Friday, July 17, 2015

யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் ...

அலமேலுகளும் அம்புஜங்களும்
மாமியாகிப் போனார்கள்
மாமியாராகியும் போனார்கள்
வனஜாக்களும் கிரிஜாக்களும்
நாற்பதைக் கடந்து போனார்கள்
பலர் போயும் போனார்கள்

இப்போது ஜொலிப்பதெல்லாம்
த ன்ஷிகாவும்  தமன்னாவும் தான்

கால மாற்றத்தில்
கலாச்சார மாற்றத்தில்
பெயர்களும் மாறிப் போவதை
எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது

அது சரி
ஆயினும்
பச்சேரிகள் எல்லாம்
அம்பேத்கார் நகர்களாகவும்
அக்ரகாரங்கள் எல்லாம்
பாரதியார் வீதிகளாகவும்
வணிக வீதிகள் எல்லாம்
காமராஜ் சாலைகளாகவும்
மாறித் தொலைக்க வேண்டிய அவசியம்தான் எ ன்ன?
கொஞ்சம் மாறி மாறித் தான்
மாறித் தொலைத்தால் என்ன?

சுதந்திர வேள்வியில்
தன் சுகம்  
தன் குடும்ப சுகம்
எதிர்காலம் அனைத்தையும்
ஆகுதியாய் அர்ப்பணித்தவர்களை
ஒரு ஜாதிக் கூண்டினுள் அடைத்தல்
அவர்கள் தியாகத்தை
மீண்டும் சிறையினுள் அடைத்தல் போலில்லையா ?
அவர்கள் மேன்மையை
 நாளும் தீயிட்டுக் கொளுத்துதல் போலில்லையா?

இனியேனும்
வானுயர அவர்கள் திருவுருவச் சிலையெழுப்பி
ஆளுயர மாலை அணிவித்து
 அவரவர்கள் ஜாதிகள் மட்டும்   செய்யும்
அவல நிலையைத்   தவிர்போமா?

இனியேனும்
வானளவு விரியும் அவர்கள் புகழை தியாகத்தை
ஜாதி குடுவைக்குள் அடைக்கும் அற்பச் செயலை
அடியோடு அழித்துத் தொலைப்போமா?

11 comments:

தி.தமிழ் இளங்கோ said...

நல்ல சிந்தனை! சொன்னால் யார் கேட்கிறார்கள்? பெரியாரை நாயக்கராகவும், ராஜாஜியை ஆச்சாரியராகவும், காமராஜை நாடாராகவும் அழைத்தவர்கள் தானே இந்த தமிழர்கள்?
த.ம.2

ப.கந்தசாமி said...

இந்த அவல நிலை கண்டு வருத்தப்படுகிறேன்.

வெட்டிப்பேச்சு said...

பிரச்சினையை மிகச் சரியாகத் தொட்டுவிட்டீர்கள்.

"சுதந்திர வேள்வியில்
தன் சுகம்
தன் குடும்ப சுகம்
எதிர்காலம் அனைத்தையும்
ஆகுதியாய் அர்ப்பணித்தவர்களை
ஒரு ஜாதிக் கூண்டினுள் அடைத்தல்
அவர்கள் தியாகத்தை
மீண்டும் சிறையினுள் அடைத்தல் போலில்லையா ?
அவர்கள் மேன்மையை
நாளும் தீயிட்டுக் கொளுத்துதல் போலில்லையா?"

அடாடா.. பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய வரிகள்.

God Bless You

திண்டுக்கல் தனபாலன் said...

ஜாதிக் கூண்டிற்குள் அடைப்பது வேதனை ஐயா...

Thulasidharan V Thillaiakathu said...

இனியேனும்
வானுயர அவர்கள் திருவுருவச் சிலையெழுப்பி
ஆளுயர மாலை அணிவித்து
அவரவர்கள் ஜாதிகள் மட்டும் செய்யும்
அவல நிலையைத் தவிர்போமா?

இனியேனும்
வானளவு விரியும் அவர்கள் புகழை தியாகத்தை
ஜாதி குடுவைக்குள் அடைக்கும் அற்பச் செயலை
அடியோடு அழித்துத் தொலைப்போமா?

கொஞ்சம் மாறி மாறித் தான்
மாறித் தொலைத்தால் என்ன?//

மாறித் தொலைத்திருந்தால் இன்றும் கூட சாதி வெறியினால் நடக்கும் கௌரவக் கொலைகளும், தற்கொலைகளும் காணாமல் அழிந்து போயிருக்குமே!

அருமை அருமை! வரிகள்!!! வார்த்தைகள் இல்லை பாராட்டிட....என்னே ஒரு அழகிய சிந்தனை!! வாழ்த்துகள்! பாராட்டுகள்!

ஸ்ரீராம். said...

நல்ல சிந்தனை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிந்தனை. அனைத்திலும் சாதியைச் சேர்த்துப் பார்ப்பதே வேலையாகி விட்டது!

த.ம.. 6

balaamagi said...

வணக்கம், தாங்கள் சொல்வது உண்மையே , இவர்களின் பெருமையை மாணவர்களுக் சொல்லும் போதும் இவர்களை சாதி என்ற வட்டத்துக்குள்,,,,,,,,
இன்று தான் இது அதிகமாக மாறிவிட்டது, அனைவரிடமும், அருமையான பதிவு, வாழ்த்துக்கள். நன்றி.

Anonymous said...

''...வானுயர அவர்கள் திருவுருவச் சிலையெழுப்பி
ஆளுயர மாலை அணிவித்து
அவரவர்கள் ஜாதிகள் மட்டும் செய்யும்
அவல நிலையைத் தவிர்போமா?..''
யார் கேட்கிறார்கள்? ..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
காலம் உணர்ந்துபொருள் உணர்ந்து வடித்த கவி அருமை ஐயா.மத வேறு பாட்டை விட சாதி வேறுபாடு அதிகம்.. ஐயா த.ம 8

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

தலைவர்களின் பரந்த மனது அவர்களின் தொண்டர்களுக்கு இல்லாது போனதே இந்த அவலநிலையின் காரணம்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

Post a Comment