Tuesday, May 31, 2011

மயான சங்கல்பம்

அர்த்த ஜாமத்தில்
மயானத்தின் மத்தியில்
எறியும் சிதையருகில்
எப்போதும்
"அதுகளும்" நானும் மட்டும் இருப்போம்

எரிகின்ற   சிதையை
"அதுகள்" எதையோ
இழந்ததைப் போலப் பார்க்கும்
போதையின் உச்சத்தில்
சில சமயம்
என்னை அறியாது நான் பிதற்றுவேன்
"அதுகளும்"
தன்னை அறியாது
பிதற்றத் துவங்கும்

"அது" ஆணாக இருப்பின்
முதலில் ஒரு ஏக்க பெருமூச்சு விடும்
பின்
"அவளை அவ்வளவு கஷ்டப் படுத்தியிருக்க வேண்டியதில்லை"
எனச் சொல்லி
விக்கி விக்கி அழும்
நான் ஆறுதல் சொல்லித் தேற்றுவேன்
"அடுத்த ஜென்மத்திலாவது மனிதனாக
நடந்து கொள்ள வேண்டும்"
எனப் பிதற்றி நகரும்

"அது" பெண்ணாக இருப்பின்
"இனி இந்த மனிதன் என்ன பாடு படப் போகிறானோ' என
விம்மி விம்மி அழும்
நானும் ஆறுதல் சொல்வேன்
முடிவாக
"படட்டும்...நன்றாகப் படட்டும்
அப்போது தான் என்னருமை தெரியும்"
எனச் சொல்லி நகலும்

போதையின் உச்சத்தில்
எனக்கும் ஞானம் வரும்
மயானம் விட்டு வெளியேறுகையில்
நானும் முழு மனிதனாகத்தான் போவேன்

வீதி கடந்து வீடு நுழைகையில்
எனக்கு முன்பாகவே
என் "வீராப்பு" அமர்ந்திருக்கும்

"மனிதன் செத்து பொழச்சு வாரான்
தூக்கத்தப் பாரு" என
என் குரல் ஓங்கி ஒலிக்கும்
ஒரு கால் கதவை உடைக்கும்

போதையில்
உடல் மட்டும்தானா ஆடும்?
வீடென்ன
வீதியே ஆடத் துவங்கும்

Thursday, May 26, 2011

தாய்மை

அகன்று விரைந்து பரவிஆக்ரோஷமாய்
ஊர் மிரட்டி ஓடியது
அகண்ட காவேரி.
அதனுள்
இருப்பிடம் தெரியாது
கரைந்து கிடந்தாலும்
தான் தான் காவேரி என
பெருமிதம் கொண்டிருந்தது
தலைக்காவேரித் துளி நீர்.

அதிகாலைப் பொழுதில்
மெல்ல மெல்ல விரியும்
பூவிதழ்களாய்
வ்ளர்ந்து விரிந்து
வாசல் நிறைத்து நின்றது
மார்கழி மாதத்து வாயிற்கோலம்
அதன் முழு வளர்ச்சியில்
தான் முற்றாய் மறைந்துபோனாலும்
அதனை நிர்மானித்த பெருமிதத்தில்
மன நிறைவு கொண்டது கோலப்புள்ளி.

சொற்க் காம்புகளின் உச்சியில்
பூத்துச் சிரித்த
உணர்வுப் பூக்களைத்
தாங்கிய போதையில்
மண்மறந்து வானம் தொட
முயன்று தள்ளாடியது ஒருகவிதை
அதிகம் அறியப்படாது
உள்ளடங்கிக் கிடந்தாலும்
கவிதைக்கு உயிர்தரும் மகிழ்வினில்
வேராக உள்ளிருந்தே
பெருமையில் திளைத்தது
கவிதை தந்த கரு

பட்டம் பதவி தந்த
வசதி வாய்ப்புகளில்
ஊரெல்லாம் வாய்பிளக்க
வானம் தொட்டு நின்றான்
வறுமை அறியாதபடி
பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை
சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது போயினும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது தாய்மை

Sunday, May 22, 2011

பரிதவிக்கும் படைப்புகள்

வீரிய மிக்க விதை நெல்லை
வீடு நிறைய வைத்திருந்து
வாங்குவோரை எதிர்பார்த்து
வாயிலிலே காத்திருப்பான்
ஒரு நிலமற்ற வியாபாரி

உழுதுபோட்ட நிலத்தினிலே
விதைப்பதற்கு ஏதுமின்றி
விசனப்பட்ட மனத்தோடு
வீதியிலே தினம் திரிவான்
ஒரு வக்கற்ற விவசாயி

கையிலிருக்கும் காணியினை
ஆனமட்டும்  தினம்உழுது
கிடைத்ததனை விதைத்துவிட்டு
வானம்பார்த்து ஏங்கி நிற்பான்
ஒரு வகையற்ற சம்சாரி

மொழிவல்ல அறிஞனுக்கும்
விதியறியா புலவனுக்கும்
இட்டுக்கட்டிப் பாடுகின்ற
இரண்டுக்கெட்டான் கவிஞனுக்கும்
இடையினிலே அவதியுறும்
இனியதமிழ் கவிபோல

பொன்விளையும்  பூமிக்கும்
வீறுகொண்ட வித்துக்கும்
இரண்டையும் இணைக்கின்ற
ஈடில்லா  உழைப்பிற்கும்
இணைப்பின்றித்  துடித்திருக்கும்
பாழான "வேளாண்மை"





Wednesday, May 18, 2011

பொதுவென வைத்தோம்......

நெருடுகிற நெருக்கத்தில்
வேறொரு பெண்ணுடன்
அவனைக்கண்ட சித்தப்பா
அரண்டுதான் போனார்

அவனா இப்படி......
வீடு பகைத்து
வீதி பகைத்து
ஊர் பகைத்து
உறவு பகைத்து....

தெய்வீக உறவென்றும்
பிரிக்கத் துணிந்தால்
சாதலே முடிவென்றும்
வேர்களை எரித்துப்போன....
அவனா இவன்
சித்தப்பா சிதைந்துதான் போனார்

அவன் சிறிதும் கலங்கவேயில்லை
அலட்டிக் கொள்ளவும் இல்லை
தெளிவாகவே இருந்தான்

அடுத்து அடுத்து இரண்டு குழந்தை
அதனை அடுத்து மூன்று அபார்சன்
அழகும் இளமையும் அடியோடு போனபின்
அவளொடு எப்படி நகர்வலம் கூடும்
சன்னதிக்கு அவள்
சாயங்க்காலத்திற்க்கு இவள்
இவன் சங்கடப்படவே இல்லை
தெளிவாகத்தான் இருந்தான்

நிற்பவர்கள் இருவரும்
நிற்பதில் மட்டும் இல்லை
நினைப்பிலும் வேறுவேறாக இருப்பது தெரியாமல்...

இரவு எட்டுமணிக்குள்
வீடு திரும்பவில்லையெனில்
சந்தேகம் கொள்வானே
தாலி கட்டிய புண்ணியவான் என்று
கண் கலங்கி நின்றாள்
அழகும் இளமையும் ததும்பிய இவள்

Friday, May 13, 2011

விழிப்பின் சூட்சுமம்.?


நாம்தான்
சூட்சுமம் தெரியாது
செக்கு மாடாய்
சுற்றிச் சுற்றித் திரிகிறோம்

அழகிய மலரினைப்போல
குழ்ந்தையின் சிரிப்பினைப்போல
அன்றாட விடியலைப்போல

அழகானவை
இனிமையானவை
உயர்வானவை எல்லாம்

ஆடையின்றி
எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகின்றன

நாம் தான்
கண்ணை மூடி
காட்சி தேடும்
மூடனாகத் திரிகிறோம்

நாம் தினம் எதிர் கொள்ளும்
சுனாமிச் சீற்றங்களும்
பூகம்ப அதிர்வுகளும்
எரிமலை குழம்புகளும் கூட
நம்முள்
எவ்வித சலனங்களையும்
ஏற்படுத்தாது போக....

வெகு சிலருக்கோ.....
...
முதலிரவில் மறுத்துச் சொன்ன
ஒரே ஒரு வார்த்தை.கூட..
கை மாறி மாறி வந்து சேர்ந்த
ஒரு சிறு கனி.கூட..
அலைந்து ஓய்ந்துச் சாய்ந்த
அடி மரத்து நிழல் கூட
விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போகிறது
போதி மரமாகி போகிறது

நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோம்

நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்து
சவமாய் வாழ்ந்தே சாகிறோம்

Friday, May 6, 2011

யதார்த்தவாதி-பொதுஜனவிரோதி.

தகவிலர்கள் எல்லாம் தக்கார்களாக
நியமிக்கப்பட்டிருந்த
அந்நாளில் ஒரு நாள்
நான் அந்தக் கோவிலில் இருந்தேன்

ஆண்டவருக்கும் அர்ச்சகருக்கும்
இடைப்பட்ட ஒருஅதிகாரப்பதவியில்
இருப்பதான மமதையோடு
தக்கார் இருக்கையில்
அந்தத் தகவிலர் இருந்தார்

அன்றைய சிறப்புப் பூஜையின்
பிரசாதத் தட்டுடன்
பணிவுடன் நின்றிருந்தார் அர்ச்சகர்

தொண்டையைச் சரிசெய்தவாறே
தகவிலர் இப்படி சொல்லத் துவங்கினார்
" நான் பாண்டி கோவிலுக்குத்தான்
தக்காருக்கு முயற்சி செய்தேன்
அது கிடைத்திருந்தால்
இப்போது தேங்காய் பழம் இருக்கும் தட்டில்
வேறு இருந்திருக்கும்" என்றார்

பதட்டமான அர்ச்சகர்
"அபச்சாரம் அபச்சாரம்இது சிவ ஸ்தலம்
நீங்கள் அப்படியெல்லாம்
சொல்லக் கூடாது " என்றார்

தகவிலர் தொடர்ந்தார்
"சாமி என்ன தேங்காய் பழம் தான் கேட்டதா
உங்களுக்கு அது தேவை
அதனால்தான் அதைப் படைக்கிறீர்கள்" என்றார்

"இது காலம் காலமாக உள்ளது
பெரியவர்கள் உண்டாக்கி வைத்தது
காரணம் ஏதும் இல்லாமல் இருக்காது"
கொஞ்சம் பம்மியபடிப் பேசினார் அர்ச்சகர்

இருவரின் பேச்சினையும்
கேட்கக் கேட்கக்
எனக்கு எரிச்சல் கூடிக்கொண்டேபோனது
நானாக அவர்கள் எதிர்போய் நின்றேன்
நேராக விஷயத்திற்கும் வந்தேன்

"சாமிக்கு படைக்கும் பொருட்கள்
புனிதமானவைகளாக இருக்க வேண்டும்
எச்சல் படுத்தியதாக இருக்கக் கூடாது
தின்று போட்ட கொட்டையிலிருந்து
வேறு பழங்கள் விளையக் கூடும்
தேங்காயும் வாழையும்
அப்படி வளர வழி இல்லை
எனவே புனிதம் கெட வழி இல்லை
எனவே இவைகளை முன்னோர்கள்
படையல் பொருட்களாகி  இருக்கக் கூடும் " என்றேன்

இருவரும் ஒருவரைஒருவர் பார்த்துக் கொள்ள
நான் தொடர்ந்து சொன்னேன்
"தேங்காய் வாழைக்கு மட்டும்
சீஸன் என்பது இல்லை
மற்ற பழங்கள் காய்கள் எனில்
குறிப்பிட்ட சீஸன்களில்தான் விளையும்
நாமும்
குறிப்பிட்ட சீஸன்களில்தான்
சாமி கும்பிட இயலும் " என்றேன்

இருவரும் மீண்டும் ஏனோ
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

நான் அர்ச்சகரைப் பார்த்துச் சொன்னேன்
"காரணமற்ற காரியங்கள் மட்டும் அல்ல
காரணம் சொல்லத் தெரியாத பல
நல்ல காரியங்கள் கூட
மூடச் செயல்கள் போலத் தோன்றக் காரணம்
தங்களைப் போல
தங்கள் பணியில் பாண்டித்தியம் பெறாத
ஒப்புக்கு வேலை செய்ய்யும் அசடுகளால்தான் " என்றேன்
அவர் முகத்தைத் துடைத்துக் கொண்டார்

பின் தக்காராயிருந்த தகவிலரைப் பார்த்து
இப்படிச் சொன்னேன்
"இதுநம்பிக்கையை விளைவிக்கிற இடம்
உங்களுக்கு  நம்பிக்கையற்ற
பல விஷயங்கள் இங்கு இருக்கலாம்
உங்களது நம்பிக்கை கூட
சரியானதாக இருக்கலாம்
ஆயினும்
உங்களுக்கான இடம் இது இல்லை
இது நம்புகிறவர்களுக்கான இடம்"என்றேன்
அவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்

இது நடந்து பல நாட்கள்
அந்தக் கோவில் போனேன்
தக்கார் என்னைக் கண்டதும்
வேறு பக்கம் பார்க்கத் துவங்குவார்
அர்ச்சகர் முகம் கொடுத்து பேசுவதே இல்லை
நானும் இவர்களை பொருட்படுத்திக் கொள்வதில்லை
யதார்த்தவாதி எப்போதும்
பொதுஜன விரோதிதானே ....




Tuesday, May 3, 2011

க-விதைகளின் வீரியம்

புரிந்து கொண்டிருப்பதாக
நம்பிக் கொண்டிருப்பவைகளுள்
புதையலாக புதைந்திருக்கிற
புரிய வேண்டிய
புரியாத் தன்மைகளை
புரியும்படியாக
படைத்து வைத்த பல கவிதைகள்
பெரும்பாலோர்க்கு புரியாது போயிருக்கலாம்
பாலையில் விதைத்த விதை  யாகியிருக்கலாம்
ஆயினும்
புரிந்து கொண்ட சிலரால்தான்
உலகில் நிகழ்ந்தது பல மாற்றம்
உலகம் கண்டது பல ஏற்றம்

சில பாண்டங்கள்
நிறைந்து வழிந்து சிலிர்ப்பதும்
சில பாண்டங்கள் 
இழந்து உடைந்து துடிப்பதும்
விதைத்ததாலோ
மேலிருந்து அளப்பதாலோ இல்லையென
விளங்கச் சொன்ன கவிதைகள்
ஆயிரம்பேருக்கு விளங்காது போயிருக்கலாம்
பாறையில் விதைத்த கதையாகியிருக்கலாம்
ஆயினும்
புரிந்து  கொண்ட சிலரால்தான்
உலகின் இருள் ஓடி ஒளிந்தது
எங்கும் ஒளி பரந்து விரிந்தது

 
உசுப்பேற்றி உசுப்பேற்றி
உடலெங்கும் விஷமேற்றி
உண் ர்வுகளின் திசை மாற்றி
பயணத்தின் திசைமாற்றும்
பண்புகெட்ட பண்டிதர்களின்
முகத்திரையை கிழித்தெறியும்
தீ நாக்குக் கவிதைகளை
அறியாமல் பலபேர்கள் வாழ்ந்தும் இருக்கலாம்
விதிவிட்ட வழிஎனப்போய்  போய் மாய்ந்தும் இருக்கலாம்
ஆனாலும்
புரிந்துகொண்டு எழுச்சிகொண்ட சிலரால்தான்
புதுமை எங்கும் பொங்கி வழிந்தது
புரட்சி எங்கும் வெடித்துச் சிரித்தது

மனச்சோர்வு முனகலாகி
எழுச்சியாக ஆவதும்
ஆர்ப்பாட்டமும் போராட்டமும்
ஆட்சிமாறச செய்வதுவும் 
விளைந்தபின் நமக்குத் தெரிபவைகளே
ஆயினும் இவைகளுக்கு
வித்தாக இருப்பவை கவிதைகளே

அர்த்தமற்ற சொற்கள் எல்லாம்
அழுகிப் போன சடலங்களே
அதனை அடுக்கிச் செய்த கவிதையெல்லாம்
சவக்கிடங்கின் அழகிய தோற்றமே
பிண்டங்களைப் பெற்று
தாயெனப் பெருமை கொள்ளல் எதற்கு?

அதற்குப் பதில் உலகத்தோர் பார்வையில்
மலடியாய் வாழ்தலே என்றும் சிறப்பு