Monday, May 2, 2016

அழகுத்தமிழ் வார்த்தைகள்.....

அசைவற்றச்   சவத்துக்கு
இனியும்
மாலையாகி
வாடிச் சாக மனமில்லை
என முகம் சுழித்தது....

மயக்கும் மனம் கொண்ட
அந்த அழகிய மலர்கள்

வெற்று உருவுக்கு
இனியும்
மெருகூட்டி
என்தரம் இழக்க மனமில்லை
என ஒதுங்கத் துவங்கியது....

தன் அளவில்
தனித்துவம் கொண்ட வண்ணங்கள்

சுடும் பாலையில்
இனியும்
பொழிந்து
பயனற்றுப் போக மனமில்லை
எனக் கடக்க முயன்றது

கருவுற்றப் பெண்ணாய்
நீர்சுமந்த கருத்த மேகங்கள்

ஒடுங்கிய சட்டத்துள்
இனியும்
ஒடுங்கி
என் பலம் சுருக்க மனமில்லை
என வெறுப்பில் புலம்பியது...

ஒன்றுக்குப் பத்துப்
பொருள்கொண்ட  அழகுத்தமிழ் வார்த்தைகள்

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

த.ம. +1

Bhanumathy Venkateswaran said...

அடடா ! அருமை!

V Mawley said...

THE thoughts themselves are so lyrical ..I enjoyed ..
Mawley

சிவகுமாரன் said...

ஆமாம். விலை மதிப்பில்லாதவை அழகுத் தமிழ் வார்த்தைகள்

சாந்தி மாரியப்பன் said...

//ஒன்றுக்குப் பத்துப்
பொருள்கொண்ட அழகுத்தமிழ் வார்த்தைகள்//

நம் மொழியின் சிறப்பு.

Post a Comment