Monday, May 15, 2017

சராசரி படைப்பாளியாய் இருப்பது....

சராசரிப் படைப்பாளியாய் இருப்பது
கொஞ்சம் சௌகரியமாகத்தான் இருக்கிறது

இரு துருவங்களுக்கு
இடைப்பட்ட நாடுகளைப்போல

தலைவனுக்கும் தொண்டனுக்கும்
இடைப்பட்ட அல்லக்கைகள் போல

தனித்துவமாயும் இல்லாது
ஜனரஞ்சகமாயும் இல்லாது

நடுத்தரப் படைப்பாளியாய் இருப்பது
கொஞ்சம் நல்லதுபோலத்தான் படுகிறது

சராசரி என்பதால்
கீறிவிட்டுச்  சுகம் காண அலையும்
அறிவு ஜீவிகளின் மனோவிகாரப்
பிடுங்கல்  இல்லை

தனக்கு மேலிருக்கும் எதையும்
உயர்ந்ததாய் எண்ணி மயங்கும்
வெகுஜனம் தரும் மரியாதைக்குப்
பங்கமும் இல்லை

இலக்கியக் காவலர்களென
பத்துப் பதினைந்து பேர்
ஊரணி ஓரத்துப்  பள்ளத்து நீராய்
ஒரு சிறு கூட்டத்திற்கு அழைத்து
அரிய விடுமுறை நாளைக்
கெடுப்பதும் இல்லை

மௌனங் காத்தலே
அறியாமைக்கு உற்றத் திரையென
ஒதுங்கியே  நட்புகொள்ளும் வெகுஜனம்
அபூர்வமாய்க் கிடைக்கும்
இனிய தனிமைச் சுகத்தைத்
தகர்ப்பதும் இல்லை

ஜோல்னா குர்தா
வித்தியாசமாய் தாடி மீசை
புரியாத வழக்கு மொழி
கூடுதலான ஆங்கில வார்த்தை
குழுச்  சேர்க்கும் பிரயத்தனம்
இப்படிக் கூடுதல் சுமைகளும் இல்லை

வாசகரின் மாறும் மனோ நிலை
பத்திரிக்கைகளின் மசாலாப் போங்கு
மேடை ஓரம் ஒளிபடரும் இடம்
வீழ்ந்து விடாது நிற்க ஓரிடம்
இவைகளைத் தேடி  ஓடும்
நித்ய மராத்தான் ஓட்டமும்  இல்லை

மொத்தத்தில்
சராசரி படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமானதாக மட்டும் இல்லை
கூடுதல்
சந்தோஷமளிப்பதாவும்தான் இருக்கிறது

13 comments:

KILLERGEE Devakottai said...

இந்த சந்தழஷம் தொடர்ந்து வர வாழ்த்துகள் கவிஞரே...
த.ம. 1

KILLERGEE Devakottai said...

மன்னிக்க "சந்தோஷம்" என்று படிக்கவும்.
செல்லில் எழுதுவதால் பிரச்சனை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களைப் போய் தாங்களே
சராசரி என்று சொல்லியிருப்பது
சரியா என, என்னை வியக்க வைக்கிறது !

தன்னடக்கம் யாருக்குமே இருக்க வேண்டியதுதான். அதற்காக இப்படியா?

சராசரிக்கும் கீழேயுள்ள எவ்வளவோ படைப்பாளிகளை முன்னுக்கு கொண்டுவரும்
மாபெரும் பொறுப்பு உங்களைப்போன்ற நம்பர்-1 படைப்பாளிகளிடம் மட்டுமே உள்ளது என்பதைத் தங்களுக்கு நினைவூட்டிச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

Matangi Mawley said...//

"ஜோல்னா குர்தா
வித்தியாசமாய் தாடி மீசை
புரியாத வழக்கு மொழி
கூடுதலான ஆங்கில வார்த்தை
குழுச் சேர்க்கும் பிரயத்தனம்
இப்படிக் கூடுதல் சுமைகளும் இல்லை" ---- Brilliant! My interpretation of this poetry is that- on their quest to become the "extraordinary"- most become victims of the cliché that's "extraordinary"- that is- what is being portrayed as "extraordinary".. Under such a situation- being ordinary- makes one truly extraordinary... Brilliant thought!!

Unknown said...

ஐயா வை. கோ சொன்னதை வழிமொழிகிறேன்

Kasthuri Rengan said...

செமை...அய்யா
தம +

Unknown said...

முக்கியமாய் தனிமைச் சுகம் போய்விடுமே பிரபலமானால் :)

ராஜி said...

எப்படியோ சந்தோசமா இருந்தால் நல்லது

இராய செல்லப்பா said...

நானும் சராசரிக்குக் கீழ் என்பதில் பெருமையே!

Rajeevan Ramalingam said...

எனக்கு மிகவும் பிடித்துள்ளது இந்தக் கவிதை. சராசரி படைப்பாளனாய் இருப்பது நல்லதுதான்.

அதிபுத்திசாலி இலக்கியவாதிகளைச் சாடியவிதம் அருமை :)

கரந்தை ஜெயக்குமார் said...

அருமைஐயா

G.M Balasubramaniam said...

வேறேப்படியும் இருக்க முடியவில்லையே

Thulasidharan V Thillaiakathu said...

அருமை அருமை

Post a Comment