குத்
தேவைப்பட்டதையெல்லாம்
ஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்
இவனுக்கு எதுக்கு இந்த
திருட்டு புத்தி " என்றான்

கூடியிருந்த பக்தர்களை நோக்கி
கைகளை மிக உயர்த்தி
"கதவுகளைத் திறவுங்கள்
காற்று வரட்டும் "என்றார்
காவியில் இருந்த இளைய துறவி

தனித்து ஆசிரமத்திருக்கையில்
கதவருகில் இருந்த
ஆத்ம சீடனை நோக்கி
"கதவை மூடிப் போ
அவள் மட்டும் இருக்கட்டும்"ஏன்றார்
ஜாலியில் இருந்த அதே துறவி

தமிழர்களின்
பண்பாடு குறித்து
கலாச்சார பெருமை குறித்து
கோடை மழையென
மேடையில்
கொட்டித் தீர்த்தார்
மக்கள் தலைவர்

கேட்டுக்கொண்டிருந்த
மக்கள் மட்டுமல்ல
முன் வரிசையில் அமர்ந்திருந்த
தலைவரின்
மூன்று மனைவியர் மட்டுமின்றி
அவரது வாரீசுகளும்
வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர்

பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்

Friday, January 4, 2013

பெண்களுக்கான சுதந்திரமும் உரிமையும்

காட்டுக்குள்
வேட்டையாடச் செல்பவர்கள்
உல்லாசச் சுற்றுலா செல்பவர்கள்
முதலில் காடு குறித்த அறிவும்
மிருகங்களின் தடமறியும் தெளிவும்
பாதுகாப்புப் பயிற்சியும்
காட்டுக்கென பிரத்யேக உடைகளும்
கூடுமானவரையில் இரவுப் பயணம்  தவிர்த்தலும்
மிக மிக அவசியம்

ஏனெனில்
மிருகங்கள் பசி ஒன்றையே
பிரதானமாகக் கொண்டவை
கலை கலாசாரம் பண்பாடு என்கிற
பாசாங்கெல்லாம் அவைகளுக்கில்லை

அதைப் போலவே
நாட்டுக்குள்ளும்
பணி நிமித்தம் செல்லும் பெண்களாயினும்
பள்ளி செல்லும் பிள்ளைகளாயினும்
ஏன் பச்சிளம் பெண் குழந்தைகளாயினும்
முதலில் காடாகிப்போன நாடு குறித்த அறிவும்
இரண்டு கால் மிருகங்களின் வெறியறியும் தெளிவும்
பாதுகாப்புப் பயிற்சியும்
ஒட்டுமொத்தமாய் மூடிய உடலுடனும்
கூடுமானவரையில் பகலில் பயணித்தலுமே
மிக மிக  நல்லது

எனெனில்
பசியெடுத்தபுலியும்  வெறி பிடித்தசிங்கமும்
பயமின்றி உல்லாசமாய் உலவித் திரிய
பாவப்பட்டஅணிகளும்  பரிதாபக்குருவிகளும்
பதுங்கித் திரிகிற "புண்ணிய பூமியில் "
பெண்களுக்கான சுதந்திரமும்  உரிமையும்
வேறெப்படி இருக்கச் சாத்தியம் ?

Wednesday, January 2, 2013

ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம்

செய்யக் கூடாதை செய்து
பாழ்படுத்தியவர்களை விட
செய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே
உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்

பேசக் கூடாத தைப்
பேசியவர்களை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்

படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
முன்னேற்றதை அதிகம் தொலைத்திருக்கிறார்கள்

எழுதக் கூடாததை
எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்

எதிர்மறைச் சிந்தனைகளால்
நேர்ந்த  தீமைகளைவிட
நேர்மறைச் சிந்தனையின்மையால்
நேர்ந்த  அழிவுகளே உலகில் அதிகம்

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
என்பதைத் தெளிவாய்ப் இப்புத்தாண்டில் உணர்வோம்
ஒளியேற்றி இருள் நீக்கி  மென்மேலும் உயர்வோம்