Saturday, May 28, 2022

நம்பிக்கை..

 சிறுவயதில் ஏதோ ஒரு உபன்யாசத்தில் கேட்ட கதை

கேட்ட இடம் வயது சொன்னவர் என எதுவுமே
சுத்தமாகஎன் நினைவினில் இல்லை.
ஆயினும் கதை மட்டும் எப்படியோ
என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டது
அதுவும் என்னை விடவில்லை
எனக்கும் அதை விட இஷ்டமில்லை
இன்றும் கடலுக்கடியில் பழைய இலங்கை
இருப்பதாகவும்அதை விபீஷணன்
ஆண்டு கொண்டிருப்பதாகவும் வருஷத்தில்
ஒரு குறிப்பிட்ட நாளில் ந்ள்ளிரவில் அரக்கர்கள்
 புடை சூழஇராமேஸ்வரம் வந்து ராமர் பாதம்
 தரிசித்துப்போவதாகவும்அந்த உபன்யாஸ்கர் மிக
அழகாக விளக்கினார்

அப்படி ஒரு சமயம் அவர்கள் ராமேஸ்வரம் வந்து
திரும்பிக் கொண்டிருக்கையில்அதை பார்த்துக்
கொண்டிருந்தகிராமவாசி ஒருவன் எங்குதான்
போகிறார்கள்எனப் பார்த்துவிடுவோம் என்கிற
ஆர்வ மிகுதியால்அரக்கர்கள் சுமந்து வந்த பெரிய
பூக் கூடைக்குள்ஏறி ஒளிந்து கொள்கிறான்
என்ன நடக்கிறது எங்கு போகிறார்கள்
எப்படிப் போகிறார்கள் என்பது எதுவும்
அவனுக்குத் தெரியவில்லை.இரவெல்லாம்
கடலோசை மட்டும்கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அப்படியே அசந்து தூங்கியும் போகிறான்

விடிந்து கூடைக்குள் இருந்து வெளியேறிப்
பார்த்தால் மிகப் பெரியதங்கத்தாலேயான ஆன
அரண்மனைக்குள் அவன் இருப்பது தெரிகிறது
அதன் பிரமாண்டம் அதன் வசீகரம் இவற்றில் மயங்கி
 வாய்பிளந்து
நின்று கொண்டிருந்தவனை காவல் புரிந்து
கொண்டிருந்த அரக்கர்கள்பார்த்துவிடுகிறார்கள்.
நரன் இங்கு வர சந்தர்ப்பம் இல்லையே
எப்படி வந்தான் எனத் தீவீரமாக விசாரிக்க
அவன் நடந்ததையெல்லாம்விரிவாகச் சொல்லி
அழ அவனை நேராக விபீஷன
மகாராஜாவிடம்கொண்டுபோய் சேர்க்கிறார்கள்

அவன் வந்த முழு விவரத்தையும் கேட்டறிந்த
விபீஷண மகராஜா"சரி ஏதோ ஆர்வ மிகுதியால்
இந்த மனிதன் எப்படியோ நம் நகருக்கு
வந்து விட்டான்.நம் நாடு வந்தவன் நமக்கு
விருந்தாளி போலத்தான்அவனுக்கு நம் நாடு
முழுவதையும் சுற்றிக் காண்பியுங்கள்
ஒருவாரம் முடிந்து அவனை நாமே
அனுப்பிவைக்கலாம் "என்றார்

ஒருவாரம் அவனுக்கு ராஜாங்க விருந்து
 உபச்சாரம் தடபுடலாக நடந்தது
அரண்மனை ,அசோக வனம் என என்ன என்ன
 பார்க்க முடியுமோஅதையெல்லாம்அவன் ஆசை
 தீரும் மட்டும் சுற்றிக் காட்டினார்கள்.
தொட்டிக்குள் மீனை நாம்வெளியில் இருந்து
பார்ப்பதுபோல் இவர்கள் வெட்டவெளியில் இருக்க
இவர்களைச் சுற்றி கடலிருப்பதைப் பார்க்க
மலைத்துப் போனான்என்ன புண்ணியம் செய்தோம்
எனத் தெரியவில்லையே எனஎண்ணி எண்ணி
மிகவும் குதூகலம் கொண்டான்அந்த கிராமவாசி.
இப்படியே ஒருவாரம் மிக மகிழ்ச்சியுடம் முடிந்ததும்
அரக்கர்கள் மீண்டும் அடுத்த உத்தரவுக்காக
மகராஜாவிடம் கொண்டு நிறுத்தினார்கள்

"மகிழ்ச்சியா " என விசாரித்த விபீஷண மகாராஜா
முதுகில்சுமக்கும் அளவுபொன்னும்
பொருளும் கொடுத்துஅரண்மனை வாயில் வரை
வந்து "சென்று வா " எனஅனுப்பிவைத்தான்.
அதுவரை மகிழ்ச்சியில்திக்கு முக்காடிக்கொண்டிருந்த
கிராமத்தானுக்கு மேலேகடல் இருப்பதும்
தான் கடலுக்கு அடியில் இருப்பதுவும்
அப்போதுதான் லேசாகப் புரியத் துவங்கியது

" மகாராஜா மன்னிக்க வேண்டும் தங்களுக்கு
தெரியாது இல்லைநான் சாதாரண மானிடன்.
இந்தப் பெரும் கடலை எப்படிக் கடந்து
கரை சேர இயலும் யாரையாவது துணைக்கு
அனுப்பினால்புண்ணியமாய்ப் போகும் "என்றான்

" ஓ அதை மறந்து போனேனோ " எனச் சொல்லி
அருகில்இருந்த அமைச்சரை அழைத்து
ஏதோ காதில் கிசு கிசுக்க
அவர் உள்ளே சென்று எதையோ எடுத்துவந்து
விபீஷணன் கையில் விபீஷண மகாராஜா அதை
அந்தக் கிராமத்தானின்கையில் மறைத்து மடக்கி
 "இதற்குள் ஒரு உயரிய பொருள் இருக்கிறது
அதை கரை சேரும் வரை திறக்காமல் போனால்
கடல் உனக்குவழிவிட்டுக் கொண்டே போகும்
எக்காரணம் கொண்டும் இடையினில்
திறக்கவேண்டாம் " என அறிவுறுத்தி
அனுப்பி வைத்தார்

கிராமத்தானுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை
அவன் நடக்க நடக்க  கடல்அவனுக்கு மிக அழகாக
அகலமான பாதை அமைத்துக் கொடுத்தது
இருபுறமும் கடலும் நடுவில் பாதையுமாக
நடக்க நடக்க அவனுக்கு
பெருமிதம் பிடிபடவில்லை.

பாதிக்கடல் கடக்கையில் அவனுக்கு கையில்
அப்படி என்னதான்உயரிய பொருள் இருக்கக் கூடும்
 என்கிற ஆவல்பெருத்துக் கொண்டே போனது.
உள்ளங்கையில் நடுவில்மிகச் சிறிதாக்
இருந்து கொண்டு இந்தக் கடலையே நகர்த்தி
வழி விடச் செய்யும் அந்த அதிசியப் பொருளை
அவசியம்பார்த்துதான ஆகவேண்டும் என்கிற
ஆசை வெறியாகக் கிளம்ப ஒரு வெறிபிடித்தவன்
 போல் அவன் உள்ளங்கையை விரிக்கிறான்

உள்ளங்கையில் "ஸ்ரீ ராமஜெயம்" என எழுதப்பட்ட
ஓலை மட்டு மே உள்ளது வேறேதும் இல்லை

அவன் ஏமாற்றமடைந்தவன் போலாகி
 "சே.இவ்வளவுதானா .." எனச்
சொல்லி முடிக்கவும் கடல் அவனை அப்படியே
அள்ளிக் கொண்டு உள்ளே கொண்டு போகவும்
சரியாக இருந்தது

இதைச் சொல்லி முடித்த உபன்யாசகர் "நீங்கள்
பெரியவர்கள் ஆகி அனைத்து விஷயங்களையும்
நீங்களே புரிந்து  கொள்கிற வரையில் பெரியவர்கள்
சொல்வதனை வேதவாக்காகக் கொள்ளுங்கள்
இல்லையேல் இந்தக் கிராமத்தான் கதைதான் "
எனச் சொல்லி முடித்தார்

மிகச் சிறுவயதில் இந்தக் கதையை கேட்டபோது
பெரியவர்கள் சொல்கிற எதையும் நம்பிச் செய்தால்
 நிச்சயம் நல்லது என்கிற நம்பிக்கைஎன்னுள்
 ஊறிப் போனதால் தைரியமாக எதையும் செய்யும்
துணிச்சல் எனக்கு இருந்தது

அறிவா அல்லது ஆணவமா என மிகச் சரியாகச்
சொல்லத் தெரியவில்லைகல்லூரி நாட்களில்
இக்கதையில் லாஜிக்கே இல்லாதது போலப் பட்டது
அந்த கிராமத்தான்தான் கடலோடு போய்விட்டானே
 பின்னே இந்தக் கதையை யார் அந்த உபன்யாசகருக்கு
 சொல்லி இருப்பார்கள்என நினைத்து
கேலியாகச் சிரித்திருக்கிறேன்

இப்போது யோசித்துப் பார்க்கையில்  இந்தக் கதை
தரும் ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையை
சிறுவர்களுக்கு அறிவும் லாஜிக்கும்தருமா
என்கிற எண்ணம்தான் தோன்றுகிறது

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இது போல் நிறைய மூட நம்பிக்கைகள் இருக்கிறது...

உறுதிப் பொருட்களை உரைக்கும் "பெரியாரைத் துணைக்கோடல்" இருக்கும் போது வேறு புராண புரட்டுகள் எதற்கு...?

பதில் வேண்டாம், அதன் குறள்களை படித்தாவது...

bandhu said...

இதை மூட நம்பிக்கை என்றோ புராண புரட்டு என்று நான் கருதவில்லை. உண்மையை உணர்த்த எளிமையாய் மனதில் புகுத்த இதை விட சிறந்த வழி இல்லை. இதுவே இயற்கையான சிறந்த வழி. இயற்கையாக இருப்பது எல்லாமே எளிமையாகவும் உண்மையாகவும் இருப்பதை பல முறை பார்த்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது, இது எளிமையாகவும் சிறந்ததாகவும் இருப்பதால் உண்மையாகவே இருக்கவேண்டும்!

இராய செல்லப்பா said...

மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவர். அந்த அறிவை எட்டும்வரை பெரியோர் சொல்லும் சில நம்பிக்கைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.

வெங்கட் நாகராஜ் said...

நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியமே. நல்ல கதை.

Post a Comment