Saturday, December 30, 2023

வளரட்டும் உயரட்டும்‌நிலைக்கட்டும்

  தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே

வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்  
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே (அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.)

Monday, December 25, 2023

வாட்ஸ் அப் மேட்டர் தான் ஆனாலும் .விசயம்‌சூப்பர்

யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு வந்த ஜனாதிபதி அதிரடியாக சில  முடிவுகள் எடுத்தார். 

அதில் ஒன்று, அரசு பெயரில் இருக்கும் மொத்த கடனையும் கணக்கிட்டு, அதை பொதுமக்கள் எல்லோருக்கும் சமமாகப் பிரித்தார்.

ஒவ்வொருவருக்கும்  ஒரு குறிப்பிட்ட தொகை வந்தது.

அதை அரசுக்கு மக்கள்தான் கட்டவேண்டும் என்றதும் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

உங்களை ஆண்ட முந்தைய ஆட்சியாளர்கள், உங்களுக்கு கொடுத்த இலவசங்களாலும் மானியங்களாலும்,  பணம், பிரியாணி மற்றும் சரக்கு போன்ற செலவுகளால்தான்  இந்த கடன்  வந்தது.

இலவசங்களையும்  பணத்தையும் பிரியாணியையும் கை நீட்டி வாங்கி விட்டு  அவர்களுக்கு  ஓட்டு போட்டு  தேர்ந்தெடுத்தது உங்கள் தவறு, நீங்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

அதனால் உங்களால் வாங்கப்பட்ட கடனை நீங்கள்தான் அடைக்க வேண்டும்.

மீறினால், உங்கள் கடன் தொகைக்கு ஏற்ப, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களோ உங்கள் சொத்துக்களோ ஜப்தி செய்யப்படும் என்றார்.

மக்களும் வேறு வழியின்றி கட்டத் தொடங்கினர்.

கட்ட மறுத்தவர்களின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டன.

சில மாதங்களில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு, மீண்டும் தேர்தல்  அறிவிக்கப்பட்டது.

இந்த முறையும் ஒவ்வொரு கட்சியும் இலவச தூண்டில் போட்டு தேர்தல் அறிக்கை தயாரித்து வினியோகித்தது.

இம்முறை மக்கள் எல்லோரும் விழிப்புணர்வு பெற்று, 

எங்கள் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழி செய்யாமல்,

எங்களை,

தன்மானம், சுயமரியாதை என்பதையே உணரவிடாமல் கையேந்த வைத்துக் கொண்டு இருக்க வருகிறாயே என,

செருப்பாலும் விளக்குமாறாலும் அடித்து விரட்டி,

பணம், பிரியாணி, இலவசப்  பொருட்கள் கொடுக்காத,

மக்களுக்கு சேவை செய்வோம் என அறிக்கை கொடுத்த,

கட்சிக்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்து, ஆட்சி செய்ய வைத்தார்கள்.


இப்படி ஒரு கனவு, நேற்றிரவு.

பதறியபடி எழுந்தேன்.

விடிந்ததா என பார்த்தேன்.

இருளாகவே இருந்தது.

விடியவே இல்லை.

எப்போது விடியுமோ என மீண்டும் தூங்க ஆரம்பித்தேன்.


வாக்களிக்கும் முன் சிந்திப்பீர்.. 💪

Sunday, December 24, 2023

காலத்தை வென்றவன்

 


 ஒரறிவு  உயிரினங்கள் முதல்

ஆறறிவு மனிதர்வரை
அனைத்தையும்
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும்
காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விடத்  திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
எங்கள் தங்கமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும்
மர்மயோகியாய்  இருப்பினும்
நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்தி  பெருமிதம் கொள்வோம்

Saturday, December 16, 2023

முரண்பாடும் மனித நேயமும்

 சங்கரராமன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வேலூர் மத்தியச் சிறைக்குக் கைதியாகக் கொண்டு வரப்பட்டு என் முன் நிற்க வைக்கப்பட்டார் ஜெயேந்திரர்.

கண்கள் இரண்டும் உக்கிரத்தில் சிவந்திருந்தன. 

கோபம், வருத்தம், இயலாமை, அவமானம் என உணர்ச்சிகளின் பிழம்பாக தண்டத்தைக் கையிலேந்தி நின்றார். 


கண்களில் கண்ணீர் முட்டியது. அழுதால் அசிங்கமாகி விடும் என்று அதைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்.


இந்து மதத்தின் ஒப்பற்ற தலைவர் ஜெகத்குரு, இப்போது ஒரு சிறைக்கைதி. நான் நின்றுகொண்டு அவரை அமரச் சொன்னேன். அவர் அமரவேயில்லை. ஜனாதிபதியின் இருக்கையில் அமர்ந்தவர், என் முன்னே நின்றுகொண்டே பேசினார்.


இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் அவரைக் கொட்டடியில் அடைக்க வேண்டும். திடீரென அவர் சிறைக்குக் கொண்டுவரப்பட்டதால், அவருக்கு எந்தச் சிறப்பு முன்னேற்பாடும் செய்யவில்லை. அரசியல் கைதிகள் அதிக எண்ணிக்கையில் வரும்போது, அவர்களை அடைப்பதற்காக 20 ஏக்கர் பரப்பளவுள்ள ‘குளோஸ்டு ப்ரிஸன்’ (Closed Prison) தொகுதி இருந்தது. அது, நீண்ட நாள்களாக யாரும் அடைக்கப்படாமல் புதர் மண்டிக்கிடந்தது.


அந்தத் தொகுதியையே அவருக்கு ஒதுக்க முடிவு செய்தேன். ஆயிரம் கைதிகளை உடனே அந்த வளாகத்துக்கு அனுப்பி, இரண்டே மணி நேரத்தில் சுத்தமாக்கினேன். தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டன. போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலுள்ள இரண்டு அதிகாரிகள் தலைமையில் 40 காவலர்கள்கொண்ட ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டு, இரவு பகலாகப் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டது.


இத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அந்தத் தொகுதிக்குப் போகச் சொன்னபோது, அவர் என்னிடம் சொன்ன வார்த்தை, என்னை அதிரவைத்தது... ‘‘நான் இனி உயிரோடு இருக்கப் போவதில்லை. இவ்வளவு பெரிய அவமானத்தைச் சகித்துக்கொண்டு உயிர் வாழ எனக்கு விருப்பமில்லை. உண்ணா நோன்பு இருந்து உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்!’’ என்றார்.


என் மனதில் தோன்றியதை நான் பேசினேன்...


‘‘நீங்கள் முற்றும் துறந்த துறவிதானே... உங்கள் பார்வையில், உள்ளே இருந்தால் என்ன, வெளியுலகில் இருந்தாலென்ன? இரண்டும் ஒன்றுதானே. கடவுள் ஒரு சில நாள்கள் உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கச் சொல்கிறார். சிறையைவிடப் பாதுகாப்பான இடம் வேறு ஏதும் இல்லையே!’’ என்றேன்.

அவர் சற்றே நிதானித்துவிட்டுப் பேசினார்...


‘‘என்னதான் எல்லாவற்றையும் துறந்தாலும் எனக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. லோக க்ஷேமத்துக்காக பூஜை செய்யாமல் சாப்பிடக் கூடாது. நான் நினைத்தவாறு சிறைக்குள் பூஜை செய்ய முடியுமா?’’ என்று கேட்டார். ‘‘உங்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன்’’ என்றேன். ‘‘பூஜை செய்ய தனி இடம் வேண்டும்’’ என்றார். ‘‘கொடுக்கிறேன்’’ என்றேன்.


‘‘சிறையில் கொடுக்கப்படும் உணவை என்னால் சாப்பிட முடியாது; என் ஆசாரப்படி என்னுடைய உணவு ஒரு பிராமணரால்தான் சமைக்கப்பட வேண்டும், கிணற்று நீர்தான் அருந்துவேன்’’ என்றார். ‘‘அனைத்துக்கும் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றேன். அவர் எதைக் கேட்டாலும், செய்து கொடுக்கும் மனநிலையில்தான் நானிருந்தேன்.


தண்டனைக் கைதியாக இருந்த ஒரு பிராமணக் கைதியால் அவருக்கு உணவு சமைக்கப்பட்டு, எனது பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு வழங்கப்பட்டது. காலையில் அரை லிட்டர் ராகிக்கஞ்சி, மதியம் 500 கிராம் தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம். இரவு மூன்று பூரி, 200 மி.லி பால்... அவருடைய ஒரு நாள் மொத்த உணவும் இவ்வளவுதான்! இதைச் செய்து கொடுக்க முடியாதா ஒரு சிறைக் கண்காணிப்பாளரால்?


எல்லாவற்றையும்விட அவருடைய பாதுகாப்புக்கு நான் பெரிதும் கவனம் செலுத்தினேன். அதற்குக் காரணம் உண்டு. அவரைச் சிறைக்கு அனுப்பிய பிறகு, அவரைப் பாதுகாப்பது குறித்து எந்த ஓர் அறிவுறுத்தலும் அரசுத் தரப்பிலிருந்து எனக்கு வரவில்லை. ஆனால், வெளியிலிருந்து பலரும் அவரைப் பத்திரமாகப் பாதுகாக்கச் சொல்லி என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள்.


அதில் நான் எதிர்பாராத ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. ஜெயேந்திரரின் பாதுகாப்புக்கு நான் அவ்வளவு மெனக்கெட்டதற்கு அவர் பேசியதும் மிக முக்கியக் காரணம்.


 *ஜெயேந்திரரை பத்திரமாகப் பார்த்துக்* *கொள்ளச் சொல்லி எனக்குத் தொலைபேசியில் அன்புக்கட்டளைபோட்டவர்* , *கலைஞர்* .


அவர்தான் என்னிடம் பேசி, “அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள். எங்களுக்குள் கொள்கை முரண்கள் இருந்தாலும், அவர் ஏராளமான மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பவர். அதனால் அவரைக் காக்க வேண்டியது அவசியம். அது மட்டுமன்றி அவருக்கு ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும், அது கொள்கைக்கு முரணானவர்கள் செய்த காரியமாகக் கருதப்படவும் வாய்ப்புண்டு. அதில் உன் பெயரும் பழுதாகிவிடும்!’’ என்று எச்சரித்தார்.

 

ஓர் இந்துமதத் துறவியை, ஜனாதிபதி இருக்கையில் அமரவைத்து அழகு பாத்த ஜனாதிபதி ஒரு இஸ்லாமியர்.


அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லி வேண்டுகோள்விடுக்கிறார் பகுத்தறிவு பேசும் அரசியல் தலைவர்.


ஆனால், இந்து மதத்தில் தீவிரமான பற்றும் பக்தியும் கொண்ட ஒருவரின் ஆட்சியில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். *வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் தேசமோ...*’ என்று தோன்றியது எனக்கு.


ஜி.ராமச்சந்திரன் 

ஓய்வுபெற்ற.டி.ஐ.ஜி.

சிறைத்துறை.

Sunday, December 10, 2023

நல்லதோர் வீணை யாய்

  "நல்லதோர் வீணையாய் "

 அவனிருந்தான்
அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து
புது விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "
அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி
 நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை "
என்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை
 விடுவித்துக் கவிதையை
அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே "
 கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு
அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"
 சோராதிருந்தான்
அதனால்தானே காலத்தை வென்றவனாய்
காவிய மானவனாய்
"இன்று புதிதாய் பிறந்தவனை" ப் போல்
என்றென்றும்  எப்போதும்
பரிமளிக்கவும் முடிகிறது

Saturday, December 2, 2023

அமெரிக்கா..சுஜாதாவின் பார்வையில்

 அமெரிக்காவில் நிரந்தரமாக வாழச் செல்லும் மாமிகளுக்கும், மாமாக்களுக்கும், சில நல்வாக்குகள்: சுஜாதா

(60 அமெரிக்க நாட்கள் புத்தகத்திலிருந்து)

===============

முன்னுரை

நான் முதல்முறையாக அமெரிக்கா சென்றபோது அதைப் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுதும்படி 'தமிழன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக் காக ஆசிரியர் சுதாங்கன்  கேட்டுக்கொண்டார். வழக்கமான பயணக் கட்டுரை போலில்லாமல் அமெரிக்காவை 'கட்டிய வியப்புக்கள்' இன்றி யதார்த்தமாக அதன் மனிதர்களின், குறிப்பாக அங்குப் போய்ச்சேர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்வின் உண்மைகளையும் பாசாங்குகளையும் யோக்கியமாக எழுதினேன். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் எழுதப்பட்டது இது. இதன்பின் மூன்று ஜனாதிபதிகள் மாறிவிட்டார்கள். இருந்தும் அமெரிக்காவைப் பற்றி எழுதிய சில ஆதார விஷயங்கள் இன்னும் மாறவில்லை.

அமெரிக்கா பற்றிய ஏராளமான புத்தகங்களின் வரிசையில் பத்தோடு பதினொன்றாக இந்தப் புத்தகம் இல்லை என்று யாராவது சொன்னால் திருபதிப்படுவேன்.

உயிர்மை பதிப்பகத்தார் இதை சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.

அன்புடன்

சுஜாதா

சென்னை

அக்டோபர் 2007

===========================

உங்களுக்கு வீஸா  கவலை இல்லை. மகனோ, மகளோ சிட்டிசனாக இருந்து உங்களை க்ரீன் கார்டுக்கு ஸ்பான்ஸர் செய்திருப்பார்கள். மனு செய்து. வரும்நேரத்தில் வரட்டும் என்று அதிகம் பதட்டமில்லாமல் காத்திருந்து, வீஸா  வந்தபின் புறப்படுவீர்கள்.

முதலில் அந்த நாட்டுக்குப் போனதும் உங்கள் பிள்ளை/ மருமகன் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வார். டிஸ்னி வோர்ல்டு, டிஸ்னி லாண்ட், நயாகரா, பிட்ஸ்பர்க், க்ராண்ட் கான்யன். அதெல்லாம் போய்த் தீர்ந்தபின், உங்களுக்கு அமெரிக்காவாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும், வாழ்க்கை ஓரிரு அறைகளுக்குள் பழக வேண்டும்.

டி.வி. அறை, படுக்கை அறை எல்லாமே மர வீடுகளாதலால் ராத்திரி சில விநோத சப்தங்கள் கேட்கும். பயப்படவேண்டாம். மரப்பலகைகள் சோம்பல் முறிக்கும் சப்தம்.

அமெரிக்காவில் டி.வி. பெரிசாக இருக்கும். தரைமட்டத்தி லிருந்து பார்க்கலாம். எழுபது எண்பது சானல்கள் இருக்கும். பிடித்தமாக ஓரிரு நிகழ்ச்சிகள் இருக்கும்.

தினம் முழுவதும் பண்டங்களை விற்பனை செய்யும் க்யுவிசி சானல் பார்க்கலாம். பத்திரிகை முதலில் புரியாது. எல்லா ந்யூஸும் ஒரே மாதிரிதான் இருக்கும். 'ஹிந்து' மாதிரி, The Almighty alone is worthy of obeisance போன்ற பக்தி உபன்யாச சமாசாரங்கள் எல்லாம் தேதி போட்டு அந்த ஊர் பேப்பரில் வராது.

டிவியில் ஒரு ஆண், ஒரு பெண்; ஒருத்தருக்கொருத்தர் சகஜமாக பேசிக்கொண்டே நியூஸ் சொல்வார்கள் வானிலை  இவர்களுக்கு ரொம்ப முக்கியம்: போர்ட்டோரிக்கோவில் புயல் வீசுமுன், அந்தப் புயலுக்கு பேர் வைத்துவிடுவார்கள்.

காலையிலும் மாலையிலும் வாக் போகலாம். ஆனால், கொஞ்சம் எச்சரிக்கையாகச் செல்லுங்கள். அமெரிக்காவில் சாலையோரமாக யாருமே நடப்பதில்லை. கார்கள் எல்லாமே 60 மைலுக்கு மேல் ஓடுவதால் சாலைகளைக் குறுக்கிடுவதில் மிகுந்த கவனம் வேண்டும்.

எதற்கும் பைக்குள் அட்ரஸ் வைத்துக்கொள்வது நல்லது. சில நகரங்களில், பைக்குள் பத்து டாலராவது வைத்திருப்பது நல்லது. யாராவது 'மக்'  (Mug) பண்ணும்போது, காசில்லையென்றால் மண்டையை உடைத்துவிடுவார்கள். முதல் வருஷங்களில் தனியாகப் போவதைத் தவிர்க்கவும் போஸ்ட். ஆபிஸ், லைப்ரரி, பார்க் என்று வெளியே சென்றால், நன்றாகப் போர்த்திக்கொண்டு செல்லவும் திடீர் என்று குளிரும்; அல்லது மழை பெய்யும்.

அமெரிக்காவில் ஆரோக்யமாக இருப்பது சுலபம். உடம்புக்கு வந்துவிட்டால் டாக்டர்கள் தீட்டிவிடுவார்கள். போன கையோடு இன்ஷுர் செய்துகொள்வது நல்லது. டயபடிஸ், இருதயக் கோளாறு இருந்தால் ஆயிரம் கண்டிஷன் போடுவார்கள். இருந்தும் உங்கள் மகனை அல்லது மாப்பிளையைப் பிடுங்கி எடுத்து இன்ஷுர் செய்து கொள்வது நல்லது. அங்கே வியாதி வருவது மிகவும் பணச் செலவாகும் சங்கதி

எல்லா இந்திய வீட்டிலும் வாஷிங்மெஷின், டிஷ்வாஷர், மைக்ரோ வேவ், வாக்கும் க்ளீனர் நான்கும் கட்டாயமாக இருக்கும். அவைகளை இயக்குவது எப்படி என்பது தெரிந்தே ஆகவேண்டும். சமையலுக்கு சில வீட்டில் கேஸ் இருக்கும்; திறந்தாலே எரியும்.

நம ஊர் காய்கறிகள் அனைத்தும் கிடைக்கும். அதுவும் சைனீஸ் ஸ்டோரில் முளைக்கீரை, மாகாளிக் கிழங்கு எதுவும் கிடைக்கும் சில வீட்டில் எலக்ட்ரிக் ரேஞ்; துணி துவைக்க கட்டி சோப்பு கிடைக்காது. சில நகரங்களில் துணியை வராந்தாவில் உலர்த்த முடியாது, அக்கம், பக்கத்தில் புகார் செய்வார்கள். அதேபோல் இஷ்டப்படி குப்பை போடவும் கூடாது. நினைத்த இடத்தில் நம்பர் ஒன் போகமுடியாது. கிளம்பும்போது அதையெல்லாம் முடித்து கொண்டு போவது உத்தமம்.

ப்ளாஸ்டிக் தட்டுகளில் சாப்பிட்டுப் பழகவேண்டும். பீட்ஸ பிடித்தே ஆக வேண்டும். அதேபோல் மெக்ஸிக்கன் உணவுகளான Burrito, Tortilla:  எட்டுநாள் ஃப்ரீஸரில் வைத்திருந்து  சுடவைத்து, ஆவி பறக்க இட்லி சாப்பிடவும் பழகவேண்டும்.

அமெரிக்க நகரங்களில் இந்திய கலாச்சார விஷயங்களுக்கும்  பஞ்சமே இல்லை. நம் ஊர் அத்தனை சங்கீத வித்வான்களும் சிரிப்பு நாடக குழுக்களும் கைக்காசை செலவழித்தாவது அங்கு வந்து கச்சேரி பண்ணிவிட்டாவது போவார்கள்.

இந்த மாதிரி சங்கீத நாடக சந்தர்ப்பங்களில் அல்லது நாற்பது  மைல் தூரத்தில் கட்டப்பட்ட முருகன் - பிள்ளையார் - மீனாக்ஷி  -சீனிவாசர் ஆம்னி பஸ் கோவிலில், அமெரிக்காவில் மற்ற கிழங்களை  சந்திக்கும் வாய்ப்பு வரும். அவர்களுடன் பேசிப் பார்த்தால் அவர்கள் வாழ்க்கையும் உங்கள்  வாழ்க்கை போலவே இருப்பதை அறிந்து திருப்திப் படலாம்.

'பாப்' சங்கீதம் உங்களுக்குப் பிடித்துப் போக சந்தர்ப்பம் இல்லை.  வேணுமென்றால் கண்ட்ரி ம்யூசிக், ஜாஸ் போன்றவை கேட்டுப்  பார்க்கலாம்.

உங்களுக்குப் புத்தகம் படிக்க ஆவலிருந்தால் அமெரிக்கா சொர்க்க  பூமி. சின்ன ஊரில் கூட அருமையான நூலகம் இருக்கும். பத்து புத்தகங்கள் தள்ளிக்கொண்டு வரலாம். அதேபோல், 'பார்ன்ஸ்  அண்ட்  நோபிள்' போன்ற புத்தகக் கடைகளில் சந்தோஷமாக ஓசியில் படிக்க அனுமதிப்பார்கள் உட்கார நாற்காலிகூட எடுத்துப் போகலாம்.

அதில் என்ன சிக்கல் என்றால் அடுத்த ப்ளாக்குக்குகூட வேண்டும்.உங்களைக் காரில் அழைத்துப் போக மகன், மருமகள்  யாரையாவது நாடவேண்டி வரும். அவர்கள் எல்லாம் ரொம்ப  பிஸி.

அமெரிக்காவில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை வண்ணமே வேறு - எண்பது தொண்ணூறு வயசு தாத்தா எல்லாம் அனாயாசமாக கார் ஓட்டுவார்கள். பாட்டிகள் ரூஜ், லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வார்கள்.

அமெரிக்க நகரங்கள் அனைத்தும் வர, வர ஒரேமாதிரி ஆகிக் கொண்டு வருகின்றன. பக்கத்திலேயே 'மால்' இருக்கும். சியர்ஸ், ஜேசி பென்னி, கே மார்ட், வால் மார்ட், போன்ற ஸ்டோர்கள் ஒரே அடையாளத்தில் இருக்கும். ஃபுட் ஸ்டோர்,  ட்ரக் ஸ்டோர், ஆபிஸ்களெல்லாம் இருக்கும் 'டௌன் டவுன்  இவ்வளவுதான் சமாசாரம். வந்த ஆறாம் மாதம் எல்லாம் பார்த்து  அலுத்துவிடும்.

கொஞ்சம், கொஞ்சமாக உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும்  தூரம் அதிகரித்துக்கொண்டே செல்லும் ஒரு நாளைக்கு பதினைந்து  வார்த்தை பேசுவதிலிருந்து 'ஹாய் டாட் போன்ற ஓரிரு வார் களில் வந்து முடியலாம்.

பேரக் குழந்தைகளிடம் அன்பு காட்டலாம். அவர்கள் பேசும் இங்கிலிஷ் புரிய வேண்டும். பேரக் குழந்தைகளிடம் அதிகம் பாசம் வைத்தால் சில சமயம் அது சிக்கலிலும், மனஸ்தாபத்திலும் முடியும்.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் பாட்டி நன்றாக பேத்திகளைப்பார்த்துக்கொள்ள, அந்தக் குழந்தைகள் தாயாரை நிராகரித்து, பாட்டியையே எல்லாவற்றிற்கும் நாட, மருமகளால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டு, 'சீனியர் சிட்டிஸன்' என்கிற தகுதியில், அரசாங்க சலுகையில், ஒரு ரூம் அப்பார்ட்மெண்டில் தள்ளி இருக்கிறார்.

தனியாக இருக்கவும், அவ்வப்போது தனக்குள் பேசிக்கொள்ளவும் பழகிவிட்டால், நமக்கு எந்தவிதக் கலாச்சார சம்பந்தமும் இல்லாத டி.வி., பொது வாழ்வை, விளிம்பிலிருந்து வேடிக்கை பார்க்கவும் பழகிவிட்டால் அமெரிக்கா உங்களுக்குப் பழகிவிடும்.

மற்றபடி பொது ஆரோக்கியம், நல்ல உணவு, வகைவகையாக ப்ரேக் ஃபாஸ்ட் ஸீரியல்கள், ஐஸ்க்ரீம், பாதாம் போன்ற பலவகை பருப்புகள், கொறிப்பதற்கு எத்தனையோ வறுவல்கள், கொட்டைகள், உறுதியாக உழைக்கும் உடைகள், சுத்தமான காற்று, தண்ணீர், பால், தயிர், மோர் இவைகளின் உபயத்தில் நீண்டநாள் வாழ்வீர்கள். ஐந்து நிமிஷத்துக்கு ஒருமுறை கொட்டாவி விட்டுக்கொண்டு!

===================================