Wednesday, April 30, 2014

சுதாரிப்பு சுப்ரமணி

கண்ணுக்கு மிகஅழகா
காதலிக்க வெகுஜோரா
பொண்ணுஒண்ணு பிடிச்சிப் புட்டேன்-இனிதான்
பிழைக்கவேலைப் பிடிக்கப் போறேன்

சமைப்பதற்கு மிகஎளிதா
இருக்குமாறு அண்டாகுண்டா
அமைப்பாக வாங்கிப் புட்டேன்-இனிதான்
சமைக்கவே பழகப்  போறேன்

நீந்துதலுக்கு ஏற்றதோதாய்
பார்ப்பதற்கும் கனஜோராய்
நீச்சலுடை எடுத்தே விட்டேன்-இனிதான்
நீர்தேடி  அலையப்  போறேன்

விசிலடிக்க நூறுபேரும்
மாலைபோட பத்துபேரும்
சரியாகப் பிடிச்சுப் புட்டேன்-இனிதான்
பேசிடவே பழகப் போறேன்

குர்தாவும் ஜோல்னாவும்
குறுந்தாடி இத்யாதி
கச்சிதமாத் தேத்திப் புட்டேன்-இனிதான்
கவியெழுதக் கற்கப் போறேன்

Tuesday, April 29, 2014

பொருள் என்பதற்கான பொருள்

பொருட்களின்
 பயன்பொறு த்து
அதன் பயன்பாடுபொறு த்து
 புனிதம் பொறு த்து
அதனதன் இடத்தில்
அந்த  அந்தப் பொருட்களை
தன் செயல்களுக்கு  உதவும்படி
வைப்பதுவும்
தன் வளர்ச்சிக்கு  அதனை
முறையாகப் பயன்படுத்துவதுவே
புத்திசாலித்தனம்

 மாறாக
 இடம் மாற்றிவைப்பது
குழப்பத்தை மட்டுமல்ல
கால விரயத்தை மட்டுமல்ல
பொருட்களின் பயன்பாட்டை மட்டுமல்ல
அந்தப் பொருளையே கூட
அதிகம் பாதிக்கக் கூடும்
அதன் மதிப்பையே கூட
முற்றாக அழிக்கக் கூடும்

ஆயினும்
பொருட்களுக்கு
கூடுதல்  இடத்தையும்
 எல்லா  இடத்தையும்
கொடுத்துவிட்டு
இடமின்றித் திரிவதும்
தடுமாறித்  தவிப்பதுவும்
நிச்சயம் புத்திசாலித்தனமில்லை

பொருள் என்பதற்கான பொருள்
கார் சாவி, செருப்பு ,பேனா எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன ?
அது ஜாதி மதம் அரசியல்
எனக் கூட
இருக்கலாம்தானே !

Monday, April 28, 2014

முட்டுச் சந்து

ஒவ்வொரு பண்டிகையின் போதும்
சட்டைக்கு அளவு கொடுக்கையில்
"கொஞ்சம் வைத்துத் தை
வளர்கிற பிள்ளை " எனச் சொல்லி
கொஞ்சம் பெரிதாகவே தைத்துக் கொடுப்பாள் அம்மா
என்றைக்கோ...எவனோ..அதன் காரணமாய்
"தொள தொள மணி "என வைத்த பெயர்
இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது

கல்லூரிக்குள் நுழையும் நாள் முதலே
வேலைக்கான தயாரிப்புப் பணியில்
முழுவதுமாக என்னை முடக்கி வைப்பார் அப்பா
கல்லுரிக் கலாட்டா
நண்பர்கள் உல்லாசம் என
நான் கதைவிடுவதெல்லாம் கூட
சினிமா பார்த்துக் கற்றுக் கொண்டதுதான் 

சம்பாத்தியம் தந்த தெம்பில்
கொஞ்சம் நான்
நடுத்தரம் மீறிய உல்லாசத்தில்
மிதக்க நினைத்தாலும்
ஏன் நடக்க நினைத்தாலும் கூட
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து
உபன்யாசம் செய்து என்னை
ஓய்ந்து உட்காரச் செய்வாள் மனைவி.

நடுவயதில்
திமிறித் தாவிய தேவைகளை
அடக்கி ஒடுக்கிய மிதப்பில்
அல்லது அலுப்பில்
கொஞ்சம் ஓய்ந்து சாய எத்தெனிக்கையில்
பால் வைத்த நெற்பயிறாய்
பருவம் எய்தினின்று
என்னை பதறச் செய்வர் பிள்ளைகள்.
அதனால்
தொடரோட்டம் தொடர்ந்து தொடரும்.

அனைத்து கடமைகளையும்
செவ்வனே செய்து முடித்து
நிகழ்காலக் காற்றைக் கொஞ்சம்
சுவாசிக்க முயலுகையில்
செத்த நாக்கிற்கு கொஞ்சம்
சுவை காட்ட நினைக்கையில்
"பழைய நினைப்பா பேராண்டி.."என
பரிகாசம் செய்வான் நண்பன்.

எனக்கென்னவோ..இப்போதெல்லாம்...
கிழிந்த சாக்குப் பையில்
அடுக்கி வைக்கப்பட்ட அடுக்கு இலையை
எடுக்க முயலும் ஒவ்வொரு முைற்யும்
"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது.

என்ன செய்வது...
உடலிருக்கும் இடத்திலேயே மனதை வைப்பதும்
எப்போதும்
நிகழ்காலத்திலேயே நிலைத்து நிற்பதுமே
"வாழுதல்"என்பது கூட
எதிர்காலத்தின் நீட்சி
ஒரு முட்டுச்சந்தில்
முட்டி நிற்கையில்தான்
எல்லோருக்கும் புரியத் துவங்குகிறது.

Friday, April 25, 2014

ஏஜெண்டுகள் தேவை

கம்பெனியின் பெயர் :  

ஆண்டவன் கம்பெனி

கல்வித் தகுதி :  

அது ஒரு பொருட்டில்லை

வயது  :  

அதுவும் ஒரு பொருட்டில்லை


தகுதி :  

பெருந்தன்மையான மனம் மற்றும்
வள்ளல் குணமுடையோர் மட்டும்


வேலையின் தன்மை :
 
தகுதி உடையோருக்குத் தேவையானவைகள்
உங்கள் மூலம் அனுப்பிவைக்கப்படும்
சேர்க்கவேண்டியவர்களிடம் அதை மிகச்
சரியாகச் சேர்த்துவிடவேண்டும்

தவிர்க்க வேண்டியவர்கள்:

தனது குறைந்தபட்சத் தேவைகள் தவிர்த்து
அதிகம் சேர்க்க விரும்புபவர்கள்

கூடுதல் தகவல் :

கடவுள் நம்பிக்கை ஒரு தகுதி இல்லை
பகுத்தறிவு வாதிகளும் விண்ணப்பிக்கலாம்
தனக்கென ஒதுக்கும் பட்சத்தில் கொடுப்பது நிறுத்தப்படும்
விளக்கங்கள் தரப்படமாட்டாது

தகுதியுடையோருக்கெல்லாம் வாய்ப்பளிக்க
வாய்ப்பு இருப்பதால் தகுதியுடையோர் அனைவரும்
நிச்சயம் விண்ணப்பிக்கலாம்

கம்பெனி நம்பகத்தன்மை குறித்து
விசாரிக்க முகவரி:

கர்ணன்,காம்
பாரி.காம்
எம்.ஜி,ஆர்.காம்


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

அவரவர் மனச்சாட்சி

விளம்பர உதவி :

யாதோரமணி,ப்ளாக் ஸ்பாட்.காம்

Thursday, April 24, 2014

மனதின் ஓரம் இனிய நாதம்

சந்தம் ஒன்று நெஞ்சில் வந்து
கொஞ்சி நிற்கும் போது
சிந்தை தன்னில் வண்ணம் தந்து
தஞ்சம் கொள்ளும் போது
விந்தை போல வார்த்தை நூறு
வந்து வாசல் நிற்கும்
கங்கை போலக் கவிதை பெருக
தன்னைத் தந்து ரசிக்கும்

ராகம் ஒன்று மெல்ல வந்து
மனதை வருடும் போது
தாளம் உடனே தனயன் போல
தொடந்து இணையும் போது
மாயம் போல எதுகை மோனை
தானே வந்து நிறையும்
ஞாலம் போற்றும் கவிதை தந்து
தானும் அதனுள் மறையும்

மனது மெல்ல நினைவு கடந்து
கனவில் மிதக்கும் போது
கனத்த பெருமை என்னும் சுமையை
துறந்து கடக்கும் போது
மனதின் ஓரம் இனிய நாதம்
ஒன்று கேட்கக் கூடும்
கவனம் கொண்டால் அதுதான் சந்தம்
என்று தெளியக் கூடும் 

Wednesday, April 23, 2014

நல்லத் தாத்தா அன்புப் பேரனுக்கு

வசதி இன்றி தவிச்ச போது
வயிறு பசித்த தப்போ-இப்போ
வசதி வந்து சேர்ந்த போது
பசியும் போச்சு தப்போ

கடுஞ்சு ரொம்ப பேசி னாலும்
நட்பு இருந்த தப்போ -இப்போ
விரும்பி நெருங்கிப் பேசி னாலும்
பகையா மாறு தப்போ

சக்தி ரொம்ப இருந்த போது
ஆசை இல்லை அப்போ-இப்போ
சக்தி குறஞ்சு போன போது
எல்லை மீறு தப்போ

சொல்லத் தெரியா போது நிறைய
சொல்ல இருந்த தப்போ-இப்போ
சொல்லத் தெரிந்த போதுச் சொல்ல
ஏது மில்லை யப்போ

காலத் தோடும் சக்தி யோடும்
இணஞ்சு போடா யப்போ-இல்லை
வாழும் காலம் எல்லாம் உனக்கு
அவஸ்தை தாண்டா யப்போ

ஐந்தாண்டுத் தவம் தந்த வரம்

யானை மட்டும் தானா தலையில்
தானே மண்ணைப் போட்டுக் கொள்ளும்-தேர்தல்
நாளில் தவறாய் முடிவு எடுத்தால்
நாமும் போட்டக் கதைதான் அறிவோம்-மூடக்

குரங்கு மட்டும் தானா தானே
ஆப்பை அசைத்து மாட்டித் தவிக்கும்-தேர்தல்
நடக்கும் நாளில் காசைப் பார்த்தால்
நாமும் மாட்டிப் பின்னால் தவிப்போம்-திருட்டுப்

பூனை மட்டும் தானா கண்ணை
மூடிப் பாலைக் குடித்து மாட்டும்-நடக்கும்
தீமை கண்டும் ஊமையாய் இருந்தால்
நாமும் மாட்டிப் பின்னால் துடிப்போம்-செக்கு

மாடு மட்டும் தானா தினமும்
நடந்த வழியே நடந்துச் சாகும்-நாமும்
கூறு கெட்டு இந்த முறையும்
தவறைச் செய்தால் நசிந்துப் போவோம்-நீண்ட

தவமாய் ஐந்து ஆண்டு இருக்க
கிடைக்கும் வரமே நமது வாக்கு-இதை
மறந்து இருக்க வேண்டாம் என்றே
எழுதி வைத்தேன் இந்தப் பாட்டு 

Monday, April 21, 2014

கவிதையும் கருவும் ( 2 )

" புடைத்து எடுத்து
பொறுக்கி எடுத்து
தேர்ந்தெடுக்கும்
அற்பப் பொருளல்ல
கவிஞனின் படைப்பு

மலர்தல் போல்
விடிதல் போல்
மறைதல் போல்
மிக இயல்பானது
மிக இனிதானது அது

தோண்டி எடுத்து
பிசைந்துக் களைத்து
உருட்டிச் சேர்த்து
உருவாக்கி ரசிக்கும்
பாண்டமல்ல படைப்பு

கருவாதல் போல்
நிலையாதல் போல்
உருவாதல்போல்
அதிசயமானது அது
அபூர்வமானது அது

ஆள்துளை அமைத்து
எடுத்த கிணற்று நீரோ
ஆழத் தோண்டி எடுத்த
அற்புத உலோகத் தகடோ
நிச்சயம் இல்லை அது

காற்றுப் படப் பெய்யும்
கனத்த மழையினைப் போல
தரை பிளந்து எழும்
அழகிய செடியினைப் போல
என்றும் புதிரானது அது

மொத்தத்தில்
எடுத்து இறுக்கித்
தருவதல்ல்ல அது
இருப்பில் எடுக்க
வருவது அது "என்றது

"எனக்குப் புரியவில்லை "என்றான அவன்

"நீ கவிதை எழுதி
கவிஞனானவன்
எனவே  புரிய வாய்ப்பில்லை
நீ கவிஞனாகி
கவிதை எழுது
புரியத் துவங்கும் "என்றது

லேசாகப் புரிவது
போலிருந்ததது அவனுக்கு
புரிய வைத்த திருப்தியில்
கருவும் மெல்லக்
கலையத் துவங்கியது

Saturday, April 19, 2014

கருவும் கவியும் ( 1 )

எழுதிவிட  எண்ணி
அவன் எழுதுகோலை எடுத்ததும்
ஓராயிரம் கருக்கள் அவன்  முன்
ஓரணியாய் நிற்கத் துவங்குகின்றன

குழம்பித் தவித்து அவன்
பயனுள்ளவைகளை மட்டும்
பொறுப்புடன் பொறுக்கி எடுக்க
பாதி குப்பையாகிப் போகிறது

மீந்து நிற்பவைகளுள்
நிகழ் காலச் சூழலுக்குக்கானதை
நிதானமாய் யோசித்து எடுக்க
பெரும்பகுதி கூளமாகிப் போகிறது

இருப்பவைகளுக்குள் அவன்
சுவாரஸ்யப்படுத்த முடிந்தவைகளை
கவனமாய்த் தேர்ந்தெடுக்க
ஒன்று மட்டுமே எஞ்சி நிற்கிறது

சந்தோஷமாய் அவன்
அது குறித்து சிந்திக்கத் துவங்க
மெல்ல அது அவன்  கைவிட்டு
நழுவுவதிலே கவனமாய் இருக்கிறது

எரிச்சலுற்று அவன்
அதற்கான காரணம் கேட்கையில்
"நீ பக்குவப் பட்டவில்லை
என்னை விட்டுவிடு "என்கிறது

குழப்பம் கூடுதலாகிப் போக
"காரணம் சொல் திருந்த முயல்கிறேன் "
என அவன் கெஞ்சிக் கேட்க
முகஞ்சுளித்து அது  இப்படிச் சொல்கிறது

( தொடரும் )

Friday, April 18, 2014

500 வது பதிவு

எனக்கே இது ஐநூறாவது பதிவென நினைவில்லை
பதிவுலக நண்பர்தான் ஃபோன் செய்து
"ஒரு சிறப்புப் பதிவு போடுங்களேன்  "என்றார்

வெகு தூரம் ஓடிவந்த பின் ஒரு சிறு நிழல் கிடைக்க
அதிலமர்ந்து வந்த பாதையைப் பார்ப்பது
ஒரு தனிச் சுகம்தான்.
அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான்
அந்தச் சுகம் அதிகம் புரிபடும்

98  நாடுகளில் 384 தொடர்பவர்களோடு
இரண்டு லட்சத்து முப்பதாயிரம்
 பக்கப் பார்வையாளர்களோடு
ஏறக்குறைய 23000 பின்னூட்டங்களோடு
இந்தப் பதிவுலகப் பயணம் தங்களைப் போன்ற
பதிவர்களின் நல்லாசியுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது

சிறப்பித்துச் சொல்லும்படியாக பதிவுகள் எதுவும்
எழுதவில்லையென்றாலும்
சிறப்பித்துச் சொல்லும்படியான
அதிகமான நண்பர்களைப் பெற்றதும்

ஓய்வு பெற்றப்பின் ஓய்ந்துவிடாமல் படிக்கவும்
மனதில் பட்டதைப் பகிர்வதன் மூலம் என்னைத்
தினமும் புதுப்பித்துக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பும்

தலைமுறை இடைவெளி அதிகப் பட்டுவிடாமல்
அனைவரின் மன நிலைகளை மிகச் சரியாகப்
புரிந்து கொள்ளவும்,இணைந்து கொள்ளும் லாவகமும்

இந்தப் பதிவுலகத் தொடர்பால் எனக்குக் கிடைத்த
அபூர்வ வரம்,அதீத சுகம் என்றால் அது மிகையான
வார்த்தை இல்லை

என் புலம்பலையும் ஒரு பொருட்டாகப் பாராட்டி
என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் எனதருமை
பதிவுலக உறவினர்கள் அனைவருக்கும் எனது
மனமார்ந்த நன்றி

Wednesday, April 16, 2014

பாம்பின் கால் அல்லது பண்டித ரகசியம்

எனது எழுத்தாளர் நண்பன்
அந்தக் கவிதை நூலை
என்னிடம் தந்து
"இதை மிகக் கவனமாய்ப்  படி
உன் எழுத்துக்கு நிச்சயம் இது உரம் சேர்க்கும் "
எனச் சொல்லிப்போனான்

நானும் அந்தக் கவிஞரை
அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆயினும்
அவர் கவிதைகளைப் படித்ததில்லை

ஆர்வமாய் நான்
கவிதை நூலை விரிக்க
ஆச்சரியம் என்னை
அள்ளிக் கொண்டு போனது

எழுத்துக்கள் அனைத்தும்
வார்த்தைகள் அனைத்தும்
தமிழில் இருந்தும்
அர்த்தம் மட்டும் விளங்கவே இல்லை

வாக்கியங்கள்
மிக நேர்த்தியாக
அடுக்கப்பட்டிருந்தும்
அவற்றிற்கான
தொடர்புகள் மட்டும் புரியவே இல்லை

மறுமுறை சந்தித்த நண்பன்
"கவிதைகள் எப்படி "என்றான்

"அற்புதம்  "என்றேன்

"எல்லோராலும் புரிந்து கொள்வது
மிக மிகக் கடினம்
என்னைப்போல் நீயும்
புரிந்து கொள்வாய் எனத் தெரியும்  " என்றான்

எனக்குப் பெருமையாய் இருந்தது
அவனுக்கும் இருந்திருக்கும்

இருவரும்
அவர் படிப்பு பட்டங்கள் குறித்து
அவரின் வளர்ப்பு இருப்பு குறித்து
அதிகம் பேசினோம்

அவர் கவிதைகள் குறித்து மட்டும்
கடைசிவரை
நல்ல வேளை
அவனும் பேசவில்லை
நானும் பேசவில்லை

Saturday, April 12, 2014

ஐந்தாண்டுத் திருவிழா

எப்படிக் கூர்ந்து நோக்கினும்
பூசாரிகளின் தீபஒளி இன்றி
கண்ணுக்குப் புலப்படா
அதியற்புதத் தெய்வங்கள் எல்லாம்
இருளடைந்த  சன்னதி தாண்டி
கொடிமரம் தாண்டி
நந்தி தாண்டி
பக்தனின் அருள்வேண்டி
பவனி வரும்
அபூர்வத் திருவிழா

அர்ச்சனை செய்தும் பால்குடமெடுத்தும்
இரத்தம் வழிய அலகுக் குத்தி
குறைகளைக் கொட்டித் தீர்த்தும்
கண்ணிருந்தும் குருடாய்
காதிருந்தும் செவிடாய்
காட்சிப்பொருளாய் இருந்த
கருவறைக் கடவுள்கள் எல்லாம்
பக்தனுக்குள்ள குறைகளையெல்லாம்
பக்கம் பக்கமாய்ப் படித்துச் சொல்லி
வீதிவலம் வரும்
வித்தியாசமான திருவிழா

ஓராண்டு மிக நன்றாய்
உண்டு களிக்கவும்
புணர்ந்து சுகிக்கவும்
மண்டல விரதம் பூணும்
சக்தி இழந்த போலிப் பக்தனாய்
ஐந்தாண்டு உல்லாசமாய்
உலகு சுற்றவும்
உன்னதங்களைச் சுகிக்கவும்
பஞ்சைப் பராரிபோல்
பகல் வேஷதாரிகள்
நகர்வலம் வரும்
நயவஞ்சகத் திருவிழா

சுருட்டியதைத்தானே கொடுக்கிறான்
வாங்கிக் கொள்வோம் எனவும்
விதைக்கத்தானே செய்கிறோம்
அறுவடை செய்து கொள்வோம் எனவும்
பரஸ்பரப் புரிதலில்
ஒருவரை ஒருவர் ஏமாற்றி
களிப்பு மிகக் கொள்ள
ஜனநாயகக் கடமையாற்றுவதாய்
நடித்து மகிழ்ச்சிக்  கொள்ள
அரசாங்கமே பொறுப்பேற்று நடத்தும்
அதி அற்புதப் பெருவிழா
இந்த
ஐந்தாண்டுத் திருவிழா

Monday, April 7, 2014

மூடுபனி ( 6 )

இருபது வருடங்களுக்கு முன்பு--

அப்போது எனக்கு இருபத்து எட்டு வயது இருக்கும்
நான் எட்டு வயதுச் சிறுவனாக இருக்கையிலேயே
எனது தந்தை இறந்துவிட்ட காரணத்தால் நான்
எனது சகோதரர் மற்றும் எனது சகோதரி அனைவரும்
தாத்தா வீட்டிற்கு வந்து விட்டோம்
(அம்மாவின் அப்பா )

தந்தை இறந்து கிடக்கையில் சுடுகாடு வந்து
பங்காளிகள் என்கிற முறையில் சடங்குகளைச்
செய்துவிட்டுப் போன எங்கள் பெரியப்பா
அதற்குப் பின் ஏனோ எங்களைப் பார்க்க
வரவே இல்லை

நாங்களும் ஏனோ எந்தவிதத்திலும் அவர்களுடன்
தொடர்பு கொள்ளவே இல்லை.அது எங்களுக்கு
அப்போது அவசியமாகவும் படவில்லை

எனது மூத்த சகோதரனுக்கு திருமண ஏற்பாடுகள்
செய்யத் துவங்குகையில் தான் எனது தாயார்
"நாம் எப்படித்தான் தாத்தா பாட்டி வீட்டில்
அனுசரணையாக இருந்தாலும் பங்காளிகள்
தொடர்பு முழுவதும் இல்லாது போனாலும்
திருமணம் என் வரும்போது உனது பெரியப்பா
அவர்கள் பெயரில்தான் திருமணப் பத்திரிக்கை
அடிக்கவேண்டும்,அவர்கள்  மணவறையில்
 இருந்துதான்தாரைவார்த்த்து தர வேண்டும்.
எனவே நீ உடன்பத்தமடைப் போய்  பெரியப்பாவைப்
 பார்த்துவிவரம் சொல்லித் திருமணப் பத்திரிக்கை
அவர் கைப்படஎழுதி வாங்கிக் கொண்டு,
திருமணத்தை வந்திருந்து நடத்திக் கொடுக்கவேண்டும்
 எனச் சொல்லிஆசி பெற்று வா  "என்றார்

எனக்கும் என் சகோதரனுக்கும் இதில்
உடன்பாடு இல்லை
"இத்தனை நாள் வந்து பார்க்காதவர்களை எதற்கு
அழைத்து வந்து மரியாதை செய்ய வேண்டும் " என
எதிர்ப்பினைக் காட்டிப் பார்த்தோம் .
அது எடுபடவில்லைதாத்தா பாட்டி கூட அதுதான் சரி
எனச் சொன்னதால்அண்ணனால் வர முடியாத
 அளவு பணிச் சூழல் இருந்ததால்
நான் மட்டும் போய் வருவது என முடிவாகி
ஒரு நல்ல முஹூர்த்த நாளில் பெரியப்பாவைப்
பார்க்கக்பத்தமடை ஊர் நோக்கிக் கிளம்பினேன்

"ஊரில் பஸ்ஸை விட்டு இறங்கி அவர் பெயரைச்
சொன்னால்போதும்,அவர் வீட்டில் கொண்டு
 விட்டு விடுவார்கள்
உங்கள் பெரியப்பா அவ்வளவு பிரபலம் "என
அந்த மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி எங்கள்
தெருவில் குடியிருந்த ஒரு உறவினர்
ஒருவர் சொன்னார்

அது மிகச் சரியாக இருந்தது..

அந்த ஊரின் வெளியில் பஸ்ஸை விட்டு இறங்கியதும்
அருகில் இருந்த பெட்டிக் கடைகாரரிடம் அவர் பெயர்
சொல்லி விசாரித்ததும் அவரைப் பார்க்க வந்தது
குறித்து அவர் விசாரிக்க அவர் எனக்குப் பெரியப்பா
எனச் சொன்னதும் அவர் சட்டெனக் காட்டிய கூடுதல்
மரியாதையும் உடன் அருகில் நின்றிருந்த பையனைக்
கூப்பிட்டு தன் சைக்கிளைக் கொடுத்து வீட்டில்
கொண்டுபோய் விட்டு விட்டு வரச் சொல்லிவிட்டு
மிகப் பணிவாகப் போட்டக் கும்பிடும் என்னை மிகவும்
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

சைக்கிள் ஓட்டிவந்த பையன் "இந்த நேரம்
உங்கள் பெரியப்பா மடத்தில் இருப்பார்கள்
உங்களை மடத்தில் விடட்டுமா அல்லது வீட்டில்
விடட்டுமா ? " என்றான்

"மடத்திலேயே விடு,அவர்களுடன் சேர்ந்து
வீட்டிற்குப் போய்க் கொள்கிறேன் " என்றேன்

அந்த ஊர் தாமிரபரணியின் கருணையால் மிகச்
செழிப்பமான ஊராக மட்டுமல்லாது மிக
வித்தியாசமானஅமைப்புள்ள ஊராகவும் இருந்தது

தாமிரபரணியின் ஒரு வாய்க்கால் இரு
பிரிவாகப் பிரிந்து இருபுறமும் இணையாக இருந்த
வீடுகளின் பின் படிக்கட்டை ஒட்டி நிறைந்து ஓடியதும்
பின் கதவைத் திறந்ததும் சலசலத்து ஓடும்
ஆற்று நீரில் பெண்கள் துவைத்துக் கொண்டும்
குளித்துக்கொண்டும் இருந்தது வியப்பூட்டுவதாக இருந்தது

சைக்கிள் பையன் என்னை மடத்தின் முன்னே
இறக்கிவிட்டுமடத்தின் உள்ளே ஒரு
 இருபது முப்பது பேர் சூழ்ந்திருக்க
கணக்குப்பிள்ளை சாய்வு மேஜையில் எதையோ
கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தவரைக் காட்டி
"அதோ  உங்கள் பெரியப்பா உட்கார்ந்திருக்கிறார் "
எனச் சொல்ல சப்தம் கேட்டு என் பெரியப்பா
நிமிர்ந்து பார்க்கசுற்றி இருந்தவர்களும் என்னை
நோக்கிப் பார்க்கசற்றுக் கூச்சத்துடன்
அவரை நோக்கி நடந்து அவர் அருகில் சென்று
 "பெரியப்பா "என்றேன்

பெரியப்பா தான் அணிந்திருந்த சாளேஸ்வரக்
கண்ணாடியைகழட்டி டேபிளில் வைத்தபடி
"வாடா உன்னைத்தான்
எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்," எனச் சொல்லிபடி
என் கையைப் பிடித்து அருகில் அமரவைத்து
சுற்றி இருந்தவர்களிடம் "உடையவன் வந்துவிட்டான்
இனி நான் விலகிக் கொள்ளவேண்டியதுதான் "

எதைவிட்டு அவர் விலகப் போகிறார்
நான் எதற்கு உடையவன் என்பது
எனக்கு விளங்கவில்லை

அங்கு அமர்ந்திருந்தவர்கள் அனைவரின் கையிலும்
ஜாதக நோட்டுப் புத்தகம் இருந்தது


(தொடரும் )

Tuesday, April 1, 2014

ஆண்டவனின் பவர் ஏஜெண்டுகள் நிச்சயம் பூசாரியோ ஃபாதரோ ஹாஜியாரோ இல்லை

எங்களுடைய அரிமா சங்கத்தின் பொருளாளராக
இருக்கக்கூடிய பெருந்தன்மை மற்றும்
வள்ளல்குணத்திற்கும் மொத்தக் குத்தகைக்காரரான
இருக்கக் கூடிய நண்பர் லயன் ராஜா அவர்கள்
எனக்கு தொலைபேசியில் "ஒரு சிறிய நிகழ்ச்சி
எனது வீட்டில் இருக்கிறது வந்து கலந்து
 கொள்ளமுடியுமா ? "எனக் கேட்டார்

எனக்கும் திருமங்கலத்தில் (அந்தத் தேர்தல் பிரபல்யத்
திருமங்கலம்தான் )ஒரு அவசர வேலை இருந்ததால்
ஒப்புக்கொண்டு எங்கள் சங்கச் செயலாளர் லயன்
முத்துமுனியாண்டி அவர்களையும்
அழைத்துக் கொண்டு பதினொரு மணியளவில்
அங்குப் போய்ச் சேர்ந்தேன்

ஏதாவது ஒரு சிறு குடும்ப நிகழ்வு இருக்கும் என
எண்ணிப் போன எனக்கு 13 வயது உடைய
ஏறக்குறைய 20  ஆண் மற்றும்  பெண் குழந்தைகளாக
இருந்தது வித்தியாசமாகப் பட்டது. எல்லோரும்
சந்தோஷமாக அவர்கள் வீட்டில் சிரித்து மகிழ்ந்து
பேசிக் கொண்டும் வாசலில் கிரிக்கெட்
ஆடிக் கொண்டும் இருந்தார்கள்

"இன்று என்ன விஷேடம்,இந்தக் குழந்தைகள் எல்லாம்
யார் எனக் கேட்டேன்."

அவர் சொன்ன விஷயம் மிகுந்த மகிழ்வளிப்பதாகவும்
மிகவும் வித்தியாசமானதாகவும் பட்டது

அவர் சொன்ன விஷயம் இதுதான்

அவருடைய மனைவி திருமதி ஹேமா அவர்கள்
ஏறக்குறைய  அவர்கள் வீட்டிலிருந்துஇ 20 கிலோமீட்டர்
தொலைவில் உள்ள சின்ன உலகாணி என்னும்
கிராமத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய
நடு நிலைப் பள்ளியில்ஆசிரியராகப்
பணி செய்து வருவதாகவும்

ஒவ்வொரு வருடமும் எட்டாவது படித்து முடித்து
அந்தப் பள்ளி விடுத்து மேற்கொண்டு படிக்க
வெளியே செல்லுகிற அனைவரையும் பள்ளி
இறுதி நாளில் வீட்டிற்கு அழைத்து தன் கையால்
விருந்து சமைத்து குடும்பத்துடன்  அமர்ந்து உண்டு
அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அவர்கள்
எதிர்காலம் குறித்து மிகத் தெளிவாக ஒரு
முடிவுடன் படிக்கும் படியாக
அறிவுரை கூறிவருவதாகவும்

இதைக் கடந்த மூன்று வருடங்க்களாகச் செய்து
வருவதாகவும் சொல்லச் சொல்லக் கேட்க
எனக்குமிகுந்த மகிழ்சியாகவும்,
பெருமையாகவும் இருந்தது

நானும் அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு
அவர்களுடன் உணவருந்திவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்

மிகச் சிறிய விஷயம் போல ராஜா மற்றும் அவரது
துணைவியார் ஹேமா அவர்கள் சொன்னாலும் கூட
இது அந்தக் குழந்தைகள் மனதில் எவ்வளவு பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பது அந்தக்
குழந்தைகள் தங்கள் எதிர்காலம் குறித்த
இலட்சியங்களைப் பகிர்ந்து கொண்ட விதம்
என்னை வெகு நேரம்சிந்திக்கவைத்தது

கலெக்டர் ஆவேன் வக்கீல் ஆவேன்
எஞ்சினியர் ஆவேன் என அவர்கள்
 துடிப்போடுச் சொன்னவிஷயம் நிச்சயம்
அவர்கள்  அப்படி ஆகி நிச்சயம் இந்த டீச்சர் வீட்டிற்கே
வந்து ஆசிபெற்றுப் போவார்கள் எனவும்
எனக்கு நிச்சயமாகப்பட்டது

உண்மையில் ஆண்டவனிடன் பவர் ஏஜெண்டுகள்
பூசாரியோ,ஹாஜியாரோ,ஃபாதரோ
இருக்க வாய்ப்பே இல்லை
இது நாமாக நியமித்துக் கொண்டு நம்மை
ஏமாற்றிக் கொள்வது

நிச்சயம்  ஆண்டவனின்பவர் ஏஜெண்டுகள்
இதுபோன்றுஎங்கோ ஒரு மூலையில்
எந்தக் கைமாறும் எதிர்பாராது
வித்தியாசமான செயற்கரிய செயல்களை செய்து
தானும் மகிழ்ந்து மற்றவர்களையும்
மகிழ்விப்பவர்களாகத்தானே இருக்கமுடியும் ?