Saturday, February 29, 2020

தொலைக்காட்சியில் பெண்ணியப் பிரதாபங்கள்(பரிதாபங்கள்)


  • பல வருடங்களுக்கு முன்பு...                                தொலைக்காட்சித் தொடர்களில்                        ஆண்களே கதாநாயகர்களாக வில்லன்களாக இருந்தார்கள்                                                                                          கதாநாயகனின் நாயகிகள் அவனின் நற்செயல்களுக்கு உடனிருந்து உதவுபவர்களாக இருக்க               வில்லனின் நாயகிகள் அவன் தீய செயல்களுக்கு எதிரானவர்களாகவும்           முடிந்தால் அவனைத் திருத்த முயல்பவர்களாகவும் இருந்தார்கள்..                                                                                                       சில வருடங்களுக்குப் பின் ...                           ஆண் கதாநாயகர்களும் அவர்தம் நாயகிகளும் அதே நிலையில் தொடர..                                                                                  வில்லனின் நாயகிகள் மட்டும் அவன்      தீய   செயல்களுக்கு உடந்தையானவர்களாவும்                    இன்னும் சரியாகச் சொன்னால்               அவன் தீய செயல்களுக்கு திட்டம் தீட்டித் தருபவர்களாகவும் மாறிப்போனார்கள்..                                                                                              இப்போதெல்லாம் .....                                            தொலைக்காட்சித் தொடர்களில் பெண்களே கதாநாயகியாகிப் போக.    ஆண்கள் டம்மித் துணையாகிப் போனார்கள்                                                                                                                                       பெண்களே வில்லனாகிப் போக    அவர்களின் அடியாட்களாகக் கூட பெண்களே ஆகித் தூள்கிளப்புகிறார்கள்                                                                                             வீட்டின் சமையலறையில்                             விஷபாட்டில்களும்                                               அலமாரிகளில் கைத்துப்பாகிகளும்       எப்போதும் எடுக்குப்படியாய் வைத்திருந்து   தொடர்களுக்குச்                                 சுவைகூட்டிப் போவதோடு                    வருங்கால பெண்சந்ததிக்கு                          வழிகாட்டிகளாகவும் திகழ்கிறார்கள்.....                                                                                                 வாழ்க நாளும் இதுபோன்ற தொலைக்காட்சித் தொடர்கள்                        வளர்க நாளும் இதுபோன்ற                             பெண்ணியப் பிரதாபங்களும்.....                                                                                                                                                                                                             

Thursday, February 27, 2020

காக்கை தந்த ஞானம்..

கடிகார முட்கள் கூட
தவறான நேரத்தைக் காட்டி விடக்கூடும்
அந்தக் காக்கைகள் மட்டும்
நேரம் தவறி  வந்ததே இல்லை

"அந்தச் சனியன்கள் மிகச் சரியாக வந்துவிடும்
உலை வைக்கணும் " என
கோபப்படுவது போல் பேசினாலும்
காக்கைகளின் மேல் பாட்டிக்கு
வாஞ்சை அதிகம்

முதல் நாள் சாப்பாடு மிஞ்சிய நாட்களில்
எங்களுக்காக சமைக்காவிட்டாலும் கூட
"பிடிச்சபிடி " என காக்கைக்கென
தனியாக உலைவைப்பாள் பாட்டி

பாட்டி மரித்துப்போன அந்த நாளில்
வந்திருந்த காக்கைகளுக்கு
உணவிட முடியவில்லை
அவைகளும்  செய்தியறிந்து வந்ததுபோல
எப்போதும் போலக் கூச்சலிடாது
வெகு நேரம் மரத்தின் மேல்
அமர்ந்திருந்து போயின

சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து
பாட்டியின் நினைவாக
நாங்களும் காக்கைக்கு உணவு கொடுக்க
எத்தனை முறை முயன்றபோதும்
அந்தக் காக்கைகள் மட்டும் ஏனோ
வீட்டுப் பக்கம் வரவே இல்லை
அன்று அதற்கான காரணமும் புரியவில்லை

சம்பிரதாயத்திற்கும் அன்னியோன்யத்திற்குமுள்ள
சிறு மாறுபாடு எனக்குப் புரிகிற இந்த நாளில்
கடனெனச் செய்தலுக்கும் படைப்பதற்குமுள்ள
பெரும் வேறுபாடு பறவைகளுக்கும் புரியும் எனப்
புரிந்து கொள்கிற இந்த வேளையில்

கான்கிரீட் காடுகளில் காலத்தின் கட்டுப்பாட்டில்
கையாளாகாதவர்களுள் ஒருவனாய்  நான்...
மனிதன் மீது நம்பிக்கை முற்றாக இழந்து
கண்காணாது நிம்மதியாய் எங்கோ அவைகள்.

Wednesday, February 26, 2020

ஆரிய மாயம் அல்லது மாயை அல்லது பரிமாணம்

                         1967.                                                    காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டு சிதறாமல் ஒருங்கிணைக்கக் கூடுமாயின் எதிர்கட்சிகள் வெல்லச் சாத்தியம் எனச் சொல்ல ஒரு தமிழகப் பார்ப்பான் திராவிடக் கட்சிக்கு தேவையாய் இருந்தது..                                                  2021.                                                    இந்துக்களின் ஓட்டு சிதறாமல் கிடைக்க வேண்டுமானால் கிராமதேவதைகளைச் சரணடைய வேண்டும் எனச் சொல்ல பகுத்தறிவு இயக்கத்திற்கு ஒரு வடநாட்டுப் பார்ப்பான் வேண்டியதாய் இருக்கிறது.....                                     2072.                                                  யார் கண்டார்கள்..
கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க கலைஞரின் கொள்ளுப் பேரனின் தலைமைத் தொடர கட்சியான ஒரு குடும்பத்திற்கு அந்நிய தேசத்து பார்ப்பானின் ஆலோசனை  கூட வேண்டியதாய் இருக்கலாம்

Monday, February 24, 2020

காஃபி பேஸ்ட் தோழர்களுக்காக..

எது பதியப்பட்டதோ அது நன்றாகவே பதியப்பட்டது
எது பதியப்படுகிறதோ அது நன்றாகவே பதியப்படுகிறது
எது பதியப்பட இருக்கிறதோ அதுவும் நன்றாகவே பதியப்படும்
உன்னுடையது என நீ எதைப் பதிந்தாய் ?
எதற்காக நீ பெருமிதம் கொள்கிறாய் ?
நீயாக எதைப் பதிந்தாய் பேரானந்தம் கொள்வதற்கு ?
நீயாக எதைக் கொடுத்தாய் பேருவகை கொள்வதற்கு ?
நீ எதைப் பதிந்தாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்ப்பட்டது
நீ எதைப் பகிர்ந்தாயோ
அதுவும் இதிலிருந்தே பகிரப்பபட்டது
எது இன்று உன்னுடையதோ அது
நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடையாதாகும்
இதுவே காஃபி பேஸ்ட்நியதியும்            காஃபி பேஸ்ட் சாரமுமாகும்

( இடையிடையே கூட ஏதேனும் ஒன்றிரண்டு கூடசுயமாக எழுதாது வெட்டி ஒட்டுதலை மட்டும்செய்து கொண்டிருப்பவர்களுக்காக )

Sunday, February 23, 2020

புரட்சித் தலைவியே...

மகம் ஜெகம் ஆளும் என்னும்
ஆன்றோரின் வாக்கினுக்கு
ஒரு நிரூபனமாய் விளங்கிய
அற்புதமே அதிசயமே

படுத்துக் கொண்டே
ஜெயிப்பது என்கிற சொற்றோடர்
ஒரு வறட்டுவாக்கியமாய் இருந்ததை
நிஜமாக்கிக் காட்டிய
தமிழகத்து ஜான்ஸியே

நீ கொண்ட உச்சங்கள் எதுவும்
தங்கத் தட்டில் வைத்து
உனக்குப்
பரிசாகக் கொடுக்கப்பட்டதில்லை

பெண்ணாக இந்த உச்சம்தொட
நீ பட்டத் துயரங்கள்
இவ்வுலகில் எப்பெண்ணும்
இதுவரைப் பட்டதில்லை

உன் மீது இருந்த துரும்பினை
தூண் என்றார்கள்
உன் மீது விழுந்த அணுகுண்டை
மலர்ச் செண்டு என்றார்கள்

இரண்டடையும்
துச்செமென மதித்துக்
கடந்து சென்ற
தங்கத் தலைவியே

புராண நிகழ்வுகளின் எச்சமாய்
ஒரு சட்டசபை
கௌரவர் சபையாய்
தன் கொடூர முகம்காட்டி
கொக்கரித்தபோது
சினந்து புலியாய் நீ
சீறிவந்தக் காட்சி....

சனாதன ஆசாமிகள்
பிற்படுத்தப்பட்டவன் என்பதாலேயே
திறமையானவனை
ஒதுக்கிவைத்ததைப் போலவே

போலிப் பகுத்தறிவு ஆசாமிகள்
முற்படுத்தப்பட்டவள் என்பதாலேயே உன்னை
ஒதுக்க முயன்றபோது
நெருப்பில் பூத்த மலராய் நீ
வென்று நின்ற காட்சி...

காலப்பெட்டக்கத்தில்
ஜொலிக்கின்ற வைரங்கள்
வைடூரியங்கள்
சரித்திரப்புத்தகங்களில்
தங்க முத்திரைக் கொண்டு
தகதகக்கும் பக்கங்கள்

விழிமூடுகையில்
மனம் கொள்ளும் வைராக்கியங்கள்
உடலோடு போவதில்லை
ஆன்மாவோடு தொடர்ந்து
அடுத்த ஜென்மமெடுக்கும் என்பதை
நாங்கள் சொல்லி நீ
அறிய வேண்டிய நிலையிலில்லை

கோடிக் கோடியாய்
மதம் கடந்து இனம்கடந்து
மக்கள் செய்யும் பிரார்த்தனைகள்
நிச்சயம் வீணானதில்லை

அதனை மறுக்கும் அதிகாரம்
நியதிப்படி இயங்கும் இறைவனுக்கும்
இல்லையென்பதை
இயற்கையும் மறுப்பதில்லை

பதினேழாம் நூற்றாண்டில்
ராணி மங்கம்மாவாக

பதினெட்டாம் நூற்றாண்டில்
வேலு நாச்சியாராக

பத்தொன்பதாம் நூற்றாண்டில்
தில்லையாடி மணியம்மையாக

அவதரித்த நீயே

இந்த நூற்றாண்டில்
புரட்சித் தலைவியாய்
அவதரித்திருக்கிறாய் என்பதில்
எங்களுக்கு எள்ளளவும்
சந்தேகமில்லை

தமிழக அடித்தட்டு மக்களின்
வாழ்வை உன்னதமாக்குவதிலேயே
உண்மைமகிழ்ச்சிக் கொண்ட
அன்னையே

உன் வாழ்வை அர்ப்பணித்த
அம்மாவே

உன்னால் நிச்சயம்
சொர்க்கத்தில் வீணே ஓய்வெடுக்க இயலாது

மறுபிறப்பெடுத்து
தமிழகத்திலேயே
நிச்சயம் அவதரித்திருப்பாய்
என்பதிலும் எங்களுக்கு
எள்ளளவும் சந்தேகமில்லை                                                                                                                     வாழ்க நின் புகழ்                                                                                                                                                                           

அந்தக் கடைசி நொடி...


வினு சக்கரவர்த்தி போன்ற ஆஜானுபாவமான
 உடற்கட்டும்பெரிய மீசையும் கிரீடமும்
கையில் கதாயுதமும் கொண்டு
மூன்று கதவுகளும் இறுக்கமாகப் பூட்டி இருந்தும்
 உள்ளேவந்ததை வைத்தே எனக்கு புரிந்து போயிற்று
இவர் "எமதர்மன்தான் " என்று

ஆமை புகுந்த வீடு அமீனா புகுந்த வீடு
எமன் புகுந்தவீடும்உருப்பட்டதாக சரித்திரம் இல்லை
.இருந்தாலும் மரியாதை நிமித்தமாக
"வாருங்கள் வாருங்கள்
நான் ரெடி போவோமா ?"என்றேன்

எமர் (ன் )என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்

"எத்தனை யுகங்களோ எவர் எவர் உயிரையோ
எடுத்திருக்கிறேன்இதுவரை யாரும் உன்போல
 நான் ரெடி போவோமா எனச் சொன்னதில்லை
உனக்கு சாவென்றால் பிடித்தமா இல்லை
வாழ்வு வெறுத்துப் போயிற்றா "

"இல்லை இல்லை நீங்களும் மூன்று தபால்
 போட்டுவிட்டீர்கள்நான் தான் பதில் போடமுடியவில்லை.
ஆனாலும் மனத்தளவில் ரெடியாகிவிட்டேன்
அதுதான் தங்கள் வரவு அதிர்ச்சி அளிக்கவில்லை "என்றேன்

"நீர் எழுத்தாளர் எனத் தெரியும் அதுதான்
பொடிவைத்துப் பேசுகிறீர்நான் கோடிவீட்டுக்
 குப்புசாமியைத்தான் கொண்டுபோக வந்திருக்கிறேன்
உம்மைக் கொண்டுபோக இல்லை
என்வே பதற்றப் படாமல் அமரும்
உன்னிடம் எமக்கு ஒரு கேள்விக்கு பதில் வேணும்
ஒளிக்காமலும் பயப்படாமலும் பதில் சொல்லும் " என்றார்

நான் சாகப் போவதில்லை எனத் தெரிந்ததும்
எப்படித்தான்தைரியம் வந்தது எனத் தெரியவில்லை
சோஃபாவில் நன்றாக
சொகுசாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்.
வெட்டாத கத்திக்கும்உயிரெடுக்காத எமனுக்கும்
 எதற்குப் பயப் படவேணும்

பின் எமரே தொடர்ந்தார் "இந்திரலோகத்தில்
எல்லோரும்என்னைஏகமாகப் பேசுகிறார்கள்.
சாவின் கடைசி நிமிடங்களில் யாரையும்பேசவிடாது
 அவர்களைக் கொன்றுவிடுகிறேனாம்
.இதனால் அவர்கள் வாழ்ந்த வாழ்வில்
அறிந்து கொண்டதைபுரிந்து கொண்டதை
சொல்ல முடியாமலே போகிறதாம்
அதனால்தான் பூமியில்பஞ்சமா பாதகங்கள்
பெருத்துப் போனதாகச் சொல்லுகிறார்கள்
எனக்கு அது உடன் பாடில்லை
நீ என்ன சொல்கிறாய் "என்றார்

"அவர்கள் சொல்வதுபோல் கொஞ்சம்
பரீட்சித்துப் பார்க்கலாமே " என்றேன்

"அதைச் செய்யாமல் உன்னிடம் வருவேனா.
ஒருவனிடம் கனவில் தோன்றிஅடுத்தவாரம்
 உன் உயிர் எடுக்கப் போகிறேன் எனச் சொன்னேன்
அதுவரை யோக்கியனாக இருந்தவன்
அந்த ஒருவாரத்தில் ஆடித் தீர்த்துவிட்டான்
முப்பது வருடம் செய்யாத பாவங்களை
ஒரு வாரத்தில் முடித்துவிட்டான்
சரி. அடுத்தவனிடம் சொல்லிப் பார்த்தேன்.
அவன் அந்த ஒரு வாரமும்
செத்த பிணமாகத்தான் உலவிக் கொண்டிருந்தான்.
சரி அதுதான் போகட்டும் என
கடைசி நிமிடங்களில் ஒருவனுக்கு தகவல் சொல்லி
அரை மணி நேரம்கெடு கொடுத்தும் பார்த்தேன்
முழு நேரத்தையும் 'பினாத்தியே "தீர்த்துவிட்டான்
இதுவரை எவனுக்கும் தான் வாழ்வில்
 புரிந்து கொண்டதை அடுத்தவருக்குச்
சொல்லிச் செல்லவேண்டும் என்கிற எண்ணம்
 சுத்தமாக இல்லை " என்றான்

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை

"அதுதான் இப்போது அடுத்த முயற்சியாக
 உன்னிடம் வந்துள்ளேன்உன்னை இப்போது
 கொண்டு போகப் போவதில்லை
உன்னை கொண்டுபோகப் போகும் நாளையும்
 சொல்லப் போவதில்லை
என்வே பயப்படாமல் சொல்லு . நீ இப்போது
சாகப் போகிற நொடியாக இருந்தால்
வாழ்வை அர்த்தப் படுத்துவதாக ஒரு செய்தி
சொல்லும்படியாகச் சொல்
எனச் சொன்னால் என்ன சொல்லுவாய் " என்றான்

இது நான் வாழ்க்கையில் சந்தித்த கேள்விகளிலேயே
கடினமான கேள்வியாகவும்
புதிரான கேள்வியாகவும் பட்டது.
சிறுவயது முதல் இன்றுவரை நடந்த அனைத்து
 நிகழ்வுகளையும் ஒவ்வொன்றாக
அசைபோட்டுப் பார்த்தேன்
நல்ல கல்லூரியில் இடம் பிடிக்க
பள்ளியில் மெனக்கெட்டது
வேலைக்கான தயாரிப்புக் கூடமாக
கல்லூரியை க் கருதியது
நல்ல இல்லறம் அமையவே
வே லை எனக் கொண்டது
குழந்தைகளின் எதிர்காலம் கருதியே
பகலிரவாய் உழைத்தது ....
யோசிக்க யோசிக்க மர்மம் விலகுவது போலப் பட்டது
இத்தனை ஆண்டு காலம் உயிரோடுதான்
இருந்திருக்கிறேனே ஒழிய
அந்த அந்த காலங்களில் வாழவே இல்லை
என்கிற உண்மை புரிய வெட்கிப் போனேன்

" ஞாழிகை ஆகிறது ஏதும் உன்னால்
 சொல்ல முடியுமா ' என்றான்

" முடியும் ஒரு வாக்கியமாகச் சொல்லவா
 விவரித்துச் சொல்லவா " என்றேன்

"விவரித்தல் வேண்டியதில்லை
 நான் புரிந்து கொள்வேன் இரத்தினச் சுருக்கமாய் சொல் "

"நேற்றும் இல்லை நாளையும் இல்லை
அந்த அந்த நொடியில்
வாழுதலே வாழ்க்கை " என்றேன்

எமன் முகத்தில் பரவசம் படரத்துவங்கியது

"சபாஷ் சபாஷ் "எனக் கூச்சலிட்டபடி என் முதுகில்
 ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட்டு
மறைந்து போனான் நான் நடு நடுங்கிப் போனேன்

வலி பொறுக்காது நான் லேசாக உடல் அசைக்க
 உடல் பாரமாகத் தெரிந்தது
கண்களை கஷ்டப்பட்டு திறக்க என்னைச் சுற்றி
ஒரு பெரும் கூட்டமே நின்று கொண்டிருந்தது

"அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார்
இனி பயமில்லை ..  இன்னும் என்ன என்னவோ
சொல்லிக் கொண்டிருந்தார் குடும்ப டாக்டர்


Friday, February 21, 2020

கார்ப்பரேட் கணவன்கள்


  • கணவனின் குழந்தைகளின்                          தேவைகள்விருப்பங்களஆசைகள்  என்னஎன்னஎன்பதைமுற்றிலும் அறிந்தவர்களாகஅதனை நிறைவேற்றுவதற்காக.தங்களை அர்ப்பணித்கொண்டவர்களாக.       மனைவிமார்கள் எல்லாம் இருக்க.                                                                                                         மனைவியின் குழந்தைகளின்                    தேவைகள் விருப்பங்கள் ஆசைகள்      எவைஎவை என அறிய. அறிந்து அதனை நிறைவேற்றி அவர்களின் அன்பைப் பெற வேண்டிவல்லுநர்களின்உதவியை நாடுகிறார்கள் சில குடும்பத் தலைவர்கள்                                                                                          தேவைகளும் விருப்பங்களும்            ஆசைகளும்    தத்தம் கணவர்களால்          நிறைவேற்றப் படவில்லையாயினும் கூட  அது குறித்துஅறியஅவரவளவில்செய்யும் முயற்சியே அன்னியோன்னியம் தரும்  எனுமசிறுவிசயம்கூடஅறியாத.  கணவன்மார்களின்அறியாமையை எண்ணிஎண்ணிஅவர்களதுகார்ப்பரேட்  மனோபாவத்தை எண்ணி    எண்ணி              தலையிலடித் கொள்கிறார்கள்                யோசிக்கத் தெரிந்த. மனைவிமார்கள்                                                                                     

Thursday, February 20, 2020

இழந்த உறவுகள்..






பின்னிப் பிணைந்து
தொடருகிற உறவுகளைவிட
விலகிய
அறுந்த
பகையாகிப்போன
உறவுகளே
அன்றாடம் மனதில்
நிலைத்திருக்கிறது

தவறு அவர்களுடையதே ஆயினும்
சகித்திருக்கலாம்
பொறுத்திருக்கலாம்
எனும்படியாகவும்...

தவறு நம்முடையதாயின்
வருத்தம் தெரிவித்து இருக்கலாம்
மன்னிப்புக் கோரி இருக்கலாம்
எனும்படியாகவும்...

அதன் காரணமாகவே
இனியேனும்
தொடர்கிற உறவுகளில்
எதையும் தவறியும்
இழந்து விடக்கூடாதெனும்
உறுதி கொள்ளும்படியாகவும்..

இழந்த உறவுகளின்
அருமைகளே
பெருமைகளே
நினைவுகளே
எப்போதும் வழிகாட்டிப் போகிறது

அதன் காரணமாகவே
இப்போதெல்லாம்
இருக்கிற உறவுகளை விட
இழந்த உறவுகளே
எப்போதும் மனதில்
நீங்காது நிலைத்திருக்கிறது

Monday, February 17, 2020

இரசிப்போர் நிலை பொருத்தே நிலைத்தலும்..

விதையினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் வளர்ச்சி
அதுவீழும் நிலம் பொருத்தும்தான்

உயிரினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் இயக்கம்
அதைத்தாங்கும் உடல் பொருத்தும்தான்

அழகினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் பெருமை
அதனை ஆராதிப்போர் மனம் பொருத்தும்தான்

நதியினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் புனிதம்
அதுபாயும் ஸ்தலம் பொருத்தும்தான்

கடவுளைப் பொருத்து மட்டுமல்ல
அதன் கீர்த்தி
அது உறையும் கோவில் பொருத்தும்தான்

................................................
...............................
..................................................

கவிதையைப் பொருத்து மட்டுமல்ல
அதன் சிறப்பு
அதனை இரசிப்போர் நிலையினைப் பொருத்தும்தான்

Sunday, February 16, 2020

தேவ இரகசியம்..

பசியா தூக்கமா தன் அசௌகரியத்திற்கு எது காரணம் என அறிந்து கொள்ளத் தெரியாது தன் அசௌகரியம் தாய்க்குத் தெரிந்தால்  மட்டும் போதும் அது எதுவெனத் தெரிந்து அவள் உடன் தீர்த்து வைப்பாள் என்கிற நம்பிக்கையில் அழமட்டுமே செய்கிறது கைக்குழந்தை அக்குழந்தையின் அழுகையின் தொனியைக் கொண்டே அசௌகரியத்திற்கான காரணம் புரிந்து உடன் அதைச்சரிசெய்து குழந்தையை சிரிக்க வைத்துவிடுகிறாள் தாய்                                                          ஆசையா தேவையா தன் மனக்குழப்பத்திற்குக் காரணம் எது என மிகச் சரியாக அனுமானிக்க முடியாத ஆன்மீகவாதியும் குழப்பத்தைப் பிரார்த்தனையாய் ஆண்டவனிடம் சமர்ப்பித்துவிட்டு தன் அன்றாடக் கடமைகளில் மூழ்கிவிடுகிறான். குழப்பத்திற்கான மூலத்தை சரிசெய்து ஆன்மீகவாதியை சமநிலைப் படுத்திவிடுகிறான் ஆண்டவனும்...                ..................கைக்குழந்தைக்கு மட்டும் தெரிந்த தேவ இரகசியம்..வளர்ந்த பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை...ஆன்மீகவாதிகளுக்குப் புரிந்த இந்தச் சூட்சுமம் மதவாதிகளுக்குப் புரியவாய்ப்பில்லை என்பதைப் போலவே..

Friday, February 14, 2020

மத்தியமரின்...

செல்வம்
இரவை பகலாக்கி
பகலை இரவாக்கி
கோடையை வாடையாக்கி
வாடையை கோடையாக்கி
செல்வந்தர்களின்
உடலையும் மனத்தையும்
நலத்தில் இல்லையாயினும்                        சுகத்தில் நிலை நிறுத்திப்போகிறது

வறுமை
இரவை இரவாகவும்
பகலை பகலாகவும்
கோடையை கோடையாகவும்
வாடையை வாடையாகவுமே வைத்திருந்து
ஏழைகளின்
உடலையும் மனத்தையும்
சுகத்தில் இல்லையாயினும்                        நலத்தில் நிலை நிறுத்திப்போகிறது

எப்படி முயன்றும்
முடியாமையால்
முன்னவர்போல்
சுகத்தில் நிலைக்க இயலாமலும்
ஒருபடி இறங்க
இயலாமையால்
பின்னவர்போல்
நலத்தை சுகிக்க முடியாமலும்
 பாவம் மத்தியமரின்
உடலும் மனமும் மட்டும்
நாளும் ஏங்கி  ஏங்கியே தேய்கிறது
கௌசிக  மனம் தானே  படைத்த
திரிசங்கு நரகத்தில்
நாளும் உழன்று  வாழ்ந்தே சாகிறது

கவியாகும் காதலன்...

நிச்சயமாகச் சொல்கிறேன்
நான் கவிஞனில்லை
கற்பனைக்கும் எனக்குமான தூரம்             எப்போதும் மிக மிக அதிகமே
தொடர் சிந்தனைக்கும் எனக்கும்                      என்றும் தொடர்பு இருந்ததே இல்லை

ஆயினும்
என்னுடன் இருந்து நீ பிரிந்த
சில நிமிடங்களில்...

திரு விழா முடிந்த மறு நாளில்
அனைத்து அலங்காரங்ளையும் இழந்து
அலங்கோலமாய்க் கிடக்கும்
வெட்டவெளி மைதானமும்

அறுவடை முடிந்து அம்மணமாகி
வானம் பார்த்து வெறித்து
அடுத்த விதைப்புக்கு ஏங்கிக் கிடக்கும்
பொட்டலான வயல்வெளியும்

கடைசிப் பேருந்தும் போய்விட
அழுது வடியும் தெரு விளக்கு வெளிச்சத்தில்
விடியலுக்கு ஏங்கிக் கிடக்கும்
கிராமத்துப் பேருந்து நிலையமும்

கோடை விடுமுறைப் பள்ளியும்
நீர் நின்று போன தெருவோரக் குழாயடியும்....

இன்னும் இதுபோல் பிறவும்
தொடர்ச்சியாய் காட்சியாய்                               
 என்னுள் நிறைய
கவிஞனாகி விடுவேனோ என.   
எனக்கே  பயமாயிருக்கிறது

எனக்காக இல்லையெனினும்
பாவம் கவிதையைக் காப்பாற்றவாவது
என்னை விட்டுப் பிரியாதிருக்க முயற்சி செய்

Thursday, February 13, 2020

அணிலாய்...

பதினைந்து வருடங்களுக்கு முன்புஒரு மாலைப் பொழுதில் மதுரை ரயில்வே ஸ்டேசனின் முகப்பு வாசலில் நான் நின்றிருக்கும் போது சிறிது தூரத்தில்  ஏதோ சலசலப்பு ஏற்பட்டாற் போலிருத்தது. மதுரையில் இதுபோன்ற சலசலப்புகள் சகஜம் என்றாலும் பத்து பதினைந்து ஆட்டோக்காரர்களுக்கு இடையில் யாரோ ஒருவர் சப்தம் போட்டுக் கொண்டிருந்து தெரிய  நிச்சயமாக இதுஆட்டோக்காரர்களின் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு அசம்பாவிதமாகத்தான் இருக்கும்.யாரோ ஒரு நியாயஸ்தன் இவர்களுக்கிடையில் சிக்கி இருப்பான் என நினைத்தபடியே நெருங்கிப் போனேன்.     அந்த சமயம் வெளிநாட்டினர் இருவரை ஏற்றியபடி ஆட்டோ ஒன்று கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்து.    என்னவென்று விசாரித்தபோது வெளிநாட்டினர் இருவர் ஒரு ஆட்டோக்காரரிடம் காலேஜ் ஹவுஸ் போகவேண்டும் வண்டி வாடகை எவ்வளவு ஆகும் எனக் கேட்டிருக்கிறார்.அவர்கள் கேட்ட இடத்திலிருந்து காலேஜ் ஹவுஸ் போக தெற்குத் திசையில் ஐம்பதடி  போய் பின் கிழக்கில் ஐம்பதடிப் போனால் போதும்.இதற்கு முப்பது ரூபாய் தரலாம் இதற்கு கொஞ்சமும் கூச்சப்படாமல் அந்த ஆட்டோக்காரர் ரூபாய் முன்னூறு ஆகும் என்றிருக்கிறார்.இதைப் பார்த்துக் கொண்டிருந்த நம் போன்ற நியாயஸ்தர் இது என்ன கொள்ளையாய் இருக்கிறது நூறு அடிக்கு முன்னூறு ரூபாயா என நியாயம் கேட்டிருக்கிறார் உடனே அங்கிருந்த ஆட்டோக்காரர்கள் அவரை வலுக்கட்டாயமாக அவ்விடத்தை விட்டு அகற்ற முற்பட்டிருக்கிறார்கள்.அதனால் ஏற்பட்ட சலசலப்பே அது .பின் அவர்கள் பேரம் பேசி முடிவாக இருநூற்றம்பது என முடிவாகி அவர்கள் ஆட்டோவில் ஏற ஆட்டோக்காரர் ஆட்டோவை வடக்குத் திசையில் (போக வேண்டிய திசைக்கு  நேர் எதிராக )திருப்பி ஓட்ட ஆரம்பித்தார்..சரி ஆட்டோக்காரர்  இருநூற்றம்பது சரிதான் என வெளிநாட்டினர் உணரும்படியாகச் செய்யவே வேண்டுமென்றே வெட்டி ரவுண்ட் அடித்து இறக்கிவிட முயற்சிக்கிறார் எனப் புரிந்து கொண்டேன்..                                 வெகு நாட்களுக்கு இந்த சம்பவம் எனக்குப் பெரும் உறுத்தலாகவே இருந்தது. காரணம் உண்மையில் .நான் சமூக நல நோக்கமுடையவனாக இருந்திருந்தால் தைரியமாகப் பக்கம்தான் உள்ளது நடந்தே போய்விடலாம் என அவர்களுக்குச் சொல்லி இருக்கலாம். அழைத்தும் போய்  ஒருவர் அனாவசிய்மாக ஏமாறுவதைத் தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணமே.                                         ஆனாலும் இதுபோல் அப்பட்டமாக ஏமாற்றப்படுவதைத் தடுக்க ஏதும் செய்ய முடியாதா என்கிற எண்ணமும் ஏக்கமும் எப்போதும் என்னைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.                                        இந்தச் சூழலில்தான் இதற்குப் பின் சில வருடங்களில் நண்பர்கள் மூலம் கூகுள் மேப் வந்த விவரம் குறித்தும் அது நம் வசம் மொபைலில் இருந்தால் உலகின்எந்த இடமாயினும் யாரிடமும் விலாசம் கேட்டு அலைய வேண்டியதும் இல்லை ஏமாற வேண்டியதும் இல்லை என அறிந்து மிகவும் புளங்காகிதம் அடைந்து போனேன்.            இருந்தாலும் சிலர் கூகுள் மேப் நாம் ஓரிடம் கேட்டால் வேறு இடம் காட்டுகிறது...சரியான வழி காட்டாது வேறு வழி காட்டுகிறது எனச்சிலர் சொல்ல நானும் இது போன்று சில சமயம் அவதிப்பட அதற்கு என்ன காரணமாயிருக்கும் என்ன செய்யலாம் என விசாரித்தும் நானேயோசித்தும் ஒரு முடிவுக்கு வந்தேன்..                                          குகூள் நிறுவனம் முதல்படியாக இந்தச் சேவையைத் துவங்குகையில் நகரின் முக்கியமான இடம் தூரம் முதலான முக்கிய தகவல்களை தங்கள் நிறுவனம் மூலமாகவே செய்தது என்றும் இன்னும் விரிவாகச் செய்ய பொதுமக்களையும் கைடுகளாக இணைத்துச் செய்கையில் அவர்களது பொறுப்பின்மையாலும் தொழிற்நுட்ப அறிவு போதாமையாலும் சில பல தவறுகள் நேர்ந்துள்ளது எனப் புரிந்து கொண்டேன்.                                                   மழை பெய்யவில்லையே என வானத்தைப் பார்த்து அழுது கொண்டிருப்பதற்குப் பதில் ஏர்ப் பூட்டி உழுது கொண்டிரு.மழை வந்தால் உழவு இன்னும்  சுலபமாகும் என்பதாக ஒரு பழமொழி கிராமப் பகுதிகளில் புழக்கத்தில் உண்டு....அந்த வகையில் நாமும் குறைமட்டும் சொல்லிக்கொண்டிராமல் சின்னச் சின்ன தவறுதல்களை திருத்த முயன்றால் என்ன அது குறிக்காத இடங்களைக் குறித்தால் என்ன என யோசித்து கூகுள் கைடாக கடந்த சில வருடங்களாக என்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்.                                                       கடந்த நான்குஆண்டுகளில்குறைந்த பட்சம் ஒன்றரை ஆண்டுகள்வெளிநாட்டில் இருக்க நேர்ந்த வாய்ப்பை தவறவிடாமல் போகும் பகுதியை எல்லாம் படத்துடன் பதிய ஆரம்பித்தேன்.ஊரில்இருக்கும் போதும் இது போல பதியப்படாத பகுதிகளை படத்துடன் தொடர்ந்து பதிவு செய்தும் தவறுகளைத் திருத்தம் செய்தும் வருகிறேன்.இன்றைய நிலையில் முன்னூறு இடங்கள் குறித்த பதிவையும் அது தொடர்பாக இரண்டாயிரத்து எண்ணூறு புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளேன்.இதனை இன்றுவரை முப்பத்து நான்கு இலட்சத்திற்கும் மேலாக பார்வையிட்டிருக்கிறார்கள். என்னுடைய இந்த தன்னலமற்ற சேவையைக் கௌரவிக்கும் விதமாக கூகிளும் எனக்கு எட்டு ஸ்டார் (அதிகப்பட்சம் என்பது           பத்து )அந்தஸ்துக் கொடுத்துக் கௌரவித்திருக்கிறது என்பதைப் பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.இராமர் பாலம் கட்ட அணில் செய்த தொண்டு  கணக்கிட்டால் கணக்கிலேயே வராது என்றாலும் அணில் கொண்ட மகிழ்வினை அளக்கவே முடியாது என்பதைப் போல என் பதிவுகள் எந்த விதத்திலும் பெரிய விசயமில்லை என்றாலும் என்னைத் தெரிந்த நண்பர்கள் என் பதிவின் துணையோடு அவ்விடத்தைச் சரியாகப் போய்ச்சேர்ந்தேன் எனச் சொல்லும் போது அடைகிற மகிழ்வுக்கு விலையே இல்லை...இதைப் போல யாரும் செய்யலாம்..இது ஒருவகையில் நமக்கு நாமே உதவிக்கொள்வதைப் போலத்தான் இல்லையா.

Monday, February 10, 2020

சடங்குகளும்...சில சம்பிராதயங்களும்..

பாலத்தின் உச்சத்தில்
அதிக சுமையேற்றப்பட்ட
அந்த வண்டி மாடுகள்
நிலை குலைந்து போகின்றன

நிலையுணர்ந்துக்
கீழிறங்கித்
தானும் தள்ளுதல் போல்
குரலால், உடல் மொழியால்
அதீத பாவனை செய்கிறான்
அந்த்க் கிராமத்து வண்டியோட்டி

பிரசவ அவஸ்தையின்
கடைசி நொடி உந்துதலாய்
உடல் சக்தியணைத்தையும்
ஒருங்கிணைத்து மாடுகள்  உந்த
உச்சம் கடக்கிறது வண்டி

உடல் மொழியும்
ஓங்கி ஒலித்தக் குரலும்
பொய்தான் ஆயினும் கூட
உச்ச நொடிக் கடக்க
அந்தப் பாவனைக் கூட
அவசியமானதாகத்தான் படுகிறது

நம்பிக்கைக் குலையாதிருக்க
இருக்கு நிலையிலிருந்து சரியாதிருக்க
பகுத்தறிவுக்கு ஒப்பவில்லையாயினும்
சில சடங்கு சம்பிரதாயங்கள்
மிக அவசியமாவதைப் போலவும்...

Tuesday, February 4, 2020

எழுதுபவர்களைக் குற்றம் சொல்லாதீர்கள்

எங்களைக்  குற்றவாளியாக்காதீர்கள்
எங்களைக் குறைகூறி அலையாதீர்கள்

கொஞ்சம் தூரமாயினும்
அமருமிடமும்
பறிமாறும் நேர்த்தியும்
திருப்திப்படவில்லையாயினும்
 ருசியும் தரமும்
சரியாயிருந்தால் சரி
என்ற காலம் போய்.....

ருசியும் தரமும் கொஞ்சம்
முன்பின்னாயினும்
ஹோட்டல் இருப்பிடமும்
கார் பார்க் வசதியும்
பரிமாறும் நேர்த்தியும்
சரியாய் இருந்தால்தான்
திருப்திப்படுகிறது என்பதால்

வசதியற்றவனாயினும்
நேர்மையானவனாக
எளிமையானவனாக
கூப்பிட்ட குரலுக்கு
உடன் வருபவனாக
இருந்தால் போதும்
என்ற காலம் போய்.....

ஜெயித்தப்பின்
காணாமல் போகிறவனாயினும்
கிரிமினல் குற்றவாளியாயினும்
தேர்தல் சமயத்தில்
கொடுப்பவருள்
கூடுதலாய் கொடுப்பவனாய் இருந்தால்
சரியானவனாய்ப் படுகிறது என்பதால்

ஒப்பனைகளாயினும்
அழகுக் கடங்கியும்
பாவனைகளாயினும்
அறிவுக் கடங்கியும்
அளவுகோள்கள்
நெகிழும் தனமையற்றும்
இருந்த.காலம் போய்...

அழகென்பதே
ஒப்பனைகளாய்
அறிவென்பதே
பாவனைகளாய்
நெகிழத் தக்கதே
அளவுகோள்களாய் இருந்தால்தான்
சந்தைப்படுத்த முடிகிறது என்பதால்

சொல்லத் தக்கதை
பயனுள்ளதை
எளிமையாய்
மிக உறுதியாய்
சொல்வதென்பதே
மதிக்கத் தக்கதென
இருந்தகாலம் போய்...

பொய்யாயினும்
சுவாரஸ்யமாய்
பயனற்றதாயினும்
நேரங்கடத்தியாய்
இருக்கத் தகுந்ததே
மதிக்கத் தகுந்ததாய்
வியாபாரமாகிறது என்பதால்...

இது சரியானது
இதற்கானது எது என்பது போய் ...
எனக்கிது சரி
இதற்கானது எது
என்பதுவே
இன்றைய   சூழலின்
தர்மமாகிப் போனதால்

எப்போதும்,
இனியேனும்
எழுதுபவர்களைக்  குற்றவாளியாக்காதீர்கள்
எழுத்தாளர்களைக் குறைகூறி அலையாதீர்கள்

Sunday, February 2, 2020

ஒட்டக் காய்ச்சிய உரைநடையே..

காதல் உணர்வு  பூக்கையில்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே

வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே

மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
 கூர்மிகுக்  கோடாலியே

தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே

குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு  பான மே

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே                       
         
தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச்  தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்