Monday, June 30, 2014

சிகரத்தில் என்றும் நிலைப்போம்

தினம் தூங்கி விழிப்பவன்
பார்க்கிற பார்வையும்
புதிதாக பார்வை பெற்றவன்
பார்க்கிற பார்வையும்
நிச்சயம் வேறு வேறே

மீண்டும் வந்தவனின்
பார்வையும் செயலும்
மீண்டு வந்தவனின்
பார்வையும் செயலும்
நிச்சயம் வேறு வேறே

மற்றுமொரு நாளாக
நினைப்பவனின் நாளும்
புதியதொரு நாளாக
நினைப்பவனின் நாளும்
நிச்சயம் வேறு வேறே

சகிக்கி முடியாததைச் சகிக்கும்
இயலாதவைனின் பொறுமையும்
சகிக்க முடியாததைச் சகிக்கும்
பலசாலியின் பொறுமையும்
நிச்சயம் வேறு வேறே

சொல்லத் தெரிவதால்
சொல்பவன் படைப்பும்
சொல்லவேண்டியதைச்
சொல்பவனின் படைப்பும்
நிச்சயம் வேறு வேறே

ஒட்டித் தெரிவதின்
ஒட்டாத் தன்மையை
அறிந்து   தெளிவு கொள்வோம்
குழப்பம் ஏதுமின்றி
சிகரத்தில்  என்றும்  நிலைப்போம்

Sunday, June 29, 2014

பதிமூனாவதா முதலாவதா ?

மாதம் எப்படியும் பதிமூன்று பதிவுகளுக்குக்
குறையாமல் எழுதிவிடுவது என்பதை
 ஒரு வரையரையாகக் கொண்டு
இந்த ஆண்டுத் தொடக்கம் முதல்
எழுதி வருவதால் இன்று ஒரு மாதம் முடிகிற
நிலையில் ஒன்று எழுத வேண்டி இருந்தது
என்ன எழுதலாம் என நேற்றே யோசிக்கத்
துவங்கிவிட்டேன்

இது இப்படி இருக்க இன்று மாலை நான்
இணைந்திருக்கிற அரிமா சங்கத்தின் சார்பாக
ஒரு நிகழ்ச்சி வர்த்தகசபைச் சங்கத்தில் இருந்தது
நான் தலைவனாக இருக்கிற சங்கத்தில் இருக்கிற
உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும்
அலைபேசி மூலம் நினைவூட்டுதல் செய்தி
அனுப்பிவிட்டு நான் என் மனைவியும்
வழக்கம்போல டூவீலரில்
அரங்கம் நோக்கிச் செல்லத் துவங்கினோம்

தெற்குவாசல் வரை ஒரு பிரச்சனையும் இல்லை
அங்கு சிக்னலில் சிகப்பு விளக்கு எரிய
அங்கு எனக்கு முன்னால் நின்றிருந்த  லாரியின்
பக்கத்தில் நானும் பச்சை விளக்குக்காகக்
 காத்திருந்தேன்

பச்சை விளக்குப் போட லாரியும் நகர நானும்
வண்டியை  எடுக்க அடுத்த நொடி என்ன நேர்ந்தது
எப்படி நேர்ந்தது எனத் தெரியவில்லை.
டமால் என ஏதோ மோதுகிற சப்தம்
அடுத்த நொடியில் நானும் என் மனைவியும்
அந்த அளவுக்கதிகமான பாரம் ஏற்றிய லாரியின்
பின் சக்கரத்தின் முன்னால் கிடக்கிறோம்

எங்களைச் சுற்றி ஐயோ நிறுத்துடா நிறுத்துடா
என்கிற சப்தம் வருகிறது.
ஒரு டிராஃபிக் போலீஸ்காரர்
விசிலடித்தபடி லாரியை நிறுத்தச் சொல்லி
கையசைத்தபடி லாரியை நோக்கி ஓடிவருகிறார்
பின் சக்கரத்தின் அரை அடி முன்னால் என் மனைவியும்
அடுத்து நானும் கிடக்கிறோம்.உறுதியாக
அடுத்த நொடிலாரி டயர் ஏற நசுங்கிச்
செத்துவிடுவோம் எனத் தெளிவாகப் புரிகிறது,
ஆனாலும் விழுந்த அதிர்ச்சியில்
திக் பிரமை படித்து என்ன செய்வதென்று அறியாமல்
அசையாமல் கிடக்கிறோம்.

அந்த நொடியை இப்போது நினைத்தாலும்
அதிர்ச்சியாக மட்டும் இல்லை
ஆச்சரியமாகவும் இருக்கிறது

காரணம் உண்மையில் அந்த நொடியில்
நிச்சயமாகச் செத்துவிடுவோம் என்கிற நிலையில்
வேறு நினைவுகள் எதுவும் இல்லை
பயமும் இல்லை.பதட்டமும் இல்லை
எங்களிடம் தப்பிப்பதற்கான
எந்த முயற்சியும் கூட இல்லை

ஒருவேளை வண்டி நிறுத்தப்படாமல் சக்கரம்
ஒரு சுற்று சுற்றி இருந்தால் நிச்சயம்
மார்பில் லாரி ஏற நசுங்கிச் செத்து இருப்போம்
என்றாலும் கூட அந்த மரண அவஸ்தை வலி
நிச்சயம் இருந்திருக்காது எனத்தான் இப்போது
நினைத்தாலும் தோணுகிறது

அரைகுறையாக அல்லாது முழுமையாக
உடன் இதுபோல் போய்ச் சேருகிறவர்களுக்கு
 அந்தத்  திக்பிரமைப் பிடித்த
நிலையது கூட ஆண்டவனின் கருணையோ
 எனக் கூட இப்போது யோசிக்கப் படுகிறது.

அப்புறம் என்ன..
மனைவியின் அதீத பக்தியோ
அல்லது அதிகம் வெளிச்சமடித்துக் காட்டாது
நான் செய்கிற சேவையோ அந்த போலீஸ் காரர்
மற்றும் கூடிய இருந்த மக்கள் ரூபத்தில்
உடனடியாக அனிச்சையாக குரல் கொடுத்து
வண்டியை நிறுத்த வைத்தது
பின் எங்களை யாரோ இருவர் சட்டெனத் தூக்கி
அருகில் பிளாட்பாரத்தில் படுக்க வைத்தார்கள்.

லேசாக நினைவு திரும்ப
கால் மட்டும் கையில் வலியெடுப்பது தெரிந்தது
மனைவிக்கும் டயரில் மோதி விழுந்த அதிர்ச்சியில்
முதுகில் அதிக வலியென்றார்

அதற்குள் அங்கு வந்த காவல்துறை உயர் அதிகாரி
நான் அணிந்திருந்த அரிமா பொத்தானைப் பார்த்து
"சேவை இயக்கத்தில் இருக்கிறீர்களா "என்றார்

"ஆம் " என்றோம்.

"ஒன்றும் பயப்படவேண்டாம்,
உங்களுக்கு ஒன்றுமில்லைதெரிந்தவர்கள்
யாருக்காவது உடன் போன் செய்துவிட்டு
உள்ளே அந்த கடையில் உட்கார்ந்து கொள்ளுங்கள் என
மிக ஆறுதலாகப் பேசி அங்கு  கூடியிருந்த
காவலர்களுக்குஏதோ உத்தரவுகள்
கொடுத்துச் சென்றார்..
காவலர்களும் கூடுதல் கனிவுடன்
எங்களைக் கவனித்துக்கொண்டார்கள்

,பின் எனக்கு நெருக்கமான நண்பராக இருக்கிற
இன்ஸ்பெக்டருக்கு தகவல் தர உடன் வந்து
மிகச் சேதாரமாகி இருந்தவண்டியை
அப்புறப்படுத்தவும்சட்ட ரீதியான காரியங்களையும்
எங்களை உடன் மருத்துமனைக்கு அழைத்துச் சென்று
உடன் முதலுதவிக்கும் ஏற்பாடு செய்ய ஒரு வழியாக
ஒரு இரண்டு மணி நேரத்தில்
(சிறிது சேதாரம் இருந்தால் கூட)
சகஜ நிலைக்குத் திரும்பினோம்

இன்று காலையில் இதை பதிவிடலாம்
என நினைத்த போதுதான்
எனக்கு தலைப்பில் சொன்னது போல
இது பதிமூனாவது  அல்லது முதல் பதிவா என்கிற
குழப்பம் வந்தது

முடிந்தால் குழப்பத்தை நீங்களே தீர்த்து வையுங்களேன்...

Saturday, June 28, 2014

இது நரியும் ஆட்டுக் குட்டியும் கதை

சூழலுக்குப் பயந்து பயந்து வாழ்பவன்
நிச்சயம் செத்துச் செத்துத்தான் வாழ்வான்
மாறாக எத்தகைய  மோசமான சூழலாயினும்
அதனை அறிவின் மூலம் சிறப்பாகக்
கையாளத் தெரிந்தவன் அந்த மோசமான
சூழலையே தனக்கு மிகச் சாதகமாகப்  பயன்படுத்தி
வெற்றி அடைவான் என்பதற்கு நான்
கேள்விப்பட்ட ஒரு சிறு கதை

ஒரு காட்டில் ஒரு நிறைமாத ஆடு ஒன்று
இருந்தது.நிறைமாதம் என்பதால் பலசாலியான்
வேறு மிருகம் ஏதேனும் வேட்டையாட
முயன்றால் வேகமாக ஓட முடியாது என்பதால்
தனக்கு ஒரு பாதுகாப்பான இடம் தேடித் திரிந்தது

அப்போது நேரடியாக சண்டைப் போட்டு
ஆட்டைஜெயித்து அதை உண்ண முடியாது
என எண்ணிய தந்திர நரி
அந்தக் காட்டில் இருந்த ஒரு சிங்கத்தின்
குகையைக் காட்டி "இந்தக் கிழச் சிங்கம்
அடுத்த காட்டிற்குப் போயுள்ளது,வருவதற்கு
எப்படியும் இரண்டு மாதம் ஆகும்.அதற்குள்
உனக்கும் பிரசவம் ஆகிவிடும்..எனவே நீ
அது வருவத்ற்குள் வேறு பாதுகாப்பான இடத்திற்குப்
போய்விடலாம் " என நம்பிக்கையூட்டி அந்த
குகைக்குள் தங்க விட்டு சிங்கத்திடம்
ஆடு இருக்கும் தகவலைச் சொல்லி வரவழைக்கக்
கிளம்பிவிட்டது.

நரியின் தந்திர எண்ணத்தைப் புரிந்துகொண்ட
நிறைமாத ஆட்டுடன் இருந்த குட்டி ஆடு
"என்னம்மா நரி பேச்சை நம்பி ஒளியத் தெரியாதவன்
தலையாரி வீட்டில் ஒளிந்த மாதிரி ஒளிந்து
கொண்டிருக்கிறோம்.சிங்கம் வந்தால் நம் நிலைமை
என்னவாகும் "என்றது

"கவலைப்படாதே,நரி ஏதோ தந்திரமாக
யோசித்துத்தான்நமக்கு இந்த ஐடியாவைச்
சொல்லியுள்ளது எனக்குத் தெரியும்
நானும் அதற்குத் தகுந்தாற்போல யோசித்து
வைத்திருக்கிறேன்.சிங்கம் வந்தால் கொஞ்சம்
குரலை மாற்றி "அம்மா எனக்கு சிங்கக் குடல்தான்
வேண்டும் எனச் சொல்லி அடம் பிடிப்பது போல அழு
அடுத்ததை நான் பார்த்துக் கொள்கிறேன் "என்றது

ஆடு கிடைக்கும் ஆசையில் நரியும்
உடன் சிங்கத்தைத்தேடிப்பிடித்து குகைக்குள்
நிறை மாத ஆடும் அதனுடன்
ஒரு குட்டிஆடும் இருக்கும் விஷயத்தைச் சொல்லி
ஆசைக் கூட்டி குகை வாசலுக்கு அழைத்து வந்தது

சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டதும் குட்டி ஆடு
தாய் ஆடு சொல்லிக் கொடுத்ததைப் போல
குரலை கொஞ்சம் கரடுமுரடாக்கி "அம்மா
எனக்கு எப்பம்மா சிங்கக் குடல் தரப்போற
ரொம்பப் பசிக்குதம்மா "எனச் சப்தமாக கத்தத்
தொடங்கியது

"பொறுடா கண்ணா சிங்கம் வருகிற மாதிரித்தான்
தெரியுது.வந்தவுடன் உனக்கு அதன் குடலை எடுத்துத்
தந்துவிடுகிறேன்.குடல் போக மீதியை மட்டும்
நான் வைத்துக் கொள்கிறேன்.சரியா "என்றது

இதைக் கேட்ட சிங்கத்திற்கு மிக லேசாக குடல்
நடுங்கத் துவங்கியது,நம் குகைக்குள்ளேயே
இருந்து கொண்டு நம் குடல் கேட்கிறது என்றால்
நிச்சயம் அது நம்மைவிட பலசாலியான
ஏதோ ஒரு புதிய மிருகமாகத்தான் இருக்கணும்
இந்த நரி ஏதோ தந்திரம் செய்து நம்மை கொல்லப்
பார்க்கிறது என் நினைத்து திருப்பி ஓடத் துவங்கியது

அதை விரட்டிப்பிடித்த நரி "சிங்கம் அண்ணே
நான் உங்களுக்கு துரோகம் செய்வேனா
நிச்சயம் அது நிறைமாத ஆடும் குட்டியும்தான்
தங்களை ஏமாற்ற குரல்மாற்றி அப்படிப் பேசுகிறது
நம்பிக்கை இல்லாவிட்டால் உங்கள் வாலுடன்
என் வாலை சேர்த்துக் கட்டிக் கொள்கிறேன்
பொய் என்றால் நான் ஓட முடியாது என்னை
அடித்தேக் கொன்றுவிடுங்கள் "என்றது

நரி இப்படிச் சொன்னதும் சிங்கத்திற்குப் பயம்
கொஞ்சம் குறைந்தது,ஆனாலும் எதற்கும்
இருக்கட்டுமென்று நரியை தன் வாலுடன்
இறுக்கக் கட்டிக் கொண்டு குகை நோக்கி வந்தது

இதை குகை இடைவெளியில் பார்த்த ஆடு
திரும்பவும் தன் குட்டியப் பார்த்து
அதே மாதிரி அடம் பிடி எனச் சொல்ல
குட்டி ஆடும்"என்னம்மா வந்த சிங்கமும்
ஓடிப் போயிடுச்சு,எனக்கு எப்பம்மா சிங்கக் குடல்
தின்னத் தர்ப்போறே " என்றது சப்தமாக

ஆடும் சப்தமாக சிங்கம் கேட்கும்படியாக
குரலை மாற்றி "அவசரப்படாதடா கண்ணா
நரி மாமா நம்மிடம் சொன்னபடி சிங்கத்தை
ஏமாற்றி எப்படியாவது தன் வாலில் கட்டியாவது
கொண்டுவந்துவிடுவார்.அதுவரை
பொறுமையாக இரு"என்றது

இதைக் கேட்டச் சிங்கம் "ஆஹா நரி நம்மை
வஞ்சம் தீர்க்க ஏதோ ஒரு பலசாலி மிருகத்தை
ஏற்பாடு செய்து நம்மை தந்திரமாக கொல்ல அல்லவா
பார்க்கிறது "என்கிற முடிவுக்கு வந்து தலைதெறிக்க
ஓடத் துவங்கியது

பாவம் நரி,தந்திரத்தின் மூலம் சிங்கத்தின் மூலம்
ஆட்டுக்கறி தின்ன முயன்ற நரி கல்லிலும் முள்ளிலும்
அடிபட்டு உயிரைவிட்டு கறியாகிக் கொண்டிருந்தது

புத்திசாலி ஆடு சிங்கத்தின் குகையில் எந்த வித
அச்சுறுத்தலும் இன்று சுகமாக குட்டியை
ஈன்று  கொண்டிருந்தது.

எனவே..(.மீண்டும் முதல்பத்தியைப் படிக்கவும்)

Thursday, June 26, 2014

கலையத் துவங்கும் கரு

எங்கோ ஒளிந்துகொண்டு
நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
நூலின் நுனி

பயணத்தையே முடக்கிப் போகிறது
பயணத்தின் முன்
புறப்பட்ட குழப்பமும் சந்தேகமும்

எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருகத் துவங்குகிறது
ஒரு தூய காதல்

அனுபல்லவியும் சரணங்களும்
மிகச் சரியாக அமைந்தும்
பல்லவி அமைந்து தொலையாததால்
கண் திறக்கப் படாத சிற்பமாய்
சிற்பக் கூடத்திலேயே
சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது
விடிவு காலம் எதிர்பார்த்து
தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
கலையத் துவங்குகிறது
ஒரு கவிதைக் கரு

Sunday, June 22, 2014

சிரிக்கத் தெரிந்த பிறவி

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மகிழ்வு பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
மகிழ்ச்சி  கொள்ளுவோம்

Wednesday, June 18, 2014

கவிதைப் புதிர்

ஓரிடத்தில் எடுத்து
ஊரெல்லாம் தெளித்து
ஓடுதொரு வண்டீன்னு சொன்னா-அது
கார்ப்பரேசன் குப்பைவண்டி நைனா

நிரப்பிவச்ச நீரை
வீதிபூராம் சிந்தி
பற்க்குதொரு வண்டின்ணு சொன்னா-அது
கார்ப்பரேசன் தண்ணிவண்டி நைனா

நிறுத்தத்தை விட்டு
நூறுஅடி தாண்டி
வெறுப்பேத்தும் வண்டின்ணு சொன்னா-அது
அரசாங்க டிரான்ஸ்போர்ட்டு நைனா

கரும்புகையைக் கக்கி
இடிச்சத்தம் போட்டு
ஒருஜீப்பு உன்முன்னே போனா-அது
ஊழியருக் கானவண்டி நைனா

சுழல்விளக்குச் சுற்ற
பார்ப்பவர்கள் சொக்க
அழகுவண்டி சாலையிலே போனா-அது
அதிகாரி வண்டியது நைனா

நூறுவண்டித் தொடர
சைரனொலி தெறிக்க
சீறிக்கிட்டு வண்டியொன்னு போனா-அது
அமைச்சரோட வண்டித்தான் நைனா

காவலர்கள் தடுக்க
காத்துவூரே நிக்க
போவதொரு  வண்டின்னு  சொன்னா -அது
யாரோட வண்டியது நைனா ?

Monday, June 16, 2014

தினம் நன்மை தடையின்றித் தொடர

மாடிமனை கோடியெனத்
தேடியோடிச் சேர்த்ததெல்லாம்
மனதுக்குள்ளே என்னமாற்றம் செய்யும் ? -அது
இன்னுமின்னும் எனக்கேட்டே கொல்லும்

பகலிரவாய் நூறுபெண்ணை
வகைவகையாய் அனுபவித்தும்
சுகம்போதும் எனமனமா சொல்லும் ?அது
அடுத்தொன்றைத் தேடித்தான் செல்லும்

நடுக்கமுடல் எடுத்தபின்னும்
நரைதிரையும் நிறைந்தபின்னும்
இருந்ததெல்லாம் போதுமென்றா எண்ணும் ?-மனது
இருக்கநூறு காரணங்கள் சொல்லும்

மொத்தமாக கத்துக்கிட்ட
வித்தைகளும் தத்துவமும்
சித்தத்திலே என்னவினை செய்யும் ?-அது
கூடுதலாய் குழப்பத்தான் செய்யும்

குட்டியிலே சங்கிலியில்
வளர்ந்தவுடன்  சணல்கயிற்றில்
கட்டிவைத்தால் கூடயானை அடங்கும்-மாறிச்
செய்துவைத்தால் சங்கடந்தான் மிஞ்சும்

மனமதனை அடக்கிவிட்டு
அறிவதனை வளர்தெடுத்தால்
தினம்நன்மை தடையின்றித் தொடரும்-மாறின்
சங்கடமே தொடர்கதைபோல் வளரும்

Friday, June 13, 2014

காரணம் மறந்த காரியங்கள்...

நம் நடன மகிழ்வுக்கு
ஒத்திசைவாய் இருக்குமென
நாம் கட்டிக் கொள்ளும்
காலச் சதங்கை
அதன் போக்கில் போவோமெனில்
நம்மை கணந்தோரும் ஆடவிட்டு
நிச்சயம் மூச்சிறைக்க வைக்கும்

சுமை இறக்கி இளைப்பாற
உதவியாய் இருக்குமென
நாம் சார்ந்திருக்கும்
உறவுச் சுமைகல்
சற்று அசந்துச் சாய்வோமெனில்
அதுவே கனத்தச் சுமையாகி
நம்மைக் கதற கதற வைக்கும்

அக்கரைப் போய்ச்சேர
ஆதரவாய் இருக்குமென
நாம் விரும்பி ஏறிய
நட்புப் படகு
துடிப்பின் விசையை இழந்தோமெனில்
நம் திசையை அது தீர்மானித்து
நம்மை அலைக்கழிக்க வைத்துவிடும்

நம்பிக்கை வளர்க்கவென்று
அவசியத் தேவையென
நாம் விரும்பித் தொடரும்
சம்பிரதாயங்கள் கூட
வெற்றுச் சடங்குகளாகிப் போயின்
அவநம்பிக்கையைப் பெருகவிட்டு
நம்மைஅது அற்பப் பிறவியாக்கிவிடும்

சொல்வதற்கு ஏதுமிருந்தும்
சொல்லத்தான் வேண்டுமென
நாளும் நச்சரிக்கும்
படைப்பது கூட
பயனற்ற கரு கொண்டதாயின்
நம் படைப்பைக் கூளமாக்கி
நம் மதிப்பைச் சூறையாடிப்போகும்

Wednesday, June 11, 2014

பதிவர் என்றொரு இனமுண்டு

பதிவர் என்றொரு இனமுண்டு
தனியே அவர்கொருத்  திறனுண்டு
கணினியே கதியெனக் இடந்தாலும் -கழுகின்
விரிந்த பார்வை தனைக்கொண்டு           (பதிவர் )

அழகை கண்டால் மனம்மகிழ்ந்து-அதனைப்
பதிவாய் பகிர உடன்முயலும்
அவலம் கண்டால் கொதித்தெழுந்து-அதனை
உலகம் அறிய உடன்பகிரும்               (பதிவர் )

சங்கக் கால இலக்கியமா
சினிமா, சமையல், உடல்நலமா
அந்தத் அந்தத் துறைகளிலே-முழுமை
திறமைக் கொண்டுத் திகழ்கின்ற           (பதிவர் )

மொக்கை போடும் இளையோரும்
முதிர்ச்சி கொண்ட முதியோரும்
சித்தம் தன்னில் பேதமின்றி-ஒன்றாய்
சேர்ந்து மகிழும் குணம்கொண்டு         (பதிவர் )

எழுத்தின் தரத்தை உயர்த்திடவும்
இனிய உறவை வளர்த்திடவும்
வருடம் ஒருமுறை சந்தித்து-தங்கள்
இனத்தின் உயர்வைச் சிந்திக்கும்         (பதிவர் )

எல்லைக் கடந்து இருந்தாலும்
எண்ணம் வேறாய் இருந்தாலும்
இல்லை எமக்குள் பேதமென்று-தொடர்ந்து
உறவாய் எண்ணி வாழுகின்ற           (பதிவர் )

   -------
அந்த இனத்தில் ஒருவனாக
தொடர்ந்து இருக்க முயல்வோமே
அந்த உறவின் அருமையினை  -என்றும்
தொடர்ந்து ரசித்து  மகிழ்வோமே 

Sunday, June 8, 2014

நகைச்சுவை-சிறு அலசல் ( 3 )

நகைச்சுவை துணுக்குகளில்
சட்டென சிறிதும் யோசிக்காமல் சிரிக்கவைப்பவைகளும்
இருக்கின்றன். கொஞ்சம் யோசித்துப் பின்
அதிகமாகச் சிரிக்கச் செய்பவைகளும் இருக்கின்றன

கலைவாணரிடம் ஒருவர்
தனக்கு தலை சுற்றுவதாகச் சொல்வார்
அதற்குக் கலைவாணர்
"அப்போ உன் முதுகு தெரியுமே " என்பார்

மிகச் சரியான வார்த்தை படம் முதலியவை
மறந்து போனாலும் கூட தலைச் சுற்றுதல்
குறித்தான எந்த பேச்சு வரும்போதும் இந்த
நகைச்சுவை நினைவு வந்து போவதைத்
தவிர்க்க இயலவில்லை

ஒரு சமயம்  என நண்பன் ஒரு நகைச்சுவை
துணுக்கைச் சொன்னான்.முதலில் புரியவில்லை
சிறிது இடைவெளிவிட்டு அவன்
புதிருக்கான விடையைச் சொன்னதும்
அந்த ஜோக்கை இது வரை மறக்க முடியவில்லை

ஒருவர் தன் நண்பனிடன் ஒரு விடுகதை போடுகிறார்

"மதுரையிலிருந்து சென்னைக்கு 450 கிலோ மீட்டர்

எனக்கு அல்வா என்றால் ரொம்பப் பிடிக்கும்

என் வயதென்ன ? "

சற்று யோசித்த நண்பர்  "முப்பத்தாறு "என்கிறார்

அதிர்ச்சியான நண்பன் மிகச் சரி
எப்படி மிகச் சரியாகக் கண்டுபிடித்தாய் " என்கிறான்

இவன் சொல்கிறான் " இதில் கஷ்டமே இல்லை
எங்கள் வீட்டுப் பக்கத்தில் ஒ ரு அரை லூசு இருக்கிறான்
அவனுக்கு வயது சரியாகப் பதினெட்டு "என்கிறான்

இதுபோல் நீங்கள் ரசித்த நகைச்சுவைத் துணுக்குகள்
ஏதும் இருப்பின் பகிர்ந்து மகிழ்விக்கலாமே 

Friday, June 6, 2014

நகைச்சுவை-சிறு அலசல் ( 2 )

அதிகப் பட்சம் உடலை
அஷ்டகோணலாக்குவதன் மூலம்
அல்லது அங்க சேஷ்டைகள் மூலம்
சிரிப்பை வரவழைப்பது ஒரு விதம் என்றால்
மிகச் சிறு அசைவுகளின் மூலம்
அல்லது ஒரு சிறு வார்த்தையின் முலம் அல்லது
ஒரு எழுத்து மாற்றத்தின் மூலம் நம்மை குபீரென
சிரிக்கவைப்பதும் ஒரு தனித்திறன் தான்

அந்த ஏழு நாட்கள் படத்தில் இறுதிக் காட்சியில்
ராஜேஸ் அவர்களை சந்திக்க மாடியின் கீழே
அமர்ந்திருக்கும் பாக்கியராஜ் அவர்கள்
அவருக்கும் முன் இருந்த மேஜையில் இருக்கும்
ஒரு பெண் சிலையை கையில் எடுப்பார்
அதன் முன் புறம் கொஞ்சம் செக்ஸியாக இருக்க
முகம் சுழித்து சட்டென அதன் பின்புறம் திருப்புவார்
அது இன்னும் கூடுதல் செக்ஸியாக இருக்க
சட்டென சிலையை  இருப்பிடத்தில் வைப்பார்

சிறு முகச் சுழிப்பு தவிர வசனம் ஏதும் இன்றி
இருக்கும் அந்தக் காட்சிக்குத் தியேட்டரில் எழும்
சிரிப்பலை அடங்க வெகுநேரம் ஆகும்
.இந்தப் படம் பார்த்தவர்களுக்கு நிச்சயம்
இன்று வரை மறக்கமுடியாதக்
காட்சியாகத்தான் இருக்கும்

அடுத்து
காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன்
ஏழை எனத் தெரிய பாலையா அவர்கள் அவரை
மிக மரியாதைக் குறைவாகவே பேசுவார்
மிகப் பெரிய பணக்காரர் போல முத்துராமன் அவர்கள்
தன்னை ஸ்தாபிதம் செய்து கொண்டு தன்னுடைய
மகன் தான் ரவிச்சந்திரன் எனச் சொல்ல
பாலையா அவர்கள் சட்டென் மாறி
ரவிச்சந்திரனை மிக  மதிக்கும்படியாக
"அசோகரு உங்க மகரா "என மகனில் வரும்
"ன் "கூட மரியாதைக் குறைவாகப் பேசுவதாகக்
காட்டிவிடும் என மகர் எனச் சொன்ன ஒரு சிறு
வார்த்தை மாற்றம் தியேட்டரில் ஏற்படுத்தும்
 மிகப் பெரியசிரிப்பலை ஓய வெகு நேரமாகும்

இப்படி சிறு அசைவும் ஒரு சிறு எழுத்து மாற்றமும்
சிரிப்பை ஏற்படுத்துவது ஒரு வகை என்றால்
ஒரு வார்த்தையை மாற்றி மாற்றிச்
சொல்வதன் மூலமும் மிகப் பெரிய சிரிப்பலையை
 உண்டாக்கிவிட முடியுமா  எனில்
அது  நிச்சயம் முடியும்

சுத்தமாக காது கேட்காத இருவர் ஆதி காட்டிக்
கொள்ளக் கூடாது என உதடின் மூலம் தெரிந்த
ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு விளையாடும்
விளையாட்டைப் பாருங்களேன்


முதலாமவர்"

 உன் பையன் என்ன மதுரைக்கா போயிருக்கான் ?

இரண்டாமவர்
:
இல்லையே அவன் மதுரைக்குத்தானே போயிருக்கான்

முதலாமவர்:

அதுதானே பார்த்தேன் .நான் கூட அவன் மதுரைக்குத்தான்
போயிருக்கான்னு நினச்சேன்

இதுபோல் நீங்கள் ரசித்த நகைச்சுவைக் காட்சிகளைப்
பகிர்ந்து அனைவரையும்  மகிழ்விக்கலாமே 

Wednesday, June 4, 2014

நகைச்சுவை குறித்து ஒரு சிறு அலசல்

நவரசங்களில் நகைச்சுவைக்குள்ள
மதிப்பே அலாதிதான்

என்னுடைய நண்பர் நகைச்சுவைத் துணுக்குகள்
குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்

அவரிடம் நகைச்சுவைத் துணுக்குகளின் வகைகள்
குறித்து நிறையப் பேசி எனக்கு அது குறித்த
ஒரு விசாலமான பார்வை உண்டு

முதலாவதாக
சூழலை வைத்து அமைகிற  ஒன்றுமற்ற
வார்த்தைகூட நம்மை அதிகம் சிரிக்க வைக்கும்

உதாரணமாக:
கல்யாணப்பரிசு படத்தில் மாப்பிள்ளை
என்ன பண்ணுகிறார் எனக் கேட்கிற கேள்விக்கு
டணால் தங்கவேலு "மாப்பிள்ளை போண்டா
சாப்பிடுகிறார்  "எனச் சொல்வது

அதேபோல்
அமரதீபம் படத்தில் பத்மினி அவர்களும் 
நடிகர் திலகம்அவர்களும் காதல் உணர்வில் மூழ்கிப்
பேசிக் கொண்டிருக்கையில்
சிவாஜி அவர்கள் அங்கு மரத்தடியில் கிடக்கிற
ஒரு வேரைகையில் எடுத்து பத்மினியின்
முகத்துக்கு நேராக
ஆட்டியபடி பேசிக் கொண்டிருப்பார்

காதலியைக் கவர வழிதெரியாது
 தவித்துக் கொண்டிருந்த டணால் தங்கவேலு அவர்கள்
பத்மினி நடிகர் திலகத்திடம்
மயங்கியபடி பேசிக் கொண்டிருப்பது
அந்த வேரின் மகிமையால்தான் என்கிற
முடிவுக்கு வந்துஅவர்கள் அந்த இடத்தை விட்டு
அகன்றவுடன்அங்கு  கிடக்கும் வேறொரு வேரை
கையிலெடுத்துக் கொண்டு தன் காதலியிடம் சென்று
அவரது முகத்துக்கு நேராக ஆட்டியபடி அதேபோல்
காதல் மொழிகள் பேசுவார்

கோபமான காதலி சட்டென அவரை அறைந்துவிட்டு
சென்று விடுவார்.கன்னத்தைத் தடவியபடி
டணால் தங்கவேலு "அது வேரு இது வேறோ "என்பார்
அந்தக் காட்சியை எத்தனை முறைப் பார்த்தாலும்
நம்மால் சிரிக்காமல் இருக்கமுடியாது

உதாரணத்திற்குச் சொன்ன இரண்டு துணுக்குகளிலும்
சூழல் காரணமாக வெற்று வார்த்தைகள் அதிக
சிரிப்பைத் தரமுடியும் என்பதற்கு உதாரணங்கள்

அடுத்த வகை குறித்து அடுத்த பதிவில்

இதே போன்று சூழல் காரணமாக வெற்று வார்த்தைகள்
அதிக சிரிப்பை ஏற்படுத்திய காட்சியை நீங்களும்
பகிருங்களேன்,சேர்ந்து மகிழ்வோம்

Tuesday, June 3, 2014

பதிவர் பகவான்ஜியுடன் ஒரு கற்பனை உரையாடல்

நான்:
பகவான்ஜி மிகக் குறுகிய காலத்தில்
அதிக வாசகர்களைப் பெற்றதும்
 தமிழ்மண தரவரிசைப்பட்டியலில்
 மிகச் சீக்கிரமாக முன்னிலை பெற்றுவருவதும்
 தாங்கள் தான் என்பதில் சந்தேகமில்லை
அதற்கு பிரதான காரணம் என்ன எனச்
சொல்ல முடியுமா ?

பகவான்ஜி:
ஓ தாராளமாக
 தினம் ஒரு பதிவு தருவதும்
 நகைச்சுவைப் பதிவாகத் தருவதும்
 அதை சுவாரஸ்யமாகத் தருவதும் தான்

 நான்;
அற்புதமான பதில் .தினம் ஒரு பதிவு புரிகிறது
சிறப்பான நகைச்சுவைப் பதிவு என்பதும் புரிகிறது
அதை சுவாரஸ்யமாகத் தருவது எப்படி என்பதுதான்
எங்களுக்குப் புரியவில்லை சிறப்பாகச் சொல்வதற்கும்
சுவாரஸ்யமாகச் சொல்வதற்கான
 சூட்சுமத்தைச் சொன்னால் எங்களுக்கும் பய்ன்படும்.
உதாரணத்துடன் சொல்லமுடியுமா ?

     
பகவான்ஜி:  
ஓ ! தாராளமாக

 நான் எனச் சொன்னால் உதடு ஒட்டாது
 நாம் எனச் சொன்னால்தான் உதடுகள் ஒட்டும்

 இது சிறப்பாகச் சொல்வது

 ஒயிஃப் என்றால் உதடு ஒட்டாது
 கீப் என்றால்தான உதடு  ஒட்டும்

 இது சுவாரஸ்யமாகச் சொல்வது இது போதுமா ?

 இன்னும் கொஞ்சம் வேணுமா ?

நான்   :  
அற்புதம்.இதை விடத் தெளிவாக
யாரும் விளக்கிச் சொல்லிவிட
 நிச்சயம் முடியாது.
நீங்கள் முதலிடத்தைப் பெறுவதையும்
அதிக வாசகர் எண்ணிக்கையைப் பெறுவதை யாரும்
தடுத்துவிடமும் முடியாது .

வாழ்த்துக்கள்

Monday, June 2, 2014

முரண் சுவை

படித்தவன் பாடம் நடத்த
படிக்காதவன்
பள்ளிக்கூடம் நடத்துகிறான்

பக்தியுள்ளவன் கோவிலைச் சுற்ற
பகுத்தறிவுவாதியோ
கோவிலையே சுருட்டுகிறான்

தொண்டன் இழந்து சாவியாக
தலைவனோ
சேர்த்துத் தியாகியாகிறான்

காந்தி நாட்டுக்குத் தன்னைத்தர
அரசியல்வாதியோ
காந்தி நோட்டுக்கு தன்னைத் தருகிறான்

இப்படி எழுதவும் கேட்கவும்
முரண்கள்
சுவையாகத்தான் இருக்கிறன

யதார்த்தத்தில் அவைகள்
அச்சமூட்டிப் போயினும்
அசிங்கப்படுத்திப் போயினும்....