Wednesday, November 26, 2014

வரம்வேண்டா தவமாக

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும் 
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய் நினைப்பதில்லை 

வரம்வேண்டா தவமாக
தினமெழுத்தில் கரைவதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வாறு சிந்தனை இருந்தால்...
எவ்வித பிரச்சனையுமேயில்லை ஐயா...

அம்பாளடியாள் said...

உறுதியான இச் சிந்தனை கண்டு உள்ளமும் மகிழ்கிறது .வாழ்த்துக்கள் ஐயா .

Rathnavel Natarajan said...

அருமை சார்.
நன்றி.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

நல்ல கருத்தை கவியாக சொல்லிய விதம் கண்டு மகிழ்ந்தது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
த.ம5
எனது பக்கம்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பக...:   

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

மீள் கவிதை இதுவென்று சொல்லாமல் இருந்திருந்தால் ,கருவுக்கு பொருத்தமாய் இருந்து இருக்கும் :)
த ம 6

கரந்தை ஜெயக்குமார் said...

//என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும்
எண்ணமில்லை ///
இது ஒன்று போதுமே
நன்றி ஐயா
தம +1

Unknown said...

வரம்வேண்டா தவமாக
தினமெழுத்தில் கரைவதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

பிறகென்ன கவலை! எழுதுங்கள்! எழுதிக் கொண்டேயிருங்கள்!




Seeni said...

அருமை அய்யா.!

ஸ்ரீராம். said...

அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

நல்ல வரிகள்! அருமையான கவிதை!

”தளிர் சுரேஷ்” said...

சீரிய சிந்தனைகள்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai said...

/என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும்
எண்ணமில்லை /

தலைக்கணம் அகன்றிடுமே... அருமை ஐயா
த.ம,11

கோமதி அரசு said...

கலைவாணியின் அருள் இருக்கும் போது கவிதைக்கு பஞ்சம் இல்லை.
வாழ்த்துக்கள்.

kingraj said...

அருமை அய்யா.

Post a Comment