Sunday, April 19, 2020

எங்களைக் குறை கூ றி அலையாதீர்கள்..

எங்களைக்  குற்றவாளியாக்காதீர்கள்
எங்களைக் குறைகூறி அலையாதீர்கள்

கொஞ்சம் தூரமாயினும்
அமருமிடமும்
பறிமாறும் நேர்த்தியும்
திருப்திப்படவில்லையாயினும்
கைப்பக்குவமும் ருசியும்
சரியாயிருந்தால் சரி
என்ற காலம் போய்.....

ருசி கொஞ்சம்
முன்பின்னாயினும்
ஹோட்டல் இருப்பிடமும்
கார் பார்க் வசதியும்
பரிமாறும் நேர்த்தியும்
சரியாய் இருந்தால்தான்
திருப்திப்படுகிறது என்பதால்

வசதியற்றவனாயினும்
நேர்மையானவனாக
எளிமையானவனாக
கூப்பிட்ட குரலுக்கு
உடன் வருபவனாக
இருந்தால் போதும்
என்ற காலம் போய்.....

ஜெயித்தப்பின்
காணாமல் போகிறவனாயினும்
கிரிமினல் குற்றவாளியாயினும்
தேர்தல் சமயத்தில்
கொடுப்பவருள்
கூடுதலாய் கொடுப்பவனாய் இருந்தால்
சரியானவனாய்ப் படுகிறது என்பதால்

ஒப்பனைகளாயினும்
அழகுக் கடங்கியும்
பாவனைகளாயினும்
அறிவுக் கடங்கியும்
அளவுகோள்கள்
நெகிழும் தனமையற்றும்
இருந்த.காலம் போய்...

அழகென்பதே
ஒப்பனைகளாய்
அறிவென்பதே
பாவனைகளாய்
நெகிழத் தக்கதே
அளவுகோள்களாய் இருந்தால்தான்
சந்தைப்படுத்த முடிகிறது என்பதால்

சொல்லத் தக்கதை
பயனுள்ளதை
எளிமையாய்
மிக உறுதியாய்
சொல்வதென்பதே
மதிக்கத் தக்கதென
இருந்தகாலம் போய்...

பொய்யாயினும்
சுவாரஸ்யமாய்
பயனற்றதாயினும்
நேரங்கடத்தியாய்
இருக்கத் தகுந்ததே
மதிக்கத் தகுந்ததாய்
வியாபாரமாகிறது என்பதால்...

இது சரியானது
இதற்கானது எது என்பது போய் ...
எனக்கிது சரி
இதற்கானது எது
என்பதுவே
இன்றைய   சூழலின்
தர்மமாகிப் போனதால்

எப்போதும்,
இனியேனும்
எங்களைக்  குற்றவாளியாக்காதீர்கள்
எங்களைக் குறைகூறி அலையாதீர்கள்

5 comments:

ஸ்ரீராம். said...

"..... கடவுள் செய்த குற்றமடி!"

திண்டுக்கல் தனபாலன் said...

அதுவே இயற்கையின் விதி...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

காலமாற்றம் தரும் வேதனை
அருமை ஐயா

kowsy said...

இது சரியானது
இதற்கானது எது என்பது போய் ...
எனக்கிது சரி
இதற்கானது எது
என்பதுவே
இன்றைய சூழலின்
தர்மமாகிப் போனதால்

எப்போதும்,
இனியேனும்
எங்களைக் குற்றவாளியாக்காதீர்கள்
எங்களைக் குறைகூறி அலையாதீர்கள்

உண்மை

வெங்கட் நாகராஜ் said...

நன்று.

Post a Comment