Tuesday, May 3, 2016

அவன் பிரம்மனாக மாறத் துவங்குகிறான்

மெல்லத்  தலைத் தூக்கும்
 தன் முனைப்பினை
முற்றிலும் களை ந்து
அவன் அவனை
மிகச் சரியாய் அறியும் விதமாய்...

மெல்லக்
கிளர்ந்து
முன் பின் நகர்ந்து
முற்றிலும் திரும்பி
கறையற்ற அந்த
ஆடியில் அவனை இரசிக்க

அவனுக்கு அவன்
இரசிக்கத் தக்க
அழகனாகவே  விரிகிறான்

"இந்தச்  சுய இரசிப்பில்
உயர்ந்தவனை விட
வீழ்ந்தவனே அதிகம்  "
என்னும்  ஒரு சிறு முனகல்
அவனுள்
மெல்லத் தலைக்காட்ட

உக்கிரமாய்
ஒரு  எதிர்க்குரல்

"நீ காவியத் தாயின்
இளைய மகன்
காதல் பெண்களின்
பெருந்தலைவன்
நீ நிரந்தரமானவன்
உனக்கு  என்றும் அழிவே இல்லை

 இதனை    நீயே உணராது
உலகினை
உணரவைத்தல்
எங்ஙனம்   சாத்தியம் ? "
என மிரட்ட

மொட்டவிழும்
வித்தியா கர்வம்
மெல்ல மெல்ல வளர்ந்துப் பெருகி
மனம் மொத்தமும்
ஆக்கிரமித்து  அவனை
மற்றொரு நிலைக்குக் கடத்திப் போகிறது

உருவற்றதாயினும்
காற்றின் இசைக்கு
பல உருவம் ஏந்தும் மேகமாய்..

சக்கையான
வார்த்தைகள்
அவன் உணர்வுகளின்
இசைக்கேற்ப
மெல்ல மெல்ல
உயிர்   கொள்ளத் துவங்க

"படைப்பதனால்  என் பேர் இறைவன் "
எனும்  அமுத வாக்கியம்
அவனே  அறியாது
அவனுள் கருவாகிச் சிரிக்கிறது 

அவன்   பிரம்மனாக மாறத் துவங்குகிறான்  
         

6 comments:

G.M Balasubramaniam said...

அவன் அவனையே படைக்கிறானா?

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

அவன் உணர்வுகளின்
இசைக்கேற்ப

Seeni said...

அட.

ஜீவி said...

இரண்டாவது வரி:

//முற்றிலும் கலைந்து//

முற்றிலும் களைந்து..

//மொட்டவிழும்
வித்தியா கர்வம்
மெல்ல மெல்ல வளர்ந்துப் பெருகி
மனம் மொத்தமும்
ஆக்கிரமித்து //

ஆக்கிரமித்ததை
அடக்கி ஆண்டு
சறுக்கிய சடுதியில்
நிமிர்ந்து நிலையாய் நின்று..

அவன் பிரம்மனாக
முயற்சிக்கிறான்...



Yaathoramani.blogspot.com said...

எழுத்துப் பிழையைத் திருத்தி விட்டேன்
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி

கண்ணதாசன் அவர்களின்
" நான் படைப்பதனால் என் பேர் இறைவன்"
என்னும் அந்த ஒரு வரியை
கொஞ்சம் விரித்து எழுதிப் பார்க்கலாமா என
எழுதியதால் கொஞ்சம் அடக்கம் வேண்டாமே எனவும்
அந்த ரசிக்கும்படியானத் திமிர் ?(வித்யா கர்வம்)
இருக்கட்டுமே என கடைசி வரிகளை எழுதினேன்

இன்னும் சரியாக வந்திருக்கலாம்
என தங்கள் பின்னூட்டம் உணர்த்துகிறது

வழிகாட்டும் பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நன்று.

Post a Comment