Sunday, February 23, 2014

தொடரும் பரிசும் தொடரும் மகிழ்வும்

பதிவுலக பிதாமகர் வை.கோ அவர்கள்
பதிவுலகுக்கும் மற்றும் பதிவர்களுக்கும்
மகிழ்வூட்டும்படியாக நடத்திவரும்
சிறுகதை விமர்சனப் போட்டியில்" காதல் வங்கி"
என்னும் சிறுகதை விமர்சனத்திற்கும் முதல் பரிசு
பெற்றதன் மூலம்தொடர்ந்து
நான்காவது முறையாக முதல் பரிசினைப்
பெற்ற மகிழ்வினைத் இப்பதிவின் மூலம்
தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்

முதல் பரிசு மட்டுமல்லாது
வஸிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி எனப்
பெயர் பெறுதலைப்போல  மிகச் சிறந்த பதிவர்
திருவாளர் வை.கோ அவர்கள் மூலம்
சிறந்த விமர்சகர் எனப் பட்டம் பெற்றதையும்
பெறுதற்கரிய பெரும் பேறாகக் கருதுகிறேன்

மேற்குறித்த கதைக்கான இணைப்பையும்
(http://gopu1949.blogspot.in/2014/02/vgk-04-01-03-first-prize-winners.html )
அதற்கு நான் எழுதிய விமர்சனத்தையும்
இத்துடன் இணைத்துத் தருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்


காதல் வங்கி   (http://gopu1949.blogspot.in/2014/02/vgk-04.html )
---------------------------------

கதைக் களம் வங்கியாக இருப்பதால்
இது வங்கிக் காதலாகத்தானே இருக்க வேண்டும் ?
இது என்ன காதல் வங்கி  ?
.
கதை என்று சொன்னால் ஒரு திருப்பம்
ஒர் அதிர்ச்சி ஒரு எதிர்பாராத புரட்சிகரமான முடிவு
எனவெல்லாம் தானே இருக்கவேண்டும் ?

எந்த வித சிறு அதிர்வும் இல்லாது
ஒரு சொகுசுப் பேருந்தில்
நேர்கோட்டுப்பாதையில் பயணிப்பதைப் போன்றுச்
செல்லும் இந்தக் கதை எந்த வகையில் சேர்த்தி ?

மாற்றம் ஒன்றே மாறாதது .
காலச் சூழலுக்குத் தகுந்தாற்போல தன்னை
மாற்றிக் கொள்ளாத எதுவும்பிழைக்கமுடியாது
நிலைக்க  முடியாது எனவெல்லாம்
பயிற்றுவிக்கப்படுகிற இந்தக் காலத்தில்
பழமையை இன்னும் சரியாகச் சொன்னால்
பழைய பஞ்சாங்க வாழ்க்கை முறையை
சிறப்பித்துச் சொல்லும் இந்தக் கதையை
இதன் கருத்தை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் ?

இந்தக் கதையைப் படித்து முடித்ததும்
இப்படிப்பட்ட எண்ணங்களெல்லாம்  உங்களுக்குத்
தோன்றினால் நிச்சயம் தவறே இல்லை
தோன்றவில்லையெனில்தான் அது தவறு

ஏனெனில் ஒரு படைப்பைப் படிக்கிற அனைவரும்
படிப்பாளியின் போக்கில்  அவரது நோக்கில்
படித்துப் பின் அதை நம் போக்கில் புரிந்து கொள்ள
முயலுகிற வழக்கம் எல்லாம் மாறி
வெகு காலமாகிவிட்டது

நாம் எல்லோரும் எல்லாவற்றிலும் சரியோ தவறோ
ஒரு கருத்துகைக் கொண்டிருக்கிறோம் அல்லது
ஒரு கருத்தைக் கொள்ளும்படியாக
பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்

நம் கருத்துக்கு ஒத்துப் போகிற கதையெனில்
அதிலுள்ள பிற சிறப்பு அம்சங்கள் குறித்து
அலசி ஆராயத் துவங்குகிறோம்.மாறாக இருப்பின்
அப்படைப்பைக் குதறித் தள்ளத் தயாராயிருக்கிறோம்
அல்லது கண்டு கொள்ளாது புறக்கணித்து
ஒதுங்குகிறோம்

இந்தக் கதையை விமர்சிக்கும் முன்னால் இவ்வளவு
நீண்ட முன்னுரை எழுதுவதன் காரணமே
இந்தக் கதை இப்படி இரண்டு எல்லைக் கோட்டின்
அருகில் இருந்து ஆராயாது இயல்பாக அணுகி
 ரசிக்கவேண்டிய கதை என்பதால்தான்

பொதுவாக வங்கியெனச் சொன்னால்
 பணம் போடும் இடம் எடுக்கும் இடம்
 என்பதைவிட பணம் இருக்கும் இடம்
எனத்தான் நாம் பொருள் கொள்கிறோம்

அந்த வகையில் இந்தக் காதல் வங்கிக்கான
பொருளாக காதல் இருக்குமிடம் நிலைக்குமிடம்
எனச் சொல்லலாம்

அடுத்ததாக காதல்
உலகில் அனைத்து மொழிகளிலும் அதிகமாக
விளக்கம் சொல்லப்பட்ட இன்னும் மிகச் சரியாக
விளக்கம் சொல்ல முடியாத சொற்கள்
 எனச் சொன்னால் அது நிச்சயம்
கடவுள்,கவிதை,காதல் என்கிற
மூன்று சொற்களாகத்தான் இருக்கமுடியும்

இந்தக் கதை பூடகமாக அந்தக் காதலுக்கு
அருமையான விளக்கம் சொல்லிப்போகிறது
என்றால் நிச்சயம் மிகையில்லை

மனித வாழ்வுக்கு அத்தியாவசியத் தேவையாக
உணவு, உடை ,இருப்பிடம் எனச்
சொல்வதைப்போல உண்மையான காதலுக்கு
உடல் ,உணர்வு,ஆன்மா
இவைகளின்  ஒத்திசைவு அவசியத் தேவை

ஒரு உடல் வெறி கொள்ள ஒரு உடல்
மறுப்பது எனில் அது காமக் காதல்

இருவரின் உடல் மட்டும் ஒத்துச் செல்கிறது
எனில் அது மிருகக்காதல்

இருவரின் உடலும் உணர்வும் ஒத்துச்
செல்லுகிறதெனில் அது சராசரிக் காதல்

ஆன்மா மட்டுமே ஒத்துச் செல்லுகிறதெனில்
அது தெய்வீகக் காதல் எனச் சொல்லலாம்

இன்னும் சுருக்கமாகச் சொன்னால்
உடலில் துவங்கி  உணர்வில் வளர்ந்து
ஆன்மாவில் நிலை கொள்கிற காதலை விட
ஆன்மாவில் துவங்கி உணர்வில் வளர்ந்து
உடலில் முடிவில் சங்கமிக்கிற
(அல்லது சங்கமிக்காமலே போகிற ) காதலே
நிச்சயமாக தெய்வீகக் காதல்

ஜானகி ரகுராமன் காதல் நிச்சயம்
தெய்வீகக் காதல்தான்

இதைப் பூடகமாகச் சொல்லத்தான்
நாம்புரிந்து கொள்ளும்படியாகச் சொல்லத்தான்
ஜானகியின் தாயாரை நமக்காக சில சராசரி
மனிதர்கள் நோக்கில்
 (அவர் அப்படி இல்லையென்றாலும் )
சில கேள்விகள் எழுப்பச் செய்து அதற்கு
ஜானகி மூலம் அருமையான விளக்கமளிக்கிறார்

அவர் விளக்கம் மூலமே இது சராசரி
வங்கிக்காதல் இல்லை
இது காலம் கடந்து நிலைக்கிற காதல் வங்கி
என்பதுமிக எளிதாய் நமக்குப் புரிந்து போகிறது

பயண இலக்கு  மிகத் தூரமாக இருப்பவர்களுக்கு
அதிக வளைவு நெளிவுகளற்ற
நான்கு வழிச் சாலைகள் தான் ஏற்புடையது
என்பதைப்போல

மிக உயர்ந்த நோக்கத்திற்காக கதை சொல்ல
நினைப்பவர்களுக்கு சுவாரஸ்யம் கூட்டுவதற்காக
செய்யப்படுகிற நெளிவு சுழிவு யுக்திகள்
(எதிர் கதாபாத்திரங்கள், முரண் நிகழ்வுகள் )
நிச்சயம் தேவையில்லை.குறிப்பாக இந்தக்
கதைக்கு அது தேவைப்படவில்லை

முடிவாக ஏன் எதற்கு என்கிற கேள்விகளைத்
தொடர்ந்து நம் செயல்பாடுகள் இருக்குமாயின்
கலாச்சாரப் பண்பாட்டுக் குழப்பங்கள் நேர
வாய்ப்பே இல்லை

உடல் ஆரோக்கியத்திற்கு உணவு என்பது போய்
அது நாக்கிற்கு என ஆனதைப் போல

சீதோஷ்ண நிலையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள
உடை என்பது போய் பகட்டுக்கு என ஆனதைப் போல

வாழ்வின் தேவைக்குத் தேவையான பொருட்கள்
என்பது போய் தன் செழுமையைக் காட்டுவதற்கு
என ஆனது போல

வாழ்வின் தேவைக்கு வேலை என்பது போய்
வேலைக்காக வாழ்வது என்பது போல

சிறந்த வாழ்வுக்கு காதல் என்பது போய்
உடலுறவுக்கு தலைவாசல் காதல் என்பது போல

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் மாறுதல்கள்
புதுமைகள் புரட்சிகள் என்கிற பெயரில்
அர்த்தமற்ற அழிவைத் தருகிற போக்கே
தொடர்வதற்குப் பதில்அர்த்தமுள்ள உயர்வைத்
 தருகிற உன்னதமான பழைமையும்
பழைய பஞ்சாங்கமுமே தொடரலாமோ
என்கிற ஆதங்கம் அனைவர் மனதிலும்
இன்றையச் சூழலில் வரத்தான் செய்கிறது

மாறுதலும் புதுமையும் உயர்வையும் நன்மையையும்
தருமாயின் வரவேற்கத்தக்கதே.
அதுவே அழிவையும் நலிவையும் தருமாயின்
நிச்சயம் மாறுதல்களை நாம்
மறுபரிசீலனை செய்யத்தான் வேண்டும் எனும்
ஒரு திடமான கருத்தை இக்கதை நம்முள்
ஏற்படுத்திப் போவது நிஜம்

சென்ற விமர்சனப் போட்டியில் திரு, ரமணி அவர்கள்
அலசி காயப்போடுவது மட்டுமல்ல விமர்சனம் எனக்
குறிப்பிட்டிருந்தார்.அதுவும் சரிதான்

என்னைப் பொருத்தவரை விமர்சனம் என்பது
ஒரு ஸ்தலத்தைச் சேவிக்கச் செல்பவன் அந்த
ஸ்தலப் புராணத்தைத் தெரிந்து கொண்டு சேவித்தல்
எத்தனைச் சிறப்போ அதைப் போல

கதையின் அந்தராத்மாவை புரியச் சொல்லி விட்டு
வாசகனை அவன் போக்கில் கதையை படிக்கத்
தூண்டுவதும் நல்ல விமர்சனமாக இருக்க முடியும்

அதனாலேயே கதையின் சுருக்கத்தை  சிறந்த
வரிகளைக் கோடிட்டுக் காட்டும் (அதிகப் பிரசங்கி )
வேலையை நான் செய்யவில்லை

ஒரு நெல்லை நூறு நெல்லாக பெருக்கிக் காட்டுதல்
மூலம் ஒரு நிலம் செழுமையான நிலம் என
தன்னை நிரூபிப்பதைப் போல

ஒரு சிறுகதை வாசகனுக்குள் பல்வேறு தொடர்
சிந்தனைகளை  பெருக்கிப் போகிறதெனில் அதுதான்
மிகச் சிறந்த கதை

வேறு அத்தாட்சிகளும் சான்றிதழ்களும்
அதற்கெதற்கு ?

கதையைப் படிப்பவர் அனைவரின்
சிந்தனை விளக்கைச் சிறப்பாகத் தூண்டி
நன்றாக ஒளிவிடச் செய்யும்
அற்புதமான கதையைத் தந்தமைக்கு
மிக்க நன்றியும் தொடர வாழ்த்துக்களும்  வை ,கோ சார்.

குறிப்பு

 இப்பதிவின் நோக்கமே  யான் பெற்ற பரிசை
தாங்களும்  பெறுவதன் மூலம்  இப்போட்டிக்கு
பெருமை சேர்க்கவேண்டும்   என்பதற்காகவே

வாழ்த்துக்களுடன்.......

24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சற்றும் முன் தான் ஐயாவின் தளத்தில் வாசித்தேன்...

எங்களின் நடுவர் சிறுகதை விமர்சனச் சக்ரவர்த்தி பட்டம் பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி...

வாழ்த்துக்கள் ஐயா...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

நான் வாசித்தேன்....
தொடர்ச்சியான பரிசு மழையில்நனைவதை நினைத்து எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அதுவும் யாரு.... எங்களுடைய நடுவர் கதாநாயகன் ஐயா அல்லவா....சிறுகதை விமர்சன சக்கரவர்த்தி பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
த.ம 3வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸாதிகா said...

மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இன்னும் பல பல பட்டங்களும் பரிசுகளும் கிடைக்க வாழ்த்துகள்.த ம 4

RajalakshmiParamasivam said...

திரு.வைகோ சார் தளத்தில் படித்து மகிழ்ந்தேன். இனிய வாழ்த்துக்கள் ரமணி சார்.

Thulasidharan V Thillaiakathu said...

சிறுகதை விமர்சன சக்கரவர்த்தி பட்டம் பெற்று பதிவுலகத்திற்குப் பெருமை சேர்த்ததற்கு எங்கள் மன்மார்ந்த பாராட்டுக்கள்!

இனிய வாழ்த்துக்கள்!

Iniya said...

மகிழ்ச்சி வாழ்த்துக்கள்....!

MANO நாஞ்சில் மனோ said...

இந்த வருஷம் உங்களுக்கு பதவியும் பாராட்டுகளும் இன்னும் இன்னும் வந்து குவியட்டும் குரு...!

அம்பாளடியாள் said...

தொடர்ந்து வெற்றி வாகை சூடும் தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

Yarlpavanan said...

இனிய வாழ்த்துகள்
தங்கள் திறனாய்வு (விமர்சனம்) முயற்சிகளைத் தொடருங்கள். அது சிறந்த படைப்பாளிகளை மட்டும் இனங்காட்டாது; சிறந்த படைப்புகளை இனங்காட்டுமென நம்புகிறேன்.
தங்கள் திறனாய்வு (விமர்சனம்) பணியில் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க எனது வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

பரிசு மழையில் நனையும் விமர்சன சக்ரவர்த்திக்கு மனம் நிறைந்த நல் வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

விதையைக்காட்டி நிலத்தின் வளமையை புரியவைக்கும் அருமையான விமர்சனக்கலையை சிறப்பாக கைவரப் பெற்றதற்கு
இனிய பாராட்டுக்கள்..!

தனிமரம் said...

வாழ்த்துக்கள் ஐயா.

kowsy said...

வாழ்த்துகள் சார். தொடர்ந்து பரிசுகளை பெற்று மகிழுங்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

தொடர்ச்சியாக அதுவும் நாலாம் முறையாக முதல் பரிசு மட்டுமே என்ற பலத்த மழையில் நனையும் ’சிறுகதை விமர்சன சக்ரவர்த்தி’ அவர்களுக்கு மனம் நிறைந்த நல் வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

தனிப்பதிவு ஒன்று வெளியிட்டு சிறப்பித்தமைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா.

Avargal Unmaigal said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்! வாழ்த்துக்கள்!

உஷா அன்பரசு said...

வாழ்த்துக்கள் .. தாங்கள் பாராட்டுக்கும் பரிசுக்கும் தகுதியானவர் என்பதை மறுக்க முடியாது. அருமையான சிந்தனையாளர்.. உங்கள் படைப்புகளுக்கு கருத்துரை சொல்லவே என்னிடம் வார்த்தைகள் போதாமல் மௌனமாகிவிடுவேன்.... ! வாழ்த்துக்கள்....... நன்றி!
த.ம-8

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஒரே பரிசுமழை..வாழ்த்துக்கள் ஐயா!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

த.ம.9

மகிழ்நிறை said...

வாழ்த்துக்கள் சார்!

ஞா கலையரசி said...

தொடர்ந்து நான்காவது முறையாக முதல் பரிசு பெறுவதற்கு வாழ்த்துக்கள். போட்டி முடிவுகள் வெளியாகும் போது இக்கதைக்கு உங்களுடைய விமர்சனம் எப்படியிருக்கும் என்று படிக்க ஆவல் கொள்ளுமளவிற்கு ஒவ்வொன்றும் வித்தியாசமாய் எழுதுகிறீர்கள், விமர்சன சக்ரவர்த்தி என்ற பட்டம் பொருத்தமானது தான். உங்களது நான்கு விமர்சனங்களில் சுடிதார் வாங்கப் போறேன் என்ற கதைக்கு எழுதியது தான் என்னை மிகவும் கவர்ந்தது. சிறுகதையின் இலக்கணத்தை ஆழமாக அறிந்திருப்பதும் பரந்து பட்ட வாசிப்பும் எழுத்துத் திறனும் எந்தவொரு கதையின் கருவையும் ஆழமாக உள்வாங்கி நேர்த்தியான விமர்சனம் செய்ய உங்களுக்குக் கைகொடுக்கின்றன. விமர்சனம் செய்வது எப்படி என்று தாங்கள் ஒரு பதிவு போட்டால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பாராட்டுக்கள் ரமணி சார்!

G.M Balasubramaniam said...

விமரிசனம் மட்டுமல்ல கதையைத் தொடர்ந்து எழுதவும் முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

//உலகில் அனைத்து மொழிகளிலும் அதிகமாக
விளக்கம் சொல்லப்பட்ட இன்னும் மிகச் சரியாக
விளக்கம் சொல்ல முடியாத சொற்கள்
எனச் சொன்னால் அது நிச்சயம்
கடவுள்,கவிதை,காதல் என்கிற
மூன்று சொற்களாகத்தான் இருக்கமுடியும்//

மிகச் சிறப்பான வார்த்தைகள்......

தொடர்ந்து நான்காம் முறையாக முதல் பரிசினைப் பெற்றதற்கு வாழ்த்துகள். தொடரட்டும் வெற்றி மழை.

த.ம. +1

Post a Comment