Thursday, December 27, 2018

கண்காணும் தெய்வங்கள்

கையில் சூலம் கொண்டோ
தோளில் சிலுவை சுமந்தோ

ஒளியாய் திருவாய் மலர்ந்தோ
கடவுள் நம்மிடம் வருவதில்லை.

விழும் போது தூக்கி விடுவோரும்
தாழ்ந்த போது தோள் கொடுப்பவரும்

புன்னகையை பரிசாக கொடுப்பவரும்
பசியறிந்து உணவிடுவோரும்

பிற உயிரை தன்னுயிராய் நேசிப்போரும்
மழலையின் மொழியில் மயங்குவோரும்

புண்ணியம் செய்து வாழ்பவர்களும்
எல்லோரும் கடவுளின் வடிவங்களே

புரிந்தவன் கடவுளை காண்கிறான்
புரியாதவன் கடவுளை தேடுகிறான்.           இது புரியாது                                     
கடவுளை ஏசுபவன் மட்டுமல்ல.         பூஜை செய்வோனும் அடிமுட்டாளே           (படித்தது பகிரப் பிடித்தது )

Tuesday, December 25, 2018

கடலை ஒரு துளியில்.

நண்பனிடம், நான்: “ஸீஸன் ஆரம்பிச்சாச்சு.. வாடா சபாக்கு கச்சேரி போலாம்...!”

நண்பன்: “எனக்கு கர்னாடிக் மியுசிக் இலக்கணமே தெரியாதேடா...   subtitle இல்லாம இங்கிலீஷ் படம் பாக்றா மாதிரி ஒண்ணும் புரியாது எனக்கு..!”

“பெரிய விஷயம் இல்லடா.. மியுசிக்னாலே ஏழு ஸ்வரம்தானே..?”

“முதல்ல ‘ஸ்வரம்’னா என்னன்னு சொல்டா..!”

“Sound production ஏழு நிலைகள்ள பண்லாம்...!  கீழ base - ‘ச’, ஷட்ஜமம்.  மேல high -  ‘நி’, நிஷாதம்.. கீழேயிருந்து மேலே போற progression - ச.ரி.க.ம.ப.த.நி – ஆரோகணம்.  மேலேயிருந்து கீழே progression - நி.த.ப.ம.க.ரி.ச - அவரோகணம்.  அந்த 7 நிலைகளுக்கும் கொடுத்திருக்கிற ‘ச ரி க ம ப த நி'ங்கிற label தான் ‘ஸ்வரம்...!"

“ஸ்ருதி’ன்னா என்னா..?"

“சவுண்டுங்கிறது ஒரு ரேடியோ மாதிரின்னா, அதுல பல frequencies தான் ‘ஸ்ருதி’..! அதையும் broadடா 7 நிலைகளா சொல்றாங்க.. நாம 1,2,3..7 கட்டைகள்னு சொல்றோம்... westernல அதையே Scaleனு சொல்றாங்க . இப்படி ‘ஸ்ருதி’க்கு fixed definition இருக்றதால, பாடறவங்க, accompaniments எல்லாமும் குறிப்பிட்ட ஸ்ருதி ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டு பாட / வாசிக்கும் போது கேட்க நல்லா இருக்கும்..!"

“ராகம்னா என்ன...?”

“ஸ்வரங்கள் சொன்னேன்ல..? அந்த 7 ஸ்வரங்களோட வேற வேற combinations தான் ராகங்கள்..! அதாவது ஆரோகணம், அவரோகணம் progression,  7 ஸ்வரங்களும் இருந்தோ, இல்ல,  சில சில ஸ்வரங்கள் இல்லாமலோ கோர்க்கும் போது, மாறுபட்ட tunes வரும்.. அதுதான் ராகம்..! ஒரு ராகத்துக்கான defined ஸ்வரங்கள பாடும்போது என்ன basic டியுன் வருதோ, அதே tuneல பாட்டோட வரிகளைப் பொருத்திப் பாடணும்..!"

“எல்லா ஸ்வரமும் இருக்கறது என்ன ராகம்..?”

“எல்லா ஸ்வரமும் இருக்கறது 72 ராகம் இருக்கு, அத மேளகர்த்தா ராகங்கள்னு சொல்றங்க..”

“அதெப்டி..? நீ சொல்றபடி பாத்தா அது ஒரு unique combination தானே..?”

“சிலது தவிர,  ஒவ்வொரு ஸ்வரத்திலேயும் 3 variations இருக்கு.. உதா: ‘ரி’ங்கிற ஸ்வரத்துல ‘ரி1’, ‘ ரி2’, ‘ரி3’ ன்னு மூணு இருக்கு.. ஸோ, permutations, combinations..! ராகத்தோட constituents வேற சிலவும் இருக்கு.. எனக்கு ரொம்ப தெரியாது..!”

“சரி… ‘தாளம்’கறது என்ன..? எல்லாரும் மூணு விரல் நீட்றாங்க... அப்புறம் முன்ன பின்ன கையை தட்றாங்க.. என்னது அது..?”

“Beatதான்டா தாளம்..! நம் எல்லோருக்குள்ளேயும் தாளம் defaultட்டா இருக்கு..! கொஞ்சம்  நேரம் கேட்டவுடனே ஒரு பாட்டோட தாளம் புரிஞ்சிடும்..! ‘ஆதி’ தாளம்தான் ரொம்ப பேசிக், நிறைய யூஸ் பண்ற தாளம்.. 1 2 3 4, 1 2 3 4.. அதத்தான், ஒரு தட்டு 3 விரல் (4), அப்றம் முன்ன பின்ன ரெண்டு தடவை தட்றது (4) ன்னு செய்றாங்க.. நிறையா தாளங்கள் இருக்கு..! எனக்கு எல்லாம் தெரியாது.. "

“டேய்.. உண்மையை சொல்லு... உனக்கு எவ்ளோ கர்னாடிக் மியுசிக் தெரியும்..?”

“5% தான் தெரியும்.. சபா கச்சேரி போறவங்கள்ள 95% பேருக்கு அவளோதான் தெரியும்..! பாட்டு, டான்ஸ், ஓவியம், சிற்பம்னு எல்லா கிளாசிகல் ஆர்ட்ஸுமே நம்ம மூளை, மனசு ரெண்டுத்துக்கும் அப்பீல் ஆகும்..! டெக்னிகல் எதுவும் தெரியாமலே   நாம் மனசால இன்வால்வ் ஆக முடியும்..! சங்கீதம் grows on you..! கர்நாடக சங்கீதம்கறது பெரிய கடல்..! எல்லாம் தெரிஞ்சாத்தான் கச்சேரி போகணும்னா பத்து பேரு கூட தேற மாட்டாங்க..!  போலாம் வா..!” (படித்தது பகிரப் பிடித்தது)

Sunday, December 23, 2018

நம் தமிழகத்தில் தான்..

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.

உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, ‘இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான். ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம். நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக்கொள்கிறேன்’ என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், ‘சிங்கிள் பெட்ரூம்’ வீட்டில் தங்கிக்கொண்டார்.

கக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன்.சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன். இதைக் கேட்டதுமே, ‘அப்படியா’ என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக ‘தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும். ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்’ என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன்.

எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்.
இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்: எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை’
தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன்.

1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப்போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர்.மருத்துவமனைக்கு வந்தார். அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார்.அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு,'அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? ஐயா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: ‘ஐயா! அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா’ யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அந்த வார்டைக் காட்டுங்க’ என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார்.

மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்.
உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்.,
எதிரில் உள்ள நாற்காலி தானும் அமர்ந்தார். ‘தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்’ இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது.
கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும்?
சொல்லுங்க. உடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்’ என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, ‘அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்’ என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, ‘என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்’ என்று வணங்கி விடை பெற்றார்.
கக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது. ‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்’ என உத்தரவிட்டார் முதல்வர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆவன செய்தார்.

அதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-இல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன்.
கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க... ‘குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை!

*டிச 23., கக்கன் அவர்களின் நினைவு நாள்* (படித்ததில் பிடித்தது )

Tuesday, December 11, 2018

அறிவியலின் புலிப்பாய்ச்சல்

அறிவியலின் படு வேகமான வளர்ச்சி. இனி *கைவலிக்க தமிழில் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமில்லை*. தரப்பட்டுள்ள முறையை கையாண்டால் *நாம் பேசுவது அப்படியே தமிழில் தட்டச்சு செய்யப்பட்டு விடும்*.

இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.முயன்று பாருங்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதை உணர்ந்து கொள்ளலாம். *எவ்வளவு பெரிய பதிவாக இருந்தாலும் எளிதாக இரண்டு நொடிகளில்*  தட்டச்சு செய்து விடலாம்.

அந்தச் செயல் முறையை கீழே தந்துள்ளேன். இத்தகைய அருமையான செயலியை உருவாக்கிய பொறியாளர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக்கில் தமிழில் பதிவிட புதிய செயலி ..

வாட்ஸ் ஆப் மற்றும் முகநூலில் அழகிய தமிழ்.....
*கைவலிக்க இனி தமிழில் டைப் செய்ய வேண்டாம்*.

*தமிழ் எழுதத் தெரியவில்லையே என்ற கவலை வேண்டாம்*.

தமிழ் டைப்பிங் கஷ்டம் என்பது இனி இல்லை.

ஆச்சரியம், அருமை.

எழுத்துப்பிழை இல்லாமல் தமிழில் வார்த்தைகள்

நீங்கள் பேசினாலே தமிழில் அதுவாகவே டைப் ஆகிறது

வழி என்ன?

Play Store செல்லவும்.

Gboard app என டைப் செய்து download செய்யவும்..

Input language ல் தமிழ் செலக்ட் செய்ய வேண்டும்.
அதில் gboard ஐ செலக்ட் செய்ய வேண்டும்.

வாட்ஸ் ஆப் போகவும்.

வழக்கம்போல இருக்கும் கீபோர்டு, சற்றே வித்தியாசமாகத் தெரியும்

தமிழ் கீ போர்டை செலக்ட் செய்யவும்.

Keyboard
மேலே வலதுபுறம் பச்சை கலர் மைக் இருக்கும்.... அதில் பேசக்கூடாது....

அந்த பச்சைக் கலர் மைக்குக்கு கீழே,
கருப்புக் கலரில் சின்ன மைக் இருக்கும்.

Just  அதை பிரஸ் செய்துவிட்டு கையை எடுத்துவிடலாம்.

speak now என வரும்

நீங்கள் பேசினால் உடனே தமிழில் டைப் ஆகும்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்......

*தூய தமிழில் பேச வேண்டும்*

செய்தி வாசிப்பாளர்களைப் போல தெளிவாகப் பேசினால், வார்த்தை மாறாமல், பிழை இல்லாமல் அச்சு அசலாக நீங்கள் டைப் செய்தது போலவே வரும்

முயற்சி செய்து பாருங்கள்

எழுத்துப்பிழை இல்லாமல்,  மிக அழகாக *ஒலி எழுத்து வடிவம் பெறும் அறிவியலின் அற்புதம்*... பயன் படுத்துங்கள்… பயன்  பெறுங்கள்.

இது பதிவிடும் அனைவருக்கும் பயன்படும் செயலி என்பதால் இதில் பதிவு செய்துள்ளேன்.

Thursday, December 6, 2018

நம்மவரின் நூல் வெளியீட்டு விழா


நேரடிப் பரிட்சியமின்றி பண்புநலனையும்  புகழையும் கேள்விப்பட்டு நட்பு கொண்ட கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் போல தாய்மையின் கனிவுடன் இன்றைய இளைஞர்பால் கொண்ட அதீத அக்கறையுடனும் தொடர்ந்து மிகச் சிறப்பானப் படைப்புகளை வழங்கிவரும் திருமிகு கௌசிசிவபாலன்  அவர்களின் அதி தீவிர இரசிகன் நான்.நல்லவர்கள் வல்லவர்களாகவும் ஆனால் நாடு எத்தனை நலம் பெறுமோ அதனினும் சிறந்ததை பயனுள்ளதை  மட்டுமே எழுதுபவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும் பாண்டித்தியம் மிக்கவர்களாகவும் இருப்பின் இலக்கிய உலகம் இன்னும் பல உன்னத பொக்கிஷங்கள் பெறும் என்பதற்கு எழுத்தில் பன்முகத் திறன் கொண்ட கௌசி சிவபாலன் அவர்களே நல்ல உதாரணம். அவரது மூன்றாவது வெளியீடான
நாளை (8/12/2018)நடைபெற இருக்கும்       "வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் " நூல் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக அமைய தமிழ்ப்பதிவர்கள் சார்பாக என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.