Thursday, April 16, 2026

உப்பில்லா பண்டம் தொப்பையிலே..

 *‘உலகம் முழுவதும் மாரடைப்பால் நிகழும் மரண எண்ணிக்கைக்கும், சிறுநீரகப்பழுது, ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான நோய்கள் அதிகரித்து😂 வருவதற்கும் முக்கியக் காரணம், உப்புத்தான்’ என்று மருத்துவர்கள் அடித்துச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். உங்களுக்காக உங்கள் கணேசன்உஷா*


‘‘இந்தியர்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவேயில்லை’’ என்று வருத்தத்தோடு கூறும் பிரபல நெப்ரோலஜிஸ்ட் மருத்துவர் பி.ரவிச்சந்திரன், உப்பு பற்றிய விழிப்புணர்வு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். அவரைச் சந்தித்தோம். ‘மனித ஆரோக்கியத்திற்கு எதிராக உப்பு எவ்வாறு செயல்படுகிறது’ என்பதை விரிவாகவே விளக்கினார்.


‘‘ஆதிகால மனிதர்கள் கடல் உப்பைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள். ஏன், இன்னமும் விலங்குகளுக்குத் தெரியாதது, இந்த உப்பு. உலகத்திலேயே முதன் முதலில் எகிப்தியர்கள்தான் கடல் நீரிலிருந்து சோடியம் உப்பைப் பிரித்தெடுத்தார்கள். அவர்கள் மொழியில் (Natron) நேட்ரான் என்று பெயர் வைத்தார்கள். இறந்த உடல்களை பதப்படுத்துவதற்கு, அதாவது ‘மம்மி’க்களைப் பாடம் செய்ய உப்பைப் பயன்படுத்தினார்கள். ஆதிகாலத்தில் வேட்டையாடுதல், போர்செய்தல் என்று வாழ்ந்த மனிதர்களுக்கு சோடியம் உப்பின் அறிமுகம், ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. அப்புறம், அது தேவையாகவும் மாறிவிட்டது.


உடல் உழைப்பைப் பிரதானமாகக் கொண்ட அன்றைய வாழ்க்கை முறையால், உடலிலிருந்து நிறைய வியர்வை வெளியேறியது. இதனால் ரத்தத்தில் இருந்த சோடியம் உப்பின் சமநிலை அடிக்கடிக் குறைந்தது. போர்க்களத்தில் உடல் சோர்ந்து விழுவார்கள், வீரர்கள். அந்தச் சமயங்களில் அவர்கள் கையில் உப்புக்கட்டிகள்தான் கொடுக்கப்பட்டன. உப்பை நாக்கில் வைத்த உடனேயே, அவர்கள் பழையபடி உற்சாகம் பெற்று எழுவார்கள். இதனால் அந்தக் காலங்களில் உப்பு, தங்கத்தைவிட உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்படி, பழங்காலத்தில் பிரமாண்டமான வரவேற்போடு மனித வாழ்க்கையில் நுழைந்த சோடியம் உப்புதான், இப்போது அதே மனித இனத்திற்கு விஷமாகவும் மாறியிருக்கிறது!’’ என்று நிறுத்தியவர், ‘எப்படி ஏற்பட்டது இந்த மாற்றம்? என்பதை சற்று விரிவாகவே கூற ஆரம்பித்தார்...


‘‘மனித உடலுக்கு மிக அடிப்படையாக, நான்கு வித உப்புகள் தேவை. அவை பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், சோடியம் ஆகும். இதில் பொட்டாசியத்தையோ, மெக்னீசியத்தையோ, கால்சியத்தையோ உப்பு வடிவில் பிரித்தெடுத்து உணவில் சேர்த்துக்கொள்ளாத நாம், சோடியம் உப்பை மட்டும் கடல் நீரிலிருந்து பிரித்துப் பயன்படுத்துகிறோம். சுவைக்காகவும், உணவுப் பொருள்களைப் பதப்படுத்தப் படுவதற்காகவும் அன்றாடச் சாப்பாட்டில் அதிகமாக சேர்க்கப் பழகினோம்.


விஞ்ஞான வளர்ச்சியால் நாளுக்குநாள் மனித வாழ்க்கையில் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. எப்போதும் உட்கார்ந்த நிலையிலும், ஏ.சி. அறையிலும் வேலை என்பது ஒரு பிரிவினரின் வாழ்க்கையாக மாறியுள்ளது. ஒரு மனிதனின் ரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பு இருக்க வேண்டும். அதற்குமேல் ரத்தத்தில் சேரும் உப்பு... வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதின் மூலம் உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது சிறுநீரகம்.


உதாரணமாக, பத்து கிராம் உப்பை வெளியேற்ற ஐந்து லிட்டர் சிறுநீர் கழிக்க வேண்டும். (இது தான் ‘உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிப்பான்’ என்ற பழமொழியின் அர்த்தம்) உடலில் குறைபாடு இருக்கும் பட்சத்தில் சிறுநீரகம், சோடியம் உப்பை வெளியேற்றுவதற்குப் பதிலாக, உடல் பலத்தைத் தரும் மெக்னீசியத்தையும், எலும்பு உறுதியைத்தரும் கால்சியத்தையும் வெளியேற்றப் பழகிவிடும். உடலில் தேவைக்கு அதிகமாக சோடியம் உப்பு தங்க ஆரம்பித்தால்... உடல் பருமனாகும். கால்சியம் வெளியேறுவதால் மூட்டுவலி, முதுகுவலி வரும். மெக்னீசியம் வெளியேறுவதால் அசதி வரும். முக்கியமாக, சிற்றின்ப உறவு தோல்வியடையும். சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனால் முக்கிய நரம்புகளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவும் உருவாகலாம். மாரடைப்பு, சிறுநீரகப் பழுது போன்ற உயிர் ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும். அதேபோல், சர்க்கரை வியாதிக்கும் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகளுக்கும் அதிக உப்புதான் காரணமாக இருக்கிறது!’’ என்கிறார், அவர்.


கடல் உப்புக்கு மாற்றாக இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் மலை உப்பைப் பயன்படுத்துகிறார்கள். இது மலைப்பிரதேசங்களில் பாறைவடிவில் கிடைக்கக் கூடியது. இதில் சோடியம் மிக மிகக் குறைவாகவும், சல்ஃபர், மெக்னீசியம், கால்சியம் தாதுக்கள் அதிகமாகவும் இருக்கும். இந்த உப்பை வட இந்தியாவில் பணக்காரர்கள்தான் பயன்படுத்துகிறார்கள். காரணம், அத்தனை விலை.


அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அனைத்து உணவுப் பொருள்கள் மற்றும் பால் இவற்றில் சேர்க்கப்படும் சோடியத்தின் அளவை, அதன் அட்டையில் அச்சிட வேண்டும் என்கிற சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. சோடியம் இல்லாத பொட்டாசியம் உப்புத்தூவிய உருளைக்கிழங்கு Chipsம், அங்கே விற்பனையில் இருக்கிறது. அதேபோல் கடலுக்குள் இருக்கும் பவளப்பாறைகளில் இருந்து கிடைக்கும் மெக்னீசியம், புரோட்டீன்ஸ் அடங்கிய கோரல் உப்பு (coralsalt) ஜப்பான், அமெரிக்காவில் பிரபலம்.


ஆனால், நம் நாட்டிலோ சில பாக்கெட் பால்களில் கூட 0.3 கிராம் வரை சோடியம் உப்பு சேர்க்கப்படுகிறது. பல வீடுகளில் பாக்கெட் பாலில் போடப்படும் டீ, காபி கூட மெல்லிய கரிப்புச்சுவையோடு இருப்பதற்கு இதுதான் காரணம். கடைகளில் விற்பனை செய்யப்படும் ஸ்வீட்ஸ், மற்றும் சாக்லேட்டுகளிலும் சோடியம் சேர்க்கப்படுகிறது. ஆனால், அதன் அளவை வெளிநாடுகளில் உள்ளதுபோல இங்கே நுகர்வோருக்குத் தெரிவிப்பதில்லை.


பிரபலமான குளிர்பானங்கள் அனைத்திலும் சோடியம் சல்பேட் சேருகிறது. கருவாடு, ஊறுகாய், அப்பளம் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் வகைகளில் கொஞ்சம் அதிகமாக சோடியம் இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தும் மனிதனின் உடலுக்குள் ஒவ்வொரு நாளும் பத்திலிருந்து முப்பது கிராம் வரை சோடியம் உப்பு தானாகவே நுழைந்து விடுகிறது, என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம்.


ஆனால், ‘பெரும் உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதனுக்கு அன்றாடத் தேவைக்காக வெறும் இரண்டு கிராம் உப்பே போதும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், அவன் சுவையாகச் சாப்பிடும் பொருள்களின் மூலம் இரண்டு கிராமைவிட அதிகமாகச் சேருகிறது. இப்படி உப்பின் அளவு கூடுவதினால், ஆண்மை பலம் மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்புகள்கூட குறைந்துவிடுகின்றனவாம்.


இதுதொடர்பாக, பதிலளிக்கும் டாக்டர் ரவிச்சந்திரன் ‘‘சோடியம் உயிர்த்தன்மையை அழிக்கக் கூடியது, மனித விந்தில் மெக்னீசியம், கால்சியம்தான் மிகுதியாக இருக்கிறது. உடலில் சோடியம் கூடும்போது... உயிர் அணுக்களை அது பாதிக்கும் என்பது உண்மையே. அனைத்துத் தாவர விதைகளிலும் மெக்னீசியம் அதிகமாக இருக்கிறது. முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற தாவர விதைகளை அரைத்துத்தான் ஆண்மை லேகியம் செய்து விற்கிறார்கள். அதன் ரகசியம் மெக்னீசியம்தான். விதைகளில் அதிக சக்தி கொண்டது முருங்கையும், பூசணியும்! வெற்றிலை என்பது மெக்னீசியம். அதில் தடவப்படும் சுண்ணாம்பில் கால்சியம். அதனால்தான் தாம்பூலம் என்பது இல்லற வாழ்க்கையோடு தொடர்புபடுத்தப்பட்டது!’’ என்றார்.


அயோடின் கலந்த உப்பு பற்றிக் கருத்து தெரிவிக்கும் அவர், ‘‘அதிக உப்பு சேர்த்துக்கொண்டால், அதிக அயோடின் சத்துக் கிடைக்கும் என சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அயோடின் என்பது இரண்டு பக்கக் கத்தி போன்றது. அது குறைந்தாலும் பிரச்னை, கூடினாலும் பிரச்னை. சில விதமான கேன்சர், தைராய்டு பிரச்னைகளுக்குக் கூடுதல் அயோடினே காரணமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.


அத்துடன், நமது உடலுக்குள் நுழையும் சோடியத்தின் அளவைக் கண்காணிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு நாக்கில் சுவை மொட்டுக்கள் நன்கு செயல்படும் என்பதால்.... சிறுவயது முதலேயே குறைந்த உப்புச் சுவையே அவர்களுக்குப் பழக்க வேண்டும். கூடியவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் சோடியத்தின் அளவைக் கவனித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். கசப்புச் சுவை உள்ள காய்கறிகளான பாகற்காய், கோவைக்காய், வாழைத்தண்டு, பச்சை நிறக் கீரைகள், மற்றும் மோர், இளநீர் போன்றவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மெக்னீசியம், பொட்டாசியம் கால்சியம் போன்ற உப்புக்கள் நம் உடலில் இயற்கையாகவே சேர்ந்து விடும்.


அதோடு, அன்றாடம் சில உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நமது வியர்வைச் சுரப்பிகளுக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கவும் வேண்டும்!’’ என்கிறார்.


இது மட்டுமல்ல, பெரிய பெரிய கம்பெனிகளின் விளம்பரங்களைப் பார்த்து, அந்த உப்புகளை வாங்கிப் பயன்படுத்துவதைவிட, கடைகளில் கிடைக்கும் சாதாரண கல் உப்பை வாங்கிப் பயன்படுத்துவதும் நல்லது. காரணம், பாக்கெட் உப்புகளில் 99 சதவிகிதம் வரை சோடியம் இருக்கிறது. கல் உப்பில் 40 சதவிகிதம் வரைதான் சோடியம் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.


ஆகமொத்தத்தில் ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி. ‘உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்’ என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது.


*இனிய காலை வணக்கம். Byஅன்புடன் கணேசன் உஷா*

Friday, April 10, 2026

பாவப்பட்ட ஆண்டிகள்..

 தன்னையொத்தவர்கள்

தன்னருகில் இருக்கக் கூட
அதிர்ஷ்டம் வேணுமோ ?

சிறுவயதில் கிராமத்தில்
தன் வீட்டுக்கு எதிரே
பண்ணையார் வீடிருக்க
தன் வீடு குடிசை போல் தெரிய
நொந்துதான் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த ஓட்டுவீடு
கண்ணில் படவே இல்லை

படித்து முடித்து
அரசு வேலைக்குப் போய்
குடியிருப்பில் குடியேற
அடுத்த வீடாய்
அதிகாரியின் வீடாய் அமைய
வெறுத்துப் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவன் வீட்டுக்கு எதிரிலிருந்த
தன்னொத்த வீடு
சரியாகத் தெரியவில்லை

முப்பது ஆண்டு கால சேமிப்பில்
சொந்தமாய் ஒரு வீடு கட்டி முடிக்க
நேர் எதிரே ஒரு அரசியல்வாதி
வீடுகட்டித் தொலைய
மனமொடிந்து போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த
அறு நூறு சதுர அடி வீடு
வீடாகவே தெரியவில்லை

எல்லாம் முடிந்து
சுடுகாட்டில் புதைத்துத் தொலைக்கையில்
ஒரு புறம
ஒரு ஐ.பி. ஸ் அதிகாரியின் சமாதியும்
மறுபுறம்
உள்ளூர் சேர்மன சமாதியும்
கம்பீரமாய் எழுந்து நிற்க
இரண்டாம் முறை
செத்தே போனான ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு எதிர் இருந்த
சமாதி மண்மேடு
சமாதியாகவேப் படவில்லை

முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும் எனும்
 ஒருசிறு படிப்பினையை அறியாததால்
ஆண்டி பாவம்
வாழும் போதும்
மகிழ்ச்சியாய் இல்லை
பாவம் ஆண்டி
இப்போது செத்துப் புதைத்தும்
நிம்மதியாய் இல்லை

பாவம் பாவப்பட்ட ஆண்டிகள்

Saturday, April 4, 2026

சவ (வச )மாகும் ஜனநாயகம்

 வெளியில் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்புகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து என் தெரு முழுக்கவும் ரோஜா சாமந்தி பூக்களின் இதழ்கள் சிதறிக்கிடந்தன.  தூரத்தில் எங்கோ பறையொலி, கேட்டது.


யாராயிருக்கும்? என்று யோசித்துக் கொண்ட தெருவில் மெல்ல நுழைந்தேன்.


பக்கத்து வீட்டு வாசலில் நிறைய மலர்களின் இதழ்கள்... ஒரு வேளை அந்த வீட்டின்  பெரியவர்..?   ச்சே இருக்காது.  அப்படி இருந்திருந்தால் எனக்கு தகவல் வந்திருக்குமே.  அப்போ அவர் வீட்டில் குடியிருக்கும் யாராவது...!


வாசலில் வண்டி நிறுத்தும் போதுதான் கவனித்தேன் தெருவின் எல்லா பகுதியிலுமே பூவிதழ்கள்.


புரியாமல் வீட்டிற்குள் நுழைந்தேன்.  சோபாவில் சப்பணமிட்டு அமர்ந்திருந்த மகள் , "ஹாய்..! அப்பா" என்று சொல்லிவிட்டு மடியிலிருந்த புத்தகத்தில் மீண்டும் கண் செலுத்தினாள்.  


 மனைவியிடம் கேட்டேன்.


"யாரு"?


"யாருன்னா"?


"தெருவெல்லாம் பூவா இருக்கே, அதான் யாருன்னு கேட்டேன்".


மனைவி சிரிக்க....

 மகள் சொன்னாள் "அப்பா ...கட்சி வேட்பாளரு ஓட்டுக் கேட்க வந்தாரு. நம்ம தெருவுல உள்ள அந்த கட்சிக்காரர்கள் எல்லாம் மலர் தூவி பண்ணின ஆர்ப்பாட்டம் தான் அது... அப்புறம் அவர்  நம்ம வீட்டுக்கு வந்து ஓட்டு கேட்டாருப்பா" என்று அதை ஒரு நம்ப முடியாத அதிசயமாக சொன்னாள்.


சமையலறை உள்ளே போய் வந்த மனைவி ஒரு கவரை என்னிடம் நீட்டினாள்.


"என்னது"?


"பிரிச்சிப் பாருங்க".


உள்ளே புத்தம் புதிய ஐநூறு ரூபாய் தாள் இரண்டு இருந்தது.


"ஏது"...?


"அந்தக் கட்சிகாரங்கதான் கொடுத்தாங்க".


"ஏன் வாங்கின".


"ம்ம்ம்...எல்லாரும் வாங்கும் போது நாம மட்டும் வாங்காம இருக்க முடியுமா".


"எல்லாரும்"...என்று மனதில் நினைத்ததை கேட்காமல் வாயடைத்தேன்.


காந்தி ஐநூறில் சிரித்துக் கொண்டிருந்தார்.


தெருவைப் பார்த்தேன்.  ரோஜா பூவிதழ்கள் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தன.


பறையொலியையும் பூச்சிதறல்களையும் கண்டு யாரோ இறந்துவிட்டார்கள் என்று முதலில் நான் எண்ணியது உண்மை என்றே இப்போது தோன்றுகிறது.


ஆம் பணம் படைத்தவனுக்கு வசமாகும் ஜனநாயகம்...............

.பொது ஜனங்களுக்கு சவமாகும் ஜனநாயகம்..


Tuesday, March 31, 2026

இது எப்படி இருக்கு...

 நம்மளோட வீட்டில் “அரேஞ்ச்ட் மேரேஜ்”ன்னா முதல்ல கேட்கப்படும் கேள்வி: “மாப்பிள்ளை என்ன பண்ணுறார்?”

அப்பாராவ் குடும்பமும் மாப்பிள்ளைக்கு பெண் பார்க்க ஒரு வீட்டுக்கு போனார்கள்.

டி, பிஸ்கட், வழக்கமான பேசல்கள் எல்லாம் முடிந்ததும், பெண்ணின் அப்பா மெதுவாக முக்கிய விஷயத்துக்கு வந்தார்:

“சரி, உங்கள் மகன் இப்போ என்ன வேலை பண்ணிக்கிட்டிருக்கான்?”

அப்பாராவ் கண்ணாடியை சரிசெய்து, தொண்டையை சுத்தம் செய்து இப்படிச் சொல்ல ஆரம்பித்தார்:

“எங்கள் பையன் தற்போது ஒரு Agro-based Direct-to-Consumer (D2C) ஸ்டார்ட்அப்பின் Founder மற்றும் Managing Director.”

“நாங்கள் முக்கியமாக Organic Health and Wellness துறையில் வேலை செய்கிறோம்.”

இதை கேட்டவுடன் பெண்ணின் அப்பா பாதி கவரப்பட்டார்.

"வாவ்! அப்படின்னா உங்கள் product என்ன?" என்று கேட்டார்.

அப்பாராவ் பதிலளித்தார்:

“எங்கள் portfolio-வில் முக்கியமாக High-protein roasted legumes மற்றும் பாரம்பரிய caramelized sweets உள்ளன.”

“நாங்கள் raw materials-ஐ direct wholesale supply chain-லிருந்து எடுத்து, எங்கள் சொந்த thermal processing unit-ல் dry roast செய்கிறோம்.”

“அதிலேயே biggest highlight என்னனா… எங்கள் packaging 100% eco-friendly மற்றும் biodegradable!”

இதை கேட்ட பெண்ணின் குடும்பத்தினர் எல்லாம் ஆச்சரியப்பட்டார்கள்.

இது ஏதோ பெரிய multinational company மாதிரி தோன்றியது அவர்களுக்கு!

பெண்ணின் மாமா அடக்க முடியாமல் கேட்டார்:

“உங்க company main office எங்க இருக்கிறது? எத்தனை employees?”

அப்பாராவ் தயக்கமே இல்லாமல்:

“இப்போ modern lean startup காலம்.”

“அதனால் shop rent, current bill மாதிரி unnecessary expenses எதுவும் எங்களுக்கு இல்லை.”

“எங்களுக்கு ஒரு mobile retail outlet இருக்கு. traffic மற்றும் crowd-ஐப் பொறுத்து அது தினமும் இடம் மாறும்.”

“Operations எல்லாம் எங்கள் பையன் ஒருத்தனே பார்க்கிறான் — he is a solopreneur!”

பெண்ணின் அப்பாவுக்கு முழுக்க குழப்பம்.

இந்த English அவருக்கு புரியவே இல்லை.

“அய்யா, இந்த marketing language எனக்கு புரியலை. சாதாரணமா உங்கள் பையன் என்ன பண்ணுறான் சொல்லுங்க?”

அப்போ பையனின் நெருங்கிய நண்பன் மெதுவாக சொன்னான்:

“அங்கிள்… அவர் சொல்வது என்னனா…”

“எங்கள் பையன் ஹைவே பக்கத்தில் ஒரு வண்டியில்…”

“வறுத்த வேர்கடலை விற்கிறான்.”

“மணலில் வேர்கடலை வறுப்பான் (thermal processing)… அதை பழைய newspaper-ல சுற்றி கொடுப்பான் (biodegradable packaging).”

பெண்ணின் அப்பாவின் கையில் இருந்த டீ கப் கீழே விழுந்து சிதறியது.

பின்னாடி என்ன நடந்திருக்கும்னு நீங்களே நினைச்சுக்கலாம்…

_நீதி: Marketing வார்த்தைகளின் மாயாஜாலம் ரொம்ப powerful. Presentation strong-ஆ இருந்தா, ஒரு சாதாரண வேர்கடலை வியாபாரமும் corporate startup மாதிரி காட்டலாம்!_( படித்ததும் இரசித்தேன் சிரித்தது)

Monday, March 30, 2026

அவ்வப்போது அவரவர் நினைவில் கொள்ள..

 நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்


என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்.                             (இங்கு நான் என்பவர் இதைப் படிக்கும் நீங்களும் தான்.)

Sunday, March 29, 2026

இட்லி மகாத்மியம்

 


அடிபட மிதிபட அதிகப்பட்ச அவதிப்பட வருகிற பக்குவம் போல              நிச்சயமாக நீதிநூல்களோ போதனைகளோ அல்லது அதிக வயதோ கூட தருவதில்லை.                           அதுபோல அரைத்தோம்          வேகவைத்தோம்  அல்லது நன்றாக எண்ணையில் பொரித்தோம் என்றாலும் கூட.  நெல்லாய்அவித்து அரிசியாகஅரைத்து  மீண்டும் ஊறவைத்து புளிக்க விட்டு                      மீண்டும் ஆவியில் வேகவைத்துத் தயாரித்த வெண்மையான மென்மையான சுவைக்க பதமான   குடலுக்கு இதமான உணவு.   உலகில் இட்லி போல வேறு இருக்க நிச்சயம் சாத்தியமில்லை...                     அறிவுலகுக்கு வள்ளுவத்தைத் தந்தது போல் உணவு உலகுக்கு இட்லி தந்த நம் முன்னோருக்கு இந்த இட்லி தினத்தில் மனமார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்குவோம்..

Thursday, March 26, 2026

இராம நவமி நல்வாழ்த்துகள்

 


'ஒரு'  (ஏக )பத்தினி விரதனாகி

'இரண்டு' புதல்வர்களுக்குத்

தந்தையாகி

'மூன்று' 

அன்னையர்களின்

மடியில் தவழ்ந்து 

'நான்கு'

சகோதரர்களில் 

ஒருவராகி

'ஐந்து' என

உடன்பிறப்பாகக்

குகனை ஏற்று

'ஆறு' எழுத்தாம்

இராமாயணம் 

எனும் காவியத்தை 

'ஏழு' காண்டங்களாக

இயற்றவைத்து 

'எட்டு' எழுத்தாம்

சுந்தரகாண்டம் 

நாயகனைத் 

தன் பக்தனாக்கி

'ஒன்பது' எனும் 

திதியாம்

நவமியில் அவதரித்து 

'பத்து' தலை

இராவணணை

வதம் செய்த 

இராமபிரானை

ராமநவமி தினமான 

இன்று 

பக்தியுடன் 

போற்றி வணங்கிடுவோம்!

அனைவருக்கும் இனிய ராமநவமி 

நல்வாழ்த்துக்கள்!