Friday, February 13, 2015

கவியாகும் காதலன்

நிச்சயமாகச் சொல்கிறேன்
நான் கவிஞனில்லை
கற்பனைக்கும் எனக்குமான
தூரம் எப்போதும் மிக மிக அதிகமே
தொடர் சிந்தனைக்கும் எனக்கும் என்றும்
தொடர்பு இருந்ததே இல்லை

ஆயினும்
என்னுடன் இருந்து நீ பிரிந்த
சில நிமிடங்களில்...

திரு விழா முடிந்த மறு நாளில்
அனைத்து அலங்காரங்ளையும் இழந்து
அலங்கோலமாய்க் கிடக்கும்
வெட்டவெளி மைதானமும்

அறுவடை முடிந்து அம்மணமாகி
வானம் பார்த்து வெறித்துக் கிடக்கும்
அடுத்த விதைப்புக்கு ஏங்கிக் கிடக்கும்
பொட்டலான வயல்வெளியும்

கடைசிப் பேருந்தும் போய்விட
அழுது வடியும் தெரு விளக்கு வெளிச்சத்தில்
விடியலுக்கு ஏங்கிக் கிடக்கும்
கிராமத்துப் பேருந்து நிலையமும்

கோடை விடுமுறைப் பள்ளியும்
நீர் நின்று போன தெருவோரக் குழாயடியும்....

இன்னும் இதுபோல் பிறவும்
தொடர்ச்சியாய் காட்சியாய் என்னுள் நிறைய
எனக்கு கவிஞனாகி விடுவேனோ என பயமாயிருக்கிறது

எனக்காக இல்லையெனினும்
கவிதையைக் காப்பாற்றவாவது
என்னை விட்டுப் பிரியாதிருக்க முயற்சி செய்

15 comments:

ஸ்ரீராம். said...

காதலன், கவிஞன் ஏதாவது ஒன்றுதான் சாய்ஸா? ஏன் இரண்டுமாய் இருக்கக் கூடாது?

:))))))

RAMA RAVI (RAMVI) said...

கவியாகும் காதலன் - அருமை. அருமை.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

கவிதை என்றாலே
நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராதது
கற்பனைக் குழியில் வீழவிட்டு
யதார்த்த நிலையை மறக்க அடிக்கும்
போதை வஸ்து எனும் மன நிலையை
உடையவர்களின் (பெரும்பான்மையோரின் )
மன நிலையில் ஒரு கவிதை
எழுதிப் பார்ப்போமே என எழுதியது

தங்கள் கூற்றும் சரிதான்
ஆனால் அது வெகு சிலருக்கே சாத்தியம்
இல்லையா ?

அம்பாளடியாள் said...

மனைவியை உயிராக நேசிக்கும் கணவன் ,தன் பிள்ளைகளுக்காக வாழும்
அப்பா எப்போதும் ஒரு சிறந்த காதலனே ஆதலால் தங்களுக்கும் எங்கள்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள் ரமணி ஐயா ! கவிதை மிக அருமை !
பாராட்டுகள் மென்மேலும் தொடருங்கள் .

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //

இதுவரை வந்த இருபத்தி ஐந்தாயிரக்கு மேற்பட்ட
பின்னூட்டங்க்களில் மனதிற்கு மிகவும் பிடித்த
பின்னூட்டம் தங்களின் இந்தப் பின்னூட்டமே
என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

காலம் உணர்ந்து கவிதை பிறந்த விதம் நன்று நல்ல உவமைகள் நிறைந்த வரிகள் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் ஐயா.
த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கே. பி. ஜனா... said...

ஆஹா! அருமை.

KILLERGEE Devakottai said...

அருமையான க(வி)தை
தமிழ் மணம் 5

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவியாகும் காதலன் வாழ்க !

மிகச்சிறப்பான ஆக்கம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் ஐயா...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

யதார்த்தமான உதாரணங்கள்

மனோ சாமிநாதன் said...

கடைசி வரி புன்னகைக்க வைக்கிறது! உதாரணங்கள் அசத்தல்! அன்புக்குரியவளைப்பிரிந்து விட்டால் சாதாரண மனிதனும் கவிஞனாகிறான் என்பதற்கு உங்களின் கவிதை ஒரு அழகான உதாரணம்!

தி.தமிழ் இளங்கோ said...

எதார்த்தமான உவமைகளால் நிரம்பிய ஒரு பதிவு. ரசித்தேன். வேறென்ன வேண்டும் உங்கள் கவிதைக்கு.
த.ம.8

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல உவமைகளால் படைக்கப்பட்ட அருமையான கவிதை!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை. ரசித்தேன் ஐயா....

த.ம. +1

Post a Comment