Friday, July 24, 2015

மனமூடை

எப்போதுமே
பயன்படுத்தமுடியாத அளவு
பயன்படுத்தப்பட்ட
பொருட்கள் அடங்கிய…
.
இதற்குமேலும்
அழுக்கடையமுடியாத அளவு
அழுக்கடைந்துபோன

மூட்டையைச் சுமந்தபடி….
புதர்முடிக்குள்
புதைந்துபோன முகத்தோடு

நிகழ்காலம் அல்லாத
ஏதோ ஒரு காலத்தில் சஞ்சரித்தபடி

எப்போதும் அவன்
எங்கள் தெருவில் திரிவான்.

அந்த மூடை
சிலசமயம் அவன்மடியில்
குழந்தையைப் போலக்  கிடந்து சிரிக்கும்

சிலசமயம்
சிம்மாசனமாகி அவனைத்
 திமிர்பிடித்தவன் போலக் காட்டும்

சிலசமயம் அதுவே
 தலையணையாய் மாறி
அவன் தூங்கத் தாலாட்டும்

ஆனாலும்
பலசமயம் அவனுள்
பொக்கிஷம்போல் பொதிந்துகிடந்தே
லேசாக முகம் காட்டும்.

இப்படி
எத்தனை அவதாரம் அது எடுத்தபோதும்
உடல்தாங்கும் உயிர்போல
எப்போதும் அது
அவனுள் ஒரு அங்கமாகவே வாழும்


அவனை
அடிக்கடி பார்க்கிற உரிமையில்
அல்லது
உணவு கொடுத்த பரிச்சயத்தில்

எவரேனும் எதிர்பாராது
அவனை நெருங்க நேர்ந்தால்கூட

உடல்படபடக்க
நம்பிக்கை இழந்தவனாய்

அந்த மூடையைப் பொக்கிஷம் போல்
அவனுள் புதைத்துக்கொள்வான்

அவனுள் நேரும் ஒரு மறுபிறப்போ
அவனைத் தழுவும் மரணமோ அன்றி
அவனுக்கும் மூடைக்குமான பந்தம்
நிச்சயசமாய் அறுந்து போகாது
என நினைப்பேன்


அந்த மூடையை
அறுத்து எறிந்தால்
அவன் சரியாகக் கூடும்

அவன் சரியானால் கூட
அந்த மூடை அவனைவிட்டு ஒழியும்
எனும் எண்ணம்
அவ்வப்போது  என்னுள் ஓடும்

கோட்டியாய்....
தெருவெங்கும் வலம்வரும் அவன்
என்றேனும் ஒரு நாள்
துருவாசனைப் போல்
உருமாற்றம் கொள்வான்

ஜடாமுடிகள் காற்றில் பறக்க
விழிகள் இரண்டும் நெற்றியில் ஏற
ருத்தர தாண்டவம் ஆடத்துவங்குவான்

அந்த அழுக்கு மூடையை
உயரப்பிடித்தபிடி
போவோர் வருவோரை உற்று நோக்கி-
இதுதான் இதுதான் –
என உறக்கக் கத்துவான்

அந்த ஆனந்தக் கூத்தின் உச்சத்தில்
அவன் நெற்றிக்கண்
வெடித்துத் திறப்பதுபோலவும்

அனைவர்க்குள்ளும் இருக்கும்
அந்த அழுக்கு மூடை
அவிழ்ந்துவிரிந்து அம்மணமாவது போலவும்

என்னுள் பயம் விரைந்துபரவ
உடல் லேசாக நடுங்கத் துவங்கும்

என்னையும் அறியாது எனது கைகள்
என் நெஞ்சை மறைக்க முயன்று தோற்கும்.

16 comments:

ஸ்ரீராம். said...

ம்ம்ம்ம்.....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிந்தித்து பொருள் கொள்ள வைத்த கவிதை. இரண்டு முறை படித்தேன்

”தளிர் சுரேஷ்” said...

மன மூடை நிறைந்து கிடைந்தால் சிரமம் தான்!

திண்டுக்கல் தனபாலன் said...

சில பற்று நம்மை அறிந்தும் அறியாமல் பற்றிக் கொள்வது போல...

இளமதி said...

வணக்கம் ஐயா!

மன மூடை கனம் அதிகம்!
அதைத்தான் நாமும் தூக்கிக் கொண்டே திரிகிறோம்!

அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

KILLERGEE Devakottai said...

Porul Niraintatu Arumai.

UmayalGayathri said...

மன மூடை கனம் என்றாலும் அதை நாம் சுகமாய் இறக்கிவைக்க முடியாமல் தூக்கிக் கொண்டே திரிகிறோம் ....அருமையான கவிதை ஐயா.நன்றி

UmayalGayathri said...

தம +1

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான கவிதை ஐயா
நன்றி
தம +1

Jayakumar Chandrasekaran said...

இரண்டு முறை படித்தேன். தலைப்பு கொஞ்சம் விவரமாக வைத்து இருக்கலாம். தேன் இன்னும் பின்னூட்டம் இடாதது வியப்பு. கிட்டத்தட்ட தேன் சாயல்.
--
Jayakumar

வெங்கட் நாகராஜ் said...

மனமூடை......

பலருக்கும் இப்படி மனதில் அழுக்கு மூட்டை.....

த.ம. 8

G.M Balasubramaniam said...

/என்னையும் அறியாது எனது கைகள்
என் நெஞ்சை மறைக்க முயன்று தோற்கும்./மனமூடை நெஞ்சுக்குள் இருக்கிறதா.

சசிகலா said...

சிந்திக்க வைத்த வரிகள்..
சிரமம் தான் சுமந்து திரிவது.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

அருமையாக சொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் ஐயா த.ம 10
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

Thulasidharan V Thillaiakathu said...

ம்ம் மன மூடை, மனமதில் பொதிந்து கிடக்கும் அழுக்கு மூட்டைகள் அதை சுமந்துதான் திரிகின்றோம்...அதை அவிழ்த்து விட வழி தெரியாமல்? இல்லை புரியாமலா இல்லை தெரிந்தும் புரிந்தும் அதைச் சுமக்கின்றோமோ....

காரஞ்சன் சிந்தனைகள் said...

தாக்கத்தை ஏற்படுத்திய கவிதை! மனத்துக்கண் மாசிலன் ஆதலை சிந்திக்க வைத்த விதம் சிறப்பு! நன்றி ஐயா!

Post a Comment