Sunday, January 28, 2018

இறுதிச் சுற்று ........

தேவையின்றி 
அலட்சியமாய்
உரச உரச
உதிர்ந்த
ஒடிந்த
தீக்குச்சிகளின்
அருமையை
உணரச் செய்து
பதட்டமேற்றிப் போகிறது....

அவசியமாய்
மிகக் கவனமாய்
உரச வேண்டிய
நிலையில்
எஞ்சிக்
கடைசியாய்
கையில் உள்ள
ஒரே ஒரு
தீக்குச்சி

மடத்தனம் மீண்டும் தொடர்கிறது...

படுத்திருப்பவன்
அனுபவித்துத் தூங்காது
தன்னைக் கடப்பவனுக்கு
தான் உயிர்த்து இருப்பதை
நிரூபிக்கவேண்டும் என்பதற்காக
காலாட்டிக் கொண்டிருக்கும்
மடத்தனத்திற்கு
எந்த விதத்திலும்
குறைவாகப்படவில்லை...

அனுபவப்பட்டவன்
அனுபவத்தைப் பாடமாக்கி வாழாது
தன்னைச் சூழ்ந்தவருக்கு
தான் அனுபவமானவன் என்பதை
நிரூபிக்கவேண்டும் என்பதற்காக
எழுதிக் கொண்டிருப்பதும் என்பதுவும்..

இது தெளிவாகத் தெரிந்தும்...

காலாட்டுபவன் கொள்ளும்
அற்ப சுகத்தை
அவனுக்கு விட மனமில்லை
என்பதுபோல்
எழுதும் அற்ப சுகத்தை விட
எனக்கும் மனமினமையால்...

மடத்தனம்
மீண்டும் தொடர்கிறது

Thursday, January 18, 2018

அரண்மனையும் கோவிலும்

மன்னர்களின் அரண்மனைகளில்
பெரும்பாலானவை சிதிலமடைந்து இடிந்து
அழிந்து போக

அவர்கள் கட்டிய கோவில்கள் இன்றும்
புதுப் பொலிவுடன் இருக்கக் காரணமே
மன்னர்கள் கோவில்களை மக்களின் சொத்தாக
அவர்களை உணரவைத்ததுதான்

அதைப் போன்றே அரசு மற்றும் ,தொண்டு
நிறுவங்கள் தங்கள் பொறுப்பில் என்னதான்
செய்து கொடுத்தபோதும், அதில் சிறிதேனும்
மக்களின் பங்களிப்பில்லை எனில் நிச்ச்யம்
அது தரிசாகத்தான் போகும்

அதனாலேயே நாங்கள் சார்ந்திருக்கிற
சேவைச் சங்கமான உலக அரிமா சங்கம் மூலம்
எந்தச் சேவையைச் செய்தாலும் உடலுழைப்பாகவே
பொருளாகவோ பணமாகவே எங்கள் பகுதியைச்
சார்ந்தவர்களிடம் சிறிய பங்கேனும் பெறாமல்
எந்தச் சேவையையும் செய்வதில்லை

அந்த வகையில் எங்கள் பகுதியில் பிரதான
சாலை வெறும் காட்டுச் செடிகளாலும்
முட்செடிகளாலும் சூழப்பட்டு கவனிப்பாரற்ற
அனாதைச் சாலைகள் போல இருந்தது

குறைந்த பட்சம் காலையில் நானூறு ஐநூறு
நபர்களுக்கு மேல் காலை மாலை நடைபயிற்சி
மேற்கொள்வார்கள்

இதனை ஒரு மனோரம்மியமான நடைப்பகுதியாக
மாற்றும் நோக்கில் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து
அருகில் இருந்த சில நல்ல உள்ளங்களை அணுகி
சாலையில் பூச்ச்செடிகளை  நட்டுவைத்தோம்
பணம் பெற்றதும், நட்டு வைத்ததும், சிலர்
பாராட்டி வைத்ததும், எங்கள் பகுதியிலும்
செய்யுங்கள் நாங்களும் எங்கள் பங்களிப்பைத்
தருகிறோம் என்பதெல்லாம் எங்களுக்கு
பெரும் மகிழ்ச்சியைச் தரவில்லை

மாறாக சில நாட்கள் கழித்து ஒரு நாள்காலை
நடைப்பயிற்சி மேற்கொள்ளுகையில்
அந்தச் செடிகளை தன்னுடைய செடிகளாக
மதித்து ஒரு பள்ளி மாணவி இரசித்து
நீரூற்றிக் கொண்டிருந்தாள்

நிச்சயமாக இனி இந்தச் செடிகள் குறித்து
நாங்கள் கவலை கொள்ளவேண்டியதில்லை
அது அரண்மனை போலல்லாது நிச்சயம்
கோவில்கள் போல என்றும் பொலிவுடன்
திகழும் என்ப்தைச் சொல்லவும் வேண்டுமோ ?


Wednesday, January 17, 2018

அடுத்து யாரோ ?

முன்பெல்லாம் தன்னைச் சமூகம்
திரும்பிப் பார்க்கும்படிச் செய்ய வேண்டுமெனில்
சமூகம் கவனித்து இரசிக்கும்படியாக 
இதுவரை யாரும் சொல்லிச் செல்லாத ஒன்றை
மிக அழகாக சொல்லிச் செல்வார்கள்

இப்போதெல்லாம் சமூகம் தன்னைக்
கவனிக்க வேண்டுமெனில் ஒரு நல்ல
சங்கீதக் கச்சேரிக்கிடையில் தகரத்தைத்
தட்டுபவன் போல்

சமூகமே எரிச்சலடையும்படியாக
சமூக அமைதியைக் கெடுக்கும்படியாக
ஏதேனும் ஒன்றை வாந்தி எடுத்துப் போகிறார்கள்

முதலில் வைரமுத்து, பின் ராஜா
இப்போது நைனார் நாகேந்திரன்
அடுத்து யாரோ ?

Monday, January 15, 2018

ஞாநி .பாசாங்குகள் அற்ற ஓர் மாமனிதன் ( 2 )

ஏற்கெனவே மதுரையில் திட்டமிட்டிருந்தபடி
உடன் வந்த அனைவரும் தங்குவதற்கான
ஏற்பாடுகளைச் செய்து விட்டு நானும்
முனைவர் மு.ரா அவர்களும் ஞாநி அவர்களைச்
சந்திக்க அவர் வீடு தேடிப் போனோம்

அவர் அப்போது சி,ஐ.டி காலனியில்
இருந்த நினைவிருக்கிறது

அவர் வீட்டிற்குள் நுழைகையிலேயே
வராண்டாவில் அவருடைய தாயார்
எதிர்ப்பட்டார்

கணவனை இழந்த ஆசாரமான பிராமணக்
குடும்பப் பெண்கள் தலைமழித்து காவிஉடை
அணிவது போல் அவர் அணிந்து இருந்தது
எனக்கு ஆச்சரியமாக இருந்தது

இத்தனை முற்போக்கு எண்ணம் கொண்ட
அவர் வீட்டிலேயே அப்படியா என எனக்கு
முதலில் ஆச்சரியமாக இருந்தது

பின் அவரிடம் எங்கள் சூழல் குறித்து
விளக்கி அவரின் குழுவிலோ அல்லது
கூத்துப்பட்டரையிலோ இந்த இக்கட்டான
சூழலை சமாளித்து நடிக்கத் தக்க நல்ல
நடிகைகள் யாரும்  நடித்து கொடுக்கும்படி
இருந்தால் நல்லது என கேட்டுக் கொண்டோம்

சிறிது நேரம் யோசித்தவர் "இன்று மாலைக்குள்
இந்தக் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடிக்கத்
தக்கவர் என்றால் அது மிகச் சிரமமான
காரியமே.ஆனாலும் எனக்குத் தெரிய
இந்தச் சவாலை என் துணைவியாரால்
ஏற்றுச் சமாளிக்க் முடியும் "என்றார்

அந்த பதில் எங்களுக்கு கொஞ்சம்
தெம்பளிப்பதாக இருந்தது

"அப்படியானால் கொஞ்சம் கேட்டுச்
சொல்லமுடியுமா ?" என்றோம்

"அவர்களால் நடிக்க முடியும்
என்பதைத்தான் நான் சொல்ல முடியும்
நடிப்பதையும் நடிக்காமல் இருப்பதையும்
அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்
நீங்கள் நேரடியாக அவரிடமே கேளுங்கள் "
என்றார்

அப்போது எனக்கு இந்தப் பதில் மிகவும்
ஆச்சரியமளிப்பதாக இருந்தது

என்னைப் பொருத்தவரை மதுரையை ஒட்டிய
ஜாதிக் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு குக்கிராமத்தில்
ஆசாரமான சூழலில் வளர்ந்த எனக்கு
மனைவிக்கான அனைத்து முடிவுகளையும்
கணவன் எடுப்பதையே கண்டு பழகிவிட்ட எனக்கு
நடிப்பதையும் நடிக்காததையும் அவர்தான்
முடிவெடுக்க வேண்டும் எனச் சொன்னது
கொஞ்சம் ஆச்சரியமான விஷயமாகவே பட்டது

(பின் நாங்கள் கேட்டுக் கொள்ள அவர்
நடித்துத் தருவதாக ஒப்புக் கொண்டு
வசனப்பிரதியை வாங்கிக் கொண்டு மாலையில்
நடந்த கடைசி ஒத்திகையை மட்டும்
கவனித்து,பின் அருமையாக நடித்துக்
கொடுத்தார்

நாடகம் முடிந்து பின் நடந்த கலந்துரையாடலில்
எங்களுக்கு ஏற்பட்ட அசாதரணமான சூழலை
விளக்கி ஒரே ஒரு ஒத்திகையில்
மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்த அந்தக்
கதாப்பாத்திரம் எது எனக் கேட்ட போது
பார்வையாளர்கள் யாரும் அவரைக் குறிப்பிட்டுச்
சொல்லாததே அவரின் நடிப்புத் திறமைக்குச் சான்று )

இன்றைய நிலையில் கூட வெளியே
ஒரு புரட்சிக்காரனைப் போல பேசிக் கொண்டும்
நடித்துக் கொண்டும்

வீட்டில் ஒரு ஆணாதிக்க
வாதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிற சூழலில்

அன்றைய நிலையிலேயே தன் தாய்க்குரிய
நம்பிக்கைகளிலோ, துணைவியாருக்குரிய
சுதந்திரத்திலோ தலையிடாது

தன்னளவில் வெளிப்புறத்தில் தன்னைக்
காட்டிக் கொண்டதைப் போலவே
தனிப்பட்ட வாழ்விலும்

அன்று முதல் தன் கடைசி மூச்சுவரை
ஒரு பாசாங்கற்ற மனிதராகவே வாழ்ந்து
வந்த ஞாநி அவர்களை நினைவு  கூர்வதில்
பெருமிதம் கொள்வதோடு அவர் ஆன்மா
சாந்தியடையவும் பிரார்த்திப்போமாக

Sunday, January 14, 2018

..ஞாநி .பாசாங்குகள் அற்ற ஓர் மாமனிதன்

எண்பதுகளின் துவக்கம்.என் நினைக்கிறேன்
வங்கத்தில் பாதல் ஸ்ர்க்கார் அவர்களிடம் பயிற்சிப்
பெற்றப் பாதிப்பில் சென்னையில் ஞாநி அவர்களின்
சார்பாக பரிக்ஷா நாடகக் குழுவும்,முத்துச்சாமி
அவர்கள் சார்பில் கூத்துப்பட்டரையும் மதுரையில்
முனைவர் மு. இராமசாமி அவர்கள் சார்பாக
நிஜ நாடக இயக்கமும் துவக்கப்பட்டு தமிழகமே
கவனிக்கத் தக்க அளவில் நாடகத் துறையில்
பெரும் புரட்சிகர மாறுதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்த
காலக்கட்டம்.

அப்போது நானும் நிஜ நாடக இயக்கத்தில் என்னை
பிணைத்துக் கொண்டிருந்த நேரம்

முனைவர் மு.ரா அவர்கள் தயாரிப்பில்
இயக்கத்தில் தெரு நாடகமாக "ஸ்பார்ட்டகஸ்" என்னும்
உணர்வுப் பூர்வமான நாடகத்தை
தமிழகம் முழுவதும் நிகழ்த்திக் கொண்டிருந்தோம்

அந்தச் சூழலில் சென்னை லயோலா கல்லூரியில்
இந்த நாடகத்தை நிகழ்த்தும்படியாக அழைப்பு
வந்திருந்தது

மு.ரா அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்
கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த
காரணத்தால் என்னைப் போல ஒரு சிலரைத் தவிர
ஏனையோர் அனைவருமே பல்கலைக் கழகத்தில்
பட்டமேற்படிப்பு மாணவராக,ஆராய்ச்சி மாணவராக
இருந்தார்கள்..ஒத்திகை முதலான விஷயங்களுக்கு
அதுவே சாதகமானதாகவும் இருந்தது

அந்த வகையில் இந்த நாடகத்தில் முக்கியமான
பெண் கதாப்பாத்திரத்தை இரண்டு பட்டமேற்படிப்பு
மாணவியர் ஏற்று மிகச் சிறப்பாக
நடித்துக் கொண்டிருந்தார்கள்

அன்று மாலை சென்னை கிளம்ப அனைவரும்
புகைவண்டி நிலையத்தில் கூடிக் கொண்டிருக்கிற
நேரத்தில் முக்கியமான பெண்கதாப்பாத்திரத்தில்
நடிக்கும் மாணவியின் தந்தை "இங்கு
நடிப்பதால் ஒப்புக் கொண்டேன்.சென்னைக்கு
என்றால் எனக்கு அனுப்பச் சம்மதமில்லை"
எனும் ஒரு அணுகுண்டைத் தூக்கிப் போட்டார்
நாங்கள் அதிர்ந்து விட்டோம்

காரணம் இந்த தேட் தியேட்டர் எனும் பாணி
கொண்ட இந்த நாடகத்தில் வசன மொழியை விட
உடல் மொழியும்,அரங்கினை ஆளும் உடலசைவுகளும்
மிக மிக முக்கியமானவை.திடுமென பிற
மேடை நாடகங்களைப் போல வசனங்களை
மனப்பாடம் செய்து நின்று பேசிவிட்டுப் போகும்
பாணிக்கு இது முற்றிலும் மாறுபட்டது
என்பதால் உடனடியாக புதியவர் ஒருவரை
கதாப்பாத்திரத்துக்கு தயார் செய்வது அவ்வளவு
சுலபமானதில்லை

இது விவரம் அந்த மாணவியின் தந்தையிடம்
எப்படி விளக்கிச் சொல்லியும் அவர் ஏற்கிற
மன நிலையில் இல்லை

பாண்டியன் புகைவண்டி புறப்பட
ஒலி எழுப்ப ஆரம்பித்துவிட்டது

ஒன்று இந்த நாடகத்தை இன்னொரு நாளில்
நடத்துவதாக தந்தி கொடுத்துவிட்டு அனைவரும்
வீடு திரும்ப வேண்டும். அல்லது... அல்லது
என்ன செய்வது  எல்லோருக்கும்
ஒரு மாபெரும் குழப்பம்

அப்போதும் எவ்வித அதிர்ச்சியையும்
தன் முக பாவனையில் காட்டிக் கொள்ளாமல்
முனைவர் மு.ரா அவர்கள் "அனைவரும்
புகைவண்டியில் ஏறுங்கள்  எப்படியும்
நாடகம் நடத்துகிறோம் " எனச் சொல்லி
அனைவரையும் வண்டியில் ஏறச் செய்து
விட்டார்.

அனைவரும் மாணவர்கள் என்பதால்
என்ன செய்யப் போகிறோம்,எப்படிச்
செய்யப்போகிறோம் என அறியும்
பதட்டமிருந்தாலும் கேட்க அச்சம்

நான் ஒருவன் மட்டுமே அவர் வயதொத்தவர்
என்பதாலும்,அப்போது இயக்கத்தில் ஒரு
பொறுப்பில் இருந்ததாலும் மெதுவாக
"என்ன செய்யப்போகிறோம்,எப்படிச்
செய்யப் போகிறோம்." என மெதுவாக
பேச்சை ஆரம்பித்தேன்

அவர் வெகு நம்பிக்கையுடன் இப்படிச்
சொன்னார்."ஒரு வழி இருக்கிறது
நாம் இருவரும் நாளை சென்னை சென்றதும்
நேரடியாக ஞாநி அவர்கள் வீட்டுக்குப் போவோம்
நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும் " என்றார்

நிஜமாகவே அங்கு அவரைச் சந்தித்த போது
நாடகத்திற்கு ஒரு தீர்வு மட்டும் இல்லை
நிஜம் வாழ்விலும் எப்படி ஒரு பாசாங்கற்ற
சமரசங்களற்ற ஒரு கலைஞராய் ஒரு
தலை சிறந்த மனிதராய்
ஞாநி  அவர்கள் இருக்கிறார்
என்பதும் எனக்குப் புரிந்தது

(தொடரும் )

Thursday, January 11, 2018

அட நீ வேற....

அவன் :    இப்பத்தான் அண்ணே அமெரிக்கா
                  யுனிவெர்சிடி நண்பன் சொன்னான்

இவன் :    என்னத்தடா சொன்னான் ஏற்கெனவே
                  அங்குள்ளவன் சொன்னான்னு
                  என்னத்தையோ இங்குள்ளவர் சொல்ல
                 பெரிய குழப்பமா இருக்கு
                  இதுல நீ வேற

அவன் :   இல்லன்ணே கடவுள கும்பிடாட்டிலும்
                  பரவாயில்லை கொழுந்தனாரை கும்பிட்டா
                  மழைபெய்யும்னு
                 சொன்னா தப்பு இல்லையா அண்ணே
                அப்ப புருசந்தான் தெய்வம்னு நம்புற நம்ம
                 கலாச்சாரம் பண்பாடு என்ன அண்ணே ஆகிறது

இவன்     அப்படி யார்றா சொல்லி இருக்கா
                  எங்கடா சொல்லி இருக்கா

அவன்:   அதுதான் வள்ளுவரு அந்தப் பாட்டுக் கூட
                தெய்வத்தை கும்பிட்டு ஆகாட்டிக் கூட
                கொழுந்தனாரை கும்பிட்டு எந்திரிச்சா
                மழைபெய்யும்னு
                வரும்னுங்கிறதை அவன் தான் அண்ணே
               படிச்சுக் காண்பிச்சான்.
              நானும் கண்ணால பாத்தேண்ணே

இவன் :   போடா போய்த்த் தொலைடா.
             தேவையில்லாம எனக்கு பிரம்மஹத்தி தோஷம்
             பிடிக்க வைச்சுறாத
             (எனச் சொல்லியபடி மிக வேகமாக இடத்தைக்
             காலி செய்கிறான்)

அவன் :   (பதில் சொல்லத் தெரியாமல் ஓடுவதை
               நினைத்த மனதுக்குள் சிரித்தபடி
              அதுதானே அமெரிக்காரனா கொக்கா
              பதில் சொல்ல முடியாம ஓடுறதைப் பாரு
              என மெல்ல முனங்குகிறான்