Monday, May 29, 2017

உயர்நிலைக்கு முதல் நிலை

சம நிலையது  தவறுகையில்தான்
மிகச் சரியாய் இருந்த எல்லாம்
தாறுமாறாய்ப் போய்த் தொலைக்கிறது

யாருக்காக யாரை இழப்பது
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாதவரை இழந்து
இழக்கவேண்டியவரை
இழுத்து அணைத்துக் கொள்வதும்  ...

எதனை எதற்காக இழப்பது
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாததை இழந்து
இழக்கவேண்டியதை
இழுத்துப் பிடித்துக் கொள்வதும் ....

சம நிலை தவறும்
சமயங்களிலேயே
அதிகச்  சாத்தியமாகிப் போகிறது
/
சம நிலையது  தவறும்
சாத்தியக்கூறுகள் எல்லாம்

போதையில்
 காமப்பசியில்
கோபத்தில்
பதவி மோகத்தில்
அதிகார ஆணவத்தில்
மிக மிக அதிகம் என்பதால்..

சம நிலை தவறுகையில்தான்
எல்லாம்
தாறுமாறாகத்தான் போய்த்
தொலைக்கிறது என்பதால்

சம நிலை தவறச் செய்பவைகளை
நம் கையெட்டும் தூரத்திலிருந்துத்
தள்ளியே வைக்கப் பழகுவோம்

 சரியாகக்  காலூன்றலே
கர்ணம் அடிக்க
ஏதுவாகும்என்பதனால்

சம நிலைப்  பராமரிப்பே
உயர்நிலைக்கு முதல் நிலை 
என உணர்ந்துத்  தெளிவோம்

இதை
உலகுக்கும் உரக்கச் சொல்வோம் 

24 comments:

KILLERGEE Devakottai said...

தன்னை அறிதல் என்பது சாதாரண விடயம் அல்ல... பதிவை இரசித்தேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சம நிலை தவறச் செய்பவைகளை
நம் கையெட்டும் தூரத்திலிருந்துத்
தள்ளியே வைக்கப் பழகுவோம்//

இது சொல்லுவது மிகவும் எளிது. இதனை செயல் படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.

தவநிலைக்கு சான்ஸே இல்லை எனத் தோன்றுகிறது.

நல்லதொரு பகிர்வுதான். பாராட்டுகள்.

Unknown said...

#போதையில்
காமப்பசியில்
கோபத்தில்
பதவி மோகத்தில்
அதிகார ஆணவத்தில்
மிக மிக அதிகம் என்பதால்..#
அப்படிப் பட்டோர் கண்களில் இருந்தும் தப்பித்துக் கொள்வோம் :)

ஸ்ரீராம். said...

சமநிலையை எப்படி மெயின்டெயின் செய்வது என்பதுதான் சங்கடம்!

ராஜி said...

மரத்துப்போதலும் சமநிலையில் வருமோ

Yaathoramani.blogspot.com said...

KILLERGEE Devakottai //

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...


வை.கோபாலகிருஷ்ணன் said...//
தவநிலைக்கு சான்ஸே இல்லை எனத் தோன்றுகிறது.
நல்லதொரு பகிர்வுதான். பாராட்டுகள்//

கொஞ்சம் மாறுதல் செய்துள்ளேன்
இதற்குச் சரிவரும் என நினைக்கிறேன்
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA //
அதுவும் சரிதான்
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

பயிற்சியும் முயற்சியும்
அதை அடையத்தான் இல்லையா ?

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

மரத்துப் போகாது
பார்ப்போருக்கு அப்படித்
தோணச் செய்வது
எனக் கூடச் சொல்லலாம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கொஞ்சம் மாறுதல் செய்துள்ளேன்//

கவனித்தேன். இருப்பினும் என் கருத்தினில் எனக்கு மாறுதலே இல்லை.

//சம நிலைப் பராமரிப்பே உயர்நிலைக்கு முதல் நிலை என உணர்ந்துத் தெளிவோம் //

உயர்நிலையை எட்ட நானும் முயற்சிக்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

பலவீனம் தவிர்த்தலே
பலம் பெற முதல் தகுதி என்பதுபோல்

தள்ளாடிக் கொண்டிருப்பவன்
ஓட முயலும் முன்
மிகச் சரியாய் நிற்றலே
முதல் தகுதி என்பது போல்

உயர் நிலை அடைய
சம நிலை கொள்ளல் அவசியம் இல்லையா

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உயர் நிலை அடைய சம நிலை கொள்ளல் அவசியம் இல்லையா//

மிகவும் அவசியம்தான். முதல் நிலை ‘சம நிலையான’ இதுவாகவே இருக்க முடியும். அதன்பிறகுதான் உயர்நிலை. புரிந்துகொண்டேன்.

தங்களின் அன்புக்கு என் நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...

முதல் நிலை சம நிலை
ஒரு அருமையான வாசகமாகப்படுகிறது
உங்கள் கருத்து இந்தப் படைப்பில்
இருந்த சில நெளிசல்களைச்
சீர் செய்ய உதவியது
வாழ்த்துக்களுடன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

’சமநிலை’ என்று சொல்லும்போது எனக்கொன்று என் ஞாபகத்திற்கு வருகிறது.

தினமும் பொழுதுபோகாத + தூக்கம் வராத இரவுகளில் சுகப்பிரும்ம மகரிஷி என்பவர் பரீக்ஷித்து மஹாராஜாவுக்குச் சொன்ன ’ஸ்ரீமத் பாகவதம்’ போன்ற மிகச் சிறப்பான உபன்யாசங்களைக் நான் கேட்டு அதிலேயே, அந்த நேரத்தில் மட்டுமாவது, லயித்துப்போவதுண்டு.

அதில் நம் உடலுக்குத்தான் அழிவு உண்டே தவிர, நம் ஆன்மாவுக்கு அழிவேதும் இல்லை என்பது முக்கியமானதொரு விஷயமாக தொடர்ந்து வலியுறுத்திச் சொல்லப்பட்டு வருகிறது.

அதாவது ஆன்மா என்பது பரப்பிரும்ம ஸ்வரூபம். பரம்பொருள். அது இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிரினங்களுக்கு உள்ளேயும் பரவலாக வியாபித்துள்ளது.

நம்முள் உள்ள ஆத்மாவும், மற்ற அனைத்து உயிரினங்களிலும் உள்ள ஆத்மாவும் ஒன்றேதான் என்பதை உணர்ந்து, அனைத்து உயிர்களையும் நம்முயிர் போலவே பாவிக்கும் மனப்பான்மை
நமக்கு முதலில் வரவேண்டுமாம்.

அதுவே ஆத்ம சாக்ஷாத்காரம் என்பதை அடையும் உன்னதமாகதொரு நிலையாகும் என்றும் சொல்லப்படுகிறது.

பசியோ, தாகமோ, அரிப்போ, வேட்கையோ, காயமோ, உடல் உபாதைகளோ, வியாதிகளோ, மரணமோ நம் உடம்பைத்தான் பாதிக்குமே தவிர நம் ஆன்மாவை ஒருபோதும் பாதிக்காது என்று சொல்லப்படுகிறது.

இந்தத் தாங்கள் சொல்லும் ’சமநிலை’ என்பதும் கிட்டத்தட்ட அதுவேதான் என எனக்குத் தோன்றுகிறது.

இருப்பினும் இதுபோன்றதொரு மனப்பக்குவம் நம்மில் யாருக்கும் லேஸில் ஏற்பட முடியாது என்பதே உலக யதார்த்தமாகவும் உள்ளது.

மொத்தத்தில் மிகவும் சாமான்யனான என்னால் இதெல்லாம் ஒரு புரியாத / புரிந்துகொள்ளவும் முடியாத சப்ஜெக்ட்களாக உள்ளன.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

யாவரும் புரியும் படி மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சமநிலைப் பராமரிப்பு என்பது சற்று சிரமமே. முயற்சிப்போம்.

Thulasidharan V Thillaiakathu said...

சமநிலை!! உலகமே தடுமாறுவது இந்தக் சம நிலையை இழப்பதால்தானே.....இல்லையோ??!! சம நிலை எனவது தவ நிலை....தவம் செய்த யோகிகள் என்று சொல்லப்படுபவர்களே...தடுமாறியவர்கள்....சாதாரண மனிதர்கள் நமக்குக் கொஞ்சம் கடினம் தானோ....

துளசி, கீதா

கரந்தை ஜெயக்குமார் said...

சம நிலை தவறச் செய்பவைகளை
நம் கையெட்டும் தூரத்திலிருந்துத்
தள்ளியே வைக்கப் பழகுவோம்

அருமை ஐயா

இராய செல்லப்பா said...

நான் சமநிலையில்தான் இருந்தேன் தங்கள் கவிதையைப் படிக்கும் வரை! - இராய செல்லப்பா (இனிமேல்) சென்னை

இராய செல்லப்பா said...

நான் சமநிலையில்தான் இருந்தேன் தங்கள் கவிதையைப் படிக்கும் வரை! - இராய செல்லப்பா (இனிமேல்) சென்னை

G.M Balasubramaniam said...

ஸ்திதப் பிரக்ஞன் என்று சம்ஸ்கிருதத்தில் இதைத்தான் சொல்கிறார்களோ

Thenammai Lakshmanan said...

sariya sonneengka Ramani sir . Bala sir sonnatha valimozhigiren.

Post a Comment