Monday, March 30, 2020

கர்ணனும் சித்தாள் முனியம்மாவும்..

கருவண்டாகிச்
சதிகாரக் கண்ணன்
தன் தொடை துளைத்த போதும்
இரத்தம் ஆறாய்ப்
பெருக்கடுக்க
வலி தீயாய்ப்
பொசுக்கியபோதும்
அலுப்பில் அயர்ந்த
குரு நாதரின் துயில்
கலையக் கூடாதென
கற்சிலையாய் இருக்கிறான்
பாரதக் கர்ணன்

வறுமை தந்த
சோர்வும் நோவும்
மெல்லப் படுத்தியெடுக்க
அதன் காரணமாய்
அடிவயிற்றிலிருந்து கிளம்பும்
அடக்கவொணா இருமலை
அரைவயிற்றுப் பசியில்
மார்பில் அயர்ந்த குழந்தை
விழித்துவிடக் கூடாதென
உதடு கடித்து விழுங்கித்
தாய்மைக்கு இலக்கணமாகிறாள்
சித்தாள் முனியம்மா

ஒப்பு நோக்கின்
இரண்டில் ஒன்றுக்கொன்று
சளைத்ததில்லையாயினும்

என்றோ ஒருமுறை
நடப்பதற்கும்
அன்றாடம் நடப்பதற்குமான
வித்தியாசத்தில்

கர்ணனையும் மீறி
என் மனத்தில் உயர்கிறாள்
சித்தாள் முனியம்மா

Saturday, March 28, 2020

மனமாகும் குற்றாலம்..

மலரோடு உறவாடி
மகிழ்வோடு வலம்போகும்
நிலவோடு உறவாட
நினைவெல்லாம் பூமணக்கும்

கரையோடு தினம்கூடி
களிப்போடு சதிராடும்
அலையோடு நினைவோட
நுரைபொங்கும் மனமெங்கும்

மலையரசன் உடல்தழுவி
மதிமயங்கித் தரைநழுவும்
குளிரருவி நிலையுணர
மனமாகும் குற்றாலம்

தண்மலரைக் கூடிமனக்
களிப்போடு உலாபோகும்
வண்டினத்தின் சுகமறிய
மனம்கொள்ளும் ரீங்காரம்

இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் இலவசமே

கணந்தோறும் மகிழ்வோடு
சூழலிலே மயங்கவிழும்
மனமதுவும் கொண்டுவிட்டால்
கவிநூறு நம்வசமே

Wednesday, March 25, 2020

கொடியதற்கு எதிராக மிக எளிமையாய்..

*கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு காவல்துறையின்  ஆத்திச்சூடி*

(அ) அடிக்கடி கை கழுவுங்கள்...

(ஆ) ஆபத்தை அறிந்து செயல்படுங்கள்...

(இ) இல்லத்தில் தனித்திருங்கள்...

(ஈ) ஈரப்பதம்  உள்ள இடத்தில்  தள்ளி இருங்கள்...

(உ)  உற்றார் உறவினரை சற்று ஒதுக்கி வையுங்கள்...

(ஊ) ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படாதீர்கள்..

(எ) எங்கேயும் வெளியிடங்களில் தேவையின்றி சுற்றாதீர்கள்...

(ஏ) ஏற்கனவே உலக நாடுகளை அச்சுறுத்திவரும்  கொரோனா வைரஸ் தொற்று  நம்மை நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...

(ஐ) ஐயமின்றி அனைத்தையும் எதிர் கொள்ளுங்கள்...

(ஒ) ஒதுங்கியிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள் பிறரிடமிருந்து...

(ஓ) ஓரிடத்தில் இருந்து ஓய்வெடுங்கள்....

(ஔ) ஔவையார் வழிவந்த நம் ஒவ்வொருவருக்கும்  கொரோனா வைரஸ் பற்றிய  விழிப்புணர்வு மிக மிக அவசியம்....

இ(ஃ)து அனைத்தையும் அறிந்து நடத்தலே இனிய வாழ்வுக்கு சிறந்த வழி..

அந்த நீலக்கடல்...


அகன்று விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது
அந்த நீலக்கடல்

 கடற்கரையோரம்
யாருமற்ற தனிமையில்
"இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை "
என்கிற திடமான முடிவுடன்
கடல் நோக்கி விரைந்து கொண்டிருந்தான்
இளைஞன் ஒருவன்

தன்னுடன் விளையாடத்தான்
அலைகள் தத்தித் தத்தி வருவதான நினைப்புடன்
கரைக்கும் கடலுக்கும் இடையில் ஓடி
மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தாள்
சிறுமி ஒருத்தி

"காமத்தில் திளைப்பவர்களுக்குத் தேவை
அடர் இருளும் யாருமற்ற தனிமையும்
தூய காதலுக்குத் தேவை
காற்று வெளியும் கடற்கரையும்தான் "
காதல் மொழிகள் பேசி
காதலியைக் கரைத்துக் கொண்டிருந்தான்
காதலன் ஒருவன்

ஒவ்வொரு பருவத்திலும்
கடல் தன்னுடன் கொண்ட பரிச்சியத்தை
நெருக்கத்தை நேசத்தை
அசைபோட்டபடி கடல் தாண்டிய வெறுமையில்
எதையோ தேடிக்கொண்டிருந்தார்
பெரியவர் ஒருவர்

என்றும் போல
எப்போதும் போல
தனக்கென ஏதுமற்று
கண்போருக்குத் தக்கபடி
மிகச் சரியாகப் பொருந்தியபடி
அகன்று விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது
அந்த நீலக் கடல்             

Monday, March 23, 2020

இதுவும் படிப்பதற்காகவும் பகிர்வதற்காகவும்..கடைபிடிப்பதற்காகவும்

பயம் பாதி கொல்லும்
     திடம் நின்று வெல்லும்....

*அனைவருக்கும் வணக்கம்..*

*அடுத்த 15 நாட்கள்..*
*ஆம் நமக்கு..*

அடுத்த 15 நாட்கள் மிக முக்கியமானது. இந்த 15 நாட்கள்தான் கொரோனாவின் தமிழக தாக்க த்தை உறுதி செய்யும். 15 நாட்களுக்குள் கட்டுக்குள் வந்து விட்டால் பிரச்சனை இல்லை..

கட்டுக்கடங்காமல் பரவினால் நிலைமை மோசமாகிவிடும். எனவே முடிந்தவரை இல்லை.. அறவே வெளியே செல்லாதீர்கள்..

இது ஒரு தீவிர தொற்றுநோய். ஒருவருக்கு பாதித்தால் ஒரு குடும்பமே பாதிக்கப்படும். நம்மைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. நம் குடும்பத்தாரை பற்றி சிந்தித்து செயல்படவும்..

விடுமுறை விட்டதால் குழந்தைகளை வெளியில் அனுப்பி விளையாட வைப்பதை பெற்றோர் முற்றிலும் தவிர்க்க வேண்டும்..

வழக்கம்போலவே மொபைல்போன், தொலைக்காட்சிகளில் குழந்தைகளை குதுகலப்படுத்துங்கள்..
இப்போதைக்கு தவறில்லை..

கடைகளை அடைக்கிறார்கள், மளிகை பொருட்கள் கிடைக்காது, காய்கறிகள் கிடைக்காது என்றெல்லாம் தேவையில்லாத கற்பனைகளை மனதில் வைத்துக்கொண்டு முண்டியடித்து மளிகை கடைகளுக்கும் மார்க்கெட்டு களுக்கும் ஓடி அலைய வேண்டாம்..

அடுத்த இருபது முப்பது நாட்களுக்கு தேவையான பொருள்களை பொறுமையாக வாங்கி வைத்துக்கொண்டால் போதும். பொதுவாக குடும்பங்களில் மாத பட்ஜெட் முறையில் பொருட்கள் வாங்குவது வழக்கமானதுதான்..

எனவே அதே நடைமுறையில் பதட்டமில்லாமல் பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளவும். வாங்க கூடிய பொருள்களும் ஆடம்பரம் தரக்கூடியதாக இல்லாமல் அன்றாட நம் உடம்புக்கு ஊக்கம் தரக்கூடியதாகவும் ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் இருக்கட்டும்..

குடிநீரை அனைவரும் சுட வைத்து குடிக்கவும். குடிநீரில் கொரோனா தொற்று வராது; அதே நேரத்தில் சுகாதாரம் இல்லாத குடிநீர் பருகுவதால் சளி காய்ச்சல் போன்றவை ஏற்பட்டு அது கொரோனாவாக இருக்குமோ என்கிற தேவையற்ற அச்சத்தில் விடுபட உதவும்..

இது வெயில் காலம் என்பதால் வெளியில் விளையாடச் செல்லும் குழந்தைகளுக்கும், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் அதிக வியர்வை வரலாம். அதனால் சளி பிடித்து தலைவலி உள்ளிட்டவை வரலாம். அதையும் கொரோனா என நினைத்து அச்சப் படக்கூடாது..

இவற்றையெல்லாம் தவிர்க்க முழுமையான ஓய்வு நல்ல காற்றோட்டமான பகுதியில் தேவை. இதற்கு ஏசி தேவையில்லை நல்ல மின்விசிறி  வசதி இருந்தாலே போதும்..

ஊரில் இருந்து வெளியிலிருந்து யார் வந்தாலும் அவர்களை கை கால்களை சுந்நம் செய்த பின்பாக உள்ளே அனுமதிக்கவும். முடிந்தவரை அவர்கள் வருவதை தவிர்க்க கூறவும். நீங்களும் செல்ல வேண்டாம்..

மருந்து இல்லாத ஒரு நோயை தடுக்க முடியாது தவிர்க்க முடியும். அது அரசாங்கமும் அதிகாரிகளும் நினைத்தால் மட்டும் நடக்காது. ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்தில்  விருப்பத்தில் அதை கடைபிடிக்க வேண்டும்..

நம்மிடம் வந்தால் நம் குடும்பத்தை தாக்கும் என்கிற சுயநலம் வேண்டும். பிறருக்கு பரவும் என்கிற பொதுநலம் அதற்கு பிறகு தான். பிறப்பைப் போலவே இறப்பும் பொதுவானதுதான். ஆனால் அந்த இறப்பு அலட்சியத்தால் இருக்கக்கூடாது..

நம்மை நாம் பாதுகாத்தால் பிறர் ஆரோக்கியமாக வாழ்வார்கள். நீங்கள் இல்லாமல் உங்கள் குடும்பம் மகிழ்வுடன் வாழும் என்றால்...விருப்பம்போல் சுற்றுங்கள்..

இல்லையெனில்... அனைவரிடத்திலும் சற்று ஒதுங்கியே இருங்கள். ஒரு மாதத்திற்கு தான். நீங்களும் ஒரு பிக் பாஸ் போட்டியாளர் என நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகளை பிக் பாஸ் வீடாக மாற்றிக் கொள்ளுங்கள். ஓடவோ ஒளியவோ சொல்லவில்லை..

ஒழித்துக் கட்டுவோம் என்றுதான் சொல்கிறேன். பயம் பாதி கொல்லும்; திடம் நின்று வெல்லும்..

*அன்புடன் உங்கள்..*
*🙏தமிழ்நாடு காவல்துறை🙏*

Sunday, March 22, 2020

பகிர்வதற்காக...

*கொரோனா_வைரஸ்*
*COVID-19*

*அவசர உதவி அழைப்பு எண்கள்:*

104 மற்றும் 1077
அனைத்து
*மாவட்டங்களில் அவசர உதவி அழைப்பு எண்கள் :*

அரியலூர்: 04329-228709
ஈரோடு: 0424-2260211
உதகமண்டலம்: 0423-2444012/2444013
கடலூர்:  04142-220700
கரூர்: 04324-256306
கள்ளக்குறிச்சி: 1077 04146-223265
கன்னியாகுமரி:  04652-231077
காஞ்சிபுரம்: 044-27237107/27237207
கிருஷ்ணகிரி: 04343-234424
கோயம்புத்தூர்:  0422-2301114
சிவகங்கை: 04575-246233
செங்கல்பட்டு: 044- 27237107/27237207
சென்னை: 044-25243454
சேலம்: 0427-2452202
தஞ்சாவூர்: 04362-230121
தர்மபுரி:  04342-230562/234500
திண்டுக்கல்: 0451-2460320
திருச்சி: 0431-2418995
திருநெல்வேலி: 0462-2501070/2501012
திருப்பத்தூர்:  04179-222111
திருப்பூர்: 0421-2971199
திருவண்ணாமலை: 04175-232377
திருவள்ளூர்: 044-27664177/27666746
திருவாரூர்: 04366-226623
தூத்துக்குடி: 0461-2340101
தென்காசி: 0462-2501070 /2501012
தேனி: 04546-261093
நாகப்பட்டினம்: 04365-252500
நாமக்கல்: 04286-281425/8220402437
புதுக்கோட்டை: 04322-222207
பெரம்பலூர்: 04328-224455
மதுரை: 0452-2546160
ராணிப்பேட்டை: 0416-2258016
ராமநாதபுரம்: 04567-230060
விருதுநகர்: 04562-252601/252017
விழுப்புரம்: 04146-223265
வேலூர்: 0416-2258016

Saturday, March 21, 2020

வள்ளுவன் சொன்ன ரகசியம்

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்
(இன்று உலக தண்ணீர் தினம்)

சில கோடுகள்....

சில கோடுகள் சில வரையரைகள் நிச்சயம் தடுப்புகள் இல்லை.நம்மைக் காக்கும் வேலிகளே..கூடுமானவரையில் வரும் பதினைந்து நாட்கள் வீட்டில் அடங்கிக் கிடக்கப் பயில்வோம்..உலகை மிரட்டும் கொரோனாவை விரட்டி உலகைக் காப்போம்.                   How to apply for Janta Curfew certificate

To get Janta Curfew certificate you need to take a pledge, follow the below-given steps and take the pledge.

Step 1: Open any browser and visit pledge.mygov.in

Step 2: On the home page select tap first template "I support Janta Curfew"

Step 3: A new page of 'I support Janta Curfew' will appear on the screen, here tap on Take Pledge option.

Step 4: It will direct to a new page where you have to enter your basic details.

Step 5: First you need to enter your Name.

Step 6: After entering your name, you need to select your Gender.

Step 7: After selecting gender, enter your Date of Birth and Pin Code.

Step 8: Next you need to select your State and District.

Step 9: In the last two boxes you need to enter your email ID and mobile number.

Note: Make sure that you have entered a correct email ID and mobile number because the copy of Certificate issued will be sent to Email.                   

Friday, March 20, 2020

நம்மவர்கள் நமக்காக...

கடந்த வாரம், தன்னுடைய மகனை சிங்கப்பூரில் போய் பார்த்து விட்டு சென்னை திரும்பியுள்ளார்கள் பெற்றோர்கள்.கொரானா ஆரம்பகட்டச் சோதனைகள், உடல் நலம் குறித்த கேள்விகள் மற்றும் பயண விபரப் படிவங்களை நிரப்பிய பிறகு, வெளியேற அனுமதித்திருக்கிறார்கள்.  “ப்பூ..இவ்வளவு தான் சோதனையா.. ரத்தம் எடுக்கல..GH போகச் சொல்லல, என்னத்த கண்ரோல் பண்ணி, Very lethargic” ..என மனக் குமுறல்களுடன் வீடடைந்திருக்கிறார்கள். எங்கும் செல்லவில்லை. யாரையும் பார்க்கவில்லை. தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டார்கள்.

அன்று மாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சிறப்புப் பிரிவில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. இருமல், காய்ச்சல் இருக்கிறதா.. உடல் நிலை எப்படி உள்ளது என விசாரித்து விட்டு, ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க ! என்று அவசர எண்ணைப் பகிர்ந்திருக்கிறார்கள். அடுத்த நாளும் அழைப்பு தொடர்ந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அழைப்பு வரவில்லை, மாறாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக வீட்டிற்கு வந்து விசாரித்துச் சென்றிருக்கிறார்கள்.

இது ஏதோ மேலை நாடுகளில் நிகழவில்லை, “நல்லவேளை, இந்த வைரஸ் இந்தியாவில் தோன்றவில்லை, அதன் மெத்தனத்திற்கு இந்நேரம் உலகம் அழிந்திருக்கும், Thanks to China” என்று கடந்த வாரம் ஒரு ஐரோப்பியன் கேலி செய்த இந்தியா வில் தான் இது சாத்தியப்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் நாமும் இப்படியே எண்ணியிருப்போம். இந்தியா என்றால் ஏழ்மை, அழுக்கு, சுகாதாரம் என்ன விலை, மெத்தனத்தின் மொத்தம் என்று உலகம் நினைத்திருந்த தேசம் தான் கொரானா வைரஸ் பரவலைத் தடுப்பதில் முன்மாதிரியாக மாறிவருகிறது.

வைரஸ் தாக்கத்தில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாடுகளாக உள்ள பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நாள், Jan 25. ஐந்து நாட்களுக்குப் பிறகு ( Jan 30 ) இந்தியாவில் முதல் கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றளவில் பிரான்சில் 4400, ஜெர்மனியில் 3795. இந்தியாவில் 124.

இதற்குத் தட்பவெட்பம், நிலவேம்பு, மஞ்சள், தமிழர் பாரம்பரியம், வாட்சப், கோமியம், நல்ல மனசுங்க எனப் பல காரணங்களை நீங்களே அனுமானித்தாலும், இதற்கு முக்கியக் காரணம், முடிவெடுக்கும் அரசும், அதை செயல்படுத்த உழைக்கும் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறைப் பணியாளர்களும் தான். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உழைக்கிறார்கள். தெருத் தெருவாக, வீடு வீடாகச் செல்கிறார்கள், தப்பியோடும் கிறுக்கு நோயாளிகளைத் தேடி ஓடுகிறார்கள், அவன் யார் யாரைச் சந்தித்தான் என விசாரித்து அங்கு விரைகிறார்கள். காரணம் !

இந்தியாவிற்கு அடுத்த பத்து நாட்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இவர்கள் அறிவார்கள். இவர்கள் ஓய்ந்து போனால், இத்தேசம் ஒழிந்து போகும் என்பது தான் நிதர்சனம். கேரளாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21 வயது இளைஞர், அதற்கு முந்தைய இரண்டு நாட்களில் மட்டும், கல்யாண ரிசப்ஷன் விழா, பார்ட்டி, சினிமா என மகிழ்ந்ததன் விளைவு, அவருடைய Contact Road mapல் மட்டும் 1000 பேர் இருக்கிறார்கள். இதில் Close contacts 335 பேரைத் தேடி அலுவலர்கள் விரைந்திருக்கிறார்கள். அதில் யாரேனும் Positve என வந்தால் இனி அவர்கள் பயணப்பாதை தயாரித்து அதற்கு அதிகாரிகள் விரைய வேண்டும். நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கும் இதைத்தான் நம் தேசம் செய்து வருகிறது. தன்னால் இயன்றதை விட ஒரு நிலை அதிகமாகவே மக்களைக் காக்க முயல்கிறது. அதற்குக் கைமாறாக இவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். அது, சுய ஒழுக்கம்.

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது என்றதும் கட்டுச் சோறு சகிதம் அதைக் காணச் சென்றவர்கள் நாம், வைரஸிற்கு பயந்து விடுவோமா, ஊரடங்கு என்பதெல்லாம் விடுமுறை என்றளவில் தான் நாம் அணுகுகிறோம். ஆனால் உலகே தற்சமயம் அடங்கி தான் இருக்கிறது. நாம் நம்மைத் தனிமைப்படுத்தலன்றி இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க வழியே இல்லை. பாசிட்டிவாக இருப்பது பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் இப்போதைய மிக முக்கியத் தேவை பாதுகாப்பாக இருப்பது !

விழாக்களை, விருந்தோம்பல்களைத் தவிர்த்து விட்டு, வீட்டில் இருங்கள் நண்பர்களே ! தனித்திரு, விழித்திரு என்பது போல, தனித்திருங்கள்.. யாரிடமும் சற்றுத் தள்ளியே இருங்கள். அது போதும்(.இது படிப்பதற்காக மட்டுமல்ல...தாங்கள் அக்கறை கொண்ட அனைவருக்கும் பகிர்வதற்காகவும்..)

கேட்டுப் பார்க்கலாமே...

மிக உயர்ந்ததைச் சொல்லும் மிக மிக எளிமையான உரை..

Tuesday, March 17, 2020

கொரோனாவின் மறுபக்கம்...

சிந்திக்கக் கிடைத்த சிறிது நேரத்திலும் ஐ.நா வின் செயல்பாடுகள் குறித்தும் அட்லாண்டிக் பெருங்கடலின் சுற்றுச் சூழல் குறித்தும் கவலைப்பட்டு நொந்து கொண்டிருந்த நான்...........                                                                                                        இப்போது கிடைத்த கூடுதல் ஓய்வு நேரத்தில் அண்டை வீட்டுக் காரனைக் குறித்தும் அவன் நலனிலேயே என் நலனும் பின்னிப் பிணைந்துகிடப்பது குறித்தும் முதன் முதலாய் யோசிக்கிறேன் .. .......                                                                                விடுமுறை என்றாலே பயணப்படுதலும்  ஏதேனும் பொது நிகழ்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளுதலே  சிறப்பு எனும் எண்ணம் கொண்டிருந்த நான் ........                                                                                      இப்போது வீட்டில் இருக்க வேண்டி வந்த நேரத்தில் கவனிப்பின்றி இருக்கிற கப்போர்ட்  அடைசல் குறித்தும் பலகாலம் துப்புரவு செய்யப்படாது குப்பைக்கிடங்காய் இருக்கிற மொட்டை மாடியைக் கவனிக்கிறேன்...                                                                                                                  மொத்தத்தில் எண்ணத்தால் இமயம் அசைத்து பெருமிதம் கொண்டது எவ்வளவு அபத்தமானது..                                                                                                                                  ஒருசிறு செயலால் துரும்பசைப்பது கூட எத்தனை நிஜமானது என அறிய வேதனை கொள்கிறேன்..                                                                                                                                        இந்த அற்ப ஞானத்திற்குக் கூட கொடிய கொரோனா வேண்டியதானதை எண்ண எண்ண வரும் குற்ற உணர்வைத்தான் சகித்துக் கொள்ளமுடியவில்லை

Monday, March 16, 2020

காதலும் கவிதையும்...

"காதலர்கள் காதலில் தோற்று
தற்கொலை செய்துகொள்வது
தொடர்ந்து நடக்கிற போதும்...

கவிதைகள் என்கிற பெயரில்
குப்பை கூளங்கள்
தொடர்ந்துப் பெருகிடும் போதும்...

காதலும் கவிதையும் மட்டும்
எப்படி நித்தமும் புத்தம் புதிதாய்த்
தழைத்தபடியே இருக்கிறது

பதினாறு வயது மார்க்கண்டேயனாய்
எப்படி இளமைத் துடிப்புடன்
நிலைத்தபடியே இருக்கிறது " என்றான்
புதிதாய்க் காதல்வலையில் சிக்கிய நண்பன்

" எல்லாம்
அசட்டுத் துணிச்சலும்
குருட்டு நம்பிக்கையும்
 தரும் பலத்தால் தான் "என்றேன் சிரித்தபடி

"இது காதலை அறியாதவனின்
பொறாமைப் புலம்பல் " என்றான் எரிச்சலுடன்

"அரசியல் செய்யவில்லை என்றால்
அரசியல் தெரியாது என்று அர்த்தமில்லை
அப்படித்தான்
காதலிக்கவில்லை என்றால்
காதல் புரியாது என்றும் அர்த்தமில்லை" என்றேன்

"எனக்குத் தேவை
 புத்திசாலித்தனப் புலம்பல் இல்லை
ஏற்றுக் கொள்ளும்படியான
தெளிவான விளக்கம் " என்றான்

"பகைவனின் கோட்டைக்குள்
காதலி இருக்கிறாள் எனில்..

கிடைக்கும் நூலேணி பிடித்தோ
ஒட்டடை நூல் பிடித்தோ
ஏறும் அசட்டுச் துணிச்சலையும்...

ஒரு சந்தம் கிடைத்ததென்றால்
ஒரு சொல் கவர்ந்ததென்றால்...

அதைக் கொண்டே
ஒரு காவியம் இயற்றிவிடலாம் எனும்
குருட்டு நம்பிக்கையையும்

நிச்சயம்
காதல் உணர்வும்
கவிதை மனமும் மட்டுமே தரும்.

அதனால்தான்
காதலர்கள் தோற்றபோதும்
காதல் என்றும் தோற்காதும்..

குப்பைகள் நிறைந்தபோதும்
கவிதையும் வீரியம் குறையாதும்

தொடர்ந்து கொண்டிருக்கிறது "என்றேன்

இதனை ஒப்புக் கொண்டானா
எனத் தெரியவில்லை
ஆனால் பதில் கேள்வி எழுப்பவில்லை

Sunday, March 15, 2020

கொரோனா வெண்பா..

கொம்புளதற்கு  ஐந்து  குதிரைக்குப் பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே--வம்பு செய்
குரோனா கிருமிக்கோ  மூன்றடி வேண்டும்
மறந்திட வேண்டாமே என்றும்.                       (விழிப்புணர்வு ஏற்படுத்த ஆளுக்கொன்று எழுதலாமே) 

Friday, March 13, 2020

இல்லையென்று ஆனால்தான் என்ன?

சிந்தனையைத் தூண்டாத கல்வி
சங்கடத்தில் உதவாத நட்பு
நம்பிக்கை தாராத பக்தி
பயன்படுத்த இயலாத சக்தி
தன்மதிப்பைக் கூட்டாத செல்வம்
சமயத்தில் இணையாத சுற்றம்
நம்மோடு இருந்தால்தான் என்ன?
இல்லையென்று ஆனால்தான் என்ன?

பயனின்றி பேசுகின்ற பேச்சு
ஆக்ஸிஜன் இல்லாத காற்று
தயார் நிலையில் இல்லாத படைகள்
உடலுறுப்பு மறைக்காத உடைகள்
மனமகிழ்ச்சி  தாராத கூத்து
நடப்படாது கட்டிவைத்த நாற்று
கணக்கின்றி  இருந்தால்தான் என்ன ?
இல்லையென்று போனால்தான் என்ன ?

நோய் நொடிகள் தீர்க்காத மருந்து
நோக்கமற்று எழுதுகின்ற எழுத்து
பார்வையற்று திறந்திருக்கும் விழிகள்
ஒழுக்கமற்ற திறமையான ஊழியன்
தாய்தந்தை பேணாத தனயன்
தனனலத்தை துறக்காத தலைவன்
மேற் சொன்ன எல்லாமே வீண்தான்
பிணத்தின்மேல் பூமாலை போல்தான்

Thursday, March 12, 2020

புதிதாய்ப் பிறந்தேன் இன்றும்...

தவறாது நித்தமும்
தீமைக்கு எதிரான
அணியினில் ஒரு துளியாய்
போராட்டத்தில் ஒரு குரலாய்
இலக்கியத்தில் ஒரு வரியாய்
ஏதும் முடியவில்லையெனில்
குறைந்த பட்சம்
அதற்கு எதிராக
ஒரு முகச்சுழிப்பை
பதிவு செய்தபடி
 நாம் தினமும்  கடந்து போவதால்

தவறாது நித்தமும்
சரியானவைகளுக்கு ஆதரவான
அணியினில் ஒரு துரும்பாய்
இயக்கத்தில் சிறு அலையாய்
பதிவுகளில் ஒரு எழுத்தாய்
குறைந்த பட்சம்
அதற்கு ஆதரவாய்
ஒரு சிறு புன்னகையை
பதிவு செய்தபடி
நாம் தினமும்  கடந்து போவதால்

ஒவ்வொரு நாளும்
திரு நாளைப் போல
மகிழ்வூட்டிப் போவதோடு

ஒவ்வொரு நொடியையும்
அர்த்தப்படுத்தியும்
அழகுப்படுத்தியும் போவதோடு

மிக நேர்த்தியாய்....
பாரதியின் கூற்றினைப் போல

ஒவ்வொரு நாளும்
புதிதாய் பிறப்பெடுக்கும்
வல்லமையும் தந்து போகிறது

உங்களைப் போலவே
எனக்கும்                                                                 என்றும் போலவே                                                        இன்றும்..

Wednesday, March 11, 2020

அது இது இருந்தாலும்..

உப்பும் உரப்பும்
சரியா இருந்தாலும்
சத்தும் இருக்கணும் தம்பி-உடம்புக்கு
அதுதான் உரம் சேர்க்கும் தம்பி

நிறமும் அழகும்
நிறைஞ்சு இருந்தாலும்
மணமும் அவசியம் தம்பி-பூவை
அதுதான் சிறப்பாக்கும் தம்பி

தாளமும் இராகமும்
ஒத்து இருந்தாலும்
பாவமும் சேரணும் தம்பி-பாட்டை
அதுதான் அமுதாக்கும் தம்பி

எடுப்பும் தொடுப்பும்
இதமா இருந்தாலும்
முடிப்பதும்  அமையணும்  தம்பி-எதையும்
அதுதான்  நிறைவாக்கும் தம்பி 

எதுகையும் மோனையும்
அழகா இணைஞ்சாலும்
கருவும் அவசியம் தம்பி-கவிக்கு
அதுதான் உயிர்ச்சேர்க்கும் தம்பி

ரிஸர்வ் வங்கியும் ஆண்பாவம் பாண்டியராஜனும்..

எஸ் வங்கியின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட மத்திய ரிஸர்வ் வங்கி அதன் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒரு அலுவலரை நியமித்ததாகவும் அதன் தொடர்ச்சியாக அந்த வங்கி மிகச் சரியாக திவால் ஆகும் நிலைக்கு வந்ததும் அந்த அதிகாரி உடன் ரிஸர்வ் வங்கிக்கு தகவல் தெரிவிக்க உடன் திவாலாகாது தடுக்க அரசு நடவடிக்கை எடுத்ததையும் கேள்விப்பட....                                                   ஆண்பாவம் படத்தில் பாலத்தில் அமர்ந்திருந்த பாண்டியராஜனிடம் காரில் வந்தவர் ரிவர்ஸில் வண்டியெடுக்க முயற்சிக்கையில் "பாலத்தில் வண்டி இடிக்குதான்னு பார்த்துச் சொல்லு 'எனச் சொல்லி வண்டியை மெல்ல மெல்ல ரிவர்ஸில் எடுத்தபடி  ஒவ்வொரு முறையும் இடிக்குதா இடிக்குதா எனக் கேட்டுக் கொண்டே எடுப்பார்.பாண்டியராஜனும் ஒவ்வொரு முறையும் "இல்லை வாங்க " எனச் சொல்லிக் கொண்டே வருவார்.கடைசியாக நகர்த்துகையில் பாலத்தில் வண்டி இடித்துவிடும்..பாண்டியராஜனும் எவ்வித ரியாக்ஸனும் இன்றி "இடித்து விட்டது..இடித்து விட்டது "என்பார்.கார்க்காரர் கோபமாய் இறங்கி "ஏன் முதலிலேயே சொல்லவில்லை " அடிக்க வருவார்..பாண்டியராஜன் மிகச் சாதாரணமாக "நீங்க இடிக்குதான்னு தானே பார்க்கச் சொன்னீங்க ..அதுதான் இடிச்சதும் சொன்னேன் ",என்பார்.                     எஸ் வங்கி விசயத்தில் அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளைப் பார்க்க எனக்கு அந்தத் திரைப்படக் காட்சியே நினைவுக்கு வருகிறது..                                     உங்களுக்கும் அப்படியே வந்திருந்தால் அல்லது வந்தால் நாமெல்லாம் ஓரினமே

Tuesday, March 10, 2020

முதிர்ச்சியான வாசகர்களுக்காக...

அதிக அனுபவச் சேர்க்கையும்
அதீத வாசிப்பின் தாக்கமும்
இயல்பாக வசப்படும் வார்த்தைகளின் நேசமும்
எதையும் எழுதிவிடலாம் என்னும்
நம்பிக்கை இருந்த போதினும்..

.எத்தனை உயர்ந்த வாகனமாயினும்
எவ்வளவு வேகப் பயணமாயினும் 
இலக்கற்ற பயணம்
வெட்டி அலைச்சலே என
மனதினில் எண்ணம் கொண்டு

பொருளற்ற பேச்சில்
சந்தமும் அணிகளும்
அதிகமாய்க் கலந்திருந்தபோதும்
உளறலே என்ற
உறுதியினை அறிவில் கொண்டு

எத்தனைத் திறத்துடன்
செய்யப்பட்ட்டபோதும்
பயனற்ற செயல்கள்
விழலுக்கு இறைக்கும் நீரென்ற
கொள்கையினை  சிரமேற்கொண்டு

மிகச் ச்ரியாகச் சொன்னால்
கருவுறவே அல்லாது கொள்ளுகிற
உடல் சேர்க்கைக் கூட
காமக் களியாட்டமே என
வெறுத்தொதுக்கும் உறுதிகொண்டு

பிண்டத்தைப் பெற்று
தாயெனப் பெருமிதம் கொள்ளுதலை விட
மலடியாய் இருத்தலே மகத்தானது எனும்
மந்திரச் சொல்லினை
வேதமாய் மனதினில் கொண்டு

எழுதாது இருப்பதாலேயே
எங்களையும் எழுத்தாளர்களாக
தலை நிமிர்ந்து உலவ விடும்
தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே
உங்களுக்கே  சரண் நாங்களே 

Monday, March 9, 2020

டயம் பாஸுக்கு என புத்தகமே வந்த பின்...

உழைத்துக் களைத்தவன்
மீண்டும் துள்ளி எழ
புத்துணர்ச்சி பெற
என இருந்த கலைகள் எல்லாம்

ஓய்ந்து கிடப்பவனுக்கும்
உளறித் திரிபவனுக்கும்
ஊன்றுகோல் ஆகிப் போய்
வெகு நாளாகிவிட்டது

மனத்தளவில்
பள்ளத்தில் கிடப்பவனை மேட்டுக்கும்
மேட்டில் இருப்பவனை உச்சத்திற்கும்
ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்த
கலைகள் எல்லாம்

நிற்பவனைத் தள்ளாடச் செய்யவும்
தள்ளாடுபவனை வீழச் செய்யவுமான
சதுப்பு நிலமாகிப் போய்
வெகு காலமாகிவிட்டது

தேவையான உணவுக்கும்
பசிக்கும் இடையினில்
நொறுக்குத் தீனியாய் இருந்த
கலைகள் எல்லாம்

துரித உணவாகி
அதுவே முழு உணவாகி
சக்திக்குப் பதில்
விஷமேற்றும் பொருளாகி
வெகு காலமாகிவிட்டது

இந்நிலையில் கவி முலம்
அறம் கூறி அறிவுரை கூறி
காணாமல் போகாதே
"ஐய்யோ பாவமென்னும்" பட்டமேற்று
பரிதவித்துப் போகாதே

"டைம் பாஸுக்கென "
தனிப்புத்தகமே வந்தபின்
காலத்தின் அருமையைச்
சொல்ல முயலும்
முட்டாள்  நிலை  நமக்கெதற்கு  ?

விஷத்தின் மீது தேன்தடவி
விற்கிற கலையினைப்பயின்று
கவிதைகள் புனைவோம் வா
ஆடுகள் இடையில் சிங்கமென நாமும்
சிலிர்த்துத் திரிவோம் வா

Sunday, March 8, 2020

காலச் சூழல்...

காலச் சூழல்
தலை கீழ் மாற்றம் கொண்டுள்ளது
ஆயினும்
எமது தேர்வுகளில் விருப்பங்களில்
எவ்வித மாற்றமுமில்லை

கலப்படத்தால்
முன்பு
அரிசியில் கல்லைப் பொறுக்குவது
மிக எளிதாயிருந்தது

இப்போது
கல்லில் அரிசி பொறுக்குவதே
மிக எளிதாயிருக்கிறது

ஆயினும் எம் தேவை
அரிசி என்பதில்
எவ்வித மாற்றமுமில்லை

நல்லவைகளில்
முன்பு
தீயவைகளை ஒதுக்குவது
மிக எளிதாய் இருந்தது

இப்போது
தீயவைகளில் நல்லதை எடுப்பதே
மிக எளிதாய் இருக்கிறது

ஆயினும் எம் தேவை
நல்லவையே என்பதில்
எவ்விதக் குழப்பமுமில்லை

ஆம்
எம் விருப்பங்களில் தேர்வுகளில்
எவ்வித மாற்றமுமில்லை என்பதால்

காலச் சூழல்
எப்படித்தான் மாறினும்
எம்முள் எவ்வித மாற்றமுமில்லை


Saturday, March 7, 2020

நம்மைக் கூர்ப்படுத்திக் கொள்ளும் நாள்

சமயலறையிலும் படுக்கையறையிலும்
சுதந்திரம் கொடுத்து சுகம் அனுபவிப்பவர்கள்
சமூக வாழ்விலும் கொடுத்து
நம்மையும் சுதந்திர வாசம்
என்று அறியச் செய்யப்போகிறார்கள்?

பெண் சுதந்திரம் என்பது
கணவன் மனைவிக்குக் கொடுப்பதல்ல
ஒரு தகப்பன் தன் மகளுக்குக் கொடுப்பதுபோல் எனும்
பெரியாரின் வார்த்தைக்கான முழுமையானபொருள்
இந்த சமூகம்  என்று                                      புரிந்து  கொள்ளப் போகிறது ?

அழகிய வயதுப் பெண்
உடல் முழுதும் நகையணிந்து
நள்ளிரவில் சுதந்திரமாக நடமாடக் கூடிய
சூழல் உள்ள நாடே ராமராஜ்ஜியம் என்கிற
காந்தியின் கனவு என்று நிஜமாகும் ?

மொத்தத்தில்
அன்னியரிடமிருந்து கூட
சுதந்திரம் பெற்றிவிட்ட நமக்கு
இந்தச் சமூகத்திடம் இருந்து
என்று அது கிடைக்கப்பெறுவோம்  ?

அதுவரை இந்த மகளிர் தினம் என்பது
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை மாறாக
நம்மைக் கூர்படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்
அனைவரும் உறுதியாய் இருப்போம்

இந்நாள் ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு மீண்டும்
நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் நாள் என்பதில்
நிச்சயம் கவனமாக இருப்போம்

Friday, March 6, 2020

விந்தையே வியக்கும் விந்தை..

யானைகளைக் கட்டி
பலசமயம்
இழுக்க இயலாதுப்  போனக்
கவிதைத் தேரது

ஒரு சிறு எறும்பிழுக்க
வேகமாய்
வலம் வருவது விந்தை

குடம் குடமாய்
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது

ஒரு சிறு சாரலில்
முதுகு நிமிர்த்தி
ஓங்கி வளர்வது  விந்தை

படித்து
அளவுகோலில் நிறுத்து
முயன்று செய்ய ருசிக்காதக்
கவிதைக் குழம்பு

மனமளக்க
கை நிறுக்க
அதிகம் ருசிப்பது விந்தை

விதம் விதமாய்
வேடிக்கைகள் காட்டியும்
வித்தைகள் செய்தும் வரமறுக்கும்
கவிதைக் குழந்தை

எதையோ நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது  விந்தை

ஆம் ..
அதிசயமே அதிசயிக்கும்
அதிசயப் பெண்போல

விந்தையே வியக்கும்
விந்தையது கவிதைதான் 

Thursday, March 5, 2020

சிம்மாசனத்தில் பிச்சைக்காரனாய்...

மக்கள் மனமறிய
ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும்  எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?

இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?

காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கலாமோ ?

இல்லையெனில் நம்நிலை
 சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?

Wednesday, March 4, 2020

மனமூடை..

எப்போதுமே
பயன்படுத்தமுடியாத அளவு
பயன்படுத்தப்பட்ட
பொருட்கள் அடங்கிய….
இதற்குமேலும்
அழுக்கடையமுடியாத அளவு
அழுக்கடைந்துபோன
மூட்டையைச் சுமந்தபடி….
புதர்முடிக்குள்
புதைந்துபோன முகத்தோடு
நிகழ்காலம் அல்லாத
ஏதோ ஒரு காலத்தில் சஞ்சரித்தபடி
எப்போதும் அவன்
எங்கள் தெருவில் திரிவான்.

அந்த மூட் டை
சிலசமயம் அவன்மடியில்
குழந்தையைப் போல கிடந்து சிரிக்கும்
சிலசமயம் சிம்மாசனமாகி
அவனைத் திமிர்பிடித்தவன்போலக் காட்டும்
சிலசமயம் தலையணையாய் மாறி
அவன் தூங்கத் தாலாட்டும்
ஆனாலும் பலசமயம்
அவனுள் பொக்கிஷம்போல் பொதிந்துகிடந்து
லேசாக முகம் காட்டும்.
இப்படி
எத்தனை அவதாரம் அது எடுத்தபோதும்
உடல்தாங்கும் உயிர்போல
எப்போதும் அது
அவனுள் ஒரு அங்கமாகவே வாழும்

அவனை அடிக்கடி பார்க்கிற உரிமையில்
அல்லது
உணவு கொடுத்த பரிச்சயத்தில்
எவரேனும் எதிர்பாராது
அவனை நெருங்க நேர்ந்தால்கூட
உடல்படபடக்க
நம்பிக்கை இழந்தவனாய்
அந்த மூட் டையைப் பொக்கிஷம் போல்
அவனுள் புதைத்துக்கொள்வான்

அவனுள் நேரும் ஒரு மறுபிறப்போ
அவனைத் தழுவும் மரணமோ அன்றி
அவனுக்கும் மூடைக்குமான பந்தம்
அறுந்து போகாது….
அந்த மூடையை அறுத்து எறிந்தால்
அவன் சரியாகக் கூடும்
அல்லது
அவன் சரியானால் கூட அந்த மூடை
அவனைவிட்டுச் சாகுமென
அவ்வப்போது ஒரு எண்ணம் என்னுள் ஓடும்

கோட்டியாய்....
தெருவெங்கும் வலம்வரும் அவன்
என்றேனும் ஒரு நாள்
துருவாசனைப் போல்
உருமாற்றம் கொள்வான்
ஜடாமுடிகள் காற்றில் பறக்க
விழிகள் இரண்டும் நெற்றியில் ஏற
ருத்தர தாண்டவம் ஆடத்துவங்குவான்
அந்த அழுக்கு மூட் டையை உயரப்பிடித்தப டி
போவோர் வருவோரின்
மார்பினை  உற்று நோக்கி-
இதுதான் இதுதான் – என உரக்கக் கத்துவான்

அந்த ஆனந்தக் கூத்தின் உச்சத்தில்
அவன் நெற்றிக்கண் வெடித்துத் திறப்பதுபோலவும்
அனைவருக்குள்ளும் இருக்கும்
அந்த அழுக்கு மூடை
அவிழ்ந்து விரிந்து அம்மணமாவது போலவும்
என்னுள் பயம் விரைந்துபரவ
உடல் லேசாக நடுங்கத் துவங்கும்
என்னையும் அறியாது எனது கைகள்
என் நெஞ்சை மறைக்க முயன்று தோற்கும்.


இணைந்து கொள்வதில் உள்ள சுகம்..

நான் விழிக்கும் முன்பே
கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின் அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின் சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது

(வெறுமனே பதிவுகளை  படித்துச் செல்வதை விட
 பதிவர்களை  இணைத்துக்கொள்வதிலும்
தவறாது பின்னூட்டமிடுவதில்  உள்ள சுகத்தைச்
ஜாடையாகச் சொல்லவில்லை   )

Monday, March 2, 2020

ஊருக்கு உபதேசம்

அந்தச்  சனிப் பயல்
ஒவ்வொரு முறை கோபப்படும் போதும்
கோபத்தின் விளைவுகள் குறித்து
அவன் நெஞ்சில் பதியும் வண்ணம்
கடுமையாகப் பேசியிருக்கிறேன்

ஒரு சமயம்
அவன் சம்பந்தமே இல்லாமல்
கோபப்பட்டபோது
பொறுத்துக் கொள்ளமுடியாமல்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கிறேன்

நேற்று கூட
ஒன்றுமில்லாத விஷயத்திற்கு
கோபப்பட்டதை
என்னால் தாங்கமுடியாது போக
கன்னத்தில் அறைந்தே விட்டேன்

அப்படியும் அவன் திருந்தியபாடில்லை

இப்போதெல்லாம்
அவன் போக்கை நினைக்கையில்
மனசு படபடக்கிறது
என்னுள் பற்றி எரிவது போல் உள்ளது
உடல் கூட நடுங்கத் துவங்குகிறது

பாழாய்ப் போனவன்
கோபத்தின் அதீத விளைவுகளை
என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறான்
கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை
என்றுதான் என்னைப்போல்                        புரிந்து தொலைக்கப் போகிறான்


Sunday, March 1, 2020

இது உணவுக்காக மட்டும் சொல்லப்பட்டதில்லை..

முன்பு போல..                                        உறவினர்களையோ நண்பர்களையோ        சௌகரியமாக அமரவைத்து  நீங்கள் பார்த்துப் பார்த்துச்  சமைத்த உணவைப் பறிமாறி அவர்கள் மகிழ்வதைக் கண்டு          மகிழ எண்ணாதீர்கள்                                                                                                                  காரணம் முன்பு போல. சாவகாசமாய் அமர்ந்து இரசித்து உண்ணும் மனநிலையில்  அவர்கள் இப்போது இல்லை                                                                                                                    மேலும் முன்பு போல எந்த உணவையும்   உட்கொண்டு செரிக்கும்  உடல் நலமும்   இப்போது அவர்களுக்கில்லை                                                                                                  எப்போதும் அவர்களிடம் எந்த எந்த உணவினை ஏற்க வேண்டும் எவை எவைகளை தவிர்க்க வேண்டும்  என்ற "அவரவர்களின் மருத்துவர்கள் ' அளித்த பட்டியல்கள்   கைவசம் உள்ளது         அதன்படித்தான் அவர்கள் உண்கிறார்கள்                                                                              ஆகவே....                                                              எத்தனை ருசியாகச்  சமைத்த. உணவாயினும்  அதற்கான இடத்தில்   வைப்பதோடு  அப்படி வைத்த தகவலைப் பறிமாறுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்                                                                          பசித்தவர்கள் உண்ணட்டும்                        கொறிப்பவர்கள் கொறிக்கட்டும்                தவிர்ப்பவர்கள் தவிர்க்கட்டும்..