Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday, July 1, 2017

காலச் சூழல்...

நாங்கள்  சிறுவனாய் இருந்தபோது
தீயவைகள் இல்லாமல் இல்லை
இருந்தது

ஆனால் தேடித் தேடி
கண்டுபிடிக்கும்படியாய்
எங்கோ ஒளிந்து கொண்டு
கொஞ்சம் பயந்தபடியும்...

நாங்கள்  வாலிபனான போதும்
அவைகள் இல்லாமல் இல்லை
இருந்தது

ஆனால் தேடினால்
கிடைக்கும்படியாய்
கொஞ்சம் தூரத்தில் எட்டாதபடி
தன்னை மறைத்தபடியும்...

இன்றைய நிலையில்
அவைகள் இல்லாமல் இல்லை
இருக்கிறது

ஆனால் விலகிப்போனாலும்
விடாது தொடர்கிறபடி
கொஞ்சம் அசந்தாலும் வீழ்த்திவிடுகிறபடி
திமிராய் தான் தோன்றித்தனமாய்..

இப்போது நல்லவைகளும்
இல்லாமல் இல்லை
இருக்கிறது

ஆனால்முன்பு தீயவைகள்
இருந்ததுபோல்
தன்னை மறைத்தபடியும்
நிறையப் பயந்தபடியும்...



Monday, December 21, 2015

சிம்பென்னும் வம்பனை...

தீயவை எல்லாம் சாலை யோரங்களில்
மிக எளிதாய்க் கிடைக்க

தேவையானவைகள்
அவசியமானவைகள்
எல்லாம் கிடைக்காதும்
எங்கோ ஒளிக்கப்பட்டிருக்கும் சூழலில்,

கிடைப்பதே சரியானதென்றும்
எட்ட இருப்பவையெல்லாம்
தேவையற்றவை என்றும்

இளைய சமூகம்
குழம்பிக் கிடைக்கையில்

நரகலை காற்றில் வீசுபவனை
சகித்துக் கொள்ளாதீர்கள்

மக்களின் கவனத்தைத்  திருப்ப
இதுவும் ஒரு சதியென
இவனும் ஒரு கருவியென
புரிந்த போதிலும்...

கஞ்சா விற்பதும்
பயன்படுத்துவதும் மட்டுமன்று
மறைவாய் விளைவிப்பதும் குற்றமென்று
.அறியாததுபோல் நடிப்பினும்...

நரகலை காற்றில் வீசுபவனை
சகித்துக் கொள்ளாதீர்கள்

தவறுக்கு மண்டியிடாதவரை அவனை
மனிதனென்றே மதியாதீர்

Friday, December 11, 2015

மதிப்பிற்குரிய ரஜினி அவர்களே....

உலகில் சரித்திரம் சிலரை தலைவராக்கி
தன் தேவையைப்பூர்த்தி செய்துகொண்டிருக்கிறது.

சில தலைவர்கள் தங்கள் அபரீதமான உழைப்பால்,
கடவுளின் அருட்பார்வையால்,மக்களின்
பூரண ஒத்துழைப்பால்சரித்திரத்தை தலைகீழாய்ப்
புரட்டிப் போட்டிருக்கிறார்கள்

இதில் இரண்டாம் வகையைச் சார்ந்தவராக
விளங்க வேண்டியவர் நீங்கள்

தங்களை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி என்பது கூட
ஒரு யானையை பானைக்குள் திணிக்க எடுக்கும்
அற்ப முயற்சியே.

தமிழகத்தின் அனைத்து பிரிவினரும்
ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள தங்களை
ஒரு சிறு வட்டத்திற்குள் அடைக்க முயலும் முயற்சி
அற்பத்தனமானதே. அது வேண்டாம்

பெரும்பாலான மக்களுக்கும் இதில் உடன்பாடில்லை

ஆயினும் தங்கள் பாஷையில் சொன்னால்
ஒரு துளி வியர்வைக்கு நூறு கோடி தங்கக் காசை
அள்ளித் தந்த தமிழகத்திற்கு ஏதாவது
செய்ய வேண்டும் என்கிற தீவிர எண்ணம்
தங்களுக்கு இருப்பதால்...

தங்களின் பிறந்த நாள் பரிசாக தமிழக மக்களுக்கு
இந்தப் பேருதவியை செய்து தந்தால் தமிழகம்
 இன்றுபோல்உங்களை என்றும் கொண்டாடும்

தமிழகத்தைச் சார்ந்த மதிப்பிற்குரிய
 சி.சுப்ரமணியம் அவர்கள்நிதியமைச்சராக
இருந்த காலத்தில் இந்தியாவில் ஏற்பட்டிருந்த
கடுமையான பஞ்சத்தை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட
பல்வேறு நடவடிக்கைகளில் விஷமாக
ஒட்டிக் கொண்டு வந்ததுதான் இந்த
நாசகாரச் சீமைக் கருவேலை

இதனுடைய  அபரீதமான பெருக்கம்
மண்வளம் கெடுத்துநீர்வளம் கெடுத்து
காற்றிலுள்ள ஈரப்பதத்தையும்
உறிஞ்சுவதன் மூலம் சுற்றுச் சூழலையும் கெடுத்து

இப்போது தமிழகத்தை நாசகாடாக்கிக் கொண்டிருக்கிறது

அண்டை மாநிலமான கேரளத்தில் அரசின்
உதவியோடுசீமைக் கருவேல முள்ளை முற்றிலும்
அழித்து தங்கள் மண்ணைச் சொர்க்க
பூமியாக்கிவிட்டார்கள்

நாம்தான் நரகத்தின் இடையில் நிற்கிறோம்

இதன் தீமைகளை முற்றாக அறிந்து
நான் சார்ந்திருக்கிறஅரிமா சங்கத்தின் 324 பி3
 கடந்த ஆண்டுக்குரிய சேவைத் திட்டமாக
சீமைக் கருவேல முள்ளை அகற்றுதலைச்
செய்யமுனைய அனைவரின் ஒத்துழைப்போடு
இதுவரைமதுரை தேனி சிவகங்கை திண்டுக்கல்
முதலானமாவட்டங்களில் 10000 ஏக்கருக்கு
மேற்பட்ட நிலப் பரப்பில் இதனை அகற்றிவிட்டோம்.
இன்னும் அகற்றிக் கொண்டிருக்கிறோம்

ஆயினும் இதனை விழிப்புணர்வு இயக்கமாகத்தான்
செய்ய முடிகிறதே ஒழிய முற்றாக ஒழிக்க இயலவில்லை

எங்கள் முயற்சி வானளவு வளர்ந்து நிற்கும் ஒரு
கொடிய அரக்கனை  சிறுகம்பு கொண்டு வெல்ல
முயல்வது போலத்தான் உள்ளது

தாங்கள் மனது வைத்தால் தங்கள் பிறந்த நாள்
கோரிக்கையாக மக்களிடன் இந்த கருத்தை மட்டும்
வலியுறுத்தினால் ,.......

தமிழகத்தில் ஏதேனும் ஓரிடத்தில்
நீங்கள் ஒரு முள்ளை வெட்டினால்போதும்

நிச்சயம் தமிழகத்திலிருந்து இந்த கருவேல முள்
அடியோடுஒழிக்கப் பட்டுவிடும்

இதற்கான சேடலைட் மூலம் தமிழகத்தில் உள்ள
ஒட்டு மொத்தகருவேல முள் பரப்பையும்

அதனைவிஞ்ஞானப் பூர்வமாக ஒழிப்பதற்கான
செயல் திட்ட முறைகளையும் தருவதோடு

உடன் இணைந்து பணியாற்றவும்
பல இயக்கங்கள் எங்களைப் போல தயாராக உள்ளன

தங்கள் பிறந்த நாள் பரிசாக தமிழக மக்களுக்கு
தமிழ் மண்ணின் வளத்தை மட்டும் மீட்டுத் தாருங்கள்

இதை அரசு  மட்டும் செய்ய முடியாது.

தாங்கள் நினைத்தால்
நிச்சயம் இதைஒரு மக்கள் இயக்கமாக்கி
சாதித்துக் காட்டமுடியும்

அதைத் தொடர்ந்து தமிழக மக்களின்
வாழ்வில் வளமும் நலமும் மாண்பும்
நிச்சயம் பல்கிப் பெருகும்

நிச்சயம் இது தமிழக மக்களுக்குச் செய்த வாழ்நாள்
பேருதவியாகவும் இருக்கும்

உங்கள் வாழ் நாள் சாதனையாகவும் இருக்கும்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Thursday, March 26, 2015

தீதும் நன்றும்...

விஞ்ஞான வளர்ச்சியின் கருணையால்
நாற்பதாண்டுகளுக்கு முந்தைய
பள்ளிக் கூட நண்பர்களைத்
தேடித் தேடிக் கண்டெடுத்தோம்

உருவ அமைப்பில் பலர்
முற்றிலும் மாறிப் போயிருந்தார்கள்
பலரை அவர்கள்
அறிமுகப் படுத்திக் கொண்டபின்தான்
அறிந்து கொள்ளவே முடிந்தது

அறிந்த பின்தான்
அவர்கள் குண இயல்பு
துளியும் மாறாதிருந்தது
அப்பட்டமாய்த் தெரிந்தது

எத்தனை நிறைவினுள்ளும்
ஒரு சிறு குறையை
மிகத் தெளிவாய்க் கண்டுவிடும் இராமசாமி

"என்னடா எங்குடா போய்ச்சு
அத்தனை சுருள் முடியும்
இப்படி வழுக்கையாய் நிற்கிறாய் " என்றான்

எத்தனைக் குறைவினுள்ளும்
ஒரு நிறைவினைக் கண்டுவிடும் முருகன்

" எப்படிடா இப்படிக் கலரானே
என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு " என்றான்

முழுதாக விசாரித்து முடிக்கையில்

குறைகண்டுபிடித்து விடும்
"இராமசாமிகள் " எல்லாம்
அனைத்து விதத்திலும்
குறையுடையவர்களாய் இருக்க

நிறைகண்டு மகிழும்
"முருகன்கள் " எல்லாம்
எல்லாவகையிலும்
நிறைவுடைவர்களாய் இருக்க

காலம் எதையும் எவரையும்
மாற்றிப் போவதில்லையென்பதையும்
இருப்பதைத்தான் கூட்டித்தான் போகிறதென்பதையும்

விதி இருப்பதற்கு மாறாக எதையும்
மாற்றித் தருவதில்லையென்பதையும்
பார்ப்பதைத்தான் பரிசளித்துப் போகிறதென்பதையும்

உறுதி செய்து போனது

ஆம்
தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லையென்பதை
மீண்டும்
அழுத்திச் சொல்லிப் போனது

Friday, January 23, 2015

சேவைப் பொங்கல்

எண்ணத்தால் இமயம் அசைப்பதை விட
செயலால் துரும்பசைப்பதே மேல் என்கிற
கருத்துடையவர்கள்  எம்போன்று
சேவை இயக்கத்தில் ஈடுபட்டுள்ள  எனது
நண்பர்கள் அனைவரும் .




(உரையாற்றிக் கொண்டிருப்பது அடியேன்

 நடுநாயகமாக வீற்றிருப்பது
மாவட்ட ஆளு நரின்  துணைவியார்
டாக்டர் ஆனந்தி   அவர்கள்
அடுத்தது ஆளு நர் , டாக்டர் ப ரகுவரன் அவர்கள்
அடுத்து அமர்ந்திருப்பவர் இந்த நிகழ்ச்சிக்குத்
தலைமைப் பொறுப்பேற்றும்  ,இந்த  நிகழ்வுக்கான
செலவின் பெரும்பகுதியை  தன சொந்தப் பொறுப்பில்
செய்தவருமான   வள்ளல்  டாக்டர் ,எம்  சுப்ரமணியம்
வட்டாரத் தலைவர் அவர்கள்  )

அந்த வகையில்  நான் தலைமைப்  பொறுப்பேற்றுள்ள
டிலைட்  அரிமா  சங்கத்தின் மூலம்
 கடந்த பொங்கல் பண்டிகைத்
திரு நாளை முன்னிட்டு  350 ஏழைத்
தாய்மார்களைத் தேர்ந்தெடுத்து புத்தாடைகள்
வழங்கினோம்

மிகச் சரியானவர்களைச் சேவை சென்றடைய
வேண்டும் என்பதற்குத்தான் மிகவும்
மெனக்கெடவேண்டியிருந்தது

(சேலையில் மதிப்பு ரூபாய்300 என்றால்
மிகச் சரியானநபர்களைக் கண்டு பிடிக்கவும்
அவர்களைஅழைத்து வந்து பின் அனுப்பிவைக்கவும்
ரூபாய் 120 ஆனது )


0

எமது பகுதியில் நல்லாசிரியர் விருது பெற்ற
மதிப்பிற்குரிய ஆசிரியர் எஸ் கனகராஜ் அவர்களுக்குவிருதுவழங்கிகௌரவித்தோம்


தொடர்ந்து அரிமா சேவையில் ஈடுபட்டுவரும்
தம்பதிகளைக் கௌரவிக்கும் விதமாக
நாங்கள் தொடர்ந்து வழங்கிவரும்
ஆதர்ச அரிமா தம்பதிகள்  விருதினை இம்முறை
மதிப்பிற்குரிய அரிமா  மோகன்-உஷா
 தம்பதியினருக்கு வழங்கி கௌரவித்தோம்

இந்தத் தம்பதியினர் தொடர்ந்து அரிமா இயக்கத்தில்
இணைந்து 20 ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்து
வருவதோடு, மாவட்ட அதிகாரிகளாக அரசுத் துறையில்
பணியாற்றி ஓய்வு பெற்றபின்னரும் தங்கள்
வருடாந்திர ஓய்வுத் தொகையில்
ஒரு மாதத் தொகையைசேவைக்கெனவே ஒதுக்கி
 மக்கள் சேவைசெய்து வருகிறார்கள்என்பது
குறிப்பிடத் தக்கது(அது சுமார்  அறுபதாயிரத்திற்குக்
குறையாமல் இருக்கும்  )



எங்கள் பகுதியின் அருகில் உள்ள
இரண்டு பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து
விளையாட்டுப் போட்டி நடத்தி வெற்றி பெற்ற
மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினோம்


சக்கரைப் பொங்கலை  விட  இந்த
சேவைப் பொங்கல்  மிக இனிப்பாகவும்
மகிழ்வளிப்பதாகவும் இருந்தது என்பதைச்
சொல்லத்தான் வேண்டுமா  ?

Thursday, November 27, 2014

நதி மூலம் ரிஷி மூலம் ......

ஹோட்டலில் உணவை இரசித்து
உண்ணும் ஆசை இருக்கிறதா ?
தயவு செய்து  சமயலறையை
எட்டிப் பார்க்காதிருங்கள்
அதுதான் சாலச் சிறந்தது

ஒரு சிற் பத்தின் அற்புதத்தை
இரசித்து வியக்க ஆசை இருக்கிறதா ?
அதற்குச் சிற்பம் செதுக்குமிடம்
ஏற்ற இடமில்லை
கலைக் கூடமே சரியான இடம்

பெருக்கெடுத்தோடும் ஆற்றின்
அழகை இரசித்து மகிழ ஆசையா ?
அதற்கு உற்பத்தி ஸ்தானம்
சரிப்பட்டு வராது
விரிந்தோடும் மையப் பகுதியே அழகு

குழந்தையின் அழகை மென்மையை
தொட்டு ரசிக்க ஆசையா ?
அதற்குப் பிரசவ ஆஸ்பத்திரி
சரியான இடமில்லை
அது தவழத்துவங்குமிடமே மிகச் சரி

கவிதையின் பூரணச் செறிவை
ருசித்து மகிழ ஆசையா ?
அதற்கு கவிஞனின் அருகாமை
நிச்சயம் உசித மானதில்லை
தனிமையே அதற்கு யதாஸ்தானம்

நதி மூலம் ரிஷி மூலம் மட்டுமல்ல
எந்த மூலமுமே அழகானதுமில்லை
கற்பனை செய்தபடி நிஜமானதுமில்லை
அதனை அறிந்து தெளிந்தவனுக்கு
ஏமாற்றம் நேர்வதற்கு வாய்ப்பே இல்லை

( மனம் கவர்ந்த ஒரு படைப்பாளியை
நேரடியாகச் சந்திக்க விளைந்த ஏமாற்றம்
தந்த  சிந்தனை )

Sunday, November 23, 2014

முத்தப் போட்டியாளர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்

நல்லதோ கெட்டதோ பயனுள்ளதோ பயனற்றதோ
வித்தியாசமாக எதையும் செய்தால் உலகம்
தன்னை உற்றுப்பார்க்கும்  (எப்படி பார்க்கும்
என்பது குறித்து உங்களுக்கு அக்கறையில்லை என்பது
எங்களுக்கும் தெரியும்  ) என்னும் ஒரு பித்தல்லாட்ட
 எண்ணத்தில்நம்பிக்கை கொண்டவர்கள் செய்யும்
 அட்டகாசமே உங்களின்இந்த முத்தப் போட்டியென்பது பெரும்பாலோனோரின் அபிப்பிராயம்.

பேண்டுக்கு மேல் ஜட்டி போட்டால்  சூப்பர் மேன்
,சட்டைக்கு மேல் பிரா போட்டால் தேவதைகள்
என ஆவ போல

வீட்டுக்குள் செய்ய வேண்டியதை வெளியில் செய்தால்
தாங்கள் அறிவு ஜீவிகள் எனக் காட்டிக் கொள்ளலாம்
என நினைக்கும்  உங்களைப் போலுள்ள முட்டாள்களின்
மூளையில் விளைந்த விஷப்பயிரே இது

கார்த்திகை மாதத்தில் காம வெறிபிடித்து ரோட்டில்
ஒன்றுக்குப் பத்து என்கிற கணக்கில்
எச்சில் வழிந்தபடித் திரியும் தெரு நாய்களுக்கும்
இவர்களுக்கும் என்ன வித்தியாசம் எனபதும்
எனக்குப் புரியவில்லை

எனவே எனதருமை அறிவுஜீவிகளே !
நீங்கள் கவனிக்கப் படவேண்டும் தங்கள் குறித்த
செய்திகள் அதிகம் பரவ வேண்டும் என்பதே
உங்கள் தலையாய நோக்கம் என்பதால்...

நீங்கள் நின்றபடி மனிதர்களைப் போல
அதைச் செய்யாது கைகளையும்
கால்  முட்டியினையும் தரையில் ஊன்றி
நாலு கால் விலங்குகளைப் போல் நின்று செய்யுங்கள்
அது மற்றவர்கள் தங்கள் மனம் எந்த  இனம்
எனப் புரிந்து கொள்ளவும் ஏதுவாகும்

அதைப்போல் இந்தக் கண்றாவி தூரம் தொலைவு
உள்ளவர்கள்  கண்ணில்  தெரியாமலாவது
இருந்து தொலைக்கும்