Wednesday, October 16, 2024

ஆம்..எதுவும் கடந்து போகும்...

 *இதுவும் கடந்து போகும்*


நம்முடைய, இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால், 


இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும் !


*எத்தனை வெற்றிகள் ?*


*எத்தனை தோல்விகள் ?*


*எத்தனை மகிழ்ச்சிகள் ?*


*எத்தனை துக்கங்கள் ?*


எல்லாம் வந்து, 

சிறிது காலம் தங்கி, கடந்து போயிருக்கின்றன !!


வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால், நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா ?


வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால், 

நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா ?


*எத்தனை நண்பர்கள் ?*


*எத்தனை பகைவர்கள் ?*


*எத்தனை உறவுகள் ?*


நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து, வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள் ?


வாழ்வில் வந்ததெல்லாம், நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன?


ஒரு விதத்தில்  என்றும் நாம் தனியர்களே அல்லவா ?


இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது, 

கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல.


அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.


வெற்றிகள் கிடைக்கும் போது,

*இதுவும் கடந்து போகும்* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*கர்வம் தலை தூக்காது !!*


தோல்விகள் தழுவும் போது,

*இதுவும் கடந்து போகும்* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*சோர்ந்து விட மாட்டீர்கள்*


நல்ல மனிதர்களும்,

நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது,

*இதுவும் கடந்து போகும்* என்பதை  நினைவில் கொள்ளுங்கள்.

*இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள்*


*அவர்கள் விலகும் போது, பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்*


தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது,

*இதுவும் கடந்து போகும்* என்பதை  நினைவில் கொள்ளுங்கள்.

*தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள்*


*பெரிதாக மன அமைதியை இழக்க மாட்டீர்கள்*


நெற்றி சுருங்கும் போதெல்லாம்,

*"இதுவும் கடந்து போகும்* என்பதை  நினைவில் கொள்ளுங்கள்,

*சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.*


வாழ்க்கையின் ஜீவநாதமாக இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விடவும்..


அந்தப்  புன்னகைநிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி இருக்க மனமார்ந்த நல்வாழ்த்துகள்...படித்ததில் பிடித்தது


😊😊😊

Tuesday, October 15, 2024

மாறாத ஒன்றே நிலையானது....

 


வெறித்துப் பயந்து ஓடும்
தன்மை கொண்ட பூனையாயினும்
முழு வழியையும் அடைத்துத்
தாக்கக் கூடின்
அது தப்பிக்கக் கழுத்தில்தான் பாயும்

பள்ளம் பார்த்து
தானே ஒதுங்கி ஓடும் நீராயினும்
அதன் போக்கனைத்தும் அடைத்துத்
தொலைப்போம் ஆயின்
அது நம் போக்கை அடைக்கத்தான் செய்யும்

வறுமையில் வயிறு
ஒட்ட ஒட்டக் கிடப்பவன்
பாடம் கற்காது போயின்
செல்வச் சேர்க்கையின் போது
அது நிச்சயம் வீணாகித்தான் போகும்

கோடையில் நீர்த்தேடி
தினம் அலைந்துத் தொலைப்பவன்
அதன் தன்மை அறியாது போயின்
அது அதிகம் கிடைக்கையில்
நிச்சயம் அது பகையாகித்தான் போகும்

ஓட்டைப் பானையில்
நீர்ப்பிடிக்கும் மூடனாய்
இயற்கையின் பால பாடங்களையே
அறியாத மூடனாய்
இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறோம் ?

வலியக் கிடைக்கும்
வரங்களைக் கூட
கொடிய சாபமாக்கி
அவதிப்படும் மூடர்களாய்
இன்னும் எத்தனை காலம் இருக்கப் போகிறோம் ?(மாறுதல் ஒன்றே மாறாதது என்பது தத்துவம்.. மாறாதது ஒன்றே நிலையானது என்பதே இங்கு யதார்த்தம்)

Monday, October 14, 2024

ரத்தன் டாடா..வாழ்கிறார்

மரியாதைக்குரிய ரத்தன் டாடாவிடம் 

வானொலி தொகுப்பாளர்  

தொலைபேசி பேட்டியில் கேட்டபோது:


வாழ்க்கையில் 

அதிக சந்தோஷம் கிடைத்ததும் 

உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்?


ரத்தன் டாடா கூறியதாவது:


நான் 

வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 

நான்கு நிலைகளைக் கடந்துவிட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை 

நான் புரிந்துகொண்டேன்.


முதல் கட்டம் 

செல்வத்தையும் வளங்களையும் குவிப்பதாகும்.


ஆனால் இந்த கட்டத்தில் 

நான் விரும்பிய மகிழ்ச்சி கிடைக்கவில்லை.


பின்னர் மதிப்புமிக்க  பொருட்களை சேகரிக்கும் 

இரண்டாவது கட்டம் வந்தது.


ஆனால் 

இதுவும்  தற்காலிகமானது .

விலைமதிப்பற்ற பொருட்களின் பிரகாசம் நீண்ட காலம் நீடிக்காது என்பதை நான் உணர்ந்தேன்.


மூன்றாம் கட்டம் வந்தது. 

அப்போதுதான் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் 95% டீசல் சப்ளை என்னிடம் இருந்தது.


இந்தியாவிலும் ஆசியாவிலும் மிகப்பெரிய

 எஃகு தொழிற்சாலையின் உரிமையாளராகவும் இருந்தேன்.


ஆனால் நான் 

நினைத்த மகிழ்ச்சி இங்கும் கிடைக்கவில்லை.


நான்காவது படியில் 

சில ஊனமுற்ற குழந்தைகளுக்கு சக்கர நாற்காலிகள் வாங்கித் தருமாறு 

எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.


சுமார் 200 குழந்தைகள்.


எனது நண்பரின் வேண்டுகோளின் பேரில், நான் 

உடனடியாக சக்கர நாற்காலிகளை வாங்கினேன்.


ஆனால் நானும் அவருடன் சென்று 

சக்கர நாற்காலிகளை குழந்தைகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நண்பர் வற்புறுத்தினார். நான் தயாராகி 

அவனுடன் சென்றேன்.


அங்கே இந்தக் குழந்தைகளுக்கு சக்கர நாற்காலிகளை 

என் கைகளால் கொடுத்தேன். 


அந்தக் குழந்தைகளின் முகத்தில் 

ஒரு விசித்திரமான மகிழ்ச்சியைப் பார்த்தேன். 

அவர்கள் அனைவரும் 

சக்கர நாற்காலியில் அமர்ந்து, 

அங்குமிங்கும் நகர்ந்து வேடிக்கை பார்ப்பதைக் கண்டேன்.


அவர்கள் 

ஒரு பிக்னிக் இடத்தை அடைந்தது போல் இருந்தது, 

அங்கு அவர்கள் வெற்றிகரமான 

பரிசைப் பகிர்ந்து கொண்டனர்.


எனக்குள் 

உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்தேன்.


நான் 

வெளியேற 

முடிவு செய்தபோது, ​​​​


குழந்தைகளில் ஒருவர் 

என் காலைப் பிடித்தார்.


நான் மெதுவாக 

என் கால்களை 

விடுவிக்க முயற்சித்தேன், 


ஆனால் 

குழந்தை என் 

முகத்தைப் பார்த்து 


என் 

கால்களை 

இறுக்கமாகப் பிடித்தது. 


நான் 

குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: 

உங்களுக்கு 

வேறு ஏதாவது தேவையா?


அந்த குழந்தை 

எனக்கு அளித்த பதில் 

என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், வாழ்க்கையைப் பற்றிய எனது பார்வையை 

முற்றிலும் மாற்றியது.


அந்த குழந்தை கூறியது:


"உன் 

முகத்தை 

நினைவில் 

வைத்துக் கொள்ள 

விரும்புகிறேன்."


நான் 

உன்னை 

சொர்க்கத்தில் 

சந்திக்கும் போது, ​​


உன்னை  நான் 

அடையாளம் கண்டு 

மீண்டும் ஒருமுறை 

நன்றி கூறுவேன்....!!"


ஆம். ரத்தன் டாடா.... வாழ்கிறார்...படித்ததில் பிடித்தது 

Tuesday, October 8, 2024

அது ஒரு காலம்..படித்ததில் பிடித்தது

 *வேம்பு அய்யர் போளி* 👇🏻



வேம்பு அய்யர் அந்த நாட்களில் திருநெல்வேலி சீமையில உள்ள  மணியாச்சி ரயில் நிலையத்தின் நடைமேடையில் தன் வழக்கமான இடத்துக்குச் சென்று கூடையை இறக்கி வைத்தார்.


மணியாச்சி ரயில் நிலையம் ஞாபகம் இருக்கா ? வாஞ்சி அய்யர் ஆஷ் துரையை இங்கே சுட்டுக்கொன்ற இடம் தான் இன்று வாஞ்சி மணியாச்சி ஆயிற்று.


ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்துக்குச் சென்று சிறிய மேஜை ஒன்றைத் தூக்கிவந்து கூடைக்குஅருகில்வைத்தார்.


மேஜையின்மேல் வெள்ளைத் துணியை விரித்து அதன் மேல் மந்தாரை இலைகளைப் பரப்பினார்.


அதன் பின் கூடையில் கொண்டு வந்திருந்த கடம்பூர் போளிகளை ஒவ்வொன்றாக

எடுத்து இலைகளின் மேல் அடுக்கி வைத்தார்.


அவர்வாய் முனக அன்று மோகன ராகத்தை எடுத்துக் கொண்டது.


அத்தனை போளிகளையும்

எடுத்து வைத்த வுடன்,வெறும்

கூடையைஎடுத்துக் கொண்டு ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 


இன்னும் ரயில் வர அரை மணி இருந்தது. மோகனத்தின் தைவதத்தின் சௌந்தர்யத்தை வியந்தபடி அவர் நடக்கும் போது எதிரில் யாரோ வருவதுபோலத் தோன்றியது. 


வருபவர் வேம்புவை நோக்கி கையை ஆட்டிக் கொண்டிருந்தார்.

ஆள் நெருங்கி யதும் வருபவர் பெரிய அருணா சலம் என்று தெரிந்தது. 


நாதசுவர வித்வான் காருகுறிச்சி அருணாசலத்தின் உடன் பிறவா சகோதரர். இருவர் ஊரும் பெயரும் ஒன்று என்பதால் இவர் பெரிய அருணாசலம். 


இரண்டு அருணா சலங்களுக்கும் கடம்பூர் போளி என்றால் உயிர். அதிலும் வேம்பு அய்யர் கொண்டு வந்து விற்கும் போளி துணைக்கு வரும் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ரயிலில் செல்லத் தயாராக இருப்பார்கள். 


இவ்விருவரும் பழக்கிவிட்டதில் மொத்த நாக ஸ்வரக் குழுவுமே இந்த போளிகளுக்கு அடிமை.


அருணாசலம் கச்சேரிக்காக ரயிலில் மணியாச்சி வழியாகச் செல்லும் போதெல்லாம் அவசர அவசரமாக ஒரு பையன் முதல் கிளாஸிலிருந்து ஓடி வருவான். 


அவனைப் பார்த்ததுமே இலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கத் தொடங்குவார் வேம்பு அய்யர். 


ஒவ்வொரு இலைகளிலும் பத்து போளிகள் இருக்கக்கூடும். அவன் வந்ததும் அவர் கைகளில் உள்ள இலைகளை அவன் கைக்கு மாற்றிவிட்டு. “ஓடுலே! ஓடுலே!”, என்று பையனை விரட்டுவார்.


ஒவ்வொரு முறை அவர் இப்படிச் செய்யும் போதும் போளி விற்றதில் வரும் அவருடைய அந்த வாரப் பங்கைத் தாரை வார்க்க நேரிடும். 


அவர் மனைவி சுந்தரி எப்படியும் இழுத்துப்பிடித்துச்சமாளித்துவிடுவாள் என்று அவருக்குத் தெரியும். சமாளிக்க முடியவில்லை என்றாலும் அருணா சலத்திடம் பணம் கேட்கமாட்டார் வேம்பு அய்யர். 


அவரைப் பொருத்த மட்டில் அந்த மண்ணின் பெருமையே அருணாசலம்தான். சங்கீதம் என்றாலே தஞ்சாவூர் ஜில்லா என்ற நிலையை மாற்ற திரு நெல்வேலி ஜில்லா வில் அவதாரம் செய்த கந்தர்வன் தான் அருணாசலம் என்பது அவர் துணிபு.


திருச்செந்தூர் பச்சை சாற்றி திருக்குறுங்குடி உற்சவம், சுசீந்தரத்தில் ஆறாம் திருநாள் என்று அருணா சலம் வாசிக்கும் இடங்களில் எல்லாம் வேம்பு அய்யரை நிச்சயம் பார்க்கலாம். 


எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இவர் வந்தால் அருணா சலத்துக்குத் தெரிந்துவிடும். வேம்பு அய்யரை அழைத்து முதல் வரிசையில் உட்காரச் சொல்லுவார். 


’அந்த மரியாதைக்கு உயிரையே எழுதி வைக்கலாம். போளி எல்லாம் எம் மாத்திரம்?’ என்று நினைத்துப் புளகாங்கிதம் அடைவார் வேம்பு அய்யர்.


என்றுமில்லாத அதிசயமாய் இன்று ஏனோ ரயில் வராத வேளையில் பெரிய அருணாசலம் வந்திருக்கிறார்.

“இன்னிக்கு ராத்திரி ஒட்டபிடாரத்துல கச்சேரி. போற வழியில மணி யாச்சி போர்டைப் பார்த்ததும் அவாளுக்கு உங்க ஞாபகம் வந்துச்சு. அதான் இங்க வந்தோம். கார் வெளியில நிக்கி.”


வேம்பு அவசர அவசரமாக ஐந்தாறு இலைகளில் போளியை எடுத்துக்கொண்டு சாலைக்கு ஓடினார்.

அவர் வருவதைப் பார்த்ததும் தன் ப்ளைமவுத் காரிலிருந்து இறங்கினார் அருணாசலம்.


“ஒட்டபிடாரத்து லகச்சேரினு தெரியாமப் போச்சே!ராத்திரி வந்துடுவேன்,” என்றபடி கைகளில் இருந்த போளிகளை நீட்டினார் வேம்பு.


“ஐயர்வாள்! நானும் மாசக்கணக்கா உங்க கிட்ட பேசணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன். இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பேசிடணும்னுதான் வந்திருக்கேன்,” என்றார் அருணா சலம்.


வேம்பு அய்யருக்கு ஒன்றும் புரிய வில்லை. அவர் கைகள் இன்னும் இலைகளை நீட்டிக் கொண்டிருந்தன.


அதை வாங்காமல்

அருணாசலம் தொடர்ந்தார்.

“ஒவ்வொரு தடவை நம்ம பய வரும் போதும் நீங்க பாட்டுக்கு போளியைக் குடுத்துட்டு துரத்திவிட்டுரீய, அவம் பணத்தை நீட்டக்கூட விட மாட்டீங்கீய-ங்கான். எப்பவோ ஒரு தடவைன்னா சரிங்கலாம். இதையே வழக்கமா வெச்சுகிட்டா ?”

வேம்பு அய்யர் லேசாகப் புன்னகைத்தார்.


“நீங்க காசு வாங்கலைன்னா இனிமேல் உங்க கிட்ட போளி வாங்கப் போறதில்ல”


வேம்பு புன்னகை மறையாமல் பேச ஆரம்பித்தார்.


“ஏ...லே! 

நீ வாசிக்கற பைரவிக்கும், உசைனிக்கும் உலகத்தையே எழுதி வைக்கலாம். எனக்கு வக்கிருக்கு இந்தப் போளிக்குத் தான். மாசாமாசம் எங்கையாவது வாசிச்சுக் காதைக் குளிர வக்கியே! அது போதாதா? பணம் வேற குடுக்கணு மாங்கேன்?”


“ என்ன சொன்னாலும் இன்னிக்கு எடு படாது. பைசா வாங்கிகிட்டாத்தா இனி உங்க கிட்ட போளி வாங்குவேன்”, என்று பிடிவாதம் பிடித்தார் அருணா சலம்.


”இப்ப நான் உன்கிட்ட எதாவது வாங்கிக்கணும். அம்புட்டு தானே?”


“ஆமா”“அப்ப எனக்கு பணம் வேண்டாம். வேற ஒண்ணு கேக்கேன்.” கொடுப்பீயளோ?


“என்ன வேணும் னாலும் கேளுங்க”, என்று அவசரப் பட்டார் அருணா சலம்.


“யோசிச்சுட்டு சொல்லு. அப்புறம் முடியாதுனு சொல்லக் கூடாது” என்று குழந்தை யுடன் பேரம் பேசுவது போலக் கேட்டார் வேம்பு.


“அதெல்லாம் யோசிச்சாச்சி! உங்களுக்கு வேணுங்கறதைச் சொல்லுங்க.”


“திருனேலி ஜில்லால ஓங் கச்சேரி நடக்காத ஊரே இல்லைங் காவோ. ஆனால் நீ வாசிக்க ஆரம்பிச்ச இந்த இருபத்தஞ்சு வருஷத்துல இந்த மணியாச்சியில மட்டும் உன் கச்சேரி நடக்கவே இல்லை. 


நான் பொறந்து வளர்ந்த ஊருல உன் நாகஸ் வரத்துல இருந்து ராகம் ஆறா ஓடணும். அது நடந்தாப் போதும். எனக்கு ஜென்ம சாபல்யம்தான்.”

இப்படி ஒரு வேண்டு கோளை அருணாசலம் எதிர் பார்க்கவில்லை.


“வாசிச்சுட்டாப் போச்சு. உங்க வீட்டுக்கே வந்து வாசிக்கறேன்”


”இல்லை! இல்லை!”, தலையைத் தீர்மானமாய் ஆட்டினார் வேம்பு.


அவர் மனக்கண் முன் பெரிய மேடையில் அருணா சலம் அமர்ந்து வாசிக்க ஆயிரக் கணக்கான ரசிகர் கூட்டம் பந்தலில் உட்கார்ந்து கேட்கும் காட்சி விரிந்து விட்டது.


“சங்கடஹர சதுர்த்தி அன்னிக்கு இந்த ஸ்டேஷன் பிள்ளையார் கோயில்ல நீ வாசிக்கணும்.” என்று சொல்லி விட்டு கையில் இருந்த போளிகளை அருணாசலத்திடம் கொடுத்துவிட்டு திரும்ப நடை மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் வேம்பு.


உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது வேம்புவுக்கு. 


“முட்டாப்பயலுவோ! மாணிக்கத்தைக் கையில வெச்சுக் கிட்டு அனுபவிக்கத் தெரியலையே இந்த மூதிகளுக்கு. எவ்வளவு கட்டியாண்டா என்ன? 


ஆபோகியில் மத்யமத்தைத் கம்மலா தொடும் போது வாய்விட்டு ‘ஆமாம்பா’-னு ரசிக்கத் தெரியாதவன் மனுஷனா?”, என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு நடந்தார் அய்யர்


அடுத்த நாள் விழித்ததும்தான் தான் எடுத்துக் கொண்டுள்ள காரியத்தின் முழுப் பரிமாணம் அவருக்குப் புலப் படத் துவங்கியது.


அருணாசலத்துக்கு வேம்புவின்மேல் இருந்த அபி மானத்தால் சம்பாவனையே இல்லாமல் கச்சேரி செய்வான். 


ஆனால் கச்சேரி நடக்க இன்னும் எத்தனையோ செலவுகள் உண்டே. மேடை போட வேண்டும். ஜனங்கள் உட்கார்ந்து கேட்க பந்தல் போட வேண்டும். ஒலிப் பெருக்கிகளுக்குச் சொல்லவேண்டும். 


அருணாசலம் கச்சேரி என்றால் எத்தனையோ ஊரிலிருந்து பெரிய பிரமுகர்கள் வருவார்கள் – அவர்கள் உட்கார நாற்காலிகள் வாடகைக்கு எடுக்க வேண்டும். ஊரைக் கூட்டி சாப்பாடு போடாவிடினும், ஆளுக்கு ஒரு கை சுண்டலாவது பிரசாதமாகக் கொடுக்க வேண்டாமா?


இந்தச் செலவுகளை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போதே அவருக்குத் தலை சுற்றியது. 


இந்த வார போளிக் கணக்கை கடம்பூருக்குச் சென்று பைசல் செய்தால் கையில் முப்பதைந்து ரூபாய் மிஞ்சும். அதை வைத்து என்ன கச்சேரி நடத்துவது?


வேம்பு தனக்குத் தெரிந்த ஊர் காரர்களை சென்று சந்தித்து விஷயத்தைச் சொன்னார். இவர் கேட்பதற்கு உதவக் கூடிய ஊரென்றால் இது நாள் வரை அருணாசலம் கச்சேரி அங்கு நடக்காமலா இருந்திருக்கும்? 


பல இடங்களில் தம்படி கூடப் பெயரவில்லை. அருணாசலம் பெயருக்காக சிலர் அஞ்சும் பத்தும் கொடுத்தனர். 


மூன்று நாட்கள் அலைந்ததில் மொத்தம் நூற்றி ஐம்பது ரூபாய் தேறியது.

சதுர்த்திக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. 


வேம்பு போளி விற்க ரயிலடிக்குப் போன நேரம் போக வசூல் விஷயமாக யாரையாவது சந்தித்துக் கொண்டே இருந்தார். அவருக்கு ஒன்றும் பெரியதாகத் தேறவில்லை.


’அருணாசலம் வேண்டாம் என்பதற்காக வெறும் தேங்காய் மூடியோடா அனுப்ப முடியும்? இன்னும் ஐந்நூறு ரூபாயாவது இருந்தால்தான் ஓஹோவென்று இல்லாவிடினும் ஓரளவவாவது ஒப்பேற்றமுடியும்,’ என்று வெதும்பிய படி வீட்டுக்குள் நுழைந்தார் வேம்பு.


இரவுச் சாப்பாடு முடிந்ததும் வேம்புவின் மனைவி ஒரு கவரை எடுத்து வந்தாள். அதில் நானூறு ரூபாய் பணமிருந்தது.


“ஏதிந்தப் பணம்?” என்று வேம்பு கேட்டு முடிக்கும் முன்பே கழுத்தில் கட்டியிருந்த மஞ்சள் கயிரை எடுத்துக் காட்டினாள் சுந்தரி.


“என்ன சுந்தரி இப்படிப் பண்ணிட்ட? உன் கிட்ட இருந்த ஸ்வர்ணமே அது தானே?அதைப் போய் வெக்கலாமா?”,

என்று தழுதழுத் தார்வேம்பு.


“உதவிக்கு இல்லாத ஸ்வர்ணம் இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? ஒரு வாரம நீங்கப் படற வேதனையை என்னால பார்க்க முடியல.”, என்று சலனமேயில்லாமல் கூறினாள் சுந்தரி.

வேம்பு அவள் கைகளை இழுத்து விரல்களைக் கோர்த்துக் கொண்டார்.


சதுர்த்தியன்று மாலை ஆறு மணிக்கு அருணா சலம் காரில் வந்திறங்கினார். சற்றைக்கெல்லாம் பெரிய அருணா சலம், பெரும் பள்ளம் வெங்க டேசன், அம்பா சமுத்திரம் குழந்தை வேலு முதலான அவர் குழுவினர் பெரிய வண்டியில் வந்து இறங்கினர். 


வேம்பு அருணா சலத்தின் கையைப் பிடித்துக் கொண்டு பிள்ளையார் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். 


குருக்கள் அர்ச்சனை செய்த பின் மாலை முதலான மரியாதைகளை குழுவினருக்குச் செய்தார்.

பந்தலில் கூட்டம் அம்மியது. 


சங்கரன்கோயில், கழுகுமலை, களக்காடு, கடையநல்லூர், சுரண்டை, எட்டையபுரம், புளியங்குளம் என்று அருகில் உள்ள ஊர்களில் இருந்து ரசிகர்கள் திரண்டிருந்தனர்.


அருணாசலம் மேடையேறி உட்கார்ந்த போதே கரகோஷம் ஊரை நிறைத்தது. வேம்பு முதல் வரிசையில் அருணாசலத்துக்கு நேராக அமர்ந்து கொண்டார்.


அருணாசலம் கௌளையை கொஞ்சம் கோடி காட்டிவிட்டு, ‘ப்ரணமாம்யஹம்’ வாசிக்கத் துவங்கினார். 

எடுத்துக் கொண்ட காலாப்ரமாணம் மின்னல் ! புரவிப் பாய்ச்சலில் ஒலித்த தவில்சொற்கள் உந்தித்தள்ள கல்பனை ஸ்வரங்கள் மட்டும் பதினைந்து நிமிடங்களுக்கு பொறி பறந்தன. 


வேம்பு தன்னை மறந்து தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக் கொண்டி ருந்தார். பாடல் முடிந்ததும் வேம்பு ஒரு நிமிடம் தலையைச் சுழற்றி அமர்ந்திருந்த வர்களைப் பார்த்தார். 


இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தா கூட சுந்தரியின் தாலிக்கொடி தப்பியிருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.


அருணாசலம் கர் நாடக பெஹாகை வாசிக்க ஆரம்பித்தார்.

“நேனெந்து வெதுகுதுரா”

”வெதுகுதுரா”-வில் அந்தக் குழைவு அவரை என்னமோ செய்தது.


 ‘உன்னை நான் எங்கப் போய் தேடுவேன்’ என்கிற வரியில் அலைந்து திரிந்து களைத்த அத்தனை சோர்வையும் குழைத்துச் சமைத்தது போல அந்த ‘வெதுகுதுரா’ ஒலிப்பது போல வேம்புவுக்குப்பட்டது.

“உண்மைதானே! என் குரலுக்கு அகப்படறவனா இருந்தா இப்படித் தாலிக் கொடியை வெச்சு இந்தக் கச்சேரி வெக்கற நிலைமைலையா என்ன வெச்சுருப்பான்?”

வேம்புவுக்கு கண்கள் கலங்கின. 


தலையைக் கவிழ்த்துக் கொண்டு துண்டை முகத்தில் பொற்றிக் கொண்டார். 


அருணாசலம் வாசிக்க வாசிக்க அவருக்கு கண்ணீர் பெருகியது. 


சில நிமிடங்கள் பொலபொலவென கண்ணீர் உதிர்த்தவுடன் அவர் மனதி லிருந்து பெரும் பாரம் நீங்குவது போலத் தோன்றியது. 


அவர் கச்சேரியை மீண்டும் கவனிக்க ஆரம்பித்தார்.

அன்றைய பிரதான ராகம் கரஹர ப்ரியா. தார ஸ்தாயியில் சஞ்சாரங்கள் ஆரம்பித்ததும் காலக் கடிகாரம் ஸ்தம்பித்துப் போனது. 


பெரிய பெரிய ஸ்வரச் சுழல்களை தன் அமானுஷ்ய மூச்சுக் காற்றின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாய் ஏவிக் கொண்டிருந்தார் அருணாசலம். 


ஒவ்வொரு சுழலும் ஒவ்வொரு புஷ்பம் போல விரிய, அந்தப் புஷ்பங்களை இணைக்கும் சிறு நூலாய் ஒலித்தது அவர் மூச்சை அவசரமாய் உள்ளுக்குள் இழுக்கும் ஒலி. 


ஆலாபனை நிறைவடைந்த போது பெருமாளின் விஸ்வரூபத்துக்குத் தொடுத்த மாலை அந்த காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டி ருந்தது.‘சக்கனி ராஜமார்கமு’


அருணாசலம் கீர்த்தனை வாசிக்க ஆரம்பித்த போது வேம்புவுக்கு மனம் துலக்கிவிட்டது போல ஆகிவிட்டது. ஒவ்வொரு சங்கதிக்கும் ‘ஆமாம்பா! ஆமாம்பா!’ என்று வாயாரச் சொல்லிச் சொல்லி ரசித்தார் வேம்பு.


கச்சேரி இன்னும் இரண்டு மணி நேரம் தொடர்ந்த பின் வேம்புவை அருகில் அழைத்தார் அருணா சலம்.


“நாளைக்கு சேலேத்திலே முகூர்த்தம். இப்ப கிளம்பினாத்தான் ரயிலைபிடிக்க முடியும். உத்தரவு கொடுக்கணும்”, என்று கையைக் கூப்பி வேண்டிக் கொண்டார்.


“ஆஹா! ஆஹா!” என்றபடி அருணா சலத்தின் விரல்களைப் பற்றிக் கொண்டார் வேம்பு. 


அவருக்கு அதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் எழவில்லை.

பிள்ளையாருக்கு தீபாராதனை ஆனதும் மங்களம் வாசித்து கச்சேரியை முடித்தார் அருணா சலம்.


வாத்தியங்களை சிஷ்யர்கள் கட்டிக் கொண்டிருந்த போது மேடையில் பிரமுகர்களும் ரசிகர்களும் அருணா சலத்தை மொய்த்துக் கொண்டனர். 


வேம்பு ஐயர் மேடைக்கு கீழே காத்துக் கொண்டிருந்தார்.

ஒருவழியாய் மேடையிலிருந்து இறங்கிய கலைஞர்கள் அவசர அவசரமாக ரயிலடிக்குள் புகுந்தனர். 


முதல் கிளாஸ் பெட்டி வருமிடத்தில் சந்திர விலாஸி லிருந்து சாப்பாட்டுடன் ஓட்டல் பையனொ ருவன் தயாராக நின்றிருந்தான்.


அருணாசலம் வருவதற்கு காத்திருந்தது போல் வண்டி நடைமேடைக்கு வந்தது.

ரயிலில் ஏறி ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டார் அருணாசலம். 


ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருந்தார் வேம்பு.


“ஐயர் வாள்! திருப்தி தானே?”, என்று கேட்டார் அருணாசலம்.


“இப்பவே எமன் வந்தா சந்தோஷமா செத்துப் போவேன்!”, என்ற படி ஒரு பையை நீட்டினார் வேம்பு.


துணிப்பைக்குள் பழங்கள், பூ முதலான பிரசாதங்கள் இருப்பது தெரிந்தது. அவற்றுக்கடியில் ஒரு சிறிய கவரில் நூறு ரூபாய் பணத்தை வைத்திருந்தார் வேம்பு. 


வண்டி ஏறியதும் கொடுத்தால் அதை அருணாசலம் பார்த்து மறுக்க வாய்ப்பு ஏற்படாது என்பது அவர் எண்ணம்.

அருணா சலம் அந்தப் பையை வாங்கி இருக்கையில் வைத்துக் கொண்டார்.


வண்டி கிளம்ப ஆயத்தமானது.


”ஐயர்வாள் ! நான் நேற்றைக்கு திருச் செந்தூர் போயிருந்தேன். உங்களுக்குப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்”,

என்று சிறு பையை எடுத்து வேம்புவிடம் கொடுத்தார்.


வேம்பு வாங்கிக் கொண்டதும் வண்டி நகர ஆரம்பித்தது. 


கைகளை அந்தப் பையுடன் சேர்த்துக் கூப்பி அருணா சலத்துக்கு விடை கொடுத்தார்.


வண்டி கண்ணை விட்டு நீங்கியதும் வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

நடந்தபடி கையிலுள்ள பையைப் பிரித்துப் பார்த்தார். 


திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி கண்ணில் பட்டது. அதைப் பிரித்து நெற்றியில் இட்டுக்கொள்ள நினைத்து கையைப் பைக்குள் விட்டார் வேம்பு.

அவர் விரல்கள் சில்லென்று எதையோ ஸ்பரிசித்தன.

அந்தப் பொருளை வெளியில் எடுத்துப் பார்த்தார் வேம்பு.


சுந்தரியின் தாலிக்கொடி அவர் கண்முன் ஆடியது.


 *அப்படி ஒரு பிணைப்பு இருந்த காலம் அது - அய்யருக்கு அருணாசலம்  பிள்ளைவாள் தந்த தாலிக்கொடி பரிசு அது !!!*thanks to Lalitharam


Wednesday, October 2, 2024

ஊருக்குள்ளே நல்ல பாரு...

 பாருக் குள்ளே நல்ல நாடு

நம்ம நாடு என்று
வீறு கொண்டு இருந்தோம் அன்று-பகை
வென்று மகிழ்ந்தோம் அன்று

ஊருக் குள்ளே நல்ல "பாரு"
எந்த "பாரு " என்று
தேடி யலைந்துத் திரிகிறோம் இன்று-மதியைக்
தோண்டிப் புதைக்கிறோம் இன்று

பன்னரும் உபநிட நூலெங்கள் நூலென
பெருமிதம் கொண்டோம் அன்று
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடென-நெஞ்சம்
பூரித்து நின்றோம் அன்று

விண்ணகம் முட்டும் விலையில் கல்வியை
உயரே கொண்டு வைத்து
வன்முறை வளர்ந்திட நாடது கேடுற-நாமே
வழிகள் வகுக்கிறோம் இன்று

இன்னறு கங்கை எங்கள் ஆறென
உரிமை கொண்டோம் அன்று
மன்னும் இமயம் எல்லைக் கோடென-உள்ளம்
மகிழ்ந்து திரிந்தோம் அன்று

அண்டை மாநில உறவு கூட
ஜென்மப் பகைபோல் மாற
வன்மம் வளர்த்து வன்முறை வளர்த்து-கூண்டில்
ஒடுங்கித் தவிக்கிறோம் இன்று

உலகை மாற்றி ஊரை மாற்றி
நம்மை மாற்ற எண்ணும்
தலையச் சுற்றி மூக்கைத் தொடுகிற-வீண்
வேலை இனியும் வேண்டாம்

அவலம் மாற நம்மை மாற்ற
முதலில் முயற்சி செய்வோம்
உலகம் தானே தொடர்ந்து மாறும்-என்ற
உறுதி மனதில் கொள்வோம்

Sunday, September 22, 2024

Facts of life


1. Take risks in your life. If you win, you can lead; if you lose, you can guide.


2. People are not what they say but what they do; so judge them not from their words but from their actions.


3. When someone hurts you, don't feel bad because it's a law of nature that the tree that bears the sweetest fruits gets maximum number of stones.


4. Take whatever you can from your life because when life starts taking from you, it takes even your last breath.


5. In this world, people will always throw stones on the path of your success. It depends on what you make from them - a wall or a bridge.


6. Challenges make life interesting; overcoming them make life meaningful.


7. There is no joy in victory without running the risk of defeat.


8. A path without obstacles leads nowhere.


9. Past is a nice place to visit but certainly not a good place to stay.


10. You can't have a better tomorrow if you are thinking about yesterday all the time.


11. If what you did yesterday still looks big to you, then you haven't done much today.


12. If you don't build your dreams, someone else will hire you to build theirs.


13. If you don't climb the mountain; you can't view the plain.


14. Don't leave it idle - use your brain.


15. You are not paid for having brain, you are only rewarded for using it intelligently.


16. It is not what you don't have that limits you; it is what you have but don't know how to use.


17. What you fail to learn might teach you a lesson.


18. The difference between a corrupt person and an honest person is: The corrupt person has a price while the honest person has a value.


19. If you succeed in cheating someone, don't think that the person is a fool...... Realize that the person trusted you much more than you deserved.

 

20. Honesty is an expensive gift; don't expect it from cheap people.


STAY BLESSED🙏❤️ படித்ததில் பிடித்தது

Thursday, September 19, 2024

World husband's day ????

 Today is Husband Appreciation Day .

Let us keep 2 minutes silence and read some quotes of great personalities. 


First quote

After marriage, husband and wife become two sides of a coin, they just can’t face each other, but still they stay together.

– Al Gore 


A good wife always forgives her husband when she’s wrong.

– Barack Obama 


When you are in love, wonders happen. But once you get married, you wonder, what happened.

- Steve Jobs 


And the best one is…


Marriage is a beautiful forest where Brave Lions are killed by Beautiful Deers.

- Brad Pitt 


National Husband Appreciation Day !! 💐😀

Laughter Therapy 


While getting married, most of the guys say to girl's parents, 

" I will keep your daughter happy for the rest of her life ".


Have you ever heard a girl saying something like this to the boy's parents like I will keep your son happy for the rest of his life 


Nooooo ... because women don't tell lies! 


-x-x-x-x-x-x-x-


If wife wants husband’s attention, she just has to look sad and uncomfortable.

If husband wants wife’s attention, he just has to look comfortable & happy.


-x-x-x-x-x-x-x-


A Philosopher HUSBAND said:- Every WIFE is a ‘Mistress’ of her Husband…

Miss” for first year & “Stress” for rest of the life… 


-x-x-x-x-x-x-x-


Position of a husband is just like a Split AC, No matter how loud he is outdoor, He is designed to remain silent indoor.


Share to make others smile...!


Laughter Works Like Medicine! 


*Today is world husband's day...*

*All husbands cheer up... At least one day in a year is dedicated to the helpless husbands  ..!*

Tuesday, September 17, 2024

அதிருப்தி..

 ஒரு உணர்வாகவோ

ஒரு நிகழ்வாகவோ
ஒரு சொல்லாகவோ
என்னை அசைத்துப் போகிறது
ஒரு சிறு அதிர்வு

அதுவரை எங்கோ புதைந்து கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரிக்கத் துவங்குகிறது

அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிப் போடுகிறது

என்னுள்
சிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது

என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளை
சேகரித்து தருபவனாக  மட்டுமே இருப்பதால்
பெருமைப்பட ஏதுமில்லை

ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது

Sunday, September 15, 2024

ஆனந்தத்தின் அற்புதம்..

 அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும்


யானையைக் கொண்டு
பிச்சை எடுப்பதை விட
எடைத் தூக்கப் பயிற்றுவிப்பது
எளிதானதில்லை என்று.

ஆயினும் அவர்கள்
எடைத் தூக்கப் பயிற்றுவித்தலையே செய்கிறார்கள்

அவர்களுக்கு உறுதியாய்த் தெரியும்

புல்லாங்குழல்கொண்டு
அடுப்பூதுவதை விட
இசைப்பயிற்சி மேற்கொள்வது
சிரமமானது என்று

ஆயினும்
இசைப்பயிற்சிப் பெறுதலையே நாளும் செய்கிறார்கள்

அவர்களுக்கு திட்டவட்டமாய்த் தெரியும்

ஜாதி மதம் கொண்டு
ஒற்றுமைப் படுத்துவதை விட
வேற்றுமைப் படுத்துதலே மிக எளிதென்று

ஆயினும் அவர்கள்
ஒற்றுமைப் படுத்தவே நாளும் முயல்கிறார்கள்

அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்

சமூக வலைத் தளங்களில்
பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று

ஆயினும் அவர்கள்
பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்

காரணம் அவர்கள் அனைவருக்கும்
எவ்வித ஐயமுமின்றித் தெரியும்....

எலி வேட்டையாடி
ஜெயிக்கக் கிடைக்கிற மகிழ்வை விட
புலி வேட்டையாடி
தோற்பதில் உள்ள ஆனந்தத்தின் அற்புதம் 

Saturday, September 14, 2024

முடிவின் விளிம்பில்...

 குழப்பம் என்னுள் சூறாவளியாய்

சுழன்றடிக்கிறது

நான் எத்தனை நாள் இப்படி இருக்கிறேன்?


இருக்கிறேன் என்பது சரியா?
கிடக்கிறேன் என்பது சரியா?
அல்லது
இறக்கிறேன் என்பதுதான் சரியா?

ஐம்புலன்களின் கட்டுப்பாட்டை
முழுவதும் இழந்து போனதால்
கால உண்ர்வு அற்றுப்போனதா? 


கால உண்ர்வு அற்றுப்போனதால்
அனைத்தையும் இழந்து போனேனா?

தொடர்ந்து விஸ்வரூபம் எடுக்கும்
விடையற்ற கேள்விகளை புறம்தள்ளி
விழிகளைத் திறக்க முயல்கிறேன்

இருப்பிடம் தெரியாதிருந்த
இமைகள் இரண்டும்
சிதிலமடைந்த அரண்மனையின் 

புறவாயில்கள்போல்
கனத்து கிறீச்சிடுகின்றன


பட்டப்பகலில் குளத்து நீரில்
பட்டுத்தெறிக்கிற சூரியஒளிபோல்
பார்க்குமிடமெல்லாம்
ஒளிச்சிதறல்களே பரவிச் சிரிக்கின்றன


பயப்பாம்பு மனமெங்கும் ஊர்ந்து திரிகிறது
பார்வையும் பட்டுப்போய்விட்டதா?

எரிமலையாய் என்னுள்
மரணபயம் வெடித்துச்சிதற
அதன் அக்கினிக்குழம்புகள்
என் நாடி நரம்பெல்லாம் பரவி விரிய
என் சக்தியனைத்தையும் திரட்டி ஓலமிடுகிறேன்


மலைச்சரிவினில் உருண்டுவரும் பெரும்பாறைபோல்
ஏதோ ஒன்று உள்ளிருந்து உருண்டு
என் குரல்வளையை அடைத்துச் சிரிக்கிறது
நான் மரண வாசலை நெருங்கிவிட்டேனா?

தன் முகத்தையே
என் மார்பினில் புதைக்க முயல்பவள்போல்
முட்டிமோதி பிதற்றுகிறாள் என் மனைவி


முப்பதாண்டுகால உடல் பரிச்சியம் என்னுள்
காந்த அலையாய் பரவித் தெறிக்கிறது


விழிமூடும் முன் ஒருமுறையேனும்
அவளை த் தொட்டுவிட்டு வீழத் துடிக்கிறேன்


என் கைகள் இரண்டும்
எனக்கு சம்பந்தமற்றவைகள்போல்
வெட்டிவீழ்த்தப்பட்ட பனைமரங்களைப்போல்
மல்லாந்து கிடக்கின்றன


எரிகின்ற வீட்டின்முன்
செயலற்றுக் கதறுபவர்கள்போல்
யார் யாரோ கூக்குரலிட்டு அழுவது
மிக லேசாய் கேட்கிறது
நான்தான் எரிந்துகொண்டிருக்கிறேனா?

சுட்டெரிக்கின்ற பாலைவனத்தில்
கொப்பளிக்கின்ற சுனை நீர்போல
இத்துணை  அவஸ்தைகளுக்கும் மத்தியில்


இவைகளுக்கெல்லாம்

 தொடர்பே இல்லாததுபோல்

தென்றலின் குளுமை அடிவயிற்றை நிறைக்க
நாபிக்கு கீழே மொட்டு ஒன்று மலர்தலைப்போல
சிப்பி ஒன்று மிதந்து வந்து வாய்திறக்க
வண்ணத்துப் பூச்சியின் வர்ணஜாலங்களோடு

 தங்கத்தின் தகதகக்கும் ஜொலிப்போடு
ஒரு ஒளிக்கொத்து
லேசாக மிக லேசாக
எட்டிப் பார்த்துச் சிரிக்கிறது

அந்த ஒளிக்
கொத்தின் மாயாஜாலத்தில்
என்னுள் பேயாட்டம் போட்ட
அத்துணை வலிகளும்
அத்துணை துயர்களும்
ஒளிகண்டு ஓடும் இருள் போல
எங்கோ ஓடி மறைகிறது

அந்தக் கருணை ஒளி
முகம் நோக்கி ஈரடியாய்
பின்னோக்கி ஓரடியாய்
தொடர்ந்து மெல்ல நகர


அது கடந்த வழியெல்லாம்

 சில்லிட்டுப்போக
அது நடக்கும் வழியெல்லாம்

 பரவசம்  பரந்து விரிய

நானே பாதி உடலாகவும்
நானே பாதி பிணமாகவும் மாறிப்போகிறேன்

இனி எப்போதுமே

 திரும்பமுடியாத உலகுக்கும்
இனி போய்ச் 

சேரவேண்டிய வெட்டவெளிக்கும்

இடையிலான லட்சுமணக்கோட்டில்
என் உயிர்மூச்சு ஊசலாடிக்கொண்டிருக்கிறது


இப்போது எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிகிறது

என்பார்வை அவள்மீது படுகிற அதிர்வினில்
செய்வதறியாது திகைத்து
என்முகத்தோடு முகம்சேர்த்து கதறுகிறாள் மனைவி


"பெரிய உயிர் அடங்கப்போகிறது
பால்வார்ப்பவர்கள் பக்கம் வாங்கோ"என
யாரோ கூக்குரலிடுகிற்ர்கள்


கதறல் ஒலி கூடமெங்கும் பட்டுத்தெறிக்க
கூட்டம் கட்டிலைச்சுற்றி அடைக்கிறது

தொப்புள்கொடி அறுபட
காலத்தாய் ஊட்டிய முதல்மூச்சுதான் உயிரா?


காலத்தாயோடு நித்தம்
உடல்கொண்ட பரிச்சியம்தான் ஜீவித்திருத்தலா?


காலவெளியில் காலத்துளி

 மீண்டும் இணைதல்தான் காலமாதலா?

காலத்தாயை அடைகிற வெறியில்
காலத்துளி என்னை விலக்கிப் பறக்கிறது


நான் பிணமாகிறேன்


அறையெங்கும் மரண ஓலம் தீயாய் பரவுகிறது(சொல்ல முடியாத அந்த கடைசி நொடியை சொல்ல முயன்றிருக்கிறேன் )

Friday, September 13, 2024

ஜென் சித்தப்பு

 "எட்டு எட்டா உலக வாழ்வைப் பிரிச்சுக்கோ "

கத்திக்கொண்டிருந்த ரேடியோவின்
கழுத்தைத் திருகி நிறுத்தினான சித்தப்பு

"எட்டு எட்டெல்லாம் ரொம்ப நெருக்கம்
இருபது இருபதாய்ப் பிரிப்பதே ரொம்பச் சரி " என்றார்
எப்போதும் தாடி மீசையுடன்
யோசித்தபடி இருப்பதாலோ
இப்படி ஏடா கூடமாகப் பேசுவதாலோ
"ஜென் "னென்றே கிண்டலடிக்கப் படும்
என் ஒன்றுவிட்ட சித்தப்பா

"எப்படி "என்றேன் வியந்தபடி

"முதல் இருபதில் பயிற்சி
இரண்டாம் இருபதில் முயற்சி
மூன்றாம் இருபதில் வளர்ச்சி
நாலாம் இருபதில் முதிர்ச்சி
இப்படி இருக்கப் பழகினால்
வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி " என்றார்

"ஆஹா எளிதாய் இருக்கிறதே "என்றேன்

"இல்லையில்லை
கேட்கத்தான் எளிதாய் இருக்கும்
எதுவும் நம் கையில் இருக்காது
முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்
இரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்
மூன்றாம் இருபதை ஆசை கெடுக்கும்
நாலாம் இருபதை  பயம் தடுக்கும் "என்றார்

"அதை சரி செய்ய
என்ன செய்யலாம் "என்றேன்

"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம் "என்றார்

கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது

"இதை அடைய என்ன பயிற்சி செய்யலாம்
எப்படி முயற்சி எடுக்கலாம் "என்றேன்

"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்

 "இதற்கும் ஜென் தியரிக்கும்
ஏதேனும் சம்பந்தம் உண்டா? "என்றேன்

நான் உளறுவதாக நினைத்தாரோ
கிண்டலடிப்பதாக நினைத்தாரோ தெரியவில்லை
அவர் பதிலேதும் சொல்லவில்லை
"எனக்கு இப்போது பசிக்கிறது
சாப்பிடுவோமா ? "என்றார் சிரித்தபடி

Tuesday, September 10, 2024

பாட்டுக் கொருவனின் பாதம் பணிவோம்

 நல்லதோர் வீணையாய் அவனிருந்தான்

அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது

சுடர்மிகும் அறிவுடன் அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட முடிந்தது

எமக்குத் தொழிலே கவிதை யென்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து
கவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது

ஊருக்குழைத்தலே தன் கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு அடித்தளமிட முடிந்தது

இருக்கும்வரை இமைப்பொழுதும் சோராதிருந்தான்
அதனால்தானே இளம்வயதில்
 காலனவன் அழைத்தபோதும்
காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
பாட்டுக்கொருவனாய் இன்றளவும்
 பரிமளிக்க முடிகிறது

Sunday, September 8, 2024

மனித்த பிறவியும் வேண்டும்..

கவித்துவம்

நிரம்பி வழியும் கவிதைகள்

படிக்கப் படிக்க

மனம் மகிழ்வித்துப் போனாலும்...


மிக லேசாகத்தான் என்றாலும் தவறாது

நீ எழுதத்தான் வேண்டுமா என

அச்சுறுத்தியும் போகிறது...


உருவில் மட்டும்

கவிதையாய் இருக்கிற உளறல்கள்

படிக்கப் படிக்க

எரிச்சல் கொடுத்த போதும்


தவறாது மிக உறுதியாய் நீ

எழுத்தத்தான் வேண்டும் எனத்

தைரியமளித்தும் போகிறது..


கவனமாய் எழுத

அச்சுறுத்தலும் அவசியமே என்பதால்

தவறாது அன்றாடம்

சில நல்ல கவிதைகளையும்


தொடர்ந்து எழுத

தைரியமும் அவசியமே என்பதால்

தவறாது நாள்தோறும்

பல மோசமான கவிதைகளையும்


இரசித்துப் படிப்பதை

கடமையாகக் கொள்கிறேன்


ஆம்....

மனித்தப் பிறவியும்

வேண்டுவதே இந்த மாநிலத்தே.

என்பதைப் போலவே...


Thursday, September 5, 2024

படித்ததில் பிடித்தது

 படித்து நெகிழ்ந்தேன்.

நீங்களும் கொஞ்சம் நெகிழ்ந்து போங்கள்!


புதிய வேலையில் சேர்ந்து இருந்தேன், வேலை முடிந்ததும் பெங்களூர் மாநகராட்சி வாசலில் பேருந்துக்காக காத்து நிற்பேன்.


Electronic City க்கு பணியாளர்களை நகருக்குள் திரும்ப அழைத்து வரும் Tempo Traveller வண்டிகள் நின்று 5 ரூபாயில் பயணிகளை அழைத்துப் போவார்கள்.


ஒரு மாதக் கடைசி நாளில் கையில் காசில்லை, சில நேரங்களில் நடந்து போயிருக்கிறேன், அன்றைய நாளில் அத்தனை தெம்பில்லை என்று நினைக்கிறேன். 


எப்படி வீடு திரும்புவது என்பது குறித்து நீண்ட நேரம் யோசித்தபடி நின்றிருந்தேன். பிறகு பொம்மனஹள்ளியில் இறங்கி புத்தகங்கள் விற்கும் கடைக்காரத் தம்பியிடம் காசு வாங்கிக் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து ஒரு Tempo Traveller வண்டியில் ஏறி அமர்ந்து விட்டேன்.


பயணம் முழுவதும் பலவிதமான குழப்பங்கள், தம்பியின் கடை திறந்திருக்க வேண்டும், கேட்டவுடன் அவன் 5 ரூபாயைக் கொடுத்து விட வேண்டும். 


ஓட்டுனர் ஏதாவது கோபத்தில் திட்டி விடக்கூடாது, இதுபோன்ற ஒரு சூழலில் பயணிக்கத் கூடாது, என்றெல்லாம் குழப்பமான துயர் படிந்த அச்சத்தோடு அந்தப் பயணம் முடிவுறும் நேரம் வந்து விட்டது.


எல்லாப் பயணிகளும் இறங்கும் வரை காத்திருந்து விட்டு அந்த ஓட்டுனரிடம் வந்து நின்று, "அண்ணா, மன்னியுங்கள், கடை வரைக்கும் போய் காசு வாங்கிக் கொண்டு வருகிறேன்".


அந்த ஓட்டுனர்‌ என்னை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தார், அமைதியாக இருந்தவர், "பரவாயில்ல தம்பி, கதவை நல்லா சாத்தீட்டுப் போய்ட்டு வாங்க". அந்த மனிதரின் பார்வையில் சக மனிதனின் துயரத்தைப் படிக்கும் ஒரு மெல்லிய நேசமிருந்தது. 


அந்த அனுபவம் எனக்கு ஒருவிதமான நெகிழ்ச்சியை உருவாக்கி இருந்தது. மனிதர்கள் எங்கிருந்தாலும் சலனமற்றுப் பிற மனிதர்களின் துயரங்களைப் புரிந்து கொள்கிறார்கள். 


இந்த நேசத்தின் நிழல்தான் பேரண்டத்தின் அச்சாக இருந்து எல்லாவற்றையும் இயக்குகிறது. இந்த அச்சைத்தான் மனிதர்கள் கடவுள் என்று பெயரிடுகிறார்கள் போல என்று நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.


ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பிறகு நான் ஒரு நவீன மகிழுந்து வாங்கி இருந்தேன், அதே சாலையில் நாள்தோறும் அலுவலகத்துக்குப் பயணம் செய்வேன்.


நாள்தோறும் அந்த Tempo Traveller ஓட்டுனரை நினைத்துக் கொள்வேன், வீடு திரும்பும் போது பேருந்து நிறுத்தங்களில் நிற்கிற முதியவர்களை "நீங்கள் எங்கே போக வேண்டும்" என்று கேட்டு ஏற்றிக் கொள்வேன். அவர்களது நிறுத்தங்களில் இறக்கி விடுவேன். அது அந்த ஓட்டுனருக்கு செய்கிற நன்றிக் கடன் என்று நினைத்துக் கொள்வேன்.


ஏறத்தாழ மறுபடி 10 ஆண்டுகளுக்குப்‌ பிறகு அதே சாலையில் "Kendriya Sadhan" இல் ஒரு வேலையை முடித்துக் கொண்டு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்த போது பின்னாலிருந்து "ஐயா" என்றொரு குரல். 


விசுக்கென்று திரும்பிப் பார்த்தால் மெலிந்த எலும்புகள் வெளியே தெரிகிற மாதிரியான தோற்றத்தோடு ஒரு அம்மா என்னை அழைத்தார். அவர் யாசகம் கேட்கிறவரைப் போல இல்லை.


அருகில் போய் "என்ன ஆச்சு அம்மா?" என்றேன். என் கையில் ஒரு மருந்துச் சீட்டைக் கொடுத்தார், St.Johns மருத்துவமனையின் இலவச மருத்துவப் பிரிவு சீட்டு, நான்கைந்து மருந்துகளும் ஒரு Protinex டப்பாவும் எழுதி இருந்தார்கள். அவர் ஏன் என்னைத் தேர்வு செய்து அழைத்தார், என்னிடம் ஏன் அந்த மருந்துச் சீட்டைக் கொடுத்தார்‌  என்று தெரியவில்லை.


சட்டைப் பைக்குள் கையை நுழைத்து ஒரு இருநூறு ரூபாய்த்தாளை எடுத்து அவரிடம் கொடுக்கப் போனேன், அவர் மெல்லிய குரலில் என்னால் நடக்க முடியவில்லை தம்பி, நீயே இதிலிருக்கும் மருந்தை வாங்கிக் கொடுத்தால் நன்றியுடையவளாக இருப்பேன், பணம் வேண்டாம்"


வறுமை, பிணி, மூப்பு எல்லாவற்றையும் தாண்டி அவரிடம் பணம் வேண்டாம் என்று சொல்கிற ஒரு சுயமரியாதை இருந்தது, 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஓட்டுனரிடம் பேசும்போது எனக்கிருந்த அதே ததும்பும் கூச்சமும், துயரமும் அவரது முகத்தில் இருந்ததைப் பார்த்தேன்.


அந்த 20 வருடத்துக்கு முந்தைய உரையாடல் திரும்ப நிகழ்ந்து கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன், நான் அந்த ஓட்டுனரிடம் கைகளைக் கூப்பவில்லை, ஆனால் இந்தத் தாயோ கைகளை என்னை நோக்கிக் கூப்பியபடி  இருந்தார். 


அவரது கைகளைப் பிடித்து மெல்லக் கீழறிக்கி விட்டு, "அம்மா, இங்கேயே அமர்ந்திருங்கள், நான் மருந்துகளை வாங்கி வருகிறேன்" என்றபடி மூடியிருந்த ஒரு கடையின் படிகளைக் காட்டிவிட்டு மருந்துக் கடையைத் தேடி நடந்தேன். 


பகல் உணவுக்குப் பிறகு பெரும்பாலான கடைகளை இரண்டு மணிநேரம் மூடி விடுவார்கள். அலைந்து திரிந்து கடைசியாக ஒரு குறுகிய சந்தில் திறந்திருந்த மருந்துக் கடையைப் பார்த்தேன்.


இரண்டு மார்வாடி இளைஞர்கள், மருந்துகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள், மருந்துச் சீட்டைக் கொடுத்தவுடன்‌ "எல்லா மருந்தும் கொடுக்கவா சார்", என்றவனிடம் "எவ்வளவு ஆகும் தம்பி?" என்றேன்.


அமர்ந்தவன் கணக்குப் போட்டபடி, Protinex சிறியதா? பெரியதா? என்றான். "பெரியதென்றால் ஒரு மாதம் வரும்" என்று கூடுதல் தகவல் கொடுத்தான். 


"பெரியதே இருக்கட்டும் தம்பி".


"776 ரூபாய், இந்த மூன்றாவது மருந்து மட்டும் வேறு Company இருக்கிறது? கொடுக்கட்டுமா?"


"தெரியலையே தம்பி, போய்க் கேட்டுவிட்டு வரட்டுமா?"


"யாருக்கு வாங்குறீங்க சார்?"


"தெரியல தம்பி, ஒரு வயசான அம்மா, வாங்கி வரச்சொன்னார்கள்."


என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தவன், அமைதியாக கணிப்பொறியில் ஏதோ தட்டச்சினான். கையில் இரண்டு சீட்டுகள் கொடுத்தான்.


Wallet இல் இருந்து இரண்டு 500 ரூபாய்த்  தாள்களை எடுத்து நீட்டினேன், ஒன்றை வாங்கிக் கல்லாவில் போட்டுவிட்டு சிரித்தான். இன்னொரு தாளை என்னிடமே திருப்பிக் கொடுத்தான். 


அவன் பங்குக்கு 276 ரூபாய். நான் அமைதியாக நின்று அவன் முகத்தைப் பார்த்தேன். நானாவது நேரடியாக உதவி கேட்கப்பட்டவன், ஆனால், அவன் எனது சொற்களை மட்டுமே நம்பினான்.


சக மனிதர்களின் துயரத்தை நேரடியாக உணர்ந்து உதவுகிற நம்மைப் போன்றவர்களை விட, வெறும் சொற்களை நம்பி, அந்த சொற்களின் ஈரத்தை உணர்ந்து எடுத்துக் கொடுக்கிற மனிதன் மகத்தானவன் இல்லையா?


நான் நெகிழ்ந்து நீண்ட நேரம் அங்கே நிற்க முடியாதவனாக அந்த இளைஞனைப் பார்த்துக் கைகளைக் கூப்பியபடி நகரத் துவங்கினேன்.


அந்த முதிய தாய் அங்கேயே அமர்ந்திருந்தார்கள், மருந்துகளைக் கொடுத்து விட்டு மீண்டும் அந்த சட்டைப்பையிலிருந்த 200 ரூபாய் நோட்டையும் கைகளில் வைத்து அழுத்திவிட்டு நடக்கத் துவங்கினேன்.


அந்த சாலை கடந்த 20 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது, அந்த சக மனிதர்களின் வலியை உணர்ந்து கொஞ்சமாக நெகிழ்ந்து போகிற மனிதர்கள் இன்னமும் அந்த சாலையில் நடக்கிறார்கள். 


பூமியின் உள்ளிருக்கும் குழம்பு இப்போது எதிர்த்திசையில் சுழலத் துவங்கி இருப்பதாக யாரோ சில விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.


ஆனால், கருணையும், இரக்கமும், சக மனிதர்களின் துயரத்தை உணர்ந்து கொள்கிற பேரண்டத்தின் அச்சும் ஒரே திசையில் தான் சுழல்கிறது அல்லவா?


அந்த ஓட்டுனரிடம் இருந்துதான் நான் அந்த உடைக்க முடியாத மாய அச்சைப் பிடித்துக் கொண்டு வந்தேன், பிறகு என்னிடம் இருந்து அந்த அச்சை லாவகமாகப் பிடித்துக் கொண்ட அந்த மார்வாடி இளைஞனின் புன்னகை, அதுதான் கடவுளின் சாயல் என்று பலரும் சொல்கிறார்கள்.


எதிர்பார்ப்புகளற்ற கருணையைப் புரண்டோடச் செய்கிற பேரன்பு தான் கடவுள்.  எழுத்தாளர் -சுஜாதா

Monday, September 2, 2024

தீர்மான மாற்றம்..

 ஆடைகளை

பகட்டும் நாகரீகமும் தீர்மானிக்க
நொந்து நூலாகிப்போகிறது உடல்

உணவினை
நாவும் மனமும் தீர்மானிக்க
வெந்துச் சாகிறது குடல்

செயல்பாடுகளை
உணர்வும் ஆசையும் தீர்மானிக்க
பாடய்ப்படுகிறது அறிவு

தேவைகளை
விளமபரங்களும் கௌரவங்களும் தீர்மானிக்க
ஓடாய்த் தேய்கிறது செழுமை

தொடர்புகளை
பயனும் "பசையும்" தீர்மானிக்க
போலியாகிப் போகிறது நட்பு

காதலை
சந்தர்பங்களும் காமமும் தீர்மானிக்க
கண் கலங்கி நிற்கிறது இல்வாழ்வு

வெற்றியினைப்
பணமும் ஜாதியும் தீர்மானிக்க
கேலிக் கூத்தாகிறது தேர்தல்

நியாயத்தை
பதவியும் செல்வாக்கும்  தீர்மானிக்க
இறந்து கொண்டிருக்கிறது தர்மம்

மொத்தத்தில்

தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
செயலிழந்து கிடக்க

கேடுகெட்டவை எல்லாம்
அரியனையேறிச்  சிரிக்க
நரகமாகிக் கொண்டிருக்கிறது....

சொர்க்கமாய் இருக்கவேண்டிய
நம் சுக வாழ்வு 

Sunday, September 1, 2024

முகவரி..

 கடலுக்கு அலையது முகவரி

நிலவுக்கு பனியது முகவரி
மலருக்கு  மணமது முகவரி-என்
மகிழ்விற்கு "அவள்தான்" முகவரி

கொடையதற்கு கருணையே முகவரி
காதலுக்கு அன்பதே முகவரி
படையதற்கு தலைவனே முகவரி-என்
புகழுக்கு "அவள்தான் " முகவரி

மனதுக்கு நினைவதே   முகவரி
நினைவுக்கு மொழியதே  முகவரி
பகலுக்கு ஒளியதே  முகவரி-என்
உயர்வுக்கு  "அவள்தான்" முகவரி

கடவுளுக்கு கோவிலே முகவரி
கனியினுக்கு சுவையதே   முகவரி
உடலுக்கு முகமதே  முகவரி-ஆம் 
எனக்கென்றும் "கவிதையே   " முகவரி

சந்தமே முதன்மை என அறிந்தாலே..

 விளமதும் மாவும் தேமா

வகையென அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
இலகுவாய்ப் புரியு மாறு
இயற்றிட நானும் நாளும்
பலமுறை முயன்றுப் பார்த்தேன்
பயனிலை தோற்றே வீழ்ந்தேன்

தினம்தினம் இதுபோல் நானும்
தவித்திடும் நிலையைக் கண்டு
மனக்குறைப் போக்கும் வண்ணம்
மகிழ்வது கொள்ளும் வண்ணம்
எனதுயிர் நண்பன் ஓர்நாள்
ஒருவழி எனக்குச் சொன்னான்
வினவிடக் கேட்டு நானே
வியப்பினில் உச்சம் போனேன்

"கரையது உயர்ந்து நன்றாய்
இருபுறம் இருக்க நீரும்
சிறையது பட்டாற் போல
அடங்கியே நடத்தல் போல
வரையரை ஒன்றை நீயும்
வகுத்தபின் வார்த்தை தன்னை
சிறையிட நினைத்தால் போதும்
சிலநொடி கவிக்குப் போதும்

"இதந்தரு மனையின் நீங்கி"
எனவளர் கவிதை தன்னை
சுதந்திரத் தாபம் கூட்டும்
சுடர்கவி பாடல் தன்னை
நிதமொரு முறையே நீயே
நயம்பட படித்தால் போதும்
மதகதைக் கடக்கும் நீராய்
கவியது பாயும் " என்றான்

தினம்தினம் காலை மாலை
திருத்தமாய் பாடல் தன்னை
மனனமே செய்தல் போல
மகிழ்வுடன் சொல்லச் சொல்ல
தனத்தனத் தான தான
எனுமொலி இயல்பாய் என்னுள்
இணக்கமாய் இணைந்து கொள்ள
உடன்கவி பிறக்க லாச்சு

இங்கணம் இப்போ தெல்லாம்
எப்பொருள் குறித்தும் பாட
சங்கடம் கொள்வ தில்லை
சந்தமே முதன்மை யென்னும்
சங்கதி அறிந்த தாலே
சஞ்சல மேதும் இல்லை
இம்முறை முயன்றால் நாளும்
இன்கவி பெறலாம் யாரும்

Friday, August 30, 2024

மண்ணா..விதையா..?

  பதிலை

கேள்வி தீர்மானிப்பதைவிட
கேட்கும் தொனியே
மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறது

"சாப்பிட்டாகிவிட்டதா ? "என்றால்
"ஆகிவிட்டது "என்பதாக

"சாப்பிடுகிறீர்களா ? "என்றால்
"இல்லை மனைவி காத்திருப்பாள் " என்பதாக

"முதலில் சாப்பிடுங்கள்
அப்பத்தான் பேச்சே எப்படி வசதி ?"என்றால்
"சரி "என்பதாக

கேள்வி பதிலைத் தீர்மானித்தலை விட
கேட்பவனின் தொனியே
அதிகம் தீர்மானிக்கிறது

படைப்பை
கரு தீர்மானிப்பதைவிட
படைப்பாளியின் மன நிலையே
மிகச் சரியாகத் தீர்மானிக்கிறது

"எதையாவது எந்த வடிவிலாவது"எனில்
சொத்தையாகக் குப்பையாக

"இதை எந்த வடிவிலாவது" எனில்
சராசரியாக ஒப்புக்கொள்ளும்படியாக

"இதை இந்த வடிவில் இப்படித்தான் "எனில்
சிறந்த படைப்பாகக் காலம் கடப்பதாக

படைப்பைக் கரு தீர்மானித்தலை விட
படைப்பாளியின் மன நிலையே
மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறது
தொனி  பதிலைத் தீர்மானிப்பது  போலவே

Thursday, August 29, 2024

சிரிப்பின் சிறப்பறிவோம்..

 சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்

மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்


Wednesday, August 28, 2024

மரபுக் கவிதையும் உப்புமாவும்

 எப்பொழுதும் எம்வீட்டில் குறைவு இன்றி

எப்பொருளும் எந்நாளும் இருக்கும் அதனால்
முப்பொழுதும் தப்பாது குறைகள் இன்றி
நளபாகம் படைத்திடுவாள் எந்தன் துணைவி

எப்படித்தான் சுதாரித்து இருந்தால் கூட
என்றேனும் ஒர்நாளில் சமையல் செய்ய
எப்படியோ பொருளொன்று குறைந்து போகும்
அப்போது சிலநிமிடம் குழப்பம் சூழும்

மல்யுத்தப் போட்டியிலே கீழே வீழ
மறுகணமே துள்ளியெழும் வீரன் போல
இல்லாத பொருள்குறித்தே எண்ணி இராது
சட்டெனவோர் முடிவெடுப்பாள் இல்லக் கிழத்தி

எதிர்க்கடைக்கு உடனடியாய் என்னை அனுப்பி
வறுத்தரவை அரைக்கிலோவும் அதற்குத் தோதாய்
கிளிநிறத்து மிளகாயும் வாங்கச் சொல்லி
உடனடியாய் செய்திடுவாள் உப்பு மாவே

நினைத்தவுடன் உடனடியாய் செய்யும் உணவு
உப்புமாபோல் உலகினிலே ஏதும் இல்லை
மனைவியர்க்கும் அவசரத்தில் உதவும் பதார்த்தம்
நிச்சயமாய் உப்புமாபோல் எங்கும் இல்லை

அதுபோல

எழுதுவது என்றெண்ணி அமர்ந்த பின்னே
எல்லாமே கற்பனையில் வந்து போகும்
எழுதிவிடத் துவங்கியதும் ஊற்று நீராய்
வார்த்தைகளும் சரளமாக வந்துச் சேரும்

எப்படித்தான்  ஆர்வமாக இருந்தால் கூட
என்றேனும் ஒருநாளில் கவிதைப் புனைய
எப்பொருளும் அமையாதுப் பூச்சிக் காட்டும்
எரிச்சலிலே எனைநிறுத்தி ஆட்டம் காட்டும்

வள்ளலுக்கு வருகின்ற வறுமை போல
வீரனுக்குள் வளர்கின்ற சோர்வு போல
உள்ளமதில் வெறுமையது சூழ்ந்த போதும்
அறிவதுவோ வேறுவழி ஒன்றைக் காட்டும்

"அச்சதற்குள் களிமண்ணைத் திணித்து எடுக்க
அழகான பொம்மையது வருதல் போல
சட்டத்துள் வார்த்தைகளை அடுக்கி எடுநீ
அழகான கவியொன்று கிடைக்கும்  "என்கும்

அதன்வழியே ஏழெட்டு எதுகை எடுத்து
அதற்கீடாய் மோனையையும் சேர்த்து எடுத்து
உடனடியாய் கவியொன்றைச்  செய்வேன் நானே
ஒருநொடியே ஆகுமதைச்  செய்யத் தானே

அதனால்

நினைத்தவுடன் செய்கின்ற உப்பு மாபோல்
உடன்கவிதை வேண்டுமெனில் தடங்கல் இன்றி
அனைவருக்கும் உதவுவது மரபு ஒன்றே
இளைஞரெல்லாம் இதையறிந்தால் நன்மை உண்டே

சின்னச் சின்ன அடிகள் வைத்து..

 சின்னச் சின்ன அடிகள் வைத்து

சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
துணிந்து  ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
அணுவா  லானது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

Tuesday, August 27, 2024

இரசித்துப் பயணிக்க..

 அந்த அழகிய ஏரியில்உல்லாசப் படகில்

எல்லோரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்
அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
அறியாதவர்களும் இருந்தார்கள்

அறிந்தவர்கள் எல்லாம்
ஏரி நீரின் குளுமையை
கரையோர மலர்களை
படகு செலுத்துவோனின் லாவகத்தை
ரசித்து மகிழ்ந்து
உல்லாசமாய் பயணித்துக்கொண்டிருந்தார்கள்

அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தையும்
படகின் வேகத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணி எண்ணிப்  பயந்து
படகுக்குள்  ஒடுங்கிக் கிடந்தார்கள்

படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்

Monday, August 26, 2024

எங்கும் தமிழ்..எதிலும் தமிழ்..ஏனில்லை.?

 வெகு நாட்களுக்குப் பின்

என் நண்பனின் கடைக்குப் போனேன்
சங்கர் சைக்கிள் மார்ட் என இருந்த நேம் போர்டை
சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என
அழகாக மாற்றி இருந்தான்
நான் பூரித்துப் போனேன்

" நேம் போர்டை எப்போது மாற்றினாய்
சிறப்பாக இருக்கிறது " என்றேன்
 " யார் மாறினாலும் நீ எல்லாம் மாற மாட்டாய்
பெயர் பலகை எனச் சொல் " என்றான்

" ஓ சாரி சாரி..பெயர் பலகையை
எப்போது மாற்றினாய் "என்றேன்

தலையில் அடித்து கொண்டான்
"ஏன் தவறு.. தவறு எனச் சொல்லக் கூடாதா " என்றான்

அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது
இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்

"ஒரு மிதி வண்டிக்கு இருபது
சிறு பொருட்கள் தேவைப் படுமா " என்றேன்
முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது
எனக்கே பெருமையாக இருந்தது

"படும் " என்றான் சுருக்கமாக

"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்
சொல்ல முடியுமா " என்றேன்

என்னை அலட்சியமாக பார்த்தபடி
மடமடவென சொல்லத் துவங்கினான்

"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்
பதினைந்து ஆச்சா" என்றான்

" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்
மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்
பொருட்கள் பதினைந்து சரி
தமிழ் என்ன ஆயிற்று "என
வைரமுத்து பாணியில் பேசிவிட்டு
கிளம்பத் தயாரானேன்

விடைகொடுத்து அனுப்பிய அவன் கண்களில்
ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது
விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்
எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
நிச்சயமாக நம்மைப் போலவே  


அவனுக்கும் சில நாளில்  புரியக் கூடும்

Sunday, August 25, 2024

அனுமன் வாலாய்....

 "சொல்ல வேண்டியவைகளையெல்லாம்

நிறையச் சொல்லிவிட்டார்கள்
எழுத வேண்டியவைகளையெல்லாம்
தெளிவாக எழுதிவிட்டார்கள்
நீயேன் உன்னையும் கஷ்டப்படுத்திக்கொண்டு
அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்திக்கொண்டு  ".....

மனதின் மூலையில் புகையாய்
 கிளம்பிய சலிப்புப் புகை
மனமெங்கும் விரைந்து பரவி
என்னைத்  திணறச் செய்து போகிறது
நான் மிகச் சோர்ந்துச் சாய்கிறேன்

என் மனைவியிடம்  நெருங்கியமர்ந்த பேத்தி
" ஏன் பாட்டி உங்கள் காலத்தில்
நிஜமாகவே பீட்ஸா கிடையாதா
 சுடிதார் கிடையாதா ?
அட்டாச்சுடு பாத் ரூம் கிடையாதா ?"
என ஆச்சரியமாய்க் கேட்கிறாள்

" இல்லை அவையெல்லாம்  அப்போது
தேவையாய்த தெரியவில்லை " எனச் சொல்லி
பாட்டி எப்படியோ சமாளிக்கிறாள்
நான் அதிர்ந்து போகிறேன்

ஒரு கால் நூற்றாண்டில் தேவைகள்
 எப்படியெல்லாம மாறிவிட்டன ?

வாழ்வின் போக்கில்
உணவு உடை இருப்பிடம் மட்டுமின்றி
கலை பண்பாடு கலாச்சாரம
அனைத்திலும்தான்
எத்தனை எத்தனை  மாறுதல்கள் ?

வசதி வாய்ப்புகளே    தேவைகளை முடிவு செய்ய

தேவைகளை விளம்பரங்கள் முடிவு செய்ய...

சந்தர்ப்பங்கள் தர்மத்தை முடிவு செய்ய...

செல்வமும் செல்வாக்கும்  நீதியை முடிவு செய்ய ..

உறவுகளைக் கூடப்  பயன் முடிவு செய்ய...

உணவினைக்  கிடைக்கும் நேரம் முடிவு செய்ய...

உடலுறவைக் கூடக்  கிழமை முடிவு செய்ய..

காலம் புதுப் புதுச் சூழலை உருவாக்கிப்போக ..

புதுச் சூழல் புதுப் புதுப் பிரச்சனைகளை உண்டாக்கிப்போக ...

சட்டெனப் பற்றிய சிந்தனை நெருப்பு
கொழுந்து விட்டு   எரியத் துவங்க

 புகை மூட்டமில்லா வெளிச்சத்தில்
  பதிவு செய்யப்படவேண்டிய பட்டியல்
அனுமார் வாலாய் நீளத் துவங்குகிறது

என்னுள்ளும் இதுவரை குட்டையாய்
 அடங்கிக் கிடந்த உற்சாகம்
கங்கைபோல்  பரந்து விரியத் துவங்குகிறது

உலகம் பிறந்தது நமக்காக...

 நான் விழிக்கும் முன்பே

கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின் அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
எனப் புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின் சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்லப் புரியத்தான் செய்கிறது


Saturday, August 24, 2024

ஒளியேற்றி இருள் நீக்கி...

 செய்யக் கூடாததை செய்துபாழ்படுத்தியவர்களை விடசெய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே

உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்

பேசக் கூடாத தைப்
பேசியவர்களை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்

படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
முன்னேற்றதை அதிகம் தொலைத்திருக்கிறார்கள்

எழுதக் கூடாததை
எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்

எதிர்மறைச் சிந்தனைகளால்
நேர்ந்த  தீமைகளைவிட
நேர்மறைச் சிந்தனையின்மையால்
நேர்ந்த  அழிவுகளே உலகில் அதிகம்

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
 தெளிவாய் இதனை மனதில் கொள்வோம்.
ஒளியேற்றி இருள் நீக்கி  மென்மேலும் உயர்வோம் 

Friday, August 23, 2024

குழந்தைகளோடு குழந்தைகளாய்..

 அதிகாலைச் சூரியனோடு

கைகோர்த்து நடை பயிலுங்கள்
அது உடலினை உறுதி செய்யும்

மாலை நேரத் தென்றலோடு
மனம் திறந்து பேசுங்கள்
அது மனப்பளுவைக் கனவாக்கிப் போகும்

முழு நிலவின் ஒளியோடு
கரையக் கற்றுக் கொள்ளுங்கள்
அது பல உன்னதங்களை அறிமுகம் செய்து போகும்

பூத்துச் சிரிக்கும் மண  மலரோடு
சினேகம் செய்து கொள்ளுங்கள்
அது வாழ்வின் அர்த்தத்தை தெளிவாக்கிப் போகும்

நீலக் கடலின்  பிரமாண்டத்தில்
இலயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அது  பேரறிவை  உணரச் செய்து போகும்

காடோடும் மலையோடும்
தனித்திருக்கப் பழகுங்கள்
அது   அமைதியின்  அருமை  உணர்த்திப் போகும்

இவை எதற்கும் நேரமில்லையெனில்
கவலை கொள்ளவேண்டாம்
குழந்தைகளோடு  குழந்தைகளாய்.                    ‌ ( குழந்தைகளோடு பெரியவர்களாக அல்ல ) இருக்க முயலுங்கள்
நிச்சயம்  அது
இவை அனைத்தையும்  ஒன்றாகச் சேர்த்துத் தரும்

Wednesday, August 21, 2024

சராசரியாய் இருக்கப் பழகு..

 உனக்கு பேசவும் எழுதவும்

கொடுத்துள்ள உரிமையின் எல்லையை
சோதிக்க முயலாதே
அந்த எல்லை மிகச் சிறியது என உனக்கு
புரிந்தும் போகலாம்
அதனால் நீ நொந்தும் போகலாம்
எனவே அந்த வழி வேண்டாம் நமக்கு

உண்மையைத்தானே சொல்கிறேன் என
சிறுபிள்ளைத்தனமாய்
உளறித் தொலைக்காதே
நீ கைது செய்யவும் படலாம்
உன் வீடும் தாக்கப் படலாம்
ஊமையாய் இருக்கப் பழகு
காசு கொடுத்து கருமாந்திரம் நமக்கெதுக்கு

எழுதுபவன் வாசிப்பவன் எல்லாம்
சராசரியைத் தாண்டியவன் என
தப்புக் கணக்குப் போடாதே
நீ ஏமாந்துத் தொலைக்கலாம்
எழுத்தையே வெறுக்கலாம்
தெரிந்ததைப் பதுக்கப் பழகு
அதுதான் என்றும் சுகம் நமக்கு

மதம்" பிடித்தவனாயினும்
"மதம்" பிடிக்காதவனாயினும்
அவனவன் நிலையில் "மதம் 'பிடித்தவனே
நியாயம் பேசி ஏமாறாதே
நிம்மதி இழந்துத் திரியாதே
சராசரியாய் இருக்கப் பழகு
சங்கடங்களை விலக்கப் பழகு

பயனற்றதை சுவாரஸ்யமாகச் சொல்லிப்போ
ஆடிக்காற்றுப் போல எதன் மீதும்
மிகச் சரியாகப் படாது புழுதிக் கிளப்பிப் போ
மகுடங்களும் மலர் மாலைகளும் நிச்சயம் கிட்டும்
யானைவைத்து பிச்சை எடுப்பது போல்
அறிவைக் கொண்டு பிழைக்கப் பழகு
நிச்சயம் வஸந்த காலம் உன் வாசல் கதவைத் தட்டும்

Tuesday, August 20, 2024

ஆண்டவனின் வேண்டுதல்

 


வானம் பார்த்து மண்ணில் நடந்து
இன்னும் எத்தனை நாள்
பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்

ஞானம் தேடி காடு மலை ஓடி
இன்னும் எத்தனை யுகம்
வாழ்வை இழந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்

நான் இருப்பதும் இல்லாதிருப்பதும்
உலகுக்கு பிரச்சனையே இல்லை

என்னை வைத்துப் பிழைப்பவனும்
என்னை  "வைதுப் " பிழைப்பவனும் தான்
உலகில் பெரும் பிரச்சனை

வேண்டுதல் நிறைவேற்ற அள்ளிக் கொடுக்கவோ
செருப்படி கொடுத்தால் சீரழித்துப் போகவோ
நான் அற்ப  மனிதனில்லை

ஒலியாக ஒளியாக பொதுவாக இருந்தவனை
 நீங்கள்தான் உங்கள் வசதிக்காகப்
பிரித்துத் தொலைத்தீர்கள்

வெளியாக எனினும் தெளிவாக  யாவர்க்கும் பொதுவாக இருந்தவனை
மதம் பிடிக்க  என்னைப்
சின்னாபின்னப்படுத்திவிட்டீர்கள்

நான் ஒருவனே என்று சிலரும்
நானே எல்லாம் என்று சிலரும்
என்னை நீங்களாகவே உருவகப் படுத்திக்கொண்டீர்கள்

மிகப் பெரியவனான எனக்கு
ஊடகமும் ஏஜேண்டுகளும் தேவையென நீங்களாகவே முடிவு செய்து
என்னை மகா சிறியவனாக்கிவிட்டீர்கள்

உறுதியாகவும் சொல்கிறேன்
இறுதியாகவும் சொல்கிறேன்
எல்லோருக்குமாகவும் சொல்கிறேன்

என்னைப் படைத்து என்னைப் புகழ்ந்து
நீங்கள் எதுவும் அடையப் போவதுமில்லை
என்னை நீங்கள் அடையப் போவதும் இல்லை

உங்கள் நிம்மதிக்காக இல்லையென்றாலும்
என் நிம்மதிக்காக வேணும் என்னை சிலகாலம்
கண்டு கொள்ளாது விட்டு விடுங்களேன்
பிளீஸ்

Sunday, August 18, 2024

நயமுடன் உரைத்திடும்....

...சீர்மிகு கவிகள் செய்ய

சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்

உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்

மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்

தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்



நாங்கள் யாரெனத் தெரிகிறதா ?

 ஈட்டி எறியவும்

வாள் சுழற்றவும்
பயிற்சியளிக்காது
கவசங்கள் அணியவும்
கேடயங்கள் தாங்கவுமே
பயிற்றுவிக்கப் பட்டதால்
எங்கள் கனவுகளில் கூட
கிரீடங்கள் வருவதே இல்லை

அன்றாடப் போர்களில்
அடிபடாது திரும்புதலையும்
உயிரோடு இருத்தலையுமே
நாங்கள் வெற்றியாகக் கொள்கிறோம்

நாங்கள்  யாரென உங்களுக்குத் தெரிகிறதா ?

ஆற்று விசைக்கு எதிராக முயலாது
இலக்கை நோக்கி நீந்த அறியாது
ஆற்றின் போக்கோடு
அமிழ்ந்துவிடாது போதலையே
நீச்சலெனப் பயிற்றுவிக்கப் பட்டதால்
நாங்கள் விரும்பிய இடம்
போய்ச் சேர்ந்ததே இல்லை

புதையாது ஏதோ ஒரு கரையினை
எட்டிப் பிடித்தலையே
நாங்கள் சாதனையாகக் கருதுகிறோம்

உங்கள் வழிகளில் எங்களைப் பார்த்திருக்கிறீர்களா ?

தன் பலம் அறியாது
தும்பிக்கையில் நம்பிக்கை கொள்ளாது
அங்குசத்திற் கடங்குதலையே
தர்மமெனக் கொள்கிற
முட்டாள் யானையாயிருக்கப்
பயிற்றுவிக்கப் பட்டிருப்பதால்
நாங்கள் தவறியும்
மதம் கொள்வதே இல்லை

கொடுத்ததைப் பெறுதலையும்
கிடைத்ததை தருதலையுமே
எமக்கான சுய தர்மமாய்க் கொள்கிறோம்

எங்களை  உங்களுக்குப் புரிகிறதா ?

எங்களை மிதித்து ஏறி
சிகரம் தொட்டவர்களே
எங்களை இகழ்ந்த போதும்
எங்கள் மேல் பயணித்து
கரை கடந்தவர்களே
எங்களை மறந்த போதும்
நாங்கள் என்றும்  எப்போதும்
துளியும் மாறாதே இருக்கிறோம்

மாறாததொன்றே மாறாத விதி என்பதுதான்
மிகச் சரியான விதி என்பதற்கு
சாட்சியாகவும் இருக்கிறோம்

நாங்கள் யாரென உங்களால்
ஊகிக்க முடிகிறதா ?

Saturday, August 17, 2024

அனுபவத்தின் விலை..

 


ஒரு மலை வாசஸ்தலத்திற்கு ஒரு செல்வந்தர்
தன் மனைவி மக்களுடன் சென்று கொண்டிருந்தார்
இருள் சூழத் தொடங்குகிற பொழுது திடுமென்று
பாதி வழியில் கார் பழுதாகி நின்று போனது
கார் டிரைவர் என்ன முயன்றும் என்ன காரணம் எனக்
கண்டுபிடிக்க முடியவில்லை

அந்த இடம் வனாந்திரம் போல் இருந்ததாலும்
காட்டு விலங்குகள் அதிகம் திரியும் பகுதி எனவும்
திருடர்கள் பயம் அதிகம் உண்டு எனக்
கேள்விப் பட்டிருந்ததாலும் செல்வந்தர்
மிகவும் கலங்கிப் போனார்

வயதுக்கு வந்த இரண்டு பெண்களும் மனைவியும்
அணிந்திருந்த அதிகப் படியான நகைகளும்
அவர் அடி வயிற்றைக் கலக்கத் தொடங்கியது

அந்த வழியில் தெய்வாதீனமாக ஒருகார் வர
அதை நிறுத்தி ஏதும் உதவ முடியுமா எனக் கேட்க
அந்தக் கார் டிரைவரும் சிறிது நேரம் எஞ்சினை
செக் செய்துவிட்டு தான் சரிசெய்து தருவதாகவும்
ஆனால் அதற்கு கூலி ஆயிரம் ரூபாய் ஆகும்
 எனத் தெரிவித்தார்

செல்வந்தர் இருந்த நிலைக்கு அது மிக
அதிகமாகப் படவில்லைஉடன் சரி செய்யச்
 சொல்லி ஆயிரம் ரூபாயைக் கொடுக்க
கார் டிரைவரை காரில் ஏறி அமரச் சொல்லி காரை
ஸ்டார்ட் செய்யச் சொல்லிவிட்டு எஞ்சினில் ஒரு
குறிப்பிட்ட இடத்தில் ஒரு சிறு கல்லைவைத்துத் தட்ட
கார் ஸ்டார்ட் ஆகிப் போனது

செல்வந்தர் மிகவும் சங்கடப்பட்டுப் போனார்
வெறுமனே ஒரு கல்லைவைத்து தட்டியதற்கு
ஆயிரம் ரூபாய் கூலி என்றால் அது மிகவும்
அநியாயமாகப் பட்டது பொறுக்காமல் கேட்டும் விட்டார்
"ஏனப்பா வெறும் கல்லைவைத்து தட்டியதற்கு
ஆயிரம் ரூபாய் என்றால் அநியாயம் இல்லையா ?"

வந்தவன் அமைதியாகச் சொன்னான்
"சார் நான் கல்லை வைத்து தட்டியதற்கு
உங்களிடம் பணம் வாங்கவே இல்லை அது ஓ.சி
ஆனால் இங்கு தட்டினால் கார் ஸ்டார்ட்
ஆகும் என்பதைத்தெரிந்து கொள்ள பதினைந்து
ஆண்டுகள் செலவிட்டு இருக்கிறேன்
அந்த அனுபவத்திற்குத்தான் இந்தக் காசு "என்றான்

செல்வந்தரால் பதில் ஏதும் பேச முடியவில்லை

Friday, August 16, 2024

நேர்த்திசையில் ஓரடி

 புரியாது என புலம்பித் திரிந்ததைவிட

புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுத்துத் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட இருக்கிறது என
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருப்பதை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைப்பது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்கிறது..

Wednesday, August 14, 2024

நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்

 நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்


என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

கவிதை என்பது உணர்வு கடத்தி

 


" ஏதோ ஒன்று குறைவதைப் போலுள்ளது
இன்னும் கொஞ்சம் முயற்சி செய் "என்கிறேன்

தரையில் சட்டென விழுந்து ஓடும்
தை மாத மேகம் போல்
சிறு வெறுப்பு அவன் முகம் கடக்கிறது

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும் "என்கிறான்

"தலைவாரிப் பூச்சூடுகிறாள்
ஆடை அணிவிக்கிறாள்
சோரூட்டுகிறாள்.தாலாட்டுகிறாள்
தாய்க்குரிய அனைத்தையும் செய்வதால்
அவள் தாயாக இருக்கவேண்டும் என்பதில்லை
கவிதைக்குரிய அனைத்தும் இருப்பதால்
அது  கவிதை போல் இருக்கலாம்
ஆயினும் அது கவிதையாய் இருக்கவேண்டியதில்லை
ஏனெனில் கவிதை ஒரு புராடெக்ட் இல்லை"என்கிறேன்

"பின் இவை ஏதுமற்றதுதான் கவிதையா ""என்கிறான்

"அப்படியும் இருக்கலாம்
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை
கவிதை  நாட்டு நடப்புகளைச் சொல்லும்
செய்தித் தாளும் இல்லை
இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை
தான் அறிந்ததை பிறர் அறியச் சொல்லும்
விளம்பர சாதனமும் இல்லை
தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே  கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்

புரிந்தது போல் லேசாகத் தலையாட்டிப் போகிறான்

புரிந்ததும் புரியாததும் அவனது அடுத்த படைப்பில்
புரிந்துவிடும் என்பது நமக்கெல்லாம் புரிந்தததுதானே ?

Tuesday, August 13, 2024

புலம்பித் திரியுது பொதுநலம்

 


உணவைத் தீர்மானிக்கும் அதிகாரம்
நாவுக்கும் நாசிக்கு போக
எகத்தாளம் போடுகிறது மனது
குடலும் உடலும் நாசமாவதறிந்து
குழம்பித் தவிக்கிறது அறிவு

வெற்றியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
இலவசத்திற்கும் லஞ்சத்திற்கும் போக
துள்ளிக் குதிக்குது பண நாயகம்
நேர்மையும் நியாயமும் புலம்புதல் கண்டு
நொந்துத் துடிக்குது ஜன நாயகம்

நீதியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
சாட்சிக்கும் சந்தர்ப்பத்திற்கும் போக
மீசை முறுக்குது சட்டம்
உண்மையும் நிஜமும்தோற்பது கண்டு
கதறித் திரியுது நியாயம்

மதிப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம்
பணத்திற்கும் பதவிக்கும் போக
எகிறிக் குதிக்குது அராஜகம்
எளிமையும் ஏழ்மையும்  ஒடுங்குவது கண்டு
தடுமாறி நிற்குது தர்மம்

வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரம்
வசதிக்கும் வன்முறைக்கும் போக
திமிரோடு வளருது சுய நலம்
மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
புலம்பி அலையுது பொது நலம்

Saturday, August 10, 2024

கலையும் கரு

 எங்கோ ஒளிந்துகொண்டு  

நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
நூலின் நுனி

பயணத்தையே முடக்கிப் போகிறது
பயணத்தின் முன்
புறப்பட்ட குழப்பமும் சந்தேகமும்

எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருகத் துவங்குகிறது
ஒரு தூய காதல்

அனுபல்லவியும் சரணங்களும்
மிகச் சரியாக அமைந்தும்
பல்லவி அமைந்து தொலையாததால்
கண் திறக்கப் படாத சிற்பமாய்
சிற்பக் கூடத்திலேயே
சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது
விடிவு காலம் எதிர்பார்த்து
தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
கலையத் துவங்குகிறது
ஒரு கவிதைக் கரு

Friday, August 9, 2024

உபதேசம் ?

 


அந்தச்  சனிப் பயல்
ஒவ்வொரு முறை கோபப்படும் போதும்
கோபத்தின் விளைவுகள் குறித்து
அவன் நெஞ்சில் பதியும் வண்ணம்
கடுமையாகப் பேசியிருக்கிறேன்

ஒரு சமயம்
அவன் சம்பந்தமே இல்லாமல்
கோபப்பட்டபோது
பொறுத்துக் கொள்ளமுடியாமல்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கிறேன்

நேற்று கூட
ஒன்றுமில்லாத விஷயத்திற்கு
கோபப்பட்டதை
என்னால் தாங்கமுடியாது போக
கன்னத்தில் அறைந்தே விட்டேன்

அப்படியும் அவன் திருந்தியபாடில்லை

இப்போதெல்லாம்
அவன் போக்கை நினைக்கையில்
மனசு படபடக்கிறது
என்னுள் பற்றி எரிவது போல் உள்ளது
உடல் கூட நடுங்கத் துவங்குகிறது

பாழாய்ப் போனவன்
கோபத்தின் அதீத விளைவுகளை
என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறான்
கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை
என்றுதான் புரிந்து தொலைக்கப் போகிறான்

Thursday, August 8, 2024

பயணமே வாழ்க்கை

 சங்கடங்களைச் சந்திக்க

 சங்கடப்படுவோன்....

சுகச் சூழல் விடச்
சஞ்சலப்படுவோன்....

சராசரித்தனம் தாண்டச்
 சாத்தியமே இல்லை

நினைவு அலையின்   மடியிலேயே
முழுமனம் பதித்தவன்...

அடி ஆழம் செல்ல
அச்சப்படுபவன்....

சாதனை முத்தெடுக்கச்
சத்தியமாய் வாய்ப்பே இல்லை

சூழல் மறந்த
நேர்ச்சிந்தனையும்

இழப்புகளைத் தாங்கும்
 மனவலிமையும்

கொண்டவனே
 சிகரத்திற்குப் பாத்தியப்பட்டவன் 

ஒவ்வொரு நாளையும்
புதிய நாளாகவே  கொள்வதும்

ஒவ்வொரு செயலையும்
புதிதெனச்  செய்தலுமே

தொடர்ந்து வெல்வதற்கான
கம்ப  சூத்திரம்

இழந்தவைகளையும்
கடந்தவைகளையும்
கனவெனவே  கொள்வோம் வா

நடப்பதையும்
நடக்க இருப்பதையும்
நினைவினில் கொள்வோம் வா

வெற்றியும் சாதனையும்
நாம் அடையும் இலக்கல்ல
கடக்க  ஒரு குறியீடு  அவ்வளவே

தொடர்ந்து  குறியீடுகள் கடப்பதில்
கவனம் கொள்வோம்  வா வா

 இனிய பயணமே வாழ்க்கை
இரசித்துப்  பயணிப்போம் வா வா


Saturday, August 3, 2024

மதுரை மீனாட்சி‌அம்மன்‌கோவில்..

 மதுரை மீனாட்சி கோவில் மதுரை* 

 கீழே உள்ள நீல நிற இணைப்பைத் திறந்து, ஒவ்வொரு பகுதியையும் திறக்க உங்கள் விரலால் அதைத் தொடவும்.  ஒவ்வொரு பகுதியையும் திறந்து உள்ளே இருக்கும் ஒவ்வொரு மூலையையும் பார்க்க ஒரு அரிய புகைப்படத்தை பொறுமையாக பாருங்கள், அம்மா நம் இந்திய சிற்பிகளின் கைவேலைக்கு அருள் புரிவாயா கீழே உள்ள லிங்கைத் தொட வரும் open மூலம் தொடரவும்

 https://view360.in/virtualtour/madurai/

Friday, August 2, 2024

வாழ்த்தி வளர்வோம்

 எதிர்படும் எல்லோருக்கும்

வாழ்க வாழ்க வென்று
வாழ்த்துச் சொல்லியபடி நகர்கிறேன்

அதுவரை
வாட்டமுற்றிருந்த முகமெல்லாம்
மலரத் துவங்குகிறது

அதுவரை
மலர்ந்திருந்த முகமெல்லாம்
கூடுதல் அழகு பெறுகிறது

எதிர்படும் எல்லோரையும்
வெல்க வெல்க வென்று
உற்சாகப்படுத்திச் செல்கிறேன்

அதுவரை
துவண்டு கிடந்தவர்கள் எல்லாம்
துள்ளி எழத் துவங்குகிறார்கள்

அதுவரை
ஜெயித்து கொண்டிருந்தவர்கள்  எல்லாம்
கூடுதல் எழுச்சி கொள்கிறார்கள்

"இதனால் உனக்கென்ன நன்மை "
எரிச்சல்படுகிறான் நண்பன்

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

மிகச் சரியாக புரியாது விழிக்கிறான்
எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்

Tuesday, July 30, 2024

நிஜமாகும் கட்டுக்கதை..

 ஏழுகடல் தாண்டி

ஏழுமலை தாண்டி
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம்  உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம்
சாத்தியமற்றதென்றும்
அது ஒரு  தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து

சாரமற்ற  என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது

எங்கிருக்கும் உடலையும்
எங்கோ  இருக்கும்  உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது

அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது

இப்போதெல்லாம்
கட்டுக்கதை என நம்பிக்கைகொண்டிருந்த
அரக்கன் கதை  கூட
நிஜமாயிருக்கவும்
சாத்தியமென்றே படுகிறது

Saturday, July 27, 2024

தங்க நகை‌சேமிப்பா ?

 இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே                ஒரு பவுன் தங்கசெயினுக்கு 

1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!


 இது அனைவருக்கும் தெரிந்தது. 


ஆனால்

 

8 கிராம்தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 

6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!


ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். 


அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்.


இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம்.


 ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்.


 ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். 

யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் 


 ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.


 ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ?


 நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!


 இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ?


 பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ?

 கணக்கு போட்டு பாருங்கள்.


1 கிராம் தங்கம் ரூ. 4760/-

8 கிராம் தங்கம் ரூ. 38,080/-

1 கிராம்  செம்பு - 4.80

1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-

6.5 கிராம் தங்கம் - 30940/-


6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு 

அடக்கவிலை-30940+7.2=30947.2/-


1 பவுனுக்கு தங்கத்தில் - 38080 - 30940


லாபம்= 7140


சேதாரம் 1.5 கிராம் = 7140/-


 1 பவுனுக்கு மொத்த லாபம்  14280                 


என்ன தலை சுத்துதா ? 


எனக்குள் இது ஆதங்கம். 


ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்.


  விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள உள்ளங்களே 


 உங்கள் ஆதங்கத்தை காட்ட அதிகப்படி share செய்யவும்.

Friday, July 26, 2024

Are u rich or poor ?

 *_𝑯𝒐𝒘 𝒅𝒐 𝒚𝒐𝒖 𝒌𝒏𝒐𝒘_*

*_𝒚𝒐𝒖 𝒂𝒓𝒆 𝒓𝒊𝒄𝒉?_*


*𝑨𝒎𝒂𝒛𝒊𝒏𝒈 𝒂𝒏𝒔𝒘𝒆𝒓* 

*𝒃𝒚 𝒂𝒏 𝑰𝑰𝑻 𝒔𝒕𝒖𝒅𝒆𝒏𝒕.*  


*𝑾𝒉𝒆𝒏 𝑰 𝒘𝒂𝒔  𝒅𝒐𝒊𝒏𝒈 𝒎𝒚 𝑩 𝑻𝒆𝒄𝒉, 𝒕𝒉𝒆𝒓𝒆 𝒘𝒂𝒔 𝒂 𝑷𝒓𝒐𝒇𝒆𝒔𝒔𝒐𝒓 𝒘𝒉𝒐 𝒖𝒔𝒆𝒅 𝒕𝒐 𝒕𝒆𝒂𝒄𝒉 𝒖𝒔 ‘𝑴𝒆𝒄𝒉𝒂𝒏𝒊𝒄𝒔’.*


*𝑯𝒊𝒔 𝒍𝒆𝒄𝒕𝒖𝒓𝒆𝒔 𝒖𝒔𝒆𝒅 𝒕𝒐 𝒃𝒆 𝒗𝒆𝒓𝒚 𝒊𝒏𝒕𝒆𝒓𝒆𝒔𝒕𝒊𝒏𝒈 𝒔𝒊𝒏𝒄𝒆 𝒉𝒆 𝒉𝒂𝒅 𝒂𝒏* *𝒊𝒏𝒕𝒆𝒓𝒆𝒔𝒕𝒊𝒏𝒈 𝒘𝒂𝒚 𝒕𝒐* *𝒕𝒆𝒂𝒄𝒉 𝒂𝒏𝒅 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏*

*𝒕𝒉𝒆 𝒄𝒐𝒏𝒄𝒆𝒑𝒕𝒔.*


*𝑶𝒏𝒆 𝒅𝒂𝒚, 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒄𝒍𝒂𝒔𝒔, 𝒉𝒆 𝒂𝒔𝒌𝒆𝒅 𝒕𝒉𝒆 𝒇𝒐𝒍𝒍𝒐𝒘𝒊𝒏𝒈 𝒒𝒖𝒆𝒔𝒕𝒊𝒐𝒏𝒔:*


*𝟏. 𝑾𝒉𝒂𝒕 𝒊𝒔 𝒁𝑬𝑹𝑶?*

*𝟐. 𝑾𝒉𝒂𝒕 𝒊𝒔 𝑰𝑵𝑭𝑰𝑵𝑰𝑻𝒀?*

*𝟑. 𝑪𝒂𝒏 𝒁𝑬𝑹𝑶 𝒂𝒏𝒅 𝑰𝑵𝑭𝑰𝑵𝑰𝑻𝒀 𝒃𝒆 𝒔𝒂𝒎𝒆?*


*𝑾𝒆 𝒂𝒍𝒍 𝒕𝒉𝒐𝒖𝒈𝒉𝒕 𝒕𝒉𝒂𝒕 𝒘𝒆 𝒌𝒏𝒆𝒘 𝒕𝒉𝒆 𝒂𝒏𝒔𝒘𝒆𝒓𝒔 𝒂𝒏𝒅 𝒘𝒆 𝒓𝒆𝒑𝒍𝒊𝒆𝒅 𝒂𝒔 𝒇𝒐𝒍𝒍𝒐𝒘𝒊𝒏𝒈:*


*𝒁𝑬𝑹𝑶 𝒎𝒆𝒂𝒏𝒔 𝒏𝒐𝒕𝒉𝒊𝒏𝒈.*

*𝑰𝑵𝑭𝑰𝑵𝑰𝑻𝒀 𝒎𝒆𝒂𝒏𝒔* 

*𝒂 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓 𝒈𝒓𝒆𝒂𝒕𝒆𝒓 𝒕𝒉𝒂𝒏 𝒂𝒏𝒚 𝒄𝒐𝒖𝒏𝒕𝒂𝒃𝒍𝒆 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓.*


*𝒁𝑬𝑹𝑶 𝒂𝒏𝒅 𝑰𝑵𝑭𝑰𝑵𝑰𝑻𝒀 𝒂𝒓𝒆 𝒐𝒑𝒑𝒐𝒔𝒊𝒕𝒆 𝒂𝒏𝒅 𝒕𝒉𝒆𝒚 𝒄𝒂𝒏 𝒏𝒆𝒗𝒆𝒓 𝒃𝒆 𝒔𝒂𝒎𝒆.*


*𝑯𝒆 𝒄𝒐𝒖𝒏𝒕𝒆𝒓𝒆𝒅 𝒖𝒔 𝒃𝒚 𝒇𝒊𝒓𝒔𝒕 𝒕𝒂𝒍𝒌𝒊𝒏𝒈 𝒂𝒃𝒐𝒖𝒕 𝒊𝒏𝒇𝒊𝒏𝒊𝒕𝒚 𝒂𝒏𝒅 𝒂𝒔𝒌𝒆𝒅, 𝑯𝒐𝒘 𝒄𝒂𝒏 𝒕𝒉𝒆𝒓𝒆 𝒃𝒆 𝒂𝒏𝒚 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓 𝒘𝒉𝒊𝒄𝒉 𝒊𝒔 𝒈𝒓𝒆𝒂𝒕𝒆𝒓 𝒕𝒉𝒂𝒏 𝒂𝒏𝒚 𝒄𝒐𝒖𝒏𝒕𝒂𝒃𝒍𝒆 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓?*


*𝑾𝒆 𝒉𝒂𝒅 𝒏𝒐 𝒂𝒏𝒔𝒘𝒆𝒓𝒔.*


*𝑯𝒆 𝒕𝒉𝒆𝒏 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏𝒆𝒅 𝒕𝒉𝒆 𝒄𝒐𝒏𝒄𝒆𝒑𝒕 𝒐𝒇 𝒊𝒏𝒇𝒊𝒏𝒊𝒕𝒚 𝒊𝒏 𝒂 𝒗𝒆𝒓𝒚 𝒊𝒏𝒕𝒆𝒓𝒆𝒔𝒕𝒊𝒏𝒈 𝒘𝒂𝒚, 𝒘𝒉𝒊𝒄𝒉 𝑰 𝒓𝒆𝒎𝒆𝒎𝒃𝒆𝒓 𝒆𝒗𝒆𝒏 𝒂𝒇𝒕𝒆𝒓 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒉𝒂𝒏 𝟑𝟓 𝒚𝒆𝒂𝒓𝒔.*


*𝑯𝒆 𝒔𝒂𝒊𝒅 𝒕𝒉𝒂𝒕 𝒊𝒎𝒂𝒈𝒊𝒏𝒆 𝒕𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆𝒓𝒆 𝒊𝒔 𝒂𝒏 𝒊𝒍𝒍𝒊𝒕𝒆𝒓𝒂𝒕𝒆 𝒔𝒉𝒆𝒑𝒉𝒆𝒓𝒅 𝒘𝒉𝒐 𝒄𝒂𝒏 𝒄𝒐𝒖𝒏𝒕 𝒐𝒏𝒍𝒚* 

*𝒖𝒑𝒕𝒐 𝟐𝟎.*


*𝑵𝒐𝒘, 𝒊𝒇 𝒕𝒉𝒆 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓 𝒐𝒇 𝒔𝒉𝒆𝒆𝒑 𝒉𝒆 𝒉𝒂𝒔 𝒍𝒆𝒔𝒔 𝒕𝒉𝒂𝒏 𝟐𝟎 𝒂𝒏𝒅 𝒚𝒐𝒖 𝒂𝒔𝒌 𝒉𝒊𝒎 𝒉𝒐𝒘 𝒎𝒂𝒏𝒚 𝒔𝒉𝒆𝒆𝒑 𝒉𝒆 𝒉𝒂𝒔, 𝒉𝒆 𝒄𝒂𝒏 𝒕𝒆𝒍𝒍 𝒚𝒐𝒖 𝒕𝒉𝒆 𝒑𝒓𝒆𝒄𝒊𝒔𝒆 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓 (𝒍𝒊𝒌𝒆 𝟑, 𝟓, 𝟏𝟒 𝒆𝒕𝒄.).*


*𝑯𝒐𝒘𝒆𝒗𝒆𝒓, 𝒊𝒇 𝒕𝒉𝒆 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓 𝒊𝒔 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒉𝒂𝒏 𝟐𝟎, 𝒉𝒆 𝒊𝒔 𝒍𝒊𝒌𝒆𝒍𝒚 𝒕𝒐 𝒔𝒂𝒚 “𝑻𝑶𝑶 𝑴𝑨𝑵𝒀”*.


*𝑯𝒆 𝒕𝒉𝒆𝒏 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏𝒆𝒅 𝒕𝒉𝒂𝒕 𝒊𝒏 𝒔𝒄𝒊𝒆𝒏𝒄𝒆 𝒊𝒏𝒇𝒊𝒏𝒊𝒕𝒚 𝒎𝒆𝒂𝒏𝒔 ‘𝒕𝒐𝒐 𝒎𝒂𝒏𝒚’ (𝒂𝒏𝒅 𝒏𝒐𝒕 𝒖𝒏𝒄𝒐𝒖𝒏𝒕𝒂𝒃𝒍𝒆) 𝒂𝒏𝒅 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒔𝒂𝒎𝒆 𝒘𝒂𝒚 𝒛𝒆𝒓𝒐 𝒎𝒆𝒂𝒏𝒔 ‘𝒕𝒐𝒐 𝒇𝒆𝒘’ (𝒂𝒏𝒅 𝒏𝒐𝒕 𝒏𝒐𝒕𝒉𝒊𝒏𝒈).*


*𝑨𝒔 𝒂𝒏 𝒆𝒙𝒂𝒎𝒑𝒍𝒆, 𝒉𝒆 𝒔𝒂𝒊𝒅 𝒕𝒉𝒂𝒕 𝒊𝒇 𝒘𝒆 𝒕𝒂𝒌𝒆 𝒕𝒉𝒆 𝒅𝒊𝒂𝒎𝒆𝒕𝒆𝒓 𝒐𝒇 𝒕𝒉𝒆 𝑬𝒂𝒓𝒕𝒉 𝒂𝒔 𝒄𝒐𝒎𝒑𝒂𝒓𝒆𝒅 𝒕𝒐 𝒅𝒊𝒔𝒕𝒂𝒏𝒄𝒆 𝒃𝒆𝒕𝒘𝒆𝒆𝒏 𝑬𝒂𝒓𝒕𝒉 𝒂𝒏𝒅 𝑺𝒖𝒏, 𝒕𝒉𝒆 𝒅𝒊𝒂𝒎𝒆𝒕𝒆𝒓 𝒐𝒇 𝒆𝒂𝒓𝒕𝒉 𝒄𝒂𝒏 𝒃𝒆 𝒔𝒂𝒊𝒅 𝒕𝒐 𝒃𝒆 𝒛𝒆𝒓𝒐 𝒔𝒊𝒏𝒄𝒆 𝒊𝒕 𝒊𝒔 𝒕𝒐𝒐 𝒔𝒎𝒂𝒍𝒍.*


*𝑯𝒐𝒘𝒆𝒗𝒆𝒓, 𝒘𝒉𝒆𝒏 𝒘𝒆 𝒄𝒐𝒎𝒑𝒂𝒓𝒆 𝒕𝒉𝒆 𝒔𝒂𝒎𝒆 𝒅𝒊𝒂𝒎𝒆𝒕𝒆𝒓 𝒐𝒇 𝒆𝒂𝒓𝒕𝒉 𝒘𝒊𝒕𝒉 𝒕𝒉𝒆 𝒔𝒊𝒛𝒆 𝒐𝒇 𝒂 𝒈𝒓𝒂𝒊𝒏, 𝒅𝒊𝒂𝒎𝒆𝒕𝒆𝒓 𝒐𝒇 𝒆𝒂𝒓𝒕𝒉 𝒄𝒂𝒏 𝒃𝒆 𝒔𝒂𝒊𝒅 𝒕𝒐 𝒃𝒆 𝒊𝒏𝒇𝒊𝒏𝒊𝒕𝒆*.


*𝑯𝒆𝒏𝒄𝒆, 𝒉𝒆 𝒄𝒐𝒏𝒄𝒍𝒖𝒅𝒆𝒅 𝒕𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆 𝒔𝒂𝒎𝒆 𝒕𝒉𝒊𝒏𝒈 𝒄𝒂𝒏 𝒃𝒆 𝒁𝑬𝑹𝑶 𝒂𝒏𝒅 𝑰𝑵𝑭𝑰𝑵𝑰𝑻𝑬 𝒂𝒕 𝒕𝒉𝒆 𝒔𝒂𝒎𝒆 𝒕𝒊𝒎𝒆, 𝒅𝒆𝒑𝒆𝒏𝒅𝒊𝒏𝒈 𝒐𝒏 𝒕𝒉𝒆 𝒄𝒐𝒏𝒕𝒆𝒙𝒕, 𝒐𝒓 𝒚𝒐𝒖𝒓 𝒎𝒂𝒕𝒓𝒊𝒙 𝒐𝒇 𝒄𝒐𝒎𝒑𝒂𝒓𝒊𝒔𝒐𝒏*.


*𝑻𝒉𝒆 𝒓𝒆𝒍𝒂𝒕𝒊𝒐𝒏𝒔𝒉𝒊𝒑 𝒃𝒆𝒕𝒘𝒆𝒆𝒏 𝒓𝒊𝒄𝒉𝒏𝒆𝒔𝒔 𝒂𝒏𝒅 𝒑𝒐𝒗𝒆𝒓𝒕𝒚 𝒊𝒔 𝒔𝒊𝒎𝒊𝒍𝒂𝒓 𝒕𝒐 𝒕𝒉𝒆 𝒓𝒆𝒍𝒂𝒕𝒊𝒐𝒏𝒔𝒉𝒊𝒑 𝒃𝒆𝒕𝒘𝒆𝒆𝒏 𝒊𝒏𝒇𝒊𝒏𝒊𝒕𝒚* 

*𝒂𝒏𝒅 𝒛𝒆𝒓𝒐*.


*𝑰𝒕 𝒂𝒍𝒍 𝒅𝒆𝒑𝒆𝒏𝒅𝒔 𝒐𝒏 𝒕𝒉𝒆 𝒔𝒄𝒂𝒍𝒆 𝒐𝒇 𝒄𝒐𝒎𝒑𝒂𝒓𝒊𝒔𝒐𝒏 𝒘𝒊𝒕𝒉 𝒚𝒐𝒖𝒓 𝒘𝒂𝒏𝒕𝒔*.


*𝑰𝒇 𝒚𝒐𝒖𝒓 𝒊𝒏𝒄𝒐𝒎𝒆 𝒊𝒔 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒉𝒂𝒏 𝒚𝒐𝒖𝒓 𝒘𝒂𝒏𝒕𝒔,* 

*𝒚𝒐𝒖 𝒂𝒓𝒆 𝒓𝒊𝒄𝒉*.

*𝑰𝒇 𝒚𝒐𝒖𝒓 𝒘𝒂𝒏𝒕𝒔 𝒂𝒓𝒆 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒉𝒂𝒏 𝒚𝒐𝒖𝒓 𝒊𝒏𝒄𝒐𝒎𝒆,*

*𝒚𝒐𝒖 𝒂𝒓𝒆 𝒑𝒐𝒐𝒓.*


*𝑰 𝒄𝒐𝒏𝒔𝒊𝒅𝒆𝒓 𝒎𝒚𝒔𝒆𝒍𝒇 𝒓𝒊𝒄𝒉 𝒃𝒆𝒄𝒂𝒖𝒔𝒆 𝒎𝒚 𝒘𝒂𝒏𝒕𝒔 𝒂𝒓𝒆 𝒇𝒂𝒓 𝒍𝒆𝒔𝒔 𝒕𝒉𝒂𝒏 𝒎𝒚 𝒊𝒏𝒄𝒐𝒎𝒆.*


*𝑰 𝒉𝒂𝒗𝒆 𝒃𝒆𝒄𝒐𝒎𝒆 𝒓𝒊𝒄𝒉 𝒏𝒐𝒕 𝒔𝒐 𝒎𝒖𝒄𝒉 𝒃𝒚 𝒂𝒄𝒒𝒖𝒊𝒓𝒊𝒏𝒈 𝒍𝒐𝒕𝒔 𝒐𝒇 𝒎𝒐𝒏𝒆𝒚, 𝒃𝒖𝒕 𝒃𝒚 𝒑𝒓𝒐𝒈𝒓𝒆𝒔𝒔𝒊𝒗𝒆𝒍𝒚 𝒓𝒆𝒅𝒖𝒄𝒊𝒏𝒈 𝒎𝒚 𝒘𝒂𝒏𝒕𝒔.*


*𝑰𝒇 𝒚𝒐𝒖 𝒄𝒂𝒏 𝒓𝒆𝒅𝒖𝒄𝒆 𝒚𝒐𝒖𝒓 𝒘𝒂𝒏𝒕𝒔, 𝒚𝒐𝒖 𝒕𝒐𝒐 𝒄𝒂𝒏 𝒃𝒆𝒄𝒐𝒎𝒆 𝒓𝒊𝒄𝒉 𝒂𝒕 𝒕𝒉𝒊𝒔 𝒗𝒆𝒓𝒚 𝒎𝒐𝒎𝒆𝒏𝒕.*


 *𝑴𝒂𝒚 𝒚𝒐𝒖𝒓 𝒍𝒊𝒗𝒆𝒔 𝒈𝒆𝒕 𝒓𝒊𝒄𝒉 𝒃𝒚 𝒈𝒐𝒐𝒅 𝒕𝒉𝒐𝒖𝒈𝒉𝒕𝒔, 𝒈𝒐𝒐𝒅 𝒅𝒆𝒆𝒅𝒔, 𝒈𝒐𝒐𝒅 𝒑𝒆𝒐𝒑𝒍𝒆 𝒂𝒏𝒅 𝒍𝒐𝒗𝒆𝒍𝒚 𝒇𝒓𝒊𝒆𝒏𝒅𝒔 𝒂𝒓𝒐𝒖𝒏𝒅 𝒚𝒐𝒖 𝒂𝒍𝒘𝒂ys...(As received through WhatsApp)

Sunday, July 21, 2024

ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பது...

 ஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைப்பதற்கான

காரணங்களை பலரும் பலவிதமாக விளக்கி இருந்தார்கள்

அதில் குறிப்பாக ஆடியில் சேர்ந்திருந்து கருத்தரித்தால்
சித்திரையில் குழந்தை பிறப்பிருக்கும்
கோடை வெய்யிலில் அது தாய்க்கு மிகுந்த
சிரமமாய் இருக்கும் என்பதுவும் ஒன்று

சமீபத்தில் ஜாதகம் பார்க்கும் நண்பர் ஒருவரை
சந்தித்து பேசிக் கொண்டிருக்கையில்
அதற்கு வேறு விதமாக விளக்கம் கொடுத்தார்

ஆடியில் கருத்தரிக்கிற பெண்ணுக்கு சித்திரையில்
குழந்தை பிறந்தால் அது மேஷ ராசியில்
பிறந்ததாக இருக்கும்

மேஷம் செவ்வாயின் ஆட்சி வீடு
அது சூரியனுக்கு உச்சவீடு
எனவே அந்த ராசியில் பிறப்பவன் நிச்சயம்
வீரமானவனாகவும் தலைமைப் பொறுப்பேற்பவனாகவும்
இருப்பான்,அதிலும் அதிகாலையில்  பிறந்து
லக்னமும் அதுவாக அடையப்பெற்ற்றவனாயின்
அவனுக்கு அரசனாகும் யோகம் கூட உண்டு

தேவையில்லாமல் அதற்கு எதற்கு சந்தர்ப்பம்
அளிக்கவேண்டும் என்பதற்காகவே
 மன்னர்களின் காலத்தில்
ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படி தம்பதிகளைப்
பிரித்துவைத்தலை ஒரு சடங்காக சம்பிரதாயமாக
ஆக்கி நாமும் காரணம் தெரியாமல் அதைத் தொடர்ந்து
கொண்டிருக்கிறோம் என்றார்

ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ எனத்
தோன்றுகிறது எனக்கு

உங்களுக்கு ?

Saturday, July 20, 2024

வாழ்கிறோமா..இருக்கிறோமா ?

  வாழுகிறோமா❓ இருக்கிறோமா❓


இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும்


கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்தது


நண்பர்களோடு எதையும் எதிர்பாராமல் தூய நட்பாய் பழகினோம்


ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு

ஒரு வாரம் தவம் கிடந்தோம்

அந்த காலம் தான் நன்றாக இருந்தது..


ஆரத்தி எடுக்க போட்டி போட்ட மதினிமார்கள் இருந்தார்கள்..


தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள்..


ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட பங்காளிகள் இருந்தார்கள்..


இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு வரை போனார்கள்..


அடுத்தடுத்து பெண்களுக்கு திருமணம் செய்தும்


மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்கு பெண்கள்


வந்தாலும் அம்மாக்கள் ஓய்வின்றி உழைத்தார்கள்


ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும் அப்பாவிற்கு மன அழுத்தங்கள் இல்லை..


ஒரே சோப்பை குடும்பம் முழுதும் உபயோகித்தும் தோல் நோய்கள் வரவில்லை..


கண்டதை உண்டாலும் செரித்தது.


தொலைக்காட்சி செய்திகளில் உண்மை இருந்தது..


பண்டிகை க்கு ஒரு மாதம் முன்பே ஆர்வமுடன் தயாரானோம்


உடுத்த புதுத்துணி கையில் தரும் போது ஆஸ்கார் விருது வாங்கும் கலைஞன் போல் உணர்ந்தோம்


ஃபேன் இல்லாமல் உறக்கம்.வந்தது..


எங்கோ ஏதோ ஒரு மூலையில் மருத்துவமனையும் ஹோட்டலும். இருந்தது..


வெயிலாலும் மழையாலும் பாதிப்பு இல்லை..


பிள்ளைப்பேறு செலவில்லாமல் சுகமாய் இருந்தது..


கல்வி கட்டணம் இல்லாமல் கிடைத்தது..


மாணவர்கள் ஆசிரியரிடம் அன்பாய் பணிவாய் இருந்தார்கள்..


ஆசிரியைகளிடம்.

எளிமை இருந்தது.. 


படுக்கையை எதிர்பாராமல் பாயில்

உறங்கினோம்


தாத்தா பாட்டி சொல்லும் கதை கேட்டுகொண்டே 

அவர்கள் மடி மீது தலை வைத்து

 நாம் உறங்கிய தருணம் கண்டோம்


பெரியப்பா சித்தப்பா உரிமையோடு அடித்தார்கள் நம் தப்பை சரி செய்ய


பெரிவர்களின் உடையைப் போட தயங்கியதில்லை..


அப்பா சொன்னால் அந்த வார்த்தை மறுக்காமல் ஏற்கப்பட்டது..


பெண் பார்க்க வந்தவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கப்பட்டோம்...


காவிரிக் கரையில் பயமின்றி குளித்தோம் ஆற்று நீர் சுத்தமாய் இருந்தது..


பையில் இருக்கும் ஐந்து ரூபாய் க்கு அளவில்லா ஆனந்தம் கொண்டோம்


ஹோட்டலில் தாத்தா ஆசையோடு வாங்கி தரும் பூரி மசாலா க்கு எல்லையில்லாத மகிழ்ச்சி கண்டோம்


செல்போன் எதுவும் இல்லை

ஆனாலும் பேசிய நேரத்தில் வந்து சேர்ந்தனர் நண்பர்கள்


ஆசிரியர் மீது அசாத்திய மரியாதை இருந்தது


தாவணியில் தேவதைகளாக இளம் பெண்கள்


காதுகளை ரணமாக்காத இனிய பாடல் இசை கேட்டோம்


ஒரே குச்சி ஐஸ் வாங்கி எந்த சங்கோஜமும் இல்லாமல் நண்பர்கள்  சுவைத்தோம்


ஆண்கள் தான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள்..


மிகச்சிறிய வயதில் எல்லாம் பால் பேதங்கள் தோன்றவில்லை..


மொத்தத்தில் அப்போது வாழ்ந்தோம் இப்பொழுது இருக்கிறோம் அவ்வளவே...


ஆமாம் தானே❓❓❓


(வாட்ஸ் அப் உபயம் )

#(ப.பி)