Friday, November 20, 2015

இருளும் மௌனமும் ...



அடர் இருளுக்கும்
உன் தொடர் மௌனத்திற்கும்தான்
எத்தனைப் பொருத்தம் ?

இருளைக் குறைந்த ஒளி என்பான்
பாவேந்தன் பாரதி

அவன்வழியில் யோசிக்கையில்
உன் மௌனம் கூட எனக்கு
குறைந்த மொழியெனத்தான் படுகிறது

விழிகளை அகலத் திறந்திருந்தபோதும்
அடர்ந்த இருளில்
பொருட்கள் புலப்படாதது மட்டுமின்றி

அர்த்தமற்ற அச்ச உணர்வையும்
அதீத தொடர் கற்பனைகளையும்
வளர்த்துப் போவதைப்போல்

உன் காரணம் புரியாதொடர் மௌனம் என்னுள்
எதிர்மறை எண்ணப்புயலையும
தேவையற்ற அச்ச அலைகளையும்
வளர்த்துவிட்டுத்தான் போகிறது

அடர்வனத்தில் திசைகள் அறியாது
குழம்பித் திரிகிறேன் நான்

நீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்
ஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது
உதிர்த்துவிட்டுப் போ

அது போதும் எனக்கு

கதிரவன் எழுமுன் தோன்றும்
அந்தப் பாலொளிப் பரவலில்
அர்த்தமற்றுப் பூரித்துத் திரியும்
அறிவற்றப் புள்ளினங்கள் போல்
மகிழ்ச்சிக் கடலில்
சிறிது நேரமாவது நானும்
திளைத்துத் தொலைக்கிறேன்

11 comments:

ஸ்ரீராம். said...

யாசித்தல்!

தம +1

Kousalya Raj said...

அருமை !!

மீரா செல்வக்குமார் said...

பாவேந்தன் பாரதி????
தவிர...என்ன தவமாய் ஒரு கவிதை..உங்களைப்பார்க்கும் பொழுது இப்படிக்கவிதைகள் எழுதுவீர்கள் எனத்தெரியாது....ஆனால் உங்களுடன் பேசும் வாய்ப்பை இழந்திருக்கிறேன்....மீண்டும் ஒரு நாள் சந்திப்போம்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்
ஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது
உதிர்த்துவிட்டுப் போ .... அது போதும் எனக்கு//

’இதுபோதும் எனக்கு’த் தங்களின் இந்த ஆக்கத்தினைப் பாராட்ட ...... :)

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். said...
யாசித்தல்!//

நேசித்தல் எனவும் கொள்ளலாமே

”தளிர் சுரேஷ்” said...

அருமை! வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

அற்புதமான கருத்தை சொல்லியுள்ளீர்கள். அருமை... த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீமலையப்பன் said...

அருமை

வெங்கட் நாகராஜ் said...

போகிற போக்கில் ஒரு புன்னகையாவது.....

அது மட்டுமாவது கிடைத்து விட்டால் ஆனந்தம் தான்!

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா! அருமை அருமை! ரசித்தோம் ரசித்தோம்...

Post a Comment