Monday, October 31, 2011

இருப்பதற்கு ஏனில்லை பெயர் ?

" முடிந்ததற்கு இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்து அற
வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள்
இல்லதற்கு இல்லை பெயர் "

"பழமொழி"யின் ஈற்றடி என்னை
மிகவும் கவர்ந்து போனது
இல்லாததற்கு எப்படி பெயர் இருக்க முடியும் ?

எத்தனை அழகான  சிந்தனை
கவிதையின் சிறப்பில் நான் வியந்து கிடக்க
 நண்பன் என்னை  ஏளனமாய்ப் பார்த்தான்

"இல்லாததற்கு பெயரில்லை சரி
இருப்பதற்கு ஏன் பெயரில்லை " என்றான்

எனக்கேதும் விளங்கவில்லை
அவனே தொடர்ந்தான்

"வரனுக்கு தட்சணை உண்டு
அதனால் வரதட்சணை என்கிற வார்த்தை உண்டு
வதூக்களுக்கு தட்சணை இல்லை
அதனால் வதூதட்சணை இல்லை சரி
இருவர் சேர்ந்து செய்யும் அபச்சார ம் விபச்சாரம்
அதில் விபச்சாரி என பெயரிருக்கிறது
விபச்சாரன் ஏன் இல்லை ?
கணவன் இறக்க பெண்ணுக்குப் பெயர் விதவை
மனைவி இறக்க கணவனுக்கு ஏன் பெயரில்லை ? "

அவன் கோபத்தில் அடுக்கிக்கொண்டே போனான்
நான் இந்த இரண்டிலேயே நின்றுவிட்டேன்
இல்லாததற்கு பெயரில்லை சரி
இருப்பதற்கு பெயரில்லை ஏன் ?

Friday, October 28, 2011

கவிதையும் குழம்பும்

கவிதைகள் குறித்து நானும் மனைவியும்
விவாதித்துக் கொண்டிருந்தோம்

"அனுபவங்களை மட்டுமே
மூலதனமாக்கிச் செய்த கவிதைகள்
வெற்றுப் புலம்பலையும்
கருவின் விளக்கத்தையே
இலக்காகக்  கொண்டவை
மழைக்காலத் தவளைகளையும்
வார்த்தை ஜாலங்களை மட்டுமே
நம்பிச் செய்தவைகள்
கழைக் கூத்தாடிகளையுமே நினைவூட்டிப்போகின்றன
மூன்றின் சம அளவுச் சேர்மானமே
நல்ல கவிதைகளாகின்றன  " என்றேன்

"அப்படியானால் கவிதைகள் கூட
குழம்பு போலத்தான் "என்றாள் துணைவி

"குழம்பு எப்படி கவிதையாகும் ? " என்றேன்

அவள் பொறுமையாய் விளக்கினாள்
" புளி உப்பு மிளகாய்
குழம்புக்கு அவசியத் தேவை
அவை இல்லாது ருசியில்லை
ஆயினும் அவைகளின் இருப்பு தெரியாத
மிகச் சரியான சேர்மானமே
ருசியான குழம்பு " என்றாள்

"அப்படியானால் நன்கு  சமைக்கிற
பெண்கள் எல்லோரும் கவிதாயினிகள் தானா ? "என்றேன்

" நிச்சயமாக
நீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு" என்றாள்

Wednesday, October 26, 2011

பயணம்

நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த
புகைவண்டிப் பெட்டிக்குள்
அந்த அழகிய வண்ணத்துப் பூச்சி
எப்படி வந்தது எனத் தெரியவில்லை

தன் வண்ணங்களில்
தானே கௌரவம் கொண்டபடி
தான் பயணிக்கும் திசையையும் வேகத்தையும்
முடிவெடுக்கும் அதிகாரம்
தன்னிடம் இருப்பதான மமதையில்
மிக மிக சந்தோஷமாய்
பெட்டிக்குள் வலைய வந்து கொண்டிருந்தது
அந்த அழகிய வண்ணத்துப் பூச்சி

பெட்டிக்குள் பயணிக்கும் எது குறித்தும்
எவ்வித சிந்தனையுமற்று
வடக்கு திசை நோக்கி
அதி வேகத்தில் பறந்து கொண்டிருந்தது 
அந்த அதிசயப் புகைவண்டி

Sunday, October 23, 2011

உணவு உடை இருப்பிடம் மற்றும் கவிதை

என்ன செய்வது முன்புபோல
நான்கு வகை காய்கறிகளோடும்
ரசம் சாம்பார்  மோர் அப்பளம் என
வகை வகையாக சமைத்துண்ண
வசதி வாய்ப்புகள் பெரும்பாலோருக்கு இல்லை
அப்படி ஒருவேளை சமைத்தாலும்
பொறுமையாக ரசித்து உண்ண நேரமோ
செரிக்கிற உடல் நலமோ இல்லை

என்ன செய்வது முன்புபோல
உயர்கல்வி பயிலுகிற கன்னியராலோ
வேலைக்குச் செல்லும் பெண்களாலோ
தாவணி சேலை கட்டி
இயல்பாக வெளிச்செல்ல முடிவதில்லை
அப்படி ஒருவேளை போக முயன்றாலும்
இயல்பாக இருக்கவோ
சௌகரியமாய் உணரவோ இயலவில்லை

எப்படிச் சொல்வது முன்புபோல
ஆறு ஏழு பத்தி வீடுகளில்
தாய் தந்தை தாத்த பாட்டியென
உற்றார் உறவினரோடு
ஒன்று சேர்ந்து வாழ முடிவதில்லை
அப்படி ஒருவேளை இருக்க ஆசைப்பட்டாலும்
பணிச் சூழலோ வசதி வாய்ப்புகளோ
அப்படி இருக்க அனுமதிப்பதில்லை

எப்படிச் சொல்வது முன்பு போல
எதுகை மோனை அணிகளென
யாப்பிலக்கணத்திற்கு  ஏற்ப
கவிதைகள் இயற்ற இயலுவதில்லை
அப்படி ஒருவேளை முயன்று
கவிதைகள் படைத்துக் கொடுத்தாலும்
படித்து ரசிக்கவோ சிறப்பை உணரவோ
நேரமோ மனமோ இடம் கொடுப்பதில்லை

என்ன செய்வது எப்போதும்
மாறுதல் ஒன்றே மாறாதது என்னும்
விதிமட்டும் மாறாது சிரிக்கிறது
மாற உடன்படுகிற எதையும்
மிக எளிதாய் சிதைத்துப் போகிறது
இல்லையெனில் அன்னம்போல் யாளிபோல்
எத்தனை உயர்வுடையதாயினும்
கற்பனை போலாக்கி கைகொட்டிச் சிரிக்கிறது

Thursday, October 20, 2011

முரண்-

மையிருட்டு மனம் படைத்த அரசியல் வாதிகள்எல்லாம் ஏன்
தூய வெண்மை ஆடைகளையே அதிகம் அணிகிறார்கள் ?
நேர்மைக்கு சமாதிகட்டும் அவர்களேஅது குறித்து ஏன்
அதிகம் அங்கலாய்க்கிறார்கள் ?

வெகு நாட்கள் என்னைக் குடைந்தெடுக்கும் கேள்வி
யார் யாரிடமோ கேட்டும் தெளிவு பிறக்கவில்லை
கேட்டுத்தான் வைப்போமே என என் துணைவியிடம் கேட்டு வைத்தேன்

"விளக்கமாகச் சொன்னால் அலுப்பு தட்டும்.மறந்தும் போகும்
கதையாகச் சொல்லட்டுமா " என்றாள்

"இதற்கும் கதை இருக்காஅப்படியே சொல் அனைவருக்கும் ஆகும் "என்றேன்

அவள் தொடர்ந்தாள்

ஒரு காட்டுக்குள்  நான்கு பேர் போய்க்கொண்டிருந்தார்கள்
ஒருவருக்கு பார்வை கிடையாது
ஒருவருக்கு காது முற்றாகக் கேட்காது
ஒருவருக்கு இரு கால்களும் இல்லை
ஒருவருக்கு இரு கைகளும் இல்லை

காது கேளாதவர் வழி பார்த்துக் கூட்டிச் செல்ல
கண் தெரியாதவ்ர் அவரைப் பற்றித் தொடர
கால்கள் இல்லாதவர் கைகள் இல்லாதவர் மேல் அமர்ந்து கொள்ள....
இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து போய்க் கொண்டிருந்தார்கள்

அப்போது திடுமென்று காது கேளாதவர்
"தூரத்தில் குதிரைகள் வரும் ஒலி கேட்கிறதே "என்றார்

உடனே கண்கள் இரண்டும் தெரியாதவர்
" ஆமாம் ஆமாம் புழுதி பறப்பது கூடத் தெரிகிறதே
குறைந்தபட்சம்   இருபது குதிரைகளாவது இருக்கும் "என்றார்

அப்போது கால்கள் இரண்டும் இல்லாதவர்
"திருடர்களாய் இருக்கக் கூடும் நமக்கேன் வம்பு
வேகமாக ஓடிவிடலாம்" என்றார்

கைகள் இல்லாதவர் அலட்சியமாக
"அதெல்லாம் தேவையில்லை அவர்கள் அருகில்  வரட்டும்
நாமா அவர்களா ஒரு கை பார்த்துவிடுவோம் " என்றார்

நான் ஆர்வ மிகுதியால் "அப்புறம் " என்றேன்

"அப்புறமென்ன அப்புறம் எல்லாம் அவ்வளவுதான் "
எனச் சொல்லி எழுந்து போய்விட்டாள்

வழக்கம் போல  என்னுள் குழப்பமே கூடிக்கொண்டு போனது
கதைக்கு பதில் விளக்கமே கேட்டிருக்கலாமோ ?

 

Monday, October 17, 2011

படித்தவன் எப்போதும் புத்திசாலி

ஊர் இரண்டுபட்டுக்கொண்டிருந்தது

கையில் கிடைத்த
ஆயுதங்களைத் தூக்கியபடி
யார் யாரோ
எதிர் எதிர் திசையில்
வெறியோடு ஓடிக் கொண்டிருந்தார்கள்

தனித்து வந்த ஒருவரை நிறுத்தி
காரணம் கேட்டேன்
"விஷயம் தெரியாதா
நம்ம ஆளை அவங்கஆளு
வெட்டிப்போட்டாங்களாம் " என்றார்

இப்போது நான் என்ன செய்யனும் என
குழம்பிக் கிடைக்கையில்
மாமா ஓடி வந்தார்

"கிளம்பு கிளம்பு
கருப்புவை சின்னான் வெட்டிபுட்டான் " என்றார்

"அவர்களுக்குள்தான்
இடத் தகராறு இருந்ததே
அதனால் அடித்துக் கொண்டிருப்பார்கள் " என்றேன்

"அது எனக்குத் தெரியாதா
நமக்கும் இதே மாதிரி
வயல் பிரச்சனை இருக்கு
நமக்கும் நாலு பேரு வேணும்
நாம வெட்டப் போறோமா ?
வெட்ட வாங்கப் போறோமா ?
எவனோ நாலு முட்டப் பயக வெட்டப் போறான்
நாலு முட்டப்பயக வாங்கப் போறான்
போலீசெல்லாம் வந்தாச்சு
கிளம்பு கிளம்பு
கூட்டத்தோட நின்னுட்டு வருவோம்  " என்றார்

 மாமா அனுபவஸ்தர்
எது சொன்னாலும் அதில்ஆயிரம் காரணமிருக்கும்
நானும்  சட்டையைப் போட்டு கிளம்பினேன்

தூரத்தே  கலவர ஒலி
யுத்த பூமியை நினைவுறுத்தியது
வெட்டுப் பட்டு ரத்தம் கொப்பளிக்க
ஆஸ்பத்திரியை நோக்கி
நாலைந்து பேர் ஓடிக்கொண்டிருந்தார்கள்

வாசல் கதவை மூடுகையில்
பெயருக்கு முன்னும் பின்னும் இருந்த
ஆங்கில எழுத்துக்கள்
ஏனோ ரொம்பச் சிறிதாகத் தெரிந்தன
சரி செய்யனும்

Saturday, October 15, 2011

தேர்தல்

எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்
கொடிகளின் சலசலப்பில்
எட்டாகச் சுருங்கும்
தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும் மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'
 
(அடுத்த தேர்தல்  வந்துவிட்டது  ஆயினும்
நிலைமைகள் எப்போதும்போல்தான்  உள்ளது 
எனவே புதிதாக  ஒரு பதிவு  போடாமல் 
பழைய பதிவையே  மிண்டும்  பதிவாகத
தந்துள்ளேன்  )

Thursday, October 13, 2011

எளிமையின் விலை

அரிதான விஷயங்களையெல்லாம் மிக இனியதாக
மட்டுமின்றிமிக மிக எளிமையாகவும் சொல்லிப்போன
ஔவைப் பாட்டியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்

ஆரம்ப நாட்களில் நானும் அப்படி எழுதிப் பழக எண்ணி
ஒரு கவிதை எழுதிஅந்த பத்திரிக்கை ஆசிரியரை அணுகினேன்

உறவினர் என்றாலும் அவர் முகத்தில் சிரிப்பு இல்லை
"அனைவருக்கும் தெரிந்ததைஅனைவருக்கும் புரியும்படி
எழுதியிருக்கிறாய் இது கவிதையே இல்லை" என
கிழித்து எரிந்து விட்டார்

சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு கவிதையுடன் போனேன்
"ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்ததைத்தான் எழுதியிருக்கிறாய்
ஆயினும் அனைவருக்கும் புரியும் படியல்லவா இருக்கிறது
எங்கள் பத்திரிக்கைக்கென தரமான வாசகர் வட்டம் இருக்கிறது
அதற்கு இது சரியாக வராது "என்றார்

அப்புறம் யோசித்துப் பார்த்து வார்த்தைகளை எப்படியெல்லாம்
உடைக்கக் கூடுமோ அப்படியெல்லாம் உடைத்து அடுக்கி
படிமம் ,குறியீடு எனக் குழப்பி எனக்கே என்னவென புரியாதபடி
ஒன்று எழுதிக்கொண்டு அவரைப் பார்த்தேன்

முதன் முதலாக என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தார்
" இது கவிதை  இப்படியே எழுது  "என்றார்

நானும் சராசரி நிலையைவிட்டு அதிகம் விலகி
எப்படியெல்லாம புரியாதபடி எழுத முடியுமோ
அப்படியெல்லாம் எழுதிவிஷயங்கள் ஏதுமின்றியே
வார்த்தை விளையாட்டில் விற்பன்னன் ஆகி
கவிஞனாகிப் போனேன் பிரபல்யமாகியும் போனேன்
ஆயினும் மனதின் ஆழத்தில் ஒரு உறுத்தல் மட்டும்
இருந்து கொண்டே இருந்தது

பின்னர் ஒரு நாள் அந்த ஆசிரியரே என்னைத்
 தொடர்பு கொண்டு
" தீபாவளி மலருக்கு கவிதை ஒன்று வேண்டும்" என்றார்
புதிதாக எழுத நேரமின்மையால் முதலில் அவர்
கிழித்துப் போட்டதையே மீண்டும் ஒருமுறை
எழுதிக் கொடுத்தேன்
பெற்றுக் கொண்டு அவர்"அருமை அருமை " என்றார்

"நன்றாகப் பாருங்கள் அதை உங்கள் வாசகர்களுக்கு
சரியாக வராதுகவிதையே அல்ல எனச்
சொல்லிக் கிழித்தெறிந்தது "என்றேன்

"அது  அப்போது  இப்போது உனக்கெனவே ஒரு
வாசக்ர் வட்டம் இருக்கிறதே
நீ எப்படி எழுதினாலும் சரி" என்றார்

முன்பு ஒருமுறை பாராளுமன்றத்தில்
"காந்தியை எளிமையாக வைத்துக்கொள்வதற்கு
நாங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது " என்றார்
ஒரு அரசியல் பெரும் தலைவர்

 எளிமைக்கு எதற்கு அதிகச் செலவு
எனக்கு அப்போது அதன் பொருள் புரியவே இல்லை

நான் எளிமையாக எழுதிய கவிதையை அரங்கேற்ற
ஆன நாட்களையும் அதற்காக  நான் எடுக்க வேண்டி ருந்த
அவதாரங்களையும்   எண்ணிப் பார்க்கையில் தான்
பொய்யர்கள் பூமியில் எளிமைக்கான விலை கூட
மிக மிக அதிகம் எனப் புரிந்து கொண்டேன்

Tuesday, October 11, 2011

தேர்தல் -ஒரு சிந்தனை

நாம் சில சூழ் நிலைகள் ஏற்படவேண்டுமென்பதற்காக
எவ்வளவோமுயன்றிருப்போம் . போராடியிருப்போம்
அது அப்போதெல்லாம் நடக்காது போய் நாம் எதிர்பாராத
நேரத்தில் தானாகவே திடுமென தோன்றினால் எப்படி
இருக்குமோ அப்படி இந்த உள்ளாட்சித்தேர்தல்
நமக்கு வாய்த்திருக்கிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏதோ ஒரு
கொள்கை விளக்கம் கொடுத்து அணி மாறி மாறி
போட்டி இடும்.அவர்கள் அவ்வப்போது சொல்கின்ற
விளக்கங்களையும் காரணங்களையும் எண்ணிப் பார்த்தால்
மக்களை எவ்வளவு முட்டாள்களாக மதிக்கிறார்கள்
என்பது தெளிவாகத் தெரியும்.நான் அதற்குள் போகவில்லை

அனைத்து கட்சிகளுமே தனக்கென ஒரு ஓட்டு வங்கி
இருப்பதைப் போல ஒரு பெரிய மாயையை உண்டாக்கி
அதை வைத்தே கூட்டணி கணக்கு போடுவதும்
தொகுதி பங்கீடு  செய்வதுமான வேலைகளைச்
செய்து வருகின்றன.உண்மையில் யாருக்கு
எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பதும்
வெறும் வாய் ஜாலத்தில் எத்தனை கட்சிகள் உதார்
விட்டுக் கொண்டிருக்கின்றன எனபதும்
இந்தத் தேர்தலில் நிச்சயம் தெரிந்து விடும்

எல்லா கட்சிகளிடத்தும் சில சிறப்புகளும்
சில கோளாறுகளும் உண்டு
என்ன காரணத்தினாலோ ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொருகட்சியை பிடித்துப் போயிருக்கும்
.இந்தத் தேர்தலை கட்சிகளின் உண்மையான பலத்தை
அறிய உதவும் தேர்தலாக நாம் பயன்படுத்த்க் கொள்ளலாம்
கட்சி சின்னமற்ற  உள்ளாட்சிப் பதவிகளுக்கு
நபர்களைப் பொருத்தும்கட்சி சின்னமுள்ள பதவிகளுக்கு
நபர்களைக் கணக்கில் கொள்ளாமல் கட்சிகளை
கணக்கில் கொண்டு அவரவருக்கு பிடித்த கட்சிகளுக்கு
வேறு ஜாதி உணர்வோ இன உணர்வோ இல்லாமல்
வாக்களித்தால்உண்மையான கட்சியின் பலமும் தெரியும்
வெறும் உப்புமா கட்சிகளின் சவுடாலும்  
நிச்சயம்   ஓய்ந்து போகும்

எனவே இந்தத் தேர்தலில் அனைவரும்
ஜாதி மத உணர்வுகளுக்கோ பணத்திற்கோ  ஆட்படாது
நாமனைவரும் தவறாது வாக்களிப்போம்
தமிழக அரசியல் கட்சிகளின் உண்மையான பலத்தை
அறிந்து கொள்வோம்
இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைவது கடினமே என்பதில்
தெளிவாய் இருப்போம்


 

Friday, October 7, 2011

புதிய பரம பதம்

 " வா பரமபதம் விளையாடலாம் "
என்றான் பேரன்

" சகுனிபோல் எனக்கு
சோளி உருட்டும் சாமர்த்தியமில்லை
அதனால் ஏணிகளுக்கும் எனக்கும்
எப்போதும் ஏழாம் பொருத்தமே
என்னை என்றுமே
அவைகள் ஏற்றி விட்டதே இல்லை
சூட்சுமம் சிறிதும் அறியாத
விளையாட்டுக்காரன் என்பதால்
பாம்புகளுக்கோ என்னிடம்
கோபம் மிக மிக அதிகம்
அதனால் என்னை தீண்டாது
விட்டதும் இல்லை
பாதிக்கு மேல் என்னை
ஏறவிட்டதும் இல்லை
என்வே நான் வரவில்லை "என்றேன்

பேரன் தலையிலடித்துக் கொண்டான்

 "தாத்தா நீ பழங்கதைகள் பேசுகிறாய்
விதிகளை மாற்றி வெகு நாட்களாகிவிட்டது
இப்போது பாம்பின் வால் பிடித்து
உயரம் போகலாம்
ஏணிதான் இறக்கி விடும்
வா விளையாடலாம்
வெற்றி நிச்சயம் " என்றான்

நான் விளையாடத் துவங்கினேன்
பாம்பின் வழி உயரம் போவது
மிக மிக எளிதாய் இருந்தது
ஏணியின் இறக்கம்
பாதிக்கும் படியாய் இல்லை

"இந்த விதி வசதியாய் இருக்கிறதே
சிகரத்தை எட்டுதல்
வெகு எளிதாய் இருக்கிறதே
இந்த புதிய விதியை
சொல்லிக் குடுத்தது யார் "என்றேன்

"ரமேசின் தாத்தா " என்றான்

"அவர் என்ன செய்கிறார் " என்றேன்

" அரசியலில் இருக்கிறார் "என்றான்



( சாகம்பரி அவர்களின் கருவை புதிய உருவில்
கொடுத்துள்ளேன் நன்றி சாகம்பரி )


Monday, October 3, 2011

என்னை நானே அறிய விடு

நண்பகலையும் நடு நிசியாய் காட்டும்
அடர்ந்த காட்டினுள்
என்னைத் தனியே  விட்டுப் போ

நான் சிறு பிள்ளையில்லை
திசை காட்டும் கருவியின்
வரைபடங்களின் துணையும்
எனக்குப் போதும்
உன் விரல் பிடித்து நடந்துவர
எனக்கு இஷ்டமில்லை

இப்போதெல்லாம் எனக்கு
பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை

வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்
உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டு தழும்பாகட்டும்
விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை
விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி

எத்தகைய சுவையான பழமாயினும்
உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
கசக்கவே செய்கின்றன

என்னைப் புரிந்து கொள்
என்னைப் பசி அறியவிடு
குறியீடுகளின் ,படிமங்களின் தோல்கள்
கடினமானவையே

என்னைக் கடித்து உண்ணவிடு
என் பற்களும் நகங்களும்
சிறிதேனும் பலம் பெறட்டும்

என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு

பூசாரியாய் புத்த பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்
என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு


Saturday, October 1, 2011

அஞ்ஞான விளிம்பு ...


எது அவரை தலைகீழாகப் புரட்டிப் போட்டது ?
சொல்லிய கதையா ?சொல்லிய விதமா ?கேட்ட விதமா ?
எல்லோரும்தான் ஹரிச்சந்தரன் கதை கேட்கிறோம்
காந்தியும்தான் கேட்டார்
அவர் மட்டும் எப்படி மகாத்மா ஆகிப் போனார் ?
எது அவரை மாற்றிப் போட்டது ?

எது அவரை ஞானியாக்கிப் போனது ?
நோயா? மூப்பா ? சாவா?
எல்லோரும்தான் மூன்றையும் தினம் பார்க்கிறோம்
கௌதமன் மட்டும் எப்படி மாறிப்போனான் ?
எது அவரை புதியவராக்கிப் போனது ?
அவலமா? அவை தந்த கழிவிரக்கமா ?
அதீத சிந்தனையா?
எது அவரை புத்தனாக்கிப் போனது ?

சூழல் எவரையும் மாற்றிவிடுமா?
மாறுபவருக்கு சூழல் ஒரு பொருட்டில்லையா ?
கேள்விகள் என்னுள் சூறாவளியாய்   சுழன்றடிக்க
நேரம் காலம் மறந்து கோவில் சன்னதியில்
குழம்பிப் போய்க் கிடந்தேன்
அருகில் வந்தமர்ந்த என் சித்தப்பா
ஆறுதலாகத் தலையைத் தடவி
"என்ன குழப்பம் சொல் முடிந்தால் தீர்க்கிறேன் " என்றார்

முழுவதையும் கேட்ட அவர்
"எனக்கும் அந்தக் குழப்பம் உண்டு
பாட்டி இறந்ததும்
சில மாதம் குழம்பித் திரிந்த தாத்தா
திடுமென ஒரு நாள் காசிக்கு
மரண யாத்திரை கிளம்பிவிட்டார்
நாங்கள் அதிர்ந்து போனோம்
அவரை திடுமென மாற்றிப் போட்டது எது ?
விரக்தியா ?வேதனையா ? ஞானத் தேடலா ?
அவ்ரை வழியனுப்ப போயிருந்த நான்
கடைசியாக இதே கேள்வியை கேட்டேன்
லேசாகச் சிரித்தபடி அவர் இருக்கைக்கு மேலிருந்த
வாசகத்தை காண்பித்தார்
"சுமையைக் குறை சுகமாய் பயணம் செய் " என்றிருந்தது

சுமை என்பதற்கும் சுகம் என்பதற்கும்
வேறு அர்த்தமும் உண்டென
நமக்கேன் இதுவரை புரியவில்லை ?
அவருக்கு மட்டும் எப்படிப் புரிந்தது ?
இந்த வாசகம் அவரை முடிவெடுக்கத் தூண்டியதா?
முடிவெடுத்த அவருக்கு வாசகம் கைகொடுத்ததா ?
எனக்கும் அந்தக் குழப்பம் உண்டு
உனக்குப் புரிந்தால் எனக்கும் சொல் "  எனச் சொல்லிப் போனார்

குழப்பம் கூடியதுதான் மிச்சம்
எனக்கேதும் புரியவில்லை
எது ஒரு சிலரை மட்டும்
தலைகீழாய் புரட்டிப் போடுகிறது ?
கருவிலே திருவா ?
வாய்க்கிற சூழலா ?