Sunday, May 21, 2017

நம் துணைவியார் கூட நமக்குப் புத்தன்தானே...

முன்பெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலே லயிக்கத் துவங்கிவிடுவேன்
அந்தச் சுகத்தில் சில நாள்
மிதக்கத்  துவங்கிவிடுவேன்

நாலுவகைக் காய்கறியோடு
அப்பளம் வடையோடு
உண்ட சுகத்தோடு வரும்
ஒரு அசாத்திய களைப்பைப்போல
அதைத் தொடர்ந்து வரும்
ஒரு அருமையான தூக்கத்தைப்போல

அதிகாலையில் இருந்து
சமையலறையில்  தனியாய் போராடி
அனைவருக்கும் இதமாய்ப்  படைத்து
அவசரம் அவசரமாய் உண்டு முடித்தும்
அலுப்பில் ஓய்வெடுக்க முயலாது

மீண்டும் அடுத்த வேளைக்கென
பாத்திரங்களை கழுவி முடித்து
சமயலறையை ஒழுங்கு செய்துவைத்து
அடுப்பதனை மீண்டும் பற்றவைக்கும்
அருமை மனைவியைக் கண்டது முதல்

இப்போதெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலிருந்து உடன் விடுபட்டுவிடுகிறேன்
அடுத்ததை  உடன்  சிந்திக்கத்  துவங்கிவிடுகிறேன்

புத்தித் தெளிவடைதலே
ஞானமெனில்

அதைத் தருமிடமே
போதிமரமெனில்

சமையலறையதுக் கூட
நமக்கு போதிமரம்தானே

அதைத் தன் செயலால்
அன்றாடம்போதிக்கும்
நம்  துணைவியார்   கூட
நமக்குப் புத்தன்தானே

10 comments:

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை said...
ஞானசாதனங்கள் கண்பார்வையில்; கண்மட்டும் வெட்டவெளியில்.. இப்படித்தானே வாழ்கிறோம்?! சிந்திக்க வைத்த கவிதை.

Yaathoramani.blogspot.com said...

நிலாமகள் said...
நிச்சயமாக!

தத்தாத்ரேயர் ஞானம் பெற்றவற்றுள் இது விட்டுப் போனதோ...

Unknown said...

அருமை,சமையலறை சிந்தனைக்கும் விருந்து தந்து விட்டதே :)

KILLERGEE Devakottai said...

ரசித்தேன் கவிஞரே...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சமையலறையதுக் கூட நமக்கு போதிமரம்தானே//

எனக்கு, சமையலறை மட்டுமே போதிமரம்.

//அதைத் தன் செயலால் அன்றாடம் போதிக்கும்
நம் துணைவியார் கூட நமக்குப் புத்தன்தானே//

எனக்கு, என் துணைவியார் மட்டுமே புத்தர்.

துணைவியார் என்பவர் மட்டுமே என்றும் (நமக்கு வயிறு என்று ஒன்று இருக்கும்வரை) வயிற்றால் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.

அருமையான சமையல் போல மிக ருசியான உண்மையான யதார்த்தமான ஆக்கம்.

பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

முற்றும் அறிந்த அதிரா said...

அப்போ நானும் ஒரு “புத்தி” தேன்ன்:).. புத்தனுக்கு பெண்பால்:).. ஹா ஹா ஹா வோட்ட் போட்டிட்டேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
உண்மை ஐயா

சென்னை பித்தன் said...

போதிமரமும்,புத்தரும் கூடவே இருப்பது ஞானத்தின் உச்சமல்லவா?

Thulasidharan V Thillaiakathu said...

அருமை ரசித்தோம்...

Post a Comment