Friday, January 31, 2014

பண்டித விளையாட்டா படைப்பு ?

.. "இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லை ?
கற்பனை வறண்டு போனதா ?
சமூக அக்கறை குறைந்து போனதா ?"
போகிற போக்கில்
கேள்வியை விதைத்துப் போகிறான் நண்பன்.
அவனுக்கு எப்படிப் புரியச் சொல்வது ?

கொத்துகிற தூரத்தில் சீறுகிற நாகமாய்
நித்தம் எதிர்கொள்ளும்
அவலங்களும் அசிங்கங்களும்
கணந்தோறும் காயப்படுத்தும்
சிறுமைகளும் துரோகங்களும்
என்னை எப்போதும்
சுடும் நெருப்பில் நிறுத்திப்போக
அதன் தாங்கவொண்ணா பாதிப்பில்
ஒரு பாம்பாட்டியின் லாவகத்தோடு
அவைகளைச் சொற்களுக்குள் அடைக்க முயல
அவைகள் அடங்காது சீறிக் கொத்த
ஒவ்வொரு கணமும்
நான் நொந்து வீழ்வதும்
ஒவ்வொரு நாளும்
வேதனையில் சாவதும்
எப்படிச் சொன்னால் அவனுக்குப் புரியும் ?

திடுமென
சீறிக் கிளம்பும் காட்டாற்று வெள்ளம்போல்
உணர்வுகள் பொங்கிப் பெருக
நிலை தடுமாறிப் போக
தலையணைக்குள் மெத்தையினை
திணிக்கமுயலும் முட்டாள்போல்
உண்ர்வுகளை வார்த்தைக்குள்
திணிக்க முயன்று தோற்கிற கணங்களை
வார்த்தைகள் கிழிிந்து சிரிக்கிற அவலங்களை
எப்படி அவனுக்கு விளக்கித் தொலைப்பது ?

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளைப் பிரித்துப் போட்டுக் காட்டும்
பண்டித விளையாட்டா படைப்பு ?

இனியும் தங்க முடியாதென
வெளியேறத் துடிக்கும் உயிர்க்கருவும்
இனியும் தாங்க இயலாதென
உந்தித் தள்ளுகிற உள்ளுணர்வும்
இணைவாகச் சேரும் காலத்தையும் கணத்தையும்
எது நிர்ணயம் செய்யக்கூடும்?

பல சமயங்களில்
கறுத்துக் கனத்த கருமேகங்களை
ஒன்று சேர்த்த பெருங்காற்றே
அதனைக் கலைத்துவிட்டுப் போவதும்
எங்கோ தலைதெறிக்கப் போகும்
ஒரு சிறு வெண்மேகம்
சாறல் உதிர்த்துப் போவதும்
விரதங்களும் வேண்டுதல்களும்
வேண்டிய மட்டும் செய்துமுடித்து
இணைகிற இணைப்பு வீணாகிப்போக
வேண்டா வெறுப்பாகப் புணரும் நாளின்
கரு தங்கிச் சிரிப்பதையும்
எப்படி எனப் புரிந்து போனால்
அவனுக்கு எல்லாம் புரிந்து போகுமோ ?

Thursday, January 30, 2014

சமநிலை மகாத்மியம்

தன்னை நிலை நிறுத்திக் கொள்ளாது
குடும்பத்தைக் காக்கத் துடிப்பவன்
நிச்சயம் புத்திசாலி இல்லை

குடும்பத்தை ஸ்திரப்படுத்தாது
சமூகத்தைத் தாங்க முயல்பவன்
நிச்சயம் சிறந்த மனிதனில்லை

சமூக அக்கறை கொள்ளாது
தன்னலம் மட்டும் பேணுபவன்
நிச்சயம் மனிதனே இல்லை

நம்மை உயர்த்திப் பார்க்கத்தான்
சௌகரியமாய் அமர்த்திப்பார்க்கத்தான்
இருகால் ஏணியும்
முக்காலியும்
நாற்காலியுமென்றாலும்
இவைகளில் ஏதேனும்ஒரு காலில்
நீளக் குறையிருப்பின்
வீழ்ந்துவிடவே சாத்தியம் அதிகம்

எனவே
உயர்வுக்கு முதல்நிலை
சமநிலை எனத் தெளிவோம்

தொய்வின்றி வெற்றியைத்
தொடர்ந்துப் பெற்று மகிழ்வோம்

Wednesday, January 29, 2014

காலம் கடக்க நினைப்பது

எதைப் பறக்க வைப்பது
எதை  இறக்கி வைப்பது 
காற்றுக்கு அது தெரியும்
பறக்க நினைப்பதுதான் 
காற்றைப் புரிந்து  கொள்ளவேண்டும்

 எதனைமுளைக்கச் செய்வது
 எதனை மக்கச் செய்வது
மண்ணுக்கு அது தெரியும்
முளைக்க முயல்வதுதான் 
தன்னுள் உயிர் கொள்ள வேண்டும்

எதனை   மிதக்கச் செய்வது
எதனை  மூழ்கச் செய்வது
நீருக்கு அது தெரியும்
மிதக்க நினைப்பதுதான்
தன்னை தகவமைத்துக் கொள்ளவேண்டும்

எதனை அணைத்து எரிப்பது
எதனை எரிக்காதுக்  கடப்பது
நெருப்புக்கு அது தெரியும்
நிலைக்க நினைப்பதுதான்
தன்னை திடப்படுத்திக் கொள்ளவேண்டும்

எதனைக் கடத்தி  ரசிப்பது
எதனை அழித்துச் சிரிப்பது 
காலத்திற்கு அதுதெரியும்
காலம் கடக்க நினைப்பதுதான்
தன்னைத்  தகுதிப்படுத்திக்  கொள்ளவேண்டும்

Monday, January 27, 2014

வேரைப் பிடுங்கி வெந்நீர் ஊற்றி.........

செல்வனாகவும்
செல்வாக்குள்ளவனாகவும்
எதிர்காலத்தில் விளங்கவேண்டுமெனில்
உலகத் தரம் வாய்ந்த பள்ளியில் சேர்த்தலே
மிகச் சரியாக இருக்கும் என
பால்ய வயதிலேயே தங்கள் மகனைக்
கதறக் கதற
உறைவிடப் பள்ளியில்
சேர்த்துத் திரும்பினர் பெற்றோர்
குழந்தை மனம் அறியாமலேயே

குறைவுஏதுமின்றியும்
மருத்துவக் கண்காணிப்புடனும்
இறுதிக் காலத்தில் இருக்கவேண்டுமெனில்
நட்சத்திர அந்தஸ்து வயோதிகர் இல்லமே
மிகச் சரியாக இருக்குமென
தள்ளாத வயதில் தங்கள் பெற்றோரை
வலுக்கட்டாயமாக
வயோதிகர் இல்லத்தில்
சேர்த்துத் திரும்பினான்
செல்வமும் செல்வாக்கும் கொண்ட பிள்ளை
பெற்றோர் மனம் புரியாமலே

முதலீட்டுகேற்ற
ஒரு நிலையான வருமானம்
சேவை என்னும் பெயரில்
நிச்சயம் வேண்டுமெனில்
உறைவிடப் பள்ளியும்
நட்சத்திர அந்தஸ்து வயோதிகர் இல்லமுமே
மிகச் சரியான தேர்வு என அறிந்து
கோடிக் கோடியாய்
கொட்டிக் கொண்டிருக்கின்றனர்
பிழைக்கத் தெரிந்த பெருமகனார்கள்
சமூகப் பண்பாட்டுச் செடியின்
வேரைப் பிடுங்கி வெந்நீர்
ஊற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை
அறிந்தும் அறியாதவன் போலவே 

Sunday, January 26, 2014

கண்ணாடி பிம்பக் கறை

தேடித் தேடி ஓடியும்
கிடைக்காத பொருள்
வெறுமையை விதைத்துப் போக

வேண்டாம் வேண்டாம் என
ஒதுக்கத் தொடரும் பொருள்
சலிப்பைத் தந்து போக

அளவாகக் தேட
அளவாகக் கிடைத்த பொருள்
உண்மை மதிப்பில் இருக்க

தேடாதே இருக்க
தானாக மடிவிழுந்த பொருள்
சுய மதிப்பிழந்து தவிக்க

பொருளுக்கென தனியான
மதிப்பேதும் இல்லையெனத்
தெளிவு கொள்கிறேன் நான்

கண்ணாடி பிம்பத்தில்
கறைதுடைக்கும் மடமையை
தவிர்க்கத் துவங்குகிறேன் நான்

Saturday, January 25, 2014

எனது விமர்சனம் :

பதிவுலகப் பிதாமகர் மரியாதைக்குரிய
திரு.வை. கோ அவர்கள்  நடத்திவரும்  சிறுகதை
விமர்சனப் போட்டியில்  முதல் பரிசு
எனக்குக் கிடைத்துள்ளது என்பதை
மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

நான்  விமர்சனம் எழுதிய ஜிலேபி  கதைக்கான
இணைப்பையும்  எனது விமர்சனத்தையும்  தங்கள்
பார்வைக்காக  இங்கே பதிவு செய்கிறேன்

ஜிலேபி  கதைக்கான இணைப்பு :
 http://gopu1949.blogspot.in/2014/01/vgk-01.html

எனது விமர்சனம் : 

இனிப்பான தலைப்பில் வாழ்வின் விளிம்பு நிலை
மனிதர்களின்  கசப்பான வாழ்வை கோடிட்டுக்
காட்டிப் போகும் "ஜாங்கிரி  " சிறுகதை மிக மிக அருமை

சிறு பின்சுவர் கட்டமுடியாமல் தினம் கட்டிட
வேலைக்குப் போகும் கொத்தனாரும்
வண்ண வண்ண ஆடைகளைத் தைத்துக் கொடுத்தும்
ஒரு எளிய கதர் ஆடையில் திரியும் தையல்காரரும்
வருடம்முழுவதும் பட்டாசு ஆலையில்
கந்தகத்தில் வெந்தும் தீபாவளிக்கு முதல் நாள் தரும்
ஒரு சிறு பட்டாசு பண்டலுக்காகக் காத்திருக்கும்
தொழிலாளியும் நமக்கு அதிகம் பழக்கப்பட்ட அளவு
இந்தச் சமையல் நாகராஜன்கள் நமக்குப்
பழக்கப்படச் சாத்தியமில்லை

அதனால்தான் பொதுவாகவே தண்ணீரில்
 கிடக்கும் தவளைதண்ணீர் குடித்ததா இல்லையா
என யார் கண்டதுஎனப் பழமொழி சொல்லுகிறமாதிரி
இந்த அடுப்படிப் பணியாளர்கள் எல்லாம்
 சாப்பிட்டிருப்பார்களாசாப்பிட்டிருக்கமாட்டார்களா
என்கிறசிறு சந்தேகம் கூட நமக்கு வருவதில்லை
நாமாகவே அவர்கள் திட்டவட்டமாகச்
சாப்பிட்டிருப்பார்கள் என்கிற முடிவுக்கே
பல சமயங்களில் வந்து விடுகிறோம்

வேலை அலுப்பில் தொடர் வேலையில் அல்லது
சமையல் வாடை தொடர்ந்து முகத்திலடிக்கிற
 எரிச்சலில்அவர்கள் பெரும்பாலான சமயங்களில்
விஷேஷ வீடுகளில்முறையாகச் சாப்பிடுவதே இல்லை.
பல சமயங்களில் கொஞ்சம் சோற்றை மட்டும் போட்டு
அனைத்து காய்கறிகளையும் சாம்பார் ரசம்
அனைத்தையும்போட்டுக் கலந்து கலவையாக
இரண்டு மூன்றுகவளங்கள் மட்டும் சாப்பிடுவதை
 பலசமயம் நானே பார்த்திருக்கிறேன்

சமையல் நாகராஜன்களே இப்படி எனில்
சுவீட் போடும் நாகராஜன்க ளைச்
சொல்லவேண்டியதே இல்லை
அதுவும் வறுமையில் செம்மை என்பதே சிறப்பு என
தன்மானமும் கொஞ்சம் கூடிவிட்டால்
 நாகராஜன்களின் பாடு ஜிலேபி  கதை நாயகன்
 நாகராஜன் மாதிரிஅதோ கதிதான்

அதை மிகச் சரியாக உணர்ந்து வடித்த இந்தக் கதை
என்னை அதிகம் கவர்ந்ததில் ஆச்சரியமே இல்லை

ஒரு கருத்தைச் சொல்ல நிகழ்வைத் தேடுவது
அல்லது தன்னைப் பாதித்த நிகழ்வை ஒரு கருத்தோடு
இணைத்துத் தர ஒரு கதை செய்வது என இல்லாமல்
இப்படி நிகழ்வும் கருத்தும் மிகச் சரியாக
 இணையும்படியாககதை எழுதுதல் என்பது
அதுவும் சிறுகதை எழுதுவது
என்பது சாதாரண விஷயமேயில்லை.

அதுவும் காதாபாத்திரத்தை உயர்த்திச்
சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில்
கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிற
ஆரம்பத்திலேயே கோவில் குளம் சாமிபடம் முன்பு
 எனச்சொல்லாமல் திண்ணையில்
வெட்டி ஆபீஸர்கள் எல்லாம்
சீட்டாடிக் கொண்டிருப்பதைச் சொன்னவிதமும்
சீட்டில் அவர் கெட்டிக்காரத்தனத்தைச்
சொன்னவிதமும்இயற்கையாக இருந்ததோடு
இல்லாமல் மிகச் சரியாகஅந்தக் கதாபாத்திரத்தின்
 சாமர்த்தியத்தையும் (?) மிகச் சரியாக
நாம் புரிந்து கொள்ள உதவுகிறது

தன் கதாபாத்திரத்திற்கு அதன் உணர்வுக்கு
வலு சேர்க்க வேண்டும் என்பதற்காக
எதிர் கதாபாத்திரங்களின் தன்மையைக் குறைக்கும்
 வேலைப்பாட்டைச் செய்யாதது
என்னை இந்தப் படைப்பில் மிகக் கவர்ந்தது

இயல்பாக சமையல்காரரின் நோக்கத்தில்
இல்லாமல்நம்முடைய சுய நல எண்ணத்திலேயே
இரண்டுபாராட்டு வார்த்தைகளை சம்பிராதயத்துக்குப்
போட்டுவிட்டுஅடுத்த விசேஷத்திற்கு நீங்கள்தான் என
பொய்யான உறுதி மொழியைக் கொடுத்திவிட்டு
வேலையாளின் கூலியைக் குறைக்க முயலும்
அல்பத்தனம்நம் அனைவரிடத்தும் உண்டு

நல்ல வேளை அந்த அளவு மோசக்காரராக
அந்த விஷேஷ வீட்டுக்காரர் இல்லையென்றாலும் கூட
தன் சுயநல நிலையில் இருந்தே  நாகராஜனை டீல்
செய்கிற விஷயம் என்னை மிகவும் பாதித்தது

வியர்வை காயும் முன் கூலி கொடுப்பது
சிறந்ததுதான்சரியான கூலி கொடுப்பதும்
மிகச் சிறந்துதான்

ஆயினும் அவன் உழைப்பைக்
கௌரவப்படுத்தும்படியாகக் கொடுக்கவேண்டும்
 என்கிற எண்ணத்தை இந்தக் கதை
என்னுள் விதைத்துப் போனது

நிச்சயம் படிப்பவர்கள் அனைவரின் மனங்களிலும்
விதைத்துப் போயிருக்கும்

ஒரு படைப்பின் வெற்றி என்பது வாசகனை
தன் இருப்பு நிலையில் இருந்து கொஞ்சம்
 இதுபோல்மேல் நோக்கி உயர்த்துவது
என்பதல்லாது வேறு ஏதாயிருக்க முடியும் ?

ஒரு படைப்பாளி வாசகனிடம் ஏற்படுத்த
முயல்கிற பாதிப்பினை

அந்தப் பாதிப்பினை மிகச் சரியாகச்
சுட்டிக் காட்டி தன்னுள் அது நேர்ந்தது என
ஒரு வாசகன் சொல்வதை விட

ஒரு படைப்பாளிக்கு
அதிக மகிழ்வும் உற்சாகமும் தருவது
வேறு  ஏதாயிருக்க முடியும் ?

வாழ்த்துகள் வை.கோ. சார்

மேலும் படிக்க : http://gopu1949.blogspot.in/2014/01/vgk-01-01-03.html

Friday, January 24, 2014

இதுவும் ஒருவகை ,,,,,,,,,

தற்சமயம் மாநிலங்களவை தேர்தலுக்கான
வேட்பாளர்களை அ,தி,மு, க அதிகாரப் பூர்வமாக
அறிவித்துள்ளது.அதில் இருவர் தற்போது
மாநகராட்சி மேயராக இருப்பவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது

தென்மாவட்டங்களைக் குறிவைக்கும்
அண்ணா தி.மு.க.

வேட்பாளர் தேர்வில் புதிய வியூகம்
,
அனைத்து சமுகத்தினருக்கும்
வாய்ப்பளிக்கும் விதமாக
அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்

என்றெல்லாம்
வித்தியாசம் வித்தியாசமாக விதம் விதமாக
அலசி ஆராயும் பத்திரிக்கைகள்----

வேண்டுமென்றே நாம் யோசித்து விடக்கூடாது
என்பதற்காகவே இவர்கள் மேயர் பதவியை
ராஜினாமா செய்வதால் மீண்டும் தேர்தல்
நடக்க வேண்டி இருப்பது குறித்தோ
அதற்காக ஏற்படுகிற தேவையற்ற
 செலவு குறித்தோ
லேசாகக் கூட முனகவில்லை

தாம் விரும்புகிற இனத்தவருக்கு மதத்தவருக்கு
அவர்கள் மாநிலங்களவை பதவியைத் தரட்டும்
அவர்களுக்கு போதுமான வாக்குகள் இருப்பதால்
அது அவர்கள் இஷ்டம்.
அதை நாம் விமர்சிக்க முடியாது

ஆனால்  அதை ஏற்கெனவே பதவியில் இருப்பவர்களை
ராஜினாமா செய்யச் சொல்லி
அவர்களுக்குத்தான் தர வேண்டும்
என்பது என்ன கட்டாயம். ?

அவர்கள் பதவி கொடுக்க விரும்புகிற
 இனத்தில்,  மதத்தில்
இவர்களை விட்டால் மாநிலங்களவைக்குத்
தகுதியானவர்கள்இல்லையென்பது போல்
செயல்படுவது கூட
குறிப்பிட்ட இனத்தாரையும் மதத்தாரையும்
இழுவுபடுத்துதல் போலத்தான் இல்லையா ?

இந்த ராஜினாவால் நடக்கும் தேர்தலுக்கான செலவுக்கு
யார் பொறுப்பேற்றுக் கொள்வது ?

இதை ஏன் எந்தப் பத்திரிக்கையும்
மக்கள் முன் ஒரு கருத்தாக
 எடுத்து வைக்க முயலவில்லை ?

பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் இறந்தால்
மீண்டும் தேர்தல் வைக்காது வென்ற கட்சியிலேயே
ஒரு வேட்பாளரை அறிவிக்கச் செய்வதன் மூலம்
தேவையற்ற தேர்தலைத் தவிர்க்கலாமா  எனக் கூட
யோசிக்கிற கால கட்டத்தில் இது போன்று மீண்டும்
மீண்டும் தேவையற்ற செலவுகளை செய்ய முயல்வது
எந்த விதத்தில் நியாயம் ?

இது குறித்து  பதிவர்களின் விரிவான அலசலை
எதிர்பார்த்து இப்பதிவின் தலைப்பின் வாசகத்தை
முடிக்காது விட்டுள்ளேன்.

தங்கள் கருத்தை எதிர்பார்த்து..

வாழ்த்துக்களுடன் ...

Tuesday, January 21, 2014

கவிதையைப் போலவும்...

"இப்படி விழுந்து விழுந்து ரசிப்பதற்கும்
தொடர்ந்து விடாது ரசிப்பதற்கும்
இதில் அப்படி என்னதான் இருக்கு ? "
என விலகி நின்று பார்த்தே
விலகிப் போயினர் சிலர்

"அதில் இறங்க விருப்பமில்லை
தேவையுமில்லை "என
அதனால் விரிந்த முன்பரப்பில்
உருண்டு விளையாடி
மனம் களித்துப் போயினர் பலர்

"முழுதும் நனைந்திடாது
பட்டும் படாமலும் ரசிப்பதே சுகம் "என
உணவுக்கு  ஊறுகாயாய்
அளவோடு இணைந்துப் பின் விலகி
உற்சாகம் கொண்டனர் சிலர்

"அதனுள் வீழ்ந்துக் கிடப்பதும்
நீந்திக் களிப்பதும்தான் பேரானந்தம் "என
செயற்கை அணிகலன்கள்
அனைத்தையும் அகற்றி முற்றாக
மூழ்கிச் சுகித்தனர் வெகு சிலர்

"இந்த விரிந்து பரந்த
பிரமாண்டம்தான் எத்தனைப் பேரின்பம் "என
வியந்தும் விக்கித்தும்
தனைமறந்தும் சூழல் மறந்தும்
தவசியாய்க் கிடந்தனர் வெகு வெகு சிலர்

தன்னிலை மாறாது எப்போதும்போல்
அதுவாகவே அது இருப்பினும்
எல்லோரின் நினைப்புக்கும்
ஏற்றதாகவும் இருந்தது
விரிந்து பரந்துக் கிடந்த அந்த நீலக்கடல்

கவிதையைப் போலவும்... 

Friday, January 17, 2014

பிரிவும் புரிதலும்

ஒருவாரம் ஊர்போய் வந்து
கதவைத் திறந்ததும்
ஒரு வெறுமை வாடை
முகம் சுளிக்கவைத்தது
"வீடு அடைத்துக் கிடந்தால்
அப்படித்தான் " என்றாள் மனைவி

மொட்டில்லாது பூவில்லாது
செடிகள் வாடிக் கிடந்தன
காவலாளியிடம்
 "நீர் ஊற்றவில்லையா "என்றேன்

"இரண்டு நேரமும் ஊற்றினேன்
மழை கூட நன்றாகப் பெய்தது"என்றான்

ப்ளாக்கி மெலிந்து
நோஞ்சானாகி இருந்தது

"சரியாக வேளாவேளை
சோறு வைக்கவில்லையா "
என்றேன் எரிச்சலுடன்

" முதல் நாள்
சோறு சாப்பிடவில்லையென்று
மறு நாள் ரொட்டி கூட
வாங்கிப் போட்டுப் பார்த்தேன்
மண்ணில் கோபத்துடன் புதைத்ததே தவிர
சாப்பிடவில்லை "என்றான் காவலாளி

நான் பிளாக்கியில் அருகில் நெருங்கி
தடவிக் கொடுத்தபடி
"ஏண்டா சாப்பிடலை "என்றேன்

உடலைச் சுருட்டி
என் மடியில் அமர்ந்தபடி
வித்தியாசமாக குரல் கொடுத்தது

சென்ற முறை எக்ஸாம் காரணமாக
சின்னவனை பாட்டி ஊருக்கு
அழைத்துச் செல்லாமல் விட்டுப் போய்
திரும்ப வந்ததும்
அவன் இரண்டு நாள்
சிணுங்கித் திரிந்ததை ஒத்திருந்தது அது

Thursday, January 16, 2014

மேற்கில் தோன்றும் உதயம்

பச்சை விளக்கைப் பார்க்கும் போதே
போதை ஏறுமே-கால்கள்
இச்சை கொண்டு பாதை மாறி
போக ஏங்குமே
மொத்த உடம்பும் பித்தம் ஏற
ஆட்டம் போடவே-மனசில்
மிச்சச் சொச்சக் கூச்சம் கூட
விலகி ஓடுமே

வீடு போக எந்தப் பாதை
மாறிப் போயினும்- இந்தக்
கேடு கெட்ட" பாரு "அங்கே
இருந்து தொலைக்குமே
தாறு மாறா விலையைக் கூட்டி
விற்கும் போதிலும்-காசை
வீசி எரிந்து வாங்கிக் குடிக்க
மனசு தாவுமே

கடனைக் கேட்டு வட்டிக் காரன்
வந்து போனதும்-ரோட்டில்
கிடக்கப் பார்த்த மனிதர் எல்லாம்
முகத்தைச் சுளித்ததும்
நினைப்பில் வந்து தடுக்கப் பார்த்தும்
வெட்கம் இன்றியே-இந்த
வலையைக் கிழிக்கும் பலத்தை இழந்து
புலம்பித் தவிக்குமே

செத்துக் காடு போன பிணமே
வீடு திரும்பினால் -பெண்
பித்துப் பிடித்துத் திரிவோன் மனசில்
இரக்கம் அரும்பினால்
போதைப் பாதைப் போன யாரும்
திருந்தக் கூடுமே-கதிரோன்
பாதை மாறி மேற்கில் கூட
உதிக்கக் கூடுமே

Tuesday, January 14, 2014

இனியொரு விதியது செய்வோம்

வலையதை  அறிந்திடும் முன்னால்-அதன்
வலுவினைப் புரிந்திடும் முன்னால்
அறையதைச் சிறையெனக் கொண்டோம்-தனிமை
வலியினில் அனுதினம் வெந்தோம்

விண்வெளி ஒருநொடிக் கடக்கும்-புதிய
மின்மொழி அறிந்திடும் முன்னால்
மண்ணடிக் கிடந்திடும் பொன்போல்-நாமும்
மண்னெனக் கிடந்தோம் பலநாள்

சொல்லிட ஆயிரம் இருந்தும்-அதைச்
சொல்லிடும் வழிவகை அறிந்தும்
சிற்பியின் உளிபடாக் கல்லாய் -நாமும்
சவமெனக்  கழித்தோம் வெகுநாள்

விதைத்ததும் விளைந்திடும் பயிராய்-பதிவைப்
படைத்ததும் அதுபெறும் பலத்தை
பிழையது இன்றியே தெளிவாய்-இன்று
அனைவரும் அறிந்தோம் மகிழ்வாய்

கூர்மிகு வாள்வலி அறிந்து-அதனைச்
சுழற்றிடும் வீரனைப் போல
சீர்மிகு வலைப்பலம் உணர்ந்து-அதனைச்
சிறப்புறச் செய்வோம் வாரீர்

இனியொரு விதியது செய்யும்-மிக்க
வலிவது வலையினுக் குண்டு
எனும்மொழி மனதினில் கொண்டு-நம்
எழுத்தினைத் தொடர்வோம் வாரீர்

Monday, January 13, 2014

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

புராணப் புனைவுக் கதைகள்
தந்த நம்பிக்கையில்
கொண்டாடும் நாட்களை விட

சிறப்பென  உலகு சொல்லும்
நாட்களை மதித்துக்
கொண்டாடும் நாட்களை விட

அறிந்தோ அறியாமலோ சேர்ந்த
கழிவுகளைக் கழித்துக்
கொண்டாடும் இந்த நாளே

நம் உலக வாழ்வுக்கு
கண்கண்ட சக்தியைக்  வணங்கிக்
கொண்டாடும்  இந்த நாளே

விலங்கினமாயினும்
நம்முடன் உழைத்துத் தவித்ததைக்
கொண்டாடும் இந்த நாளே

நம்முடனே நித்தமிருந்து
நம் உயர்வுக்கு உதவுவோரைக் கண்டுக்
கொண்டாடும் இந்த நாளே

உலகத் திருநாள் எதனினும்
உன்னதத் திருநாள் என்பதை
விளக்கிச் சொல்ல வேண்டுமோ ?

தமிழனின் உன்னதத்தை உலகினுக்கு
உணர்த்திடும் திருநாள் என்பதை
எடுத்துச் சொல்ல வேண்டுமோ ?


(பதிவுலக உறவுகள் அனைவருக்கும்
அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் )

Saturday, January 11, 2014

அதீதம்

மாணவிகளை விடத் தன்னை
இளமையாகக் காட்டிக் கொள்ள
அதிக ஒப்பனை செய்து கொள்ளும்
கல்லூரிப் பேராசிரியை
கொஞ்சம் கூடுதல் வயதானவராகத் தெரிய

குழந்தைகளுடன் குழந்தையாய்
வயது ஸ்மரணையின்றி
எளிமையாய் ஆடையணிந்த அந்த
பள்ளி ஆசிரியையோ
இன்னமும் இளமையாய்த்தான் தெரிகிறார்

வாசகனிடம்  தன்
பாண்டித்தியத்தைப் பறைசாற்ற
பல்லுடைக்கும் வார்த்தைகளைக் கொண்டு
புரியாக் கவிபடைக்கும் அந்தக் கவிஞர்
அனைவருக்கும்அன்னியரைப் போலப்பட

புரிந்ததை அனைவரும்
புரிந்து கொள்ளும்படிச் சொல்லுதலே
தன் பாணியாகக் கொண்டப் படைப்பாளியோ
ஏற்கத்தக்கவராய் மட்டுமின்றி
இணைந்து செல்லத் தக்கவாராயும் தெரிகிறார்

அதீதம் என்பதற்கான பொருள்
அகராதியில் "கடந்தது- மேற்பட்டது " என இருக்க
யோசித்துப்பார்க்கையில் அதன் சரியான பொருள்
" அர்த்தமின்மை - முதிர்சியின்மை"
என இருத்தலே சரியெனப்படுகிறது எனக்கு

Thursday, January 9, 2014

பதிவர்களாகிய நமக்கு

காலச் சுற்றினுள்
அடங்காது தனித்து நிற்கும்
ஒரு தினத்தில் வாழ்ந்து பார்க்கவும்
அதன் காரணமாய் காலம் கடக்கவும்

உடல் கூட்டை
உடைத்து வெளியேறும் உயிர்பறவையை
ஒரு நொடியேனும் விழியால் காணவும்
அதன் மூலம் அழிவினை அழிக்கவும்

அண்ட சராசரங்களை
இம்மி பிசகாது இயக்கும் அந்த மாயக் காரனை
கை குலுக்கிப் பாராட்டி மகிழவும்
அவன் மூலமாகவே அவனை அறியவும்

பல காலம்
முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருப்பினும்
நாம் நம்பிக்கையை இழந்தா நிற்கிறோம் ?

வர்ணங்களையே
நீர்த்துப் போகச் செய்யும்
அழகிய ஓவியம் படைக்கத் தெரிந்த
ஓவியர்களாகிய நமக்கு

வார்த்தைகளையே
அர்த்தமற்றதாக்கிப் போகும்
வண்ணக் கவிதைகள் படைக்கத் தெரிந்த
கவிஞர்களாகிய நமக்கு

கற்பனைகளையே
அதிஅற்புத  படைப்புகளாக
உருகொடுத்து அனுபவிக்கத் தெரிந்த
பதிவர்களாகிய நமக்கு

புரியாத புதிர்கள் எல்லாம்
என்றுமேயொரு   பொருட்டா என்ன ?
இன்னும் கொஞ்சம் முயன்றால்
ஊழினையும் உட்பக்கம் காணல்
அத்தனை கடினமா என்ன ?

Tuesday, January 7, 2014

ஈடு இணையற்ற கவி நீதான் இனி

வாக்கியக் குச்சிகளை ஒடித்து
உன் மனோலயப்படி
சுள்ளிகளாக்கி பரப்பி வை
நீள ஒழுங்கு ஒரு பொருட்டில்லை

வார்த்தைகளை
ஊதி ஊதிப் பெரிதாக்கி உப்பவை
இரத்தசோகைப் பிடித்தவன் முகம் போலது
வாக்கியத்திற்கு பொருந்தாவிடினும்
அது ஒரு பொருட்டில்லை

உன் படைப்பை எப்போதும்
ஒரு புதர் போல்
ஒரு புதிர்போல் பராமரி
எதையும் விளங்கச் சொல்லி
சராசரியாகிப் போகாதே

புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்
புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்

எவனை மிதித்தோ
எவனை அணைத்தோ
வெளிச்ச மேடையில் ஒரு இடம் பிடி
சந்தேகமே இல்லை
தற்காலக் கவி உலகில்
ஈடு இணையற்ற கவி நீதான் இனி

Sunday, January 5, 2014

நட்பெனும் போர்வை

நீ கேட்கக் கூடாது என
மறைக்கிற எல்லாம்
எனக்குத் தெளிவாகத் தெரிந்தும்
நான் கேட்காதே தொடர்கிறேன்

நீ விரும்ப வேண்டிய
ஆயினும் விரும்பாதவைகளை
தவறியும் நான் உனக்கு
தெரிவிக்க விரும்புவதில்லை

நீ கேடு விளைவிக்கிறவைகளை
கண்முன்னே தொடர்கிறபோதும்
தடுக்க சிறிதும் முயலாது
நான் பார்வையாளனாகவே இருக்கிறேன்

பயனுள்ளவைகளைவிட
பயனற்றதாயினும்
சுவாரஸ்யமானவைகளைப் பகிர்வதிலேயே
நாம் கூடுதல் மகிழ்வு கொள்கிறோம்

உடலில்படாது ஓங்கி வீசும்
ஆடிக்காற்றினைப் போல
நம் சம்பந்தப்படாத உலக விஷயங்களை
நாம் பல மணி நேரம் விவாதிக்கிறோம்

என்ன செய்வது
நட்பு எனும் போர்வையில்
நாம் கொண்டிருக்கிற தொடர்பினை
விடாது தொடர்வதற்கு
இந்த மாய்மாலங்களெல்லாம்
இக்காலச் சூழலில்
அவசியத் தேவையாகத்தானிருக்கிறது

Saturday, January 4, 2014

அது "வாகிப் போகும் அவன்

காலத்திற்கான குறியீடு
தானே என்னும் கர்வத்தில்
கொஞ்சம் முன்பின்னாக
அந்த மணிகாட்டி நடக்க
எரிச்சலில் நிறுத்திவைத்தேன் அதை

காலம் சிரித்தபடி எப்போதும்போல்
நகர்ந்து கொண்டிருக்க
ஒரு நொடியில்
பயனற்றதாகிப் போனது
அந்தக் குறிகாட்டி

மன உணர்வுகளின்
உன்னத வெளிப்பாடு
என்மூலம் மட்டுமே
நிச்சயம் சாத்தியம் என
எகத்தாளமிட்டது கவிதை

ஒரு பார்வையற்றவனின்
உன்னத இசையில்
பெருங்கூட்டமே கண்கலங்கி நிற்க
 கர்வம் தொலைத்த கவிதைச் சொன்னது
" நான் அற்பச் சுமைதாங்கி மட்டுமே"

பதவியும் வசதியும்
தந்த கர்வத்தில்
எல்லாம் நானே என
எல்லாம் எனக்குள் என
எகிறிக் குதித்தான் அவன்

கவனியாதிருந்தும்
சீராயிருந்த மூச்சுக்காற்று
சட்டென சுழிமாறிப் போக
உடல்விட்டு திசை மாறிப்போக
ஒரு நொடியில்"அது "வாகிப் போனான் அவன்

குறியீடுகள் சுமைதாங்கிகள்
அளவீடுகளின் எல்லையினை
குழப்பமின்றி  அறிந்தவன்
வாழத்தெரிந்தவானாகிப்போக
அதை அறியாதவனே  அற்பனாகிப்போகிறான்

Wednesday, January 1, 2014

பொருள் என்பதற்கான பொருள்

பொருட்களின்
 பயன்பொறு த்து
அதன் பயன்பாடுபொறு த்து
 புனிதம் பொறு த்து
அதனதன் இடத்தில்
அந்த  அந்தப் பொருட்களை
தன் செயல்களுக்கு  உதவும்படி
வைப்பதுவும்
தன் வளர்ச்சிக்கு  அதனை
முறையாகப் பயன்படுத்துவதுவே
புத்திசாலித்தனம்

 மாறாக
 இடம் மாற்றிவைப்பது
குழப்பத்தை மட்டுமல்ல
கால விரயத்தை மட்டுமல்ல
பொருட்களின் பயன்பாட்டை மட்டுமல்ல
அந்தப் பொருளையே கூட
அதிகம் பாதிக்கக் கூடும்
அதன் மதிப்பையே கூட
முற்றாக அழிக்கக் கூடும்

ஆயினும்
பொருட்களுக்கு
கூடுதல்  இடத்தையும்
 எல்லா  இடத்தையும்
கொடுத்துவிட்டு
இடமின்றித் திரிவதும்
தடுமாறித்  தவிப்பதுவும்
நிச்சயம் புத்திசாலித்தனமில்லை

பொருள் என்பதற்கான பொருள்
கார் சாவி, செருப்பு ,பேனா எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன ?
அது ஜாதி மதம் அரசியல்
எனக் கூட
இருக்கலாம்தானே !

இடம் என்பதற்கானப பொருள்
வீடு வாசல் கோவில் மைதானம் எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன ?  
அது சுயம்  குடும்பம்  உறவுகள்  சமூகம்
எனக் கூட   இருக்கலாம் தானே !