Tuesday, July 4, 2017

நாங்கள் திட்டம் போட்டு கொள்ளையடித்துக் கொ(ல் )ள்கிறோம்

ரோடெல்லாம்
துருப்பிடித்த ஆணிகளைப்
பரப்புவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு

"ஜாக்கிரதையாக வண்டியோட்டுங்கள்
பாதையெல்லாம் துருப்பிடித்த ஆணி "என
எச்சரிக்கைப் பலகை வைக்கும்
காவலர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?

ஊரெல்லாம்
மதுபானக் கடைகளைத் திறந்து
வைத்துவிட்டு

"குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு " என
எச்சரிக்கைப் பலகை வைத்து
பம்மாத்துக் காட்டும் அரசுக்கும்
இதற்கும் என்ன வேறுபாடாம் ?

குழந்தை தவழுமிடமெல்லாம்
விஷப்பாட்டில்களைத்  திறந்து வைத்துவிட்டு
பாலையும் பிஸ்கெட்டையும்
எட்டத்தில் வைக்கிற தாயை
நீங்கள் பார்த்ததுண்டா ?

சந்து பொந்தெல்லாம்
சிகரெட்டும் குட்காவும்
கிடைக்கும்படியாக இருக்கவிட்டு

கல்வியையும் நீரையும்
விற்பனைக்கு என ஆக்கிவிட்டு
விட்த்திடேயாகத் திரியும்
அரசுக்கும் இதற்கும் என்ன மாறுபாடாம் ?

கரும் பலகையெல்லாம்
ஆபாசப் படங்களை
வரைந்து வைத்துவிட்டு

அதனைப் பார்த்துக்
கெட்டுப் போகாதே என எச்சரிக்கிற ஆசிரியரை
நீங்கள் சந்தித்ததுண்டா ?

ஊடகங்களிலெல்லாம்
ஆபாசங்கள் தலைவிரித்தாடுதலை
அனுமதித்து விட்டு

மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி
அறிவுறுத்தித் திரியும்
அரசுக்கும் இதற்கும் என்ன வித்தியாசமாம் ?

நீ அவல்  கொண்டுவா
நான் உமி கொண்டுவருகிறேன்
ஊதி ஊதிச்  சாப்பிடுவோம்
எனும் சாமர்த்திய நண்பனைப்
பார்த்ததுண்டா ?

நீ சம்பாதிப்பதையெல்லாம்
வரியாகக் கட்டு
நாங்கள் திட்டம் போட்டு
கொள்ளையடித்துக் கொ(ல் )ள்கிறோம்
என்கிற  அரசுகளுக்கும் இதற்கும்
என்னதான் வித்தியாசம்  ?

எது என்ன நடந்தாலும்
நடந்துவிட்டுப் போகட்டும் என
போதையில் வீதியில் கிடக்கும்
மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா ?

நாட்டில் எது நடந்தாலும்
நடந்துவிட்டுப் போகட்டும்
நாம் நம்மைக் காத்துக் கொள்வோம் என
சுயநலப் போதையில் திரியும்
நமக்கும் அவர்களுக்கும் என்னதான்  வேறுபாடாம் 

13 comments:

KILLERGEE Devakottai said...

எல்லாம் இழந்து விட்டோம் இனி என்ன இருக்கிறது இழப்பதற்கு ?

Unknown said...

கடைசி ஐந்து வரிகள்தான் யோ'சிக்க' வைக்குது :)

ராஜி said...

இதுக்குதான் தலைவர் சிஸ்டம் சரியில்லன்னு சொன்னாரு

Anonymous said...

திறமை அற்றவர்களை தேர்ந்தெடுத்து விட்டு பின்பு அழுவதால் என்ன பயன். சூ... கழுவ கூட தண்ணீர் இல்லை. இப்படி கேவலமாக ஆட்சி செய்தாலும் மக்கள் அமைதியாக இருப்பதனால் அரசு என்பது கொள்ளை அடிக்க மட்டும் என்று ஆனது. ஆக மக்களே பொறுப்பு...

ஸ்ரீராம். said...

//துறுப்பிடித்த ஆனிகளைப்// // விட்டெத்தியாக //

துருப்பிடித்த ஆணிகள் விட்டேத்தியாக

விழிப்புணர்வுப் பதிவை விளங்கும்படி சொல்லி இருக்கிறீர்கள்.


வை.கோபாலகிருஷ்ணன் said...

புதுசா என்ன ஆச்சு இப்போது?

ஏன் இந்த திடீர் ஆதங்கம் உங்களின் இந்த இன்றைய வரிகளில்?

எப்போதும் போல அதுஅது அங்குஅங்கு அப்படி அப்படித்தானே நடந்துகொண்டு இருக்கின்றன.

கூத்தாடிகள் எப்போதும் ஒரே மாதிரியாகக் கூத்துக்கட்டி ஆடிக்கொண்டிருந்தால் மக்களால் ரஸிக்க முடியாது.

அவ்வப்போது தடாலடியாக ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே, மக்களுக்கும், நாட்டில் ஏதேதோ மாற்றங்கள் சுவாரஸ்யமாக நிகழ்ந்துகொண்டு உள்ளன என ஒரு ஆத்ம திருப்தி ஏற்படக்கூடும்.

மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளில், வாகனங்களை பல நாட்களுக்கு நிறுத்தி, தாமதம் செய்வதோ, வரி வசூலிப்பதோ, பைகளை நிரப்பிக் கொள்வதோ சுத்தமாக நின்று விட்டன எனக் கேள்விப்படுகிறோம்.

வாகனங்கள் எல்லாம் சூப்பரா எளிதாக வெகு வேகமாகக் கடந்து செல்ல முடிகிறதாம். ஆங்காங்கே உள்ள தடைகள் அனைத்தும் விலகி விட்டனவாம்.

சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் தங்கு தடையின்றி, தள்ளாட்டம் இன்றி நுகர்வோரைச் சுலபமாகச் சென்றடைய வழி பிறந்து விட்டதாம்.

இதற்கான ஆதாரம் இதோ இந்தப் பதிவினில் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது:
http://swamysmusings.blogspot.com/2017/07/15-gst.html

எனவே ....

போகப்போகத் தெரியும் ..... இந்த
(தாமரைப்) பூவின் வாஸம் புரியும் !

என இப்’போதை’க்கு நினைத்துக்கொள்வோம்.

இந்தப் பூவின் வாஸம் புரியும்வரை யாரும் எதற்கும் டென்ஷன் ஆக வேண்டாம் என பாஸிடிவ் ஆக நம்பிக்கை கொள்வோம்.

நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து 70 ஆண்டுகளில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தான், நாட்டின் எந்த வளர்ச்சிப்பணிகளுக்காகவும் உலக வங்கியில் கடன் ஏதும் வாங்கவே இல்லையாம். - இது நேற்று வாட்ஸ்-அப்பில் வந்த தகவலாகும்.

எனினும், யோசிக்க வைக்கும் தங்களின் இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.

[ஆனி மாதம் நடப்பதால் ஒருவேளை ஆணி ஆனியாக மாற்றப்பட்டிருக்குமோ என நான்
எனக்குள் நினைத்துக் கொண்டேன். இப்போது ஸ்ரீராமர் க்ருபையால் ஆணி நன்கு பதியுமாறு பதிவுச் சுவற்றில் அடிக்கப்பட்டு விட்டதில் மகிழ்ச்சி :)]

Yarlpavanan said...

சிந்திக்க வைக்கும் இனிய வரிகள்

கோமதி அரசு said...

நாட்டின் நிலையை கூறும் அழகான விழிப்புணர்வு கவிதை.

கரந்தை ஜெயக்குமார் said...

சிந்தனைக்கு உரிய வரிகள்
தம +1

வெங்கட் நாகராஜ் said...

அரசியல்..... நிறைய மாற்றங்கள் இங்கே தேவை.

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வைக்கிறது...

Unknown said...

கேள்விகள்!சரி! உரிய பதில் வருமா?

G.M Balasubramaniam said...

நம்மால் ஆதங்கங்களை எழுதத்தான்முடியும் அதற்கும் அதை சரி என்று சொல்லும் மக்கள் நாம் நம் எண்ணங்கள் அவர்கள் செவிகளில் எட்டாது பின் ஏன் எழுதுகிறோம் அட் லீஸ்ட் மனப்பாரமாவதுகுறையுமே

Post a Comment