Wednesday, September 30, 2015

ஆலையில்லா ஊரில்...

அவசரத்தில் போகிற போக்கில்
எதிர்படும் நண்பனை
விசாரித்துப்போகும் "மினிச் சுகத்தை "
"டுவீட்டுகளிலும்

அவசியமாக தவிர்க்க முடியாது
காத்திருக்கும் தருணங்களில்
சந்தித்த நண்பனுடன்
உரையாடும் "தனிச் சுகத்தை "
"முக நூலிலும் "

விடுமுறை நாட்களில்
ஊர்க்கோடி பாலத்தில் அமர்ந்து
சாவகாசமாகப் பேசும் "அற்புதச் சுகத்தை"
"பதிவுப் பக்கங்களிலும் "

அனுபவித்தபடி என்னை நான்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்

என்ன செய்வது
கடமைச் சுமை அழுத்த
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக்  காட்டுக்குள் வசிப்பவன்
முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர் விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும்
குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில்
கண்டு  தானே
" மெய்மறக்க  " முடியும் ?

Monday, September 28, 2015

மண் சட்டியில் ஃப்ளுடா

" குறிப்பிட்டுச் சொல்லும்படியாக
உன் படைப்புகளில் ஏதும் இல்லை

ஆனாலும் ஏதோ இருப்பது போல
பாவனை காட்டி மயக்குகிறது

அது எப்படி ?  "என்றேன்
எனைக் கவர்ந்த கவிஞனிடம்

"அது பெரிய விஷயமே இல்லை
யாரிடமும் சொல்லாவிட்டால்
உனக்கும் அந்த சூட்சுமம் சொல்கிறேன்"என்றான்
சத்தியம் வாங்காத குறையாய்

எதற்கும் ஆகட்டும் என
தலையாட்டி வைக்க அவனே தொடர்ந்தான்

"எதனை எழுதத் துவங்கும் முன்பும்
அறிஞர் சபையில்
அரங்கேற்றப்படும் கவிதைக்குரிய
கரு தேடி மெனக் கெடுகிறேன்

கரு கிடைத்ததும்
பாமரன் சபையில்
அரங்கேற்றப்படும் கவிதைக்குரிய
எளிய சொற்களால் பகிர்கிறேன்
அவ்வளவே" என்றான்

நான் குழம்பி நின்றேன்
அவனே தொடர்ந்தான்

"சில சமயம்
எதை எழுதத் துவங்கும் முன்பும்
பாமரர் முன் அரங்கேற்றப்படும்
கவிதைக்குரிய கரு தேடி மெனக்கெடுகிறேன்

அது கிடைத்ததும்
அறிஞர் சபையில் அரங்கேற்றப்படும்
கவிதைக்குரிய கனத்த சொற்களை அடுக்கி
படைப்பாக்கிக் கொடுக்கிறேன்

மொத்தத்தில்
மண் சட்டியில் ஃபளூடாவையும்
வெள்ளிக் கிண்ணத்தில் கூழையும்.."
எனச் சொல்லிக் கண் சிமிட்டுகிறான்

கண் சிமிட்டலுக்கான அர்த்தம் புரியவில்லை
குழப்பம் எனக்குள் கூடித்தான் போகிறது

அவன் படைப்புகளை மீண்டும் படித்துத்தான்
தெளிவு கொள்ள வேண்டும்

Sunday, September 27, 2015

பயிற்சியும் வளர்ச்சியும்

எந்த ஒரு ஸ்தாபனமோ, அமைப்போ ,தொடர்ந்து
தேங்குதல் இன்றி தொடர் வளர்ச்சி பெற
வேண்டுமாயின்அதன் உறுப்பினர்களுக்கு
தலைவர்கள் மூலமும்,தலைவர்களுக்கு
சிறந்த பயிறுனர்களைக் கொண்டும்
அவரவர்கள் நிலைகளுக்குத் தக்கவாறு தொடர்
பயிற்சிகள் அளித்தவண்ணம் இருக்கவேண்டும்

அந்த வகையில் எங்கள் 324  பி3 அரிமா மாவட்ட
(மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ரெவென்யூ
மாவட்டங்கள் உள்ளடக்கிய )
ஆளுநர் எம்.ராமசுப்பு பி எம் ஜே ஃப்அவர்கள்
இந்தவருடம் தேர்வு செய்யப்பட்ட சங்கத்
தலைவர் செயலாளர்பொருளாளர்களுக்கு
இந்தியாவின் சிறந்த தலைமைப் பண்புப்
பயிற்றுநர்களை கொண்டு,
மண்டலத் தலைவர் ,வட்டாரத் தலைவர்
அவர்களின் ஒத்துழைப்புடன் அருமையான ஒரு
தலைமைப் பண்புப் பயிற்சிப்பட்டறைக்கு
ஏற்பாடு செய்திருந்தார்கள்

காலை துவங்கி முன்னிரவு வரை மிகச் சிறப்பாக
நடைபெற்ற அந்தப் பயிற்சிப்பட்டறையில் எனது
பொறுப்பில் இருக்கும் சங்கத் தலைவர்கள்
பயன்படும்படியாக அவர்கள் அனைவரையும்
கலந்து கொள்ளச் செய்துபயன்பெறச் செய்தமைக்காக
வட்டாரத் தலைவர் என்கிற முறையில் நானும்
ஆளுநரால் கௌரவிக்கப்ப்ட்டேன்

அந்த புகைப்படங்களில் சிலவற்றை பகிர்வதில்
பெரும் மகிழ்வு கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்...

Saturday, September 26, 2015

புதுகைப்பதிவர் திருவிழா ( 9 )) கால இயந்திரத்தின் தயவில் ( 3 )

நான் பதிவர் திரு விழாவுக்கு வருகிற
போதெல்லாம்நமது பதிவர்களின் நூல்களை
வாங்குவதற்கென்றேஒரு தொகையை
ஒதுக்கி வருவேன்

இம்முறை வெளியிடப்படுகிற நூல்கள் அல்லாது
பதிவுலகப் பிதாமகரின் சிறுகதைத் தொகுதிகளும்
கீத மஞ்சரி , கவிஞர் ரூபன் ,
வாத்தியாரின் ஜோதிட நூல்அவசியம் அனைவரின்
வீட்டுலும் இருக்கவேண்டிய  டாலர் தேசம் ,
தென்றல் சசிகலாவின் கவிதைகள்
புலவர் ராமானுஜம் அவர்களின் கவிதை நூல்
மற்றும் பல பதிவர்களின் புத்தகம் இருந்தது
 மகிழ்வளித்தது

கூடுமானவரையில் அனைத்துப் பதிவர்களின்
நூலிலும்ஒவ்வொன்றை வாங்கிக் கொண்டு
அந்த பிரமாண்டமானஅரங்கினுள் நுழைந்தேன்

அரங்கினுள் நுழைந்ததுமே அந்த
மேடை அமைப்பும்மேடையின் பின்புறம்
அமைக்கப்பட்டிருந்த
நமது லோகோ தாங்கிய ஃபிளக்ஸும்
ஒரு பிரமாண்டமான நிகழ்வுக்குத் தான்
வந்திருக்கிறோம் என்கிற உணர்வினை
உறுதி செய்தன

மேடை ஒலி வாங்கியின் முன் அழகாக
தொங்கவிடப்பட்டிருந்த போடியம்
பேனர் அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது

ஒலிம்பிக் கொடியை எப்படி அடுத்து
எந்த நாட்டில் நடக்கப் போகிறதோ
அந்த நாட்டினரிடம் ஒப்படைத்தல் போல்
இந்த பேனரையும்அடுத்து பதிவர் சந்திப்பு
நடக்க இருக்கிற மாவட்டத்துக்காரரிடம்
ஒப்படைக்க இருப்பதாக அறிந்து மகிழ்வுற்றேன்

நான் ஏற்கெனவே வந்து அமர்ந்திருந்த
நான அறிந்தபதிவர்கள் அனைவரிடமும்
உரையாடிவிட்டு( வயதுக்கு ஏற்றார்ப்போல)
அரங்கின் முன் வரிசையில்அமர்ந்திருந்த
மூத்த பதிவர்களுடன் அமர்ந்து கொண்டேன்

பதிவர்கள் சந்திப்பின் நிர்வாகக் குழு
உறுப்பினர்களுடன் முத்து நிலவன் ஐயா அவர்கள்
மேடைக்கு முக்கியஸ்தர்களை
அழைக்கத் துவங்க விழா அற்புதமாய்த்  துவங்கியது

( தொடரும் )

Friday, September 25, 2015

புதுகைப் பதிவர் திருவிழா ( 8 ) கால இயந்திர தயவில் ( 2 )

சிற்றுண்டிச் சாலை மிக விஸ்தாரமாக
குறைந்த பட்சம்300 பேர் தாராளமாக அமர்ந்து
உணவருந்துப் படியாக சிறப்பாக இருந்தது

காலைச் சிற்றுண்டியை பஃபே முறையில்
 உண்ணும்படியாகஏற்பாடு செய்திருந்தார்கள்.
இது போன்ற நிகழ்வுகளில் பிறருடனானத்
தொடர்புக்குஇந்த பஃபே முறைதானே  சிறந்தது

ஏனெனில் நிகழ்ச்சித் துவங்கிவிட்டால் அனைவரும்
 தம்ஒட்டு மொத்த கவனத்தை அதில்தானே
செலுத்த இயலும்

இடையில் இருப்பது மதிய உணவு நேரம்.
அது எப்படியும்வாழை இலை போட்டு நம்
பாரம்பரிய முறையில் இருந்தால்தானே
சிறப்பாக இருக்கச் சாத்தியம்.

அப்போது ஒருவரை ஒருவர்சந்தித்துப் பேச
சாத்தியம் இல்லை எனவே இந்த ஏற்பாடு
எனக்கு மிகவும் பிடித்திருந்தது

காலை உணவுக்கு எப்படியும் 150 பேருக்குக்
குறையாமல் இருப்பார்கள்.அவர்கள் ஒரே வரிசையில்
இருந்து உணவு பெற வேண்டுமானால தேவையற்ற
தாமதம்  ஏற்படுத்தும் என்ற நோக்கில் இருபக்கமும்
உணவு தரும்படி ஏற்பாடு செய்திருந்தது
சிறப்பாக இருந்தது

குறிப்பிட்ட உணவை அளவு அதிகம்
உண்ணும்படியாகச் செய்யாமல் பல வகைப்பட்ட
 உணவை அளவு குறைவாக இரசித்து உண்ணும்படியான
நோக்கில் ஆறு ஐயிட்டங்களாக வைத்திருந்தார்கள்.
இனிப்பு மற்றும் காரப் பணியாரம்
இட்டிலி பொங்கல் வடை பூரி என வைத்திருந்தது
வசதியாக இருந்தது.

அவரவர்களுக்குத் தேவையானதை
 பிடித்ததை கூடுதலாகப் பெற்றுக் கொள்ளவும்
பிடிக்காததை தவிர்க்கவும்
இந்த ஏற்பாடு வசதியாக இருந்தது

தண்ணீர் பாட்டிலை வைக்காது ஹாலின்
 மையப் பகுதியில் சில்வர் டம்ளர்களில் ஒருவர்
நீர் நிரப்பியபடி இருந்தார்

ஹாலின் ஒவ்வொரு மூலையிலும் குடி நீர்
பிடித்துக்குடிக்கும்படியாக ஏற்பாடுகளையும்
செய்திருந்தார்கள்

அதைப் போல சிற்றுண்டி பெருவதற்காக
ஒரு புறம்100 எவர்சில்வர் தட்டும் மறுபுறம்
100 பாக்குத் தட்டும் பேப்பர் போட்டு அழகாக
அடுக்கி வைத்திருந்தார்கள்

இரண்டு வகையாக எதற்கு  ?
தண்ணிர் பாட்டில் வைக்காது
 சில்வர் டம்ளர் எதற்கு " என்றேன்

பிளாஸ்டிக் தட்டு மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்
உபயோகித்துநாமே பிளாஸ்டிக் கழிவுகளை
உண்டாக்கவேண்டாம என்கிற நோக்கத் தோடும்,
விழா நிகழ்வு முடிந்ததும் சில்வர் ஜக்
டம்ப்ளர் மற்றும் சில்வர் தட்டுகளை ஏதாவது
 ஒரு ஆதரவற்றோர்இல்லத்திற்கு அளித்து விடலாமே ."
என்றார்கள்

அவர்கள் சொல்வதும் மிகச் சரியாகத்தான் இருந்தது
இரண்டு வேளை தண்ணீர்  பாட்டில் செலவும் டம்ளர்
விலையும் ஒன்றாகத்தான் வரும்.தண்ணீர் மட்டும்
வாங்க வேண்டி இருக்கும்.அவ்வளவுதானே

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பல வகைகளில்
மாற்றி யோசித்துச் செய்யும் புதுகைப் பதிவர்களை
நினைக்க நினைக்க மனம் மிகப் பூரிப்படைத்தது

அத்துடன் அருமையான சிற்றுண்டி
கொடுத்த திருப்தியிலும் மெல்ல முன்  அரங்கில்
வைத்திருந்த புத்தக ஸ்டாலை நோக்கி
என்  நடையைக் கட்டினேன்


(தொடரும் )

Thursday, September 24, 2015

புதுகை பதிவர் திருவிழா ( 7 ) கால இயந்திர தயவில்

சனிக்கிழமை காலையிலேயே கிளம்புதலே
சரியாக இருக்கும்எனக் கருதி இரண்டு நாட்களுக்குள்ள
ஏற்பாடுகளோடுநான் மாலை புதுகை வந்து சேர்ந்தேன்

ஏற்கெனவே பதிவில் விழா நடக்கும் இடத்திற்கான
வழியினைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததால்
இடத்தைக் கண்டுபிடிப்பது அத்தனை சிரமாக இல்லை

உள்ளே மண்டபத்தில் புதுகை விழாக் குழுவினர்
அனைவரும்பம்பரமாக சுழன்றுப் பணியாற்றிக்
கொண்டிருந்தபோதிலும்முக மலர்ச்சியோடு
என்னை அன்புடன் வரவேற்பதில்
குறைவைக்கவில்லை

சென்னை  கோவை மற்றும் திருச்சிப் பதிவர்கள்
பெரும்பாலானவர்கள்முன்னமே வந்திருந்ததும்
உடன் விழாக் குழுவினருடன் இணைந்து
பணியாற்றிக் கொண்டிருந்தது ரம்மியமான
காட்சியாக இருந்தது

சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிக்
கொண்டிருந்துவிட்டுஅவர்கள் இரவு தங்குவதற்கு
ஏற்பாடு செய்திருந்த இடத்தில்
நன்றாக ஓய்வெடுத்தேன்

காலையில் மிகச் சரியாக எட்டு மணிக்கெல்லாம்
 விழா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தேன்.
பொய்கையில் பூத்திருக்கும் தாமரைபோல
 அல்லிபோலவிழாக் குழுவினர் ஒத்த உடையில்
இருந்ததுஅவர்களை வெளியூர் பதிவர்கள்
குழப்பமின்றித் தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது

மண்டபத்தின் முன்புறம் பதிவுக்கான ஏற்பாடுகளை
மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

இதற்கு முந்தைய சந்திப்பில்
செய்திருந்ததைப் போல ஒட்டு மொத்தமாக இல்லாது
ஐந்து மாவட்டங்களுக்கு ஒருவர் எனத் தனித் தனியாக
பதிவுக்கு ஏற்பாடு செய்திருந்ததும்,
அதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கென தனித் தனியாக
பக்கம் ஒதுக்கி பதிவு செய்ததும் மிகச் சிறப்பாக இருந்தது

அதற்கான காரணம் கேட்டபோது
இதன் மூலம் சட்டென ஒவ்வொரு மாவட்டத்திலும்
எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என அறியவும்
மேடையில் விடுதல் இன்றி அறிமுகப் படுத்தவும்
வசதியாக இருக்கும் என்றார்கள்

இப்படி ஒவ்வொரு விசயத்திலும் வித்தியாசமாகவும்
அருமையாகவும்அவர்கள் செய்திருக்கிற ஏற்பாடுகள்
என்னை மலைக்க வைத்தது

அவர்களிடம் எனக்கான அருமையான அடையாள
அட்டையைப் பெற்றுக்கொண்டு சிற்றுண்டிச்
சாலை நோக்கி நடக்கத் துவங்கினேன்

தொடரும்---

Wednesday, September 23, 2015

புதுகை பதிவர் சந்திப்பு, ( 6 )

தாமரைப் பூத்த தடாகம்
பார்க்கையில் கொள்ளை அழகுதான்
ஆயினும் அது தேக்கிவைத்திருக்கும் குளுமை
அதனினும் மிக அருமையானது
அது பார்வைக்குப் பிடிபடாதது
அந்தச்  சொல்லுக்கு அடங்கா இனிமை
குளத்தினுள்  இறங்கிடத் துணிபவருக்குமட்டுமே
நிறைவாய் கிடைத்திடச்  சாத்தியம்

தத்தித் தவழும் குழந்தை
பார்க்கப் பார்க்க  அழகுதான்
ஆயினும் அது தன்னுள் கொண்டிருக்கும்
தெய்வீக மகிழ்வுப் பிரவாகம்
பார்வைக்குப் பிடிபடாதது
அதன் அருமை பெருமை
அதனை அள்ளிக் கொஞ்சத் தெரிந்தவர்கள் மட்டுமே
முழுதாய் அனுபவத்தறியச் சாத்தியம்

சன்னதிக்குள் காட்சிதரும் தெய்வம்
கண்கொள்ளா அருமைக் காட்சிதான்
அதனினும் அதன் அளவிடமுடியா அருட்திறம்
அறிவிற்குப் பிடிபடாததது
நிரூபிக்க இயலாதது
ஆயினும் அதன் அருளும் சக்தி
மாசற்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே
அறிந்து உணர்ந்து பெறச் சாத்தியம்

பதிவர்களின்  பரந்துபட்ட திறத்தினை
பொது நல நோக்கப்    பண்பினை
எழுத்தில்  காணுதல் மகிழ்வுதான்
அதனினும் அவர்தம் பண்பு நலம்
நட்புக்கென உயிர்தரும் உயர்குணம்
பதிவில் அறிய முடியாததே
விளக்கியும் புரிய முடியாததே
ஆயினும் அவர்தம் அருமை பெருமைதனை
சந்திப்பில் சந்தித்து  மகிழ்ந்திருப்போர் மட்டுமே
தெளிவாய்  முழுதாய் புரியச் சாத்தியம்

எனவே
பதிவர் அனைவரும் அவசியம் வருவீர்
சந்திப்பின் சக்தியை முழுதாய் உணர்வீர்

Tuesday, September 22, 2015

யானையைச் சாப்பிட ----பதிவர் சந்திப்பு ( 5 )

தோட்டத்தில் பாதி கிணறாய் இருந்தால்
வெள்ளாமை வெளங்கின மாதிரிதான் "
என கிராமங்களில் ஒரு
சொலவடை உண்டு

அதைப் போலவே  எந்த ஒரு பொது நிகழ்வுக்கும்
பங்கேற்பாளர்களை விட கலந்துகொள்வபவர்களின்
கூட்டம்அதிகம் இருக்குமானாலும்
(அரசியல்  மற்றும் திருவிழா நீங்கலாக  இதுபோன்ற
சமூக மேம்பாட்டு நோக்கமுள்ள நிகழ்வுகளுக்கு )
 அந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைவதுநிச்சயம் கடினமே

அந்த வகையில் நான் எப்படியும் மாதம்
இரண்டு கூட்டங்கள் நடத்த வேண்டியிருக்கும்

அதற்கென சமூக மேம்பாட்டு நோக்கம் உள்ளோரின்
ஒரு நெடும் பட்டியலிட்டு அதில் கொடுத்தவரிடம்
தொடர்ந்து போகாது மாறி மாறி இருவர் மூவர்
எனத் தொகைஅதிகமாகிவிடாதபடி பகிர்ந்து
வாங்கித் தான் நடத்திக் கொண்டுள்ளேன்

யானையை முழுதாக முழுங்குவது
அரக்கனாயினும் கஷ்டமே
பிய்த்து கொஞ்சம் கொஞ்சமாக எனில்
ஒரு சிறுவன் கூட யானையைத் தின்று விட முடியும்

அந்த வகையில் நமது பதிவர் சந்திப்பிற்கு
புதுக்கோட்டையில்  குறைந்த பட்சம்
பத்துப் புரவலர்கள்

ஆர்வமுள்ள பதிவர்கள் அதிகம்
உள்ள மாவட்டங்களில்குறைந்த பட்சம்
மூன்று புரவலர்கள்

அயல் நாட்டுப்பதிவர்கள் குறைந்தப்
பட்சம் ஐந்து பேர்

எனப் பிரித்து முயன்றோமானால் முப்பது
 புரவலர்கள் கிடைத்துவிட வாய்ப்புண்டு
என்பது எனது கருத்து

என்னைப் பொருத்தவரை நான் என்னை
ஒரு  புரவலராகஇணைத்துக் கொண்டதோடு

அயல் நாட்டிலிருந்து புரவலராகத்  தங்கள்
பங்களிப்பைத் தருமாறு மூவருக்கும்

இந்தியாவில் இருவருக்கும்
வேண்டு கோள் விடுத்துள்ளேன்

இப்படி ஒவ்வொருவரும் பொறுப்பேற்றுக்
கொண்டால்நிச்சயமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
நிதி திரட்டுவதில் மட்டும் அதிகக் கவனம் செலுத்தாது
 பிற நிகழ்வுகளில்கவனம் செலுத்த இயலும்
என்பது எனது கணிப்பு

தங்கள் கருத்தை எதிர்பார்த்து....

Monday, September 21, 2015

ஆய்வின் அவசியம்...

ஆய்வின் அவசியம்...

எந்த அமைப்பும் நிர்வாக ரீதியாக 
ஒரு குறிப்பிட்ட கால அளவில் தன்னை 
ஆய்வு செய்து
கொள்ளவில்லையெனில் அமைப்பிலும் 
செயல்பாடுகளிலும்
தொய்வு ஏற்படுதல் இயல்பே

அதன் காரணமாகவே உலகளாவிய நமது அரிமா
அமைப்பிலும் காலாண்டுக்கு ஒருமுறை ஒரு
வட்டாரத் தலைவர் தன் பொறுப்பில் உள்ள
சங்கங்களின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும்
சேவைகள் குறித்து ஆய்வுக் கூட்டங்கள் 
நடத்த வேண்டும்
என நிர்ணயம் செய்துள்ளார்கள்

அந்த வகையில் எனது பொறுப்பில் இருக்கும் ஐந்து
சங்கங்களின் நிர்வாகஸ்தர்களை அழைத்து ஒரு
வட்டாரக் கூட்டத்தை நடத்தி முடித்தேன்

அந்த கூட்டத்தில் செய்து முடித்த சேவைகளை 
செயலாளரும்
இனி வரும் காலங்களில் செய்ய இருக்கிற சேவைகளை
தலைவரும் 
விளக்கிப் பேசினார்கள்

அந்த வகையில் செய்த சேவைகளை 
பாராட்டும் விதமாகவும்
செய்ய இருக்கிற சேவைகளை 
நினைவூட்டும் விதமாகவும்
அந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது

அந்த  நிகழ்வின் சில காட்சிகள் 
தங்கள் பார்வைக்காகவும்

கருத்துரைக்காகவும் 

Sunday, September 20, 2015

இளைஞர் படை

எந்த ஒரு இயக்கமாயினும் 
அது மிகச் சிறந்த ஆற்றல் மிக்க தொடர்ந்து 
செயல்படுகிற இயக்கமாக
மாறவேண்டும் எனில் அதில் அனுபவமிக்க பெரியோர்களின்
வழிகாட்டுதலும் துடிப்புமிக்க இளைஞர்களின் பங்களிப்பும்
நிச்சயம் தேவை

அந்த வகையில் நான் சார்ந்திருக்கிற 
அரிமா இயக்கத்திலும்
இளைஞர்களை பங்கேற்கச் செய்யும் விதமாக
ஒரு துணை அமைப்பாக லியோ என்கிற அமைப்பை
வைத்திருக்கிறார்கள்

மதுரையில் மிகவும் மோசமான பகுதியாக 
இருந்த எங்கள்
பகுதியை சரிசெய்யும் விதமாக ஓராண்டுக்கு முன்பாக
குடியிருப்போர் நலச் சங்கம் ஒன்றை உருவாக்கி 
பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக  அறுபது
கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி அதனை
காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் 
பராமரித்து வருகிறோம்

கொலை கொள்ளை திருட்டுக்குப் பேர் போன 
எங்கள் பகுதி
தற்சமயம் அவைகளில் இருந்து முற்றிலும் 
பாதுகாக்கப் பட்டப்
பகுதியாக மாறி இருக்கிறது

தொடர்ந்து குடியிருப்பதற்கு உகந்த பகுதியாக 
மாற்றும் விதமாக
தொடந்து சேவை செய்யும் ஒரு அமைப்பும் 
தேவை என்கிற
நோக்கில் இப்பகுதியில் ஒரு அரிமா
 சங்கத்தைத் துவக்கி
கருவேல முட்செடிகளை அகற்றுதல்,
மரக்கன்று நட்டுப் பராமரித்தல்
முதலான வேலைகளைச் செய்தும் வருகிறோம்

அதன் தொடர்ச்சியாக சுற்றுச் சூழலைப்
 பாதுகாக்கும்படியாக
பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற பகுதியாக 
மாற்றும் விதமாக
அது குறித்தே சிந்தித்துச் செயல்படும் 
ஒரு அமைப்பு இருந்தால்
நல்லது அதுவும் இளைஞர் அமைப்பாக 
இருந்தால் நல்லது
என்கிற நோக்கில் புதிய லியோ சங்கம் 
ஒன்றை கல்லூரி
 மாணவர்களைக் கொண்டு 
வினாயகர் சதுர்த்தி அன்று
வட்டாரத் தலைவர் என்கிற 
முறையில் ஆரம்பித்து
அவர்களுக்கு ஒரு அறிமுக வகுப்பை 
நடத்தி முடித்தேன்

மிக்க மகிழ்வாய் இருக்கிறது.
அந்த நிகழ்வின் சில 
புகைப்படங்களை 
இத்துடன் பகிர்ந்து கொள்வதில்மிக்க மகிழ்ச்சி 
 

Thursday, September 17, 2015

புதுகை பதிவர் சந்திப்பு ( 4 )

 தொடர்ந்து மூன்று பதிவர் சந்திப்பிலும்
கலந்து கொண்டவன் என்கிற  முறையிலும்
சமூக இயக்கங்களில் தொடர்ந்து  பொறுப்பு
வகித்து  வருபவன் என்கிற முறையிலும்
மனம் திறந்து  வெளிப்படையாக  சில விஷயங்களைப்
பகிர்தல் நம் பதிவர் சந்திப்பு   மிகச் சிறப்பாக  நடைபெற
உதவும் என நினைத்து இதை  எழுதுகிறேன்

உண்ணாவிரதப் போராட்டம் என்றாலும்  கூட
மேடை அமைப்பு, விளம்பரம் , ஒலிபெருக்கி அமைப்பு
என செலவுக்கு அதிகப் பணம் வேண்டும் என்கிற
இன்றையச் சூழலில் ஒரு பதிவர் சந்திப்புக்கு
நிச்சயம் அதிகம் செலவாகும் என்பது
நாம் அனைவரும் அறிந்ததே

என்னுடைய அனுமானத்தில் சென்னை மதுரையை விட
புதுகை ,மாநிலத்தின் மையப் பகுதியாக இருப்பதாலும்
ஆரம்பம் முதலே  மிக முறையாகவும் தெளிவாகவும்
அனைவரின் கருத்துக்கும்  மதிப்பளித்தும்  ஐயா
முத்து நிலவன் அவர்கள்  தலைமையில்  புதுவைப்
பதிவர்கள் சந்திப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதால்
இந்தப் பதிவர் சந்திப்புக்கு   அதிக எண்ணிக்கையில்
பதிவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்
என நினைக்கிறேன்

அந்த வகையில்  குறைந்த பட்சம் 200 பதிவர்களாவது
கலந்து கொள்வார்கள் என மதிப்பிடுகிறேன்

அந்த பதிவர்களுக்கு நல்ல  முறையில்  காலைச் சிற்றுண்டி
மதிய உணவு இடையில்  இரு ஹை டீ என மட்டும் ஏற்பாடு
செய்தாலே 70 ஆயிரம் வரை உத்தேசமாக ஆகிவிடும்
(100+ 25+ 25 +200 =350 )

இது நீங்கlலாக மேடை  , அடையாள அட்டை
பதிவர்கள்  கைடுஎன இன்ன பிற விஷயங்களுக்கு
குறைந்த பட்சம் 75 ஆயிரம் ஆகிவிடும் .

என்வே குறைந்த பட்சம் 2 இலட்சம்
இலக்காக வைத்து   நிதி திரட்டினால்  ஒழிய
பதிவர் சந்திப்பை சிறப்பாக நடத்தி முடிக்கச்
சாத்தியமில்லை  என்பது  எண்ணம்

இந்த வகையில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாயை
புரவலர்களிடம் இருந்தும்
நன்கொடையாளர்களிடம் இருந்தும்
பதிவுக் கட்டணமாகவும் பிரித்துப் பெற்றால் தான்
போதிய நிதி இலக்கைத் தொட முடியும் என்பது
 என் கருத்து

பதிவர்களில் புரவலர்களெனத் தரத்தக்கவர்களிடம்
இருந்து  5000/

நன் கொடைத் தர மனமுள்ளவர்களிடம் இருந்து
2000 /1000 எனவும்

மற்றவர்களிடம் இருந்து
கட்டணமாக 500 உம் பெற முயற்சிக்கலாம் என்பது
என் எண்ணம்

500 கட்டணம் கட்டாயமில்லை கொடுத்தால்
ஏற்றுக் கொள்ளப்படும்  என அறிவிக்கலாம்
  
( நாம்  நிச்சயம்  கலந்து கொள்ளும் அனைவருக்கும்
ரூபாய் 500 அளவில் செலவழிக்க வேண்டியிருக்கும் )

இது எனது அபிப்பிராயம்  அவ்வளவே

இது சரியாயிருக்கும் என பெருவாரியோர்
முடிவெடுக்கும் பட்சத்தில் நானும் என்னை
ஒரு புரவலாக    இணைந்து கொள்ளச் சம்மதிக்கிறேன்
என இதன் முலம் தெரிவித்துக் கொள்கிறேன்

அனைவரின் கருத்தை   எதிர்பார்த்து ---

Wednesday, September 16, 2015

கணபதி திருவடி


கணபதி திருவடி
அனுதினம் அடிபணி
துயரது தொலைந்திடும் -இனி
இன்பமே எனஅறி

கஜமுகன் திருமுகம்
கண்டுகளி தினமினி
நிஜமென மருவிடும்-தினம் 
தொடர்ந்திடும் கனவினி

பரமனின் முதல்மகன்
அடியினை உடன்பணி
பயமது அடங்கிடும்-உடன்
பெருகிடும் ஜெயமினி

உமையவள் திருமகன்
புகழ்மொழி தினம்படி
நிலைபெறும் நிம்மதி-இனி
நிலைத்திடும் என்றறி

சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையினி ஒழிந்திடும் -இனி
நிறைவுதான் எனத்தெளி

Tuesday, September 15, 2015

புதுகைப் பதிவர் திருவிழா ( 3 )

எம் படைப்புகள் எல்லாம்...

ஆற்று நீரை எதிர்த்துப்போகும் எனும்
அதீத  எண்ணம் ஏதும் எங்களில்
நிச்சயம் எவருக்குமில்லை

தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
எரியாது சிரிக்கும் என்கிற
நினைப்பும் எங்களுக்கில்லை

எண்ணையில்லா தீபத்தை
எரியச செய்யவோ

அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ

 எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய்  சக்தியில்லை

சராசரித்  தேவைகளை அடையவே
அன்றாடம்  திணறும் கதைகளை
நியாயமாக  நேர்மையாக வாழ
நாங்கள் படும் அவதிகளை

எமக்குத் தெரிந்த பாமர மொழியில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் கொள்கிறோம்

அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை

மனம் கீறிப்போகும்
சிறுச்  சிறு அல்லல்களை

அதிக மசாலா கலக்காது
பகிர்ந்துண்டு மனப் பசியாறுகிறோம்

எம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில்
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
 "யாது ஊரே யாவரும் கேளீர்  "என
பண்புடன் வாழ முயலும்
 பதிவர்கள்  நாங்களெல்லாம்
விஞ்ஞானம்  ஈன்றெடுத்த
புதிய  இனிய இனமே

எங்கள் கைகளில்தான் இருக்குது
புதியதோர் உலகு செய்யும்
அதீத அசுர  பலமே

Sunday, September 13, 2015

ஸ்டாலினின் முன்நகர்வும் கலைஞரின் கோபமும்

மாணவர் மன்றம் "புதுயுக சிற்பிகள் "என்கிற பெயரில்
திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்திருந்த
கூட்டத்தில் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டதை
கலைஞர் விரும்பவில்லை என்கிற செய்தி
பத்திரிக்கையில்  வந்ததை
அனைவரும் பார்த்திருக்கக் கூடும்

ஏன் விரும்பவில்லை என்பதை பழைய
அரசியல் நிகழ்வுகள் அறிந்தவர்களுக்கு மட்டுமே
புரியக் கூடிய விஷயம்

அண்ணா அவர்கள் மறைந்து புதிய முதல்வரை
தேர்ந்தெடுக்கவேண்டிய சூழலில் சட்டசபைத்
 தலைவராக நெடுஞ்செழியன் அவர்களும்
மதியழகன் அவர்களும் கலைஞர் அவர்களும்
போட்டியிடுகிற சூழல்

அண்ணாவால் தனக்கு அடுத்தவர் என மக்களுக்கு
அறிமுகப்படுத்தப்பட்ட நெடுஞ்செழியன் அவர்களும்
கட்சியில் அதிக ஆதரவுடைய கலைஞர் அவர்களும்
அவருடன் போட்டியிடக்கூடிய  கட்சிச்செல்வாக்குடைய
மதியழகன் அவர்களும் போட்டி என அறிவிக்கப்பட
தமிழகமே அந்த சட்டசபை உறுப்பினர்களின்
கூட்டத்தின் முடிவை ஆவலுடன்
எதிர்பார்த்திருந்த சூழல்

கட்சிச் சம்பந்தம் இல்லாத அனைவரும்
அண்ணாவால் அதிகம் தனக்கு அடுத்தவர்
என்கிற முறையில் அதிகம் குறிப்பாக உணர்த்தப்பட்ட
நெடுஞ்செழியன் அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப் படுவார்
என எதிர்பார்த்திருந்த சூழலில்.....

மூவரும் போட்டியிடுகிற பட்சத்தில் ஓட்டு
பிரிவதன் அடிப்படையில் மதியழகன் கூட
வெல்வதற்குவாய்ப்புள்ளது என சில
கட்சிக்காரர்கள் கற்பனை செய்ய

கூட்டத்தில் போட்டியாளர் என நினைத்துக்
 கொண்டிருந்தமதியழகன் அவர்கள் கலைஞரை
 முன்மொழிய புரட்சித்தலைவர் வழி மொழிய

கலைஞரின் ராஜ தந்திரம் கட்சியில் வென்ற விஷயம்
குறித்து எழுத நிறைய இருக்கிறது

(ஆயினும் கட்டுரைக்கான பிரதான விஷயம்
அது இல்லை என்பதால் அதை இப்போது விட்டுவிடுவோம் )

அவ்வாறு சட்டசபைக் கட்சித் தலைவராக கலைஞர்
அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டாலும் கட்சியில்
செல்வாக்குள்ள தலைவர்களில் ஒருவராக இருந்தாலும்
அண்ணாபோல் எம் ஜீ ஆர் அவர்களைப் போல
கட்சி சாராத பொதுமக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய
தலைவராக இல்லை

எனவே கட்சியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள
கட்சிப் பணிகளில் ஈடுபடமுடியாத சபா நாயகரின்
பதவியில் மதியழகனை நிறுத்தி ஓரம் கட்டி
அடிமட்டத்து கட்சிக்காரர்களிடம் அவ்வளவு நெருக்கம்
இல்லாத நெடுஞ்செழியனை வேறு ஒரு மாதிரியாக
டீல் செய்து கட்சியில் தன்னை முழுமையாக
நிலை நிறுத்திக் கொண்டார்

பொது ஜனமக்களிடம் தன்னை மக்கள் தலைவராக
நிலை நிறுத்திக் கொள்ள பதவியின் மூலம்
தன் சுய விளம்பரத்தை அதிகம் செய்து கொண்டார்

அப்போதுதான்  "நாம் இருவர் நமக்கு இருவர் " என்கிற
குடும்பக் கட்டுப்பாடு போஸ்டர் கலைஞரின்
முகம் போட்டு சமூக நலத் துறையினரால் பட்டி தொட்டி
யெல்லாம் ஒட்டப்பட்டது

அதை விமர்சித்துக் கூட அப்போதைய பழைய
காங்கிரஸ் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம்
"இந்தப் படத்தை ஒரு பெண் படித்தால்
என்ன அர்த்தம் கிடைக்கும் " என ஆபாசமாக
விமர்சித்தப் பேச்சு அப்போது அதிகப் பிரசித்தியம்

அரசின் சாதனைகளை விளக்குவதன் மூலம்
கலைஞரை பிரபலப்படுத்த அப்போது உருவாக்கப்
பட்டதுதான் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள்
( அதன்படி நுழைந்தவர்தான் சசிகலா நடராஜன்
என்பதுவும் கூடுதல் தகவல் )

எப்படி கட்சி தாண்டி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள
வேண்டிய அவசியம் கலைஞருக்கு ஏற்பட்டதோ
அதே நிலை கனிமொழி மற்றும் அழகிரி அவர்களை
மீறி ஸ்டாலின் அவர்கள் தன்னை நிலை
நிறுத்திக் கொள்ளவேண்டிய அவசியம்
இன்று நேர்ந்துள்ளது

அதை மிகச் சரியாக ஸ்டாலின் அவர்கள் செய்கிறார்

அப்படி ஸ்டாலின் தேர்தலுக்குள் தன்னை நிலை
நிறுத்திக் கொள்வாரேயானால் நிச்சயம் கலைஞரால்
தம் இஷ்டம் போல் குடும்ப உறுப்பினர்கள் யாரையும்
கட்சியின் மிக உயர்ந்த பதவிகளில் நியமனம் செய்வது
சாத்தியப்படாது

அதற்கெனவே ஸ்டாலின் அவர்களின் முன்நகர்வை
கலைஞர் அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை
என்பதே என் வாதம்

தங்கள் விமர்சனம் எதிர்பார்த்து ....

வாழ்த்துக்களுடன்.....

Friday, September 11, 2015

ஒரு சந்தேகம்

எனக்கு திடீரென ஒரு சந்தேகம்
முன்பு அந்நியர்கள் நீதிபதியாக இருந்தார்கள்

அவர்களுக்கு வெப்பம் தாங்காது
அதிலும் நம் கோடை வெப்பம் நிச்சயம் தாங்காது

எனவே அந்தக் காலங்களில் குளிர்பிரதேசம் போகவோ
அல்லது குளிரான அவர்கள் தேசம் போகவோ
கோடை விடுமுறையை நீதிமன்றங்களுக்குக்
கொடுத்திருந்தார்கள்.

அதுசரி இப்போது நம் நீதிபதிகள் எல்லாம்
நமமவர்கள் தானே

புழுதியிலும் வெய்யிலிலும் வளர்ந்த குப்பனும்
சுப்பனும் நீதிபதியானபின்
கோடை விடுமுறை எதற்கு ?

அதுவும் லட்சக்கணக்கான வழக்குகள்
தேங்கிக் கிடக்கிற நிலையில் ?

நீதித்துறை சம்பத்தப்பட்டவர்கள் விளக்கினால்
என் போன்ற பாமரனுக்கு
புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் ?

வள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்

Tuesday, September 8, 2015

மத்யமர்

மனித மனங்களில் எல்லாம்
புதர் மண்டிப் போக
நாடும் காடாகிப் போனதால்
ரொட்டிக்கான தொடர் போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

பொறுக்கப் போகிற பாவனை மறைத்து
வேட்டைக்குச் செல்வதுபோல்
முகமெங்கும் புலிவரிகளை
பூசிக் கொண்டாலும் கூட
நிஜப் புலிகளின் நெருக்கத்தில்
மருங்கிய பார்வையை ஏனோ
மறைக்க முடிவதேயில்லை

பாவப்பட்ட  முட்டாள் ஜந்துக்கள்
புலியெனஏமாந்து ஒதுங்குவதில்
கிடைக்கும் சில சௌகரியங்களும்
தொலையும் சில அசௌகரியங்களும்
ஒப்பனையின் அவசியத்தை
உறுதிப்படுத்திப்போனாலும் கூட

ஒவ்வொரு முறை
ஒப்பனையிடும்போதும்
நோவையும் நோயையும்  மறைக்கவென
விலைமகள் போடும்
மாலைவேளை ஒப்பனையை
ஒப்பிட்டு வேதனையுறும்
மனம் மட்டும் ஏனோ
அடுப்படிப் பூனையாய் ஒடுங்கிப போகிறது

ஆனாலும் இன்றைய
ரொட்டிக்கான போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

Sunday, September 6, 2015

ஆசிரியர் தின விழா

அரிமா சங்கத்தின் சார்பாகச் செய்கின்ற
செயல்பாடுகள் எல்லாம் நகரை ஒட்டியே இல்லாமல்
கிராமப் பகுதிகளிலும் இருக்கவேண்டும் என்ற எங்கள்
ஆளுநர் லயன் எஸ் ராம்சுப்பு எம். ஜே ஃப் அவர்களின்
வேண்டுகோளின்படி இம்முறை ஆசிரியர்
தினவிழாவினைவலையப்பட்டி என்னும்
கிராமத்தில் ஜோதி ஆரம்பப்பள்ளியில்
 மிகச் சிறப்பாகக் கொண்டாடினோம்

திருக்குறள் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கியதோடு
பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள்
 புத்தகம் வழங்கி மகிழ்ந்தோம்

பேராசிரியர் டாக்டர் பாரி பரமேஸ்வரன்   மற்றும்
மண்டலத் தலைவர் ஏ. மோஹன் அவர்கள்
மண்டலச் செயலாளர் ஜெயக்கொடி அவர்களும்
சிறப்புரையாற்றி சிறப்புச் செய்தார்கள்

மதுரை பெஸ்ட் அரிமா சங்கத்தின் சார்பாக
அதன்  தலைவர்டாக்டர் சுப்ரமணியன் அவர்களும்

 அரிமா சங்கத்தின் செயலாளர் மற்றும் ..எம் .ஆர்.கே.வி
டிரஸ்டின் பொறுப்பாளர்  என்கிற வகையில்
லயன் ராமதாஸ் அவர்களும் அனைத்து
 ஏற்பாடுகளையும்மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்

அந்த நிகழ்வின் சில புகைப்படங்களை இத்துடன்
இணைத்துள்ளேன்

Tuesday, September 1, 2015

உபதேசம்

அந்தச்  சனிப் பயல்
ஒவ்வொரு முறை கோபப்படும் போதும்
கோபத்தின் விளைவுகள் குறித்து
அவன் நெஞ்சில் பதியும் வண்ணம்
கடுமையாகப் பேசியிருக்கிறேன்

ஒரு சமயம்
அவன் சம்பந்தமே இல்லாமல்
கோபப்பட்டபோது
பொறுத்துக் கொள்ளமுடியாமல்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கிறேன்

நேற்று கூட
ஒன்றுமில்லாத விஷயத்திற்கு
கோபப்பட்டதை
என்னால் தாங்கமுடியாது போக
கன்னத்தில் அறைந்தே விட்டேன்

அப்படியும் அவன் திருந்தியபாடில்லை

இப்போதெல்லாம்
அவன் போக்கை நினைக்கையில்
மனசு படபடக்கிறது
என்னுள் பற்றி எரிவது போல் உள்ளது
உடல் கூட நடுங்கத் துவங்குகிறது

பாழாய்ப் போனவன்
கோபத்தின் அதீத விளைவுகளை
என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறான்
கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை
என்றுதான் புரிந்து தொலைக்கப் போகிறான்