Wednesday, July 22, 2015

பழநிமுருகனும் நானும்

எதிர்பார்ப்புகள் எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வதால்
எனக்கு
உறவுகளும் அதிகம்
நண்பர்களும் அதிகம்

வேண்டுதல்கள் ஏதுமின்றி
சன்னதிக்குச் செல்வதால்
எனக்கும்
பழநி முருகனுக்கும்
பழக்கம் ரொம்ப நெருக்கம்

திருவிழா நாட்களில்
அவன் எப்போதும்
கோவிலில் இருப்பதில்லை

சன்னதி திறந்ததும்
தாவிக் குதித்து வெளியேறிவிடுவான்

மீண்டும்
நடை  சாத்துகையில்தான்
கோவிலுக்குள் காலடி வைப்பான்

 அப்படித்தான் இன்றும்
மயிலினை உலாவவிட்டு
என் எதிரில்தான் அமர்ந்துகொண்டான்

தக்க சமயம் இதுதானென
மெதுவாக காரணம் கேட்டேன்
சிரித்த முகத்துடன்தான்
என்னோடு பேசத் துவங்கினான்

"உண்மையில் எனக்கு
ஆத்திகர்களை விட
நாத்திகர்களைத்தான்
ரொம்பப் பிடிக்கும் "என்றான்

நான் அதிர்ந்து போனேன்
அவனேதான் தொடர்ந்து பேசினான்

"ஆத்திகர்களைப் போல நாத்திகர்கள்
அதிகம் என்னை தொந்தரவு செய்வதில்லை.

 காவடிக்குள்ளும்
பால் குடத்திற்குள்ளும்
கோரிக்கைகள் ஆயிரம்  வைத்து என்னை
இம்சைப்  படுத்துவதில்லை " என்றான்

நான் பணிந்து வணங்கிச் சொன்னேன்

" நீ கொடுப்பவன் என நம்பித்தான்
உன் கோவில் தேடி வருகிறார்கள்
வருகிறவர்களில் நல்லவர்களும் இருக்கலாம்
தகுதியானவர்களாகப் பார்த்து நீ
கொஞ்சம் தயை செய்யலாமே" என்றேன்

முருகனின் முகத்தில் லேசான
மாறுதல் தெரிந்தது

"இந்த மனிதர்களுக்கு
எதை கொடுக்காது இருக்கிறேன்

பஞ்ச பூதங்களைப்
படைத்துக் கொடுத்து
அதை அடக்கி ஆளும்
அறிவினைக் கொடுத்துள்ளேன்

சக்தியைக் கொடுத்து
சிந்திக்கும் திறனும் கொடுத்துள்ளேன்

இன்னும் போதாது போதாது என
என் வாசல் வந்து நின்றால்
நான் என்ன செய்யக்கூடும்  ?

நிலம் கொடுத்து
விதை கொடுத்து
நீரும் சக்தியும்
பயிரிடும் அறிவும் கொடுத்து
பிழைத்துகொள் என அருளினால்
...
மீண்டும் என்னிடமே வந்து
அடிவயிற்றில் பசி
அனலாய் எரிகிறது

எட்டேஎட்டு இட்லியும்
தொட்டுக்கொள்ள ஏதுவாய்
கெட்டியாக சட்டினியும்
இருந்தால் நல்லது என்றால்
நான் என்ன செய்யக் கூடும் "என்றான்

நான் கொஞ்சம் பழக்கத்தை
கெடுத்துக் கொண்டேனோ என
பயந்துதான் போனேன்.

பின் தீர்க்கமான குரலில்
சண்முகனே பேசினான்
"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்
இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே
கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன்
இதற்குமேல் நான் என்ன செய்யட்டும்" என்றான்

திருமுருகன் முகத்தில் தாண்டவமாடுவது
கோபமா கவலையா
என்னால் ஏதும் அனுமானிக்க இயலவில்லை

அதற்குள்
சன்னதியின் மணியோசைச் சப்தமும்
பக்தர்களின் அரோகரா சப்தமும்
குன்றெங்கும் பட்டுத் தெறித்தது

நானும் விழிமூடித் தியானித்து
லேசாக விழி திறந்தேன்
பழநி முருகன் எதிரில் இல்லை

அவன் இருந்து போனதன் அடையாளமாய்
எங்கும் சந்தன மணமே நிறைந்திருந்தது

7 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
நினைப்பவர்களுக்கு நிச்சயம் தெய்வம் உண்டு.. நல்ல வேண்டுதல் ஐயா... பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

உண்மையில் இப்படி எதிரில் வந்தால்தான் எப்படி இருக்கும்!

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாம் இருந்தும்... ஆசை ஆசை பேராசை...

சசிகலா said...

சக்தியைக் கொடுத்து
சிந்திக்கும் திறனும் கொடுத்துள்ளேன்

இன்னும் போதாது போதாது என
என் வாசல் வந்து நின்றால்
நான் என்ன செய்யக்கூடும் ?


அது தானே சரியான கேள்வி.

http://veesuthendral.blogspot.in/2015/07/blog-post_23.html
ஐயா தென்றலின் இன்றைய பகிர்வு.

”தளிர் சுரேஷ்” said...

முருகனின் கேள்வி சரிதான்! பக்தர்கள்தான் புரிந்துகொள்ளவில்லையோ? அருமையான படைப்பு! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்
இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே
கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன்
இதற்குமேல் நான் என்ன செய்யட்டும்" என்றான்

ஆகா அருமை ஐயா
அருமை
வாழைப் பழத்தைக் கொடுத்தால் மட்டும் போதாது
உரித்தும் அல்லவா கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்
நன்றி ஐயா
தம +1

மனோ சாமிநாதன் said...

பழனி முருகன் கோவணாண்டியாக இருப்பதற்கு இப்படி ஒரு காரணமா? கற்பனை அருமை!

Post a Comment