Thursday, September 29, 2011

நவராத்திரிச் சிந்தனை


மரத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆணிவேர்தான் காரணம்
என்பதை விவசாயிக்கு விளக்க வேண்டியதில்லை
மாளிகையின் நிலைப்புக்கும் உறுதிக்கும்
அஸ்திவாரம்தான் முழுக்காரணம் என்பதை எந்த பொறியாளருக்கும  
விளக்க வேண்டியதில்லை
இச்சமூகத்தின் வளச்சிக்கும் மேன்மைக்கும் பெண்கள்தான்
காரணம் என்பதைஇந்தியாவில் எவருக்கும் யாரும்
விளக்கவேண்டிய அவசியமே இல்லை

ஏனெனில் இதனை
ஆதியிலேயே மிகத் தெளிவாக அறிந்திருந்தனால்தான்,

படைக்கும் பிரம்மனுக்குத் துணையாக கலைக்கும்
கல்விக்குமான கலைமகளை துணையாக்கி மகிழ்ந்திருக்கிறான்
காக்கும் திருமாலுக்கு இணையாக கருணையும்
செல்வத்திற்குமான திருமகளை துணைவியாக்கி
குதூகலித்திருக்கிறான்
அழிக்கும் ருத்திரனுக்கு இணையாக ஆக்ரோஷமும்
சக்தி மிக்கவளுமான மலைமகளை இணையாக்கி இன்பம் கொண்டிருக்கிறான்

கலைமகள் துணையற்று படைத்தலும்
திருமகள் கருணையற்று காத்தலும்
சக்தியின் அருளற்று அழித்தலும்
ஆகாத ஒன்று என அறிந்ததால்தான்
முப்பெரும் தேவியரை பிரதானப் படுத்தி
ஒன்பது இரவுகளை தேர்ந்தெடுத்து
 நவராத்திரியாக கொண்டாடியும்  மகிழ்ந்திருக்கிறான்
நாமும் தொடர்ந்து கொண்டாடி மகிழ்கிறோம்

அதைப் போன்றே 
குழந்தையாய் முழுமையாக அவளைச்  சார்ந்திருக்கும் நாளில்
அன்பின் மொத்த வடிவாக  அன்னையாக
கணவனாக அவளுக்கு இணையாக சேர்ந்திருக்கும் நாளில்
பின்னிருந்து இயக்கும் சக்தியாக தாரமாக 
வயதாகி சக்தியிழந்து ஓய்ந்துச் சாய்கிற நாளில்
அனைத்துமாய்  தாங்கும் அன்புமிக்க மகளாக
 மண்ணகத்தில் மங்கையர் எல்லாம் கண்கண்ட
முப்பெரும் தேவியராய்த் திகழ்வதாலேயே
மங்கையரைக் கௌரவிக்கும் நாளாகவே இந்த
 நவராத்திரித் திரு நாளைக் கொண்டாடி
 நாமும் மகிழ்கின்றோம்
அவர்களது தியாக உள்ளங்களை இந் நாளில்
 சிறிதேனும் நாமும் கொள்ள முயல்வோம்
அவர்களோடு இணந்து இந்தச் சீர்கெட்ட சமூகம் சிறக்க
 நாமும்  நம்மாலானதைச் செய்வோம்

Monday, September 26, 2011

மர்ம இடைவெளி



தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் ஒன்று
தொடர்ந்து நடக்கிறது

உரையாடலில்
பேசுபவனே கேட்பவனாகவும்
கேட்பவனே பேசுபவனாகவும்
மாறிக்கொள்ளுதலைப் போலவே

இந்நாடகத்தில்
பார்வையாளர்களே நடிகர்களாகவும்
நடிகர்களே பார்வையாளர்களாகவும்
மாறி மாறி
நாடகத்தை தொடர்ந்து நடத்திப் போகிறார்கள்

ஆயினும்
நாடகம் ஒத்திகையற்றததாய் இருப்பதால்
திடுமெனத் தோன்றும் எதிர்பாராத திருப்பங்கள்
அதிர்ச்சியூட்டிப் போவதால்
பலர் நிலை குலைந்து போகிறார்கள்

இயக்குநர் யாரெனத் தெரிந்தால்
முடிவினை அறியக் கூடுமோ என
புலம்பத் துவங்குகிறார்கள்

புலம்பித் திரிபவர்களுக்கு ஆறுதலாய்
கைகளில் பேரேடுகளைச் சுமந்தபடி
பலர் அரங்கினுள் வலம் வருகிறார்கள்

இதுதான் மூலக் கதையென்றும்
இதுதான் இயக்குநர் வந்து போனதற்கான
உண்மை அத்தாட்சி யெனவும்
இனி அவரின் வருதலுக்கான
உறுதிமொழியெனவும்
அறுதியிட்டுக் கூறுகிறார்கள்

பலர் இதை ஒப்புக்கொண்டு
உடன்பட்டுப் போகிறார்கள்

சிலர் மட்டும் இன்னும் அதிகம்
குழம்பிப் போகிறார்கள்

"ஒரு நாடகத்திற்கு எப்படி
பல கதைகள் இருக்கக் கூடும்
பல இயக்குநர்கள் எப்படிச் சாத்தியம் "

இவர்கள் கேள்விக்கு ப்திலேதும் இல்லை

ஒவ்வொருவரும் தத்தம் கதைப்படித்தான்
நாடகம் தொடர்கிறது
முடிவு கூட இதன் படித்தான் என
சாதித்துத் திரிகிறார்கள்

இவர்களின் பிரச்சாரத்தில்
குழுக்கள் கூடிப்போகிறதே தவிர
குழப்பம் தீர்ந்தபாடில்லை

இந்தக் குழுக்களுக்களுக்கு
சிறிதும் தொடர்பே இல்லாது
ஒரு புதிய குழு உரக்கக் கூச்சலிடுகிறது

" இது நிகழ் கலை
இதை எழுதியவன் எவனும் இல்லை
இதை இயக்குபவன் எனவும் எவனும் இல்லை
நடிகன் இய்க்குநர் எல்லாம் நாமே
நாடகத்தின் போக்கும் முடிவும் கூட
நம் கையில்தான் " என்கிறது

இது குழம்பித் திரிபவர்களை
இன்னும் குழப்பிப் பைத்தியமாகிப் போகிறது

பசியெடுத்த குதிரையின் உடலில்
ஓரடி நீட்டி கட்டப்  பட்டப்
புல்லினைப் பிடிக்க
குதிரை நித்தம் ஓடி ஓடி  ஓய்கிறது

ஓடினாலும் நின்றாலும்
அதன் வாய்க்கும் புல்லிற்குமான
இடைவெளி  மட்டும்
குறையாது இருத்தல் போல

கேள்விக்கும் புதிருக்குமான
மாய இடைவெளி மட்டும்
குறையாது
தொடர்ந்து கொண்டே இருக்கிறது

தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் மட்டும்
தொடர்ந்து கொண்டே  இருக்கிறது

Monday, September 19, 2011

லெட்சுமணக்கோடு


லெட்சுமணக் கோட்டில் நின்று
இருபுறமும் பார்த்த அனுபவம் உண்டா ?

சிற்றுண்டிச் சாலைகளில்
அன்னியர்கள் பிரவேசித்தல் கூடாது
என்கிற எல்லையின் வலதுபுறம்
இட்டிலியில் கிடந்த ஈயை
எடுத்துப் போடும் அசிங்கத்தையும்
வலதுபுறம் மிகப் பணிவாக
அவனே பறிமாறும் லாவகத்தையும்...

நாடக மேடையில்
திரைச்சீலையில் வலதுபுறம்
அவசர அவசரமாய்
முதுகு சொரியும் கண்ணனையும்
இடதுபுறம் முன் மேடையில்
ரசிகர்கள் ஆர்ப்பரிக்க
அருள் கொடுக்கும் அதே  கண்ணனையும்

திருமண மண்டபத்தின் பின்னறையில்
இரண்டு பவுன் குறைவதற்காக
ருத்ர தாண்டவமாடும் சம்பந்தியையும்
அது சரிபடுத்தப் பட்டபின்னே
மணவறை மேடையில்
நாகரீகமாய் நடந்துகொள்ளும்
அதே பச்சோந்தி சம்பந்தியையும்

இலக்கியக் கூட்டங்களில்
கற்பைப் பொதுவென வைப்பது குறித்து
அனல்பறக்க பேசிவிட்டு
கூட்டம் முடிந்தவுடன்
புதிதாகச் சேர்த்த சின்னவீட்டை
சிரித்து அணைத்தபடிச் செல்லும்
சிரு
ங்கார வேலர்களையும்

திருவிழாக் கூட்டங்களில்
மனைவி முன்செல்ல
காமக் கண்களைஅலைய விட்டு
பின் சேர்ந்து நடக்கையில்
கண்களில் காதலும் கனிவும   பொங்க
ராமனாய் காட்சி தரும்
அயோக்கிய சிகாமணிகளையும்...

இப்படி

இருளுக்கும் ஒளிக்கும்
பொய்மைக்கும் உண்மைக்கும்
இடையில் நின்று பார்க்கத் தெரிந்தவர்கள்தான்
தலைவர்களாக,
 கவிஞர்களாக
ஏன் ஞானிகளாகக் கூட மாறிப் போகிறார்கள்

நாம் அப்படியெல்லாம் கூட மாறவேண்டாம்
அவர்களைக் கண்டு மயங்கித் தொலையாதிருக்க
ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா

Saturday, September 17, 2011

இரண்டும் ஒன்றுதானோ ?


வெகு நாட்களுக்குப் பின் தையற்கடை வைத்திருந்த
என் நண்பரைப் பார்த்தேன்
வழக்கம்போல " தொழில் எப்படிப் போகிறது ?"
எனக் கேட்டும் வைத்தேன்
நண்பன் புலம்ப ஆரம்பித்துவிட்டான்

" முன்பெல்லாம் நம் சீதோஷ்ண நிலைக்கு
ஏற்றார்ப் போல அதிக நாள் உழைக்கும் படியான
துணியெடுத்து தைக்கக் கொடுப்பார்கள்
உடலுக்கு ஏற்றார்ப்போல
வடிவமைக்கச் சொல்வார்கள்
அவயங்கள் அசிங்கமாகத் தெரியாதவாறு
கொஞ்சம் பெரியதாகவும் தைக்கச் சொல்வார்கள்

இப்போது எல்லாம் தலை கீழ்
மினுமினுப்பு பளபளப்பு இருந்தால் போதும்
உழைப்பது குறித்து அக்கறையில்லை
உடலை ஒட்டி இருக்கும்படியாகவும்
அவயவங்கள் கொஞ்சம் தெரியும் படியாகவும்
முடிந்தால் பெரிதாகத் தெரியும் படியாகத்
தைக்கச் சொல்கிறார்கள்
கலாசாரச் சீரழிவுக்கு துணை போகிறோமோ என
அச்சம் என்னுள் இருளாய் பரவுகிறது
எனக்கு மனம் வெறுத்துப் போய்விட்டது
தொழிலை மாற்றலாம் என இருக்கிறேன் " என்றான்

அவனுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகள்
கூறிவிட்டு நடக்கையில் நேர் எதிரே
என் இலக்கிய நண்பனைப் பார்த்துவிட்டேன்
முன்பெல்லாம் முன்ணனி இலக்கியப் பத்திரிக்கைகளில்
அவன் கவி இடம் பெறாத பத்திரிக்கைகளே இருக்காது
சினிமாவிலும் எழுதிக் கொண்டிருந்தான்
இப்போது ஏனோ அதிகம் எழுதுவதில்லை
காரணம் கேட்டுவைக்க
அவனும் புலம்பத் துவங்கிவிட்டான்

" முன்பெல்லாம் கவிதையெனச் சொன்னால்
காலம் வெல்லக் கூடியதாய் தரமானதாய்
இருத்தல் வேண்டும் என வலியுறுத்துவார்கள்
உள்ளதை உள்ளபடி உரைக்கக் கூடியதாய்
உண்மையை அழுந்தச் சொல்வதாய்
அவசியம் இருக்கவேண்டும் என்பார்கள்
அனைவரும் ஏற்கும்படியாகவும்
ஆபாசம் அறவே தவிர்க்க வேண்டும் என்பார்கள்

இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டது
வக்கிர உணர்வை உடன் உசுப்பிவிடும்
வல்லமை மிக்க காமக் கவிதைகளாய்
அறிவை மழுங்கடிக்கக் கூடியதாகவும்
மனதின் அரிப்பிற்கு தீனி போடும்படியாகவும்
வார்த்தைகள் அவசியம் என்கிறார்கள்
முடிந்தால் வார்த்தைகள் கூட வேண்டாம்
ஆபாச சப்தங்கள் குறியீடாக இருந்தாலே போதும்
இளைஞ்ர்களையும் காமக் கிழடுகளையும்
வசீகரிப்பதாய் இருக்க வேண்டும் என்கிறார்கள்
சமூகம் கெட நானும் காரணமாகி விடுவேனோ என்
எனக்குள் ஒரு நெருடல் விஷமாய்ப் பரவுகிறது
எனக்கு வெறுத்துப் போய்விட்டது
எழுதுவதையே நிறுத்திவிடலாமென இருக்கிறேன்" என்றான்

இவனுக்கும் ஆறுதலாக நாலு வார்த்தைகள் சொல்லி
வீடு வந்து சேர்வதற்குள்
எனக்குள் குழப்பம் கூடிப்போனது
பரமனின் முதுகில் பட்ட அடி
அனைத்து ஜீவராசிகளின் மீதும் பட்டது போல
கலாச்சாரம் பண்பாடுகளின் மீது விழும் அடியும்
இப்படித்தான் பாகுபாடின்றி பரவித் தாக்குமா?
கவிஞனும் தையற்காரரும் கூட
ஏன் சட்டையும் கவிதையும் கூட
அதற்கு ஒன்றுதானா ?


Thursday, September 15, 2011

எங்கு தமிழ் எதில் தமிழ் ?

வெகு நாட்களுக்குப் பின்
என் நண்பனின் கடைக்குப் போனேன்

சங்கர் சைக்கிள் மார்ட் என இருந்த நேம் போர்டை
சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என
அழகாக மாற்றி இருந்தான்
நான் பூரித்துப் போனேன்

" நேம் போர்டை எப்போது மாற்றினாய்
சிறப்பாக இருக்கிறது " என்றேன்
 " யார் மாறினாலும் நீ எல்லாம் மாற மாட்டாய்
பெயர்ப்  பலகை எனச் சொல் " என்றான்

" ஓ சாரி சாரி..பெயர்ப்  பலகையை
எப்போது மாற்றினாய் "என்றேன்

தலையில் அடித்து கொண்டான்
"ஏன் தவறு.. தவறு எனச் சொல்லக் கூடாதா " என்றான்

அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது
இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்

"ஒரு மிதி வண்டிக்கு இருபது
சிறு பொருட்கள் தேவைப் படுமா " என்றேன்
முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது
எனக்கே பெருமையாக இருந்தது

"படும் " என்றான் சுருக்கமாக

"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்
சொல்ல முடியுமா " என்றேன்

என்னை அலட்சியமாக பார்த்தபடி
மடமடவென சொல்லத் துவங்கினான்

"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்
பதினைந்து ஆச்சா" என்றான்

" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்
மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்
பொருட்கள் பதினைந்து சரி
தமிழ் என்ன ஆயிற்று "என
வைரமுத்து பாணியில் பேசிவிட்டு
கிளம்பத் தயாரானேன்

விடைகொடுத்து அனுப்பிய அவன் கண்களில்
ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது

விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்

எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
நிச்சயமாக நம்மைப் போலவே  
அவனுக்கும் சில நாளில்  புரியக் கூடும்

Monday, September 12, 2011

நாமளும் தெனாலிராமன்கள்தான்

பாலை விரும்பிக் குடிப்பதுதான்
பூனையின் இயற்கைக் குணம்
அதை மாற்றுவதற்கு நாம்
அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை


முதலில் பாலைக் கொடுக்கையிலேயே
மிக மிக சூடாய் கொடுத்திடவேண்டும்
சூடு பொறுக்காது
பாலைக் குடிக்காது ஒடிவிடும்
திரும்ப பசியெடுத்து வருகையில்
மீண்டும் சூடாகக் கொடுக்கவேண்டும்


இப்படித் தொடர்ந்து செய்ய
சூடாக பாலிருக்கிறது என்பதை மறந்து
வெண்மையாக இருப்பதெல்லாம்
சுடும் என்று நம்பத் துவங்கிவிடும்
இனி வெண்மையாக எதைக் கண்டாலும்
பயந்து ஓடத் துவங்கிவிடும்


இனி நமக்கு கவலை இல்லை
பூனை எப்படி ஆனால் என்ன
நமக்கு பால் செலவு மிச்சம்


இப்படித்தான்
கேள்விகள் கேட்பதுதான்
குழந்தைகளின் இயற்கைக் குணம்
அதை மாற்றுவதற்கும் நாம்
அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை


முதல் கேள்வி கேட்கையிலேயே
அதை அடக்கி ஒடுக்க வேண்டும்
நம் கோபம் பொறுக்காது
கேள்வி கேட்காது அடங்கிவிடும்
மீண்டும் ஆர்வம் பொங்க
கேள்வி கேட்கத் துவங்கினால்
அரட்டி மிரட்டி அடக்க வேண்டும்


இப்படித் தொடர்ந்து செய்ய
கேள்வி கேட்பதே தவறு என
அப்பாவுக்கு கோவம் வருமென
அந்தப் பிஞ்சு மனதிற்குத் தெரிந்துபோகும்
இனி மனதில் கேள்வி எழுந்தாலே
அடக்கிக் கொள்ளப் பழகிவிடும்


இனி நமக்கு கவலை இல்லை
நம் குழந்தை முட்டாளானால் என்ன
நச்சரிப்பு தொல்லை இனி நமக்கில்லை

       
 ---------------          --------------


டிஸ்கி:குழந்தைகள் மனத்தை புரிந்து கொள்ளாது
சிறுவர்களாகவே இருக்கிற வயதில் பெரியவர்கள்
புரிந்துகொள்வதற்காக சிறுவர் மலர் விஷயம்போல
மிக மிக எளிமையாய் சொல்லப்பட்டுள்ளது
பெரியவர்கள் மன்னிக்க வேண்டும்

Thursday, September 8, 2011

சைத்தான் இருப்பது மெய்

                     

"சைத்தான் என்பது பொய் அப்படி எதுவும் இல்லை"
இப்படிச் சொல்பவனை தொடராதே
அவன் அறியாது பேசுகிறான்

கரிய இருள்போர்த்தியபடி குழிவிழுந்த கண்களோடு
கோரைப் பற்களை கடித்தபடி கர்ஜித்து வரும் சைத்தான்
அழிந்து பல காலமாகிவிட்டது

முன்பு போல அவன் முட்டாள் சைத்தான் இல்லை
அவன் புத்திசாலி ஆகி பலயுகங்களாகிவிட்டது
முன்பு போல கோடாலி கொண்டு மரத்தை வெட்டி அவன்
நொந்து சாவதில்லை
மாறாக வேரை பிடுங்கி வெந்நீர் ஊற்றிவிட்டு விழுவதை
வேடிக்கைப் பார்க்கிறான்

நம்மை வீழ்த்தக் கூட இப்போதெல்லாம் அவன்
தன் கோரைப் பற்களையும் கூரிய நகங்களையும் நம்புவதே இல்லை

நம் வீட்டுக் கூடத்தில் தொலைக்காட்சிப் பெட்டியில் துவங்கி
உல்லாச உதவாக்கரை நண்பர்களாகத் தொடர்ந்து
நம்மை பாதை தவறவிட்டு ஏமாளியாக்கி
முதலில் நம் நேரத்தை களவாடிக் கொள்கிறான்

பின் வீண் கனவுகளில் கற்பனைகளில் மூழ்கவிட்டு
நோக்கமற்று அலையவிட்டு
நாவுக்கும் மனதிற்கும் குடலை பலியாக்கி
ஆசைக்கும் உணர்வுக்கும் நம் உடலை பலிகொடுத்து
நம் சக்தி முழுவதையும் உறிஞ்சிக் கொள்கிறான்

முடிவாக உல்லாசங்களில் கேளிக்கைகளில்
தேவையற்ற ஆடம்பரங்களில், போலி கௌரவங்களில்
நம்மை முழுமையாக மூழகவிட்டு
நம் வளத்தையெல்லாம் அபகரித்துக் கொள்கிறான்

இப்படி தேரிழந்து ஆயுதமிழந்து சக்தியிழ்ந்து
மண்பார்த்து நிற்கும் மாமன்னனாக ஆனபின்னே
சக்தியற்றவன் உடலில் சட்டெனப் புகும் நோயினைப் போல்
நமக்குள் முழுமையாய் நிறைந்து கொள்கிறான்

நம்மிடம் இப்போது எதுவுமே இல்லை ஆயினும்
தொடர்ந்து வாழ எல்லாமும் வேண்டியதாயும் இருக்கிறது

இப்படியோர் இடியாப்பச் சிக்கலில்
ஆப்பசைத்து மாட்டிய குரங்கு போல் மாட்டி
செய்வதறியாது கைபிசைந்து நிற்கும்வரை
நமக்கு அன்னியன் போலிருந்த சைத்தான்
இப்போது நமக்குள் நாமாகவே மாறி
நமக்கே புதிய வேதம் ஓதுகிறான்

" பணத்தை கொண்டு எதை வேண்டுமானாலும்
செய்ய முடியும்,வாங்க முடியும் என்கிற
இந்த கேடுகெட்ட உலகில்
பணம் சம்பாதிக்க
எந்த கேடு கெட்ட செயலைச் செய்தால்தான் என்ன ?"

சுயநலமாகவும் தர்கரீதியாகவும் யோசித்துப் பார்க்கையிலும்
உலக நடப்பை கூர்ந்து பார்க்கையிலும்
அவன் சொல்வது சரியாக மட்டும் படவில்லை
நிலை தவறிய நமக்கு புதிய கீதை போலவே படுகிறது
வேறு வழியின்றி நம்மை அறியாது
நாமே சாத்தானாக உரு மாறத் துவங்குகிறோம்

எனவே
"சைத்தன் என்பது பொய் அப்படி எதுவும் கிடையாது"
இப்படிச் சொல்பவனைத் தொடராதே
அவன் அறியாது பேசுகிறான்

Sunday, September 4, 2011

இருளும் மௌனமும்



அடர் இருளுக்கும்
உன் தொடர் மௌனத்திற்கும்தான்
எத்தனைப் பொருத்தம் ?

இருளைக் குறைந்த ஒளி என்பான்
பாவேந்தன் பாரதி
அவன்வழியில் யோசிக்கையில்
உன் மௌனம் கூட எனக்கு
குறைந்த மொழியெனத்தான் படுகிறது

விழிகளை அகலத் திறந்திருந்தபோதும்
அடர்ந்த இருளில்
பொருட்கள் புலப்படாதது மட்டுமின்றி
அர்த்தமற்ற அச்ச உணர்வையும்
அதீத தொடர் கற்பனைகளையும்
வளர்த்துப் போவதைப்போல்
உன் காரணம் புரியாதொடர் மௌனம் என்னுள் 
எதிர்மறை எண்ணப் புயலையும்
தேவையற்ற அச்ச அலைகளையும்
வளர்த்துவிட்டுத்தான் போகிறது
அடர்வனத்தில் திசைகள் அறியாது
குழம்பித் திரிகிறேன் நான்

நீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்
ஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது
உதிர்த்துவிட்டுப் போ
அது போதும் எனக்கு

கதிரவன் எழுமுன் தோன்றும்
அந்தப் பாலொளிப் பரவலில்
அர்த்தமற்றுப் பூரித்துத் திரியும்
அறிவற்றப் புள்ளினங்கள் போல்
மகிழ்ச்சிக் கடலில்
சிறிது நேரமாவது நானும்
திளைத்துத் தொலைக்கிறேன்