Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Thursday, April 9, 2020

உணர்தலே புரிதலாய்..

பால்மணம் மாறாத
பச்சிளம் குழ்ந்தையை
மடியில் கிடத்தி
ஏதோ பழங்கதையைச்
சொல்லிக் கொண்டிருக்கிறாள்
குடிசை வாசலில் தாய் ஒருத்தி

"இதென்ன கேலிக் கூத்து
இவள் சொல்வது
குழந்தைக்குப் புரியவா போகிறது ?
ஏன் அவளும் கஷ்டப்பட்டு
குழந்தையையும் கஸ்டப்படுத்துகிறாள் ?"
எரிச்சல்படுகிறான்  உடன் வந்த நண்பன்

"தாய்மை உணர்விருந்தால்
புரியும் என்பது
உனக்கும் புரியும்'
இல்லையேல் வாய்ப்பில்லை"
என்கிறேன்

அவன் அலட்சியமாய்ச் சிரிக்கிறான்

வரும் வழியில்
கோவில் வாசலில்
கண்ணீர் மல்க
என்ன என்னமோ
வேண்டிக் கொண்டிருக்கிறான்
பக்தன் ஒருவன்

"இத்தனைப் பக்தர்களையும் தாண்டி
இவன் வேண்டுதல்
ஆண்டவனுக்குத் தெரியப் போகிறதா ?
ஏன் இப்படி
இவனும் கஸ்டப்பட்டு
ஆண்டவனையும் கஷ்டப்படுத்துகிறான் ?"
மீண்டும் ஆதங்கப்பட்டான் நண்பன்

"பக்தி உணர்விருந்தால்
தெரியும் என்பது
உனக்கும் தெரியும்
இல்லையேல் வாய்ப்பில்லை "
என்கிறேன் மீண்டும்

தொடர்ந்து
"இவை இரண்டுக்கும்
ஆதாரமாய்இருக்கும்
ஒரு விஷயம்
கவிதைக்கும் கவிஞனுக்கும் உண்டு
அது குறித்து ஒரு கவிதை
எழுதும் உத்தேசமிருக்கிறது " என்கிறேன்

அவன் சிரிக்கிறான்
"இரண்டுமே அர்த்தமற்றது என்கிறேன்
அதை அர்த்தப்படுத்தும் விதமாய்
ஒரு கவிதை வேறா
அதுவாவது புரிய வாய்ப்புண்டா? "என்கிறான்

"கவி மனம் கொண்டால்
உனக்கும் புரிய வாய்ப்புண்டு
இல்லையேல்  அவைகள் போல்
நிச்சயம் இதற்கும் வாய்ப்பில்லை "
என்கிறேன்

பிரியும் இடம் வர
மெல்ல என்னை விட்டு
விலகத் துவங்குகிறான் அவன்

Friday, May 25, 2018

அமைதியில் நிலைப்போம்..

மன அமைதியை இரசிப்போம்
மன அமைதியில் இலயிப்போம்
மன அமைதியில் நிலைப்போம்

மன அமைதியே பேரானந்தத்தின்  ஊற்று
மன அமைதியே கலைகளுக்கு ஆசான்
மன அமைதியே சக்திக்கு ஆதார மையம்

பரந்து விரிந்த புல்வெளி
பனிபடந்த மலைச் சிகரம்
சலசலத்து ஓடும் சிற்றோடை
ஆரவாரமற்ற தெய்வ சன்னதி
மழலையின் மயக்கும் சிரிப்பு ...

இன்ன பிற  எல்லாம்
அமைதியின்
உற்பத்திச் சாலைகள் இல்லை

அமைதியின்
 சுகம்காட்டும்
அற்புத ஆதாரமையங்கள்

ஆதாரமையங்கள்  வழி
நம் மன இரசிப்பைத் துவங்குவோம்

மனம் அமைதியை இரசித்தல்
 வெறும் துவக்கமேஎன அறிந்தபடி...

மனம் அமைதியில் இலயித்தல்
ஒரு  தொடர்ச்சியேஎன உணர்ந்தபடி..

மனம் அமைதியில் நிலைத்தேலே
 முதிர்ச்சி எனத்  தெளிந்தபடி ....

Sunday, July 9, 2017

இவனும் அதுவும்

நண்பன்
அவனைத்தேடி வந்தால்
இவனும் போகலாம்
என இருந்தான்

அவனும் வரவில்லை
இவனும் போகவில்லை

பின்னொரு நாளில்
அவனும் அதையே சொல்ல
இவன் மிக நொந்து போனான்

காதலை
முதலில்அவள் சொன்னால்
தானும் சொல்லலாம்
என  இவன் இருந்தான்

அவளும் சொல்லவில்லை
இவனும் சொல்லவில்லை

பின்னொரு நாளில்
அவளும் அதையே சொல்ல
இவன் மனம் வெந்து போனான்

....................................................

...................................................

......................................................

அறிவுக்குப்
பிடிபடுமாயின் "அதனை "
முழுதாய் நம்பலாம்
என இவன் இருந்தான்

அது பிடிபடவும் இல்லை
இவன் நம்பவும் இல்லை

அந்திம நாட்களில்
இவன் நம்பத் துவங்க
"அது "பிடிபடத் துவங்க
இவன் மிகச் சிதைந்தே போனான்

Saturday, June 24, 2017

புத்தம் புது காலை ..


கிழக்கு வெளுக்கத் துவங்கியது 
தேவாலயம் கிளம்பிய அந்தோணி  
நாட்காட்டியைப் பார்த்தார் 
                                                       அது  2017 ஜூன் 25  என்றது

மசூதிக்கு
தொழக்கிளம்பிய ராவுத்தர்
நாட்காட்டியைப்  பார்க்க
அது ஷவ்வால் ரம்ஜான் 29 என்றது

                                              கோவிலுக்கு
                                             கும்பிடக் கிளம்பிய ஏகாம்பரம்
                                             அதனைப் பார்க்க
                                             ஹேவிளம்பி ஆனி 11 என்றது

நாட்காட்டி அறியாதப்
பறவைகள் எல்லாம்
என்றும்போல
இந்தப் புத்தம்  புது காலையை
நன்னாளை
வரவேற்கும் விதமாய்
உற்சாகமாய்
பாடியபடிச் சிறகு விரித்தன

                                               நாளுக்கே காரணமானவன்
                                               ஏதும் அறியாதவன் போல்
                                               என்றும் போல்
                                               ஒளியாய்
                                              சிரிக்கத் துவங்குகிறான்

உலகம் மெல்ல மெல்ல
அழுக்கு உதிர்த்து
வெளுக்கத் துவங்குகிறது 



  

Tuesday, June 13, 2017

கண்ணன் வாயில் பூமி என்றால் கண்ணன் நின்றது ?.....

கண்ணன் திருவாய்த் திறக்க
அதில் உலகம் தெரிந்ததாய்
சிறுவயதில் கேட்டக் கதை
எனக்குச் சிரிப்பை
வரவழைத்ததுண்டு

பின்னர்
கல்லூரிக் காலங்களில்
கண்ணன் வாயில் பூமி என்றால்
கண்ணன் நின்றது எங்கே என்று
ஒரு பகுத்தறிவுவாதி சொல்ல அதை
மிகவும் இரசித்ததுண்டு

இப்போது
யசோதையினைப் போலவே

எனது கணினிவாய்த் திறந்து
அதன் மூலமே
உலகம் முழுவதையும்
மிக எளிதாய்க் கண்டு வருகிறேன்
உலகில் இருந்து கொண்டே

முன்னர் சிரித்ததையும்
பின்னர் இரசித்ததையும்
மெல்ல அசைபோட்டப்படி
அவைகளை
மறுபரிசீலனக்கு உட்படுத்தியபடி

Sunday, January 29, 2017

நேர்மறையும் எதிர்மறையும்

"எங்கும் இல்லை
 எதிலும் இல்லை
 எப்போதும் இல்லை
 எனவே
 நம்பிக்கைக் கொள்ளல்
 மடத்தனம் " என்றான் இவன்

"சரி " என்றேன் நான்

" எங்கும் இருக்கிறது
  எதிலும் இருக்கிறது
  எப்போதும் இருக்கிறது
  எனவே
  நம்பிக்கை கொள்வதே
  அறிவுடமை" என்றான் இவன்

"அதுவும் சரி " என்றேன் நான்

 உடன்
 முரண் கருத்துக் கொண்ட
 இருவரும் ஒன்றாகி
 என்னுடன் முரண்படத் துவங்கினர்

" இரண்டும் சரியாய் இருக்க
 எப்படிச் சாத்தியம்  ?
 ஒன்று மட்டுமே
 நிச்சயம் சாத்தியம்
 அது எது ? " என
 இருவரும் முகம் சுழிக்கத் துவங்கினர்

 இது எதிர்பார்த்ததுதான்
 எனவே நான் சங்கடப்படவில்லை

 இருவரையும் இமை மூடச் சொல்லி
 "இப்போது என்ன தெரிகிறது " என்றேன்

 முன்னவன்
 மெல்லச் சிரித்தபடி
 "எதுவும் இல்லை " என்றான்

 பின்னவன்
 "இருள் தெரிகிறது " என்றான்

 இப்போது
 நான் மெல்லச் சிரித்தேன்

 இருவரில் ஒருவன்
தெளிந்துச்  சிரிக்க

மற்றவன்  வழக்கம்போல்
குழம்பித் தவித்தான்  

Sunday, June 12, 2016

பிறவிச் சுழற்சி

அண்டத்திலும் பிண்டத்திலும்
பஞ்ச  பூதங்கள்
மாறி மாறி ஆடும்  ஆட்டமே
இறப்பா பிறப்பா ?

பிராண நெருப்பின்
ஊதுலைக் காற்றின்
ஒருங்கிணைப்பு உடைபட

வெப்பக் காற்றாய்
மேல் நோக்கிக் கிளம்பும் ஜீவன்

வெளுத்துப்பின் கருத்துக்
குளிர்காற்றின்
அணைப்பினில் இழுப்பினில்

எங்கோ மழையாய்
மண் நனைத்துப் பொழிய

புதைந்து கிடந்த
விதைத்து வைத்த

விதையது  உயிர்ப்பெற
வளர்ந்து பயன் தர

விளைந்ததை உண்ட
விலங்கினில் மனிதனில்

இரத்தம் ஊறிப் பெருக
அதுவே விந்துவாய் இறுக

விந்தின் சேகரம்
உடலை முறுக்க

அது கொள்ளும் உடல்
கருவதும் உயிரதும் கொள்ள

பிராண நெருப்பும்
பிராண வாயுவும்

மீண்டும் இணைந்து
உடல் வளர்க்க உயிர் வளர்க்க

காலதேவன் கட்டளை
அல்லது கண்ணசைவு

வரும்வரை ஆடவிட
வந்தவுடன் நோய்ப்பட

மீண்டும்

பிராண நெருப்பின்
ஊதுலைக் காற்றின்
ஒருங்கிணைப்பு உடைபட....

மீண்டும்....மீண்டும்

இப்படி...

அண்டத்திலும் பிண்டத்திலும்
பஞ்ச பூதங்கள்
மாறி மாறி ஆடும்  ஆட்டமே
இறப்பா பிறப்பா ?

Tuesday, March 22, 2016

ஆத்திக நாத்திக வாதம்.

சுவையது குறித்தும்
சுகமது  குறித்தும்
காராசாரமாக
விவாதித்துக் கொண்டிருந்தார்கள்
"அவர்கள் "

வாயிலிருந்த
மைசூர் பாகின்
சுவையில்
அது தந்த சுகத்தில்
மெய்மறந்துக் கிடந்தேன் நான்

விவாதம் விட்டு நான்
ஒதுங்கி இருந்த  எரிச்சலில்
"இரசனை கெட்ட ஜென்மமா நீ
உனக்கு சுகம் குறித்தும்
சுவை குறித்தும்
கருத்தே கிடையாதா " என்றனர்
எரிச்சலுடன்

நான் சிரித்தப்படிச் சொன்னேன்
"சுவையும் சுகமும்
விவாதப் பொருளாகப் படவில்லை"
எனச் சொல்லி
மற்றொரு விள்ளலை
எடுத்து வாயில் போட்டுக் கொண்டு
மெல்ல இமை மூடத் துவங்கினேன்

அவர்கள் விழிகளில்
கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

Thursday, February 18, 2016

மறை பொருள்

புரிகிறபடி மிகத் தெளிவாகச்
சொல்லப்படுபவையெல்லாம்
அலட்சியத்தால்
கவனமின்மையால்
மிகச் சரியாகப் புரிந்து கொள்ளப்படாதுபோக

புதிராக  துளியும் புரியாதபடி
 சொல்லப்படுபவைகள்தான்
ஆர்வத்தால்
கூடுதல் கவனத்தால்
அதிகமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றனவோ ?

பட்டப் பகலில் வெட்ட வெளியில்
எவ்வித குழப்பமுமின்றி
தெளிவாகத் தெரிபவையெல்லாம்
நம் கவனத்தைக் கவராது போக

நடுஇரவில்  கரிய இருளில்
மின்னித் தொலைக்கும் ஏதோ ஒன்று
கூடுதல் ஆர்வத்தால் தான்
நம் கற்பனையை அதிகம் தூண்டிப் போகிறதோ ?

அண்டசராசரங்களாயினும்
அதைப் படைத்ததாக நம்பப்படும் பேரறிவும்
நம் புரிதலுக்கும் கொஞ்சம் தள்ளியே நின்று
முழுமையாய் வெளிக்காட்டாது இருப்பது கூட

அவரவர்கள் தகுதிக்கேற்பவும்
முயற்சிக்கேற்பவும்
தன்னைப் புரிந்து கொள்ளட்டும்
அதுவே சரியான புரிதலாய் இருக்கும் எனும்
முடிவான எண்ணத்தில் தானோ ?

Sunday, July 26, 2015

குன்றெனில் மகிழ்வுடன் வீற்று.......

ஓரிடம் எனக்கென உண்டோ -இல்லை
கோடியில் ஓரிடம் தானோ
காரிருள் சூழுதல் போல-நெஞ்சில்
சூழுதே குழப்பமே ஏனோ

வேலினைத் தாங்கிய வேலா-எந்தன்
வேதனை ஒழித்திட வாராய்
தாளினை பற்றியே நின்றேன்-உந்தன்
கருணையைப்  பொழிந்தெனைக் காவாய்

சுழன்றிடும் உலகினில் என்றும்-நிலைத்த
புகழுடன் விளங்கிட வேண்டின்
அளவினை மீறிய செல்வம்-உடன்
ஆட்பலம் திமிருடன் சக்தி

பதவியும் பவிசதும் வேண்டும்-என்று
பழகிய பூமியில் நானே
இதமுடன் உலகிது உய்ய-நாளும்
உயர்கவி அளித்திடல் ஒன்றே

நலம்தரும் நல்வழி என்று-மாறா
நிலையினை மனதினில் கொண்டு
வலம்வரும் என்நிலை சரியா-என
மனமது குழம்புது தினமே

குன்றெனில் மகிழ்வுடன் வீற்று-பக்தர்
குறைகளைக் கலைந்திடும் குமரா
என்மனக் குறையதும் கலைந்து-நான்
தெளிவுறும்  வழிதனை அருள்வாய்

Thursday, January 29, 2015

நேர் மற்றும் எதிர்மறை

" எங்கும் இல்லை
 எதிலும் இல்லை
 எப்போதும் இல்லை
 எனவே
 நம்பிக்கைக் கொள்ளல்
 மடத்தனம் " என்றான் இவன்

"சரி " என்றேன் நான்

" எங்கும் இருக்கிறது
  எதிலும் இருக்கிறது
  எப்போதும் இருக்கிறது
  எனவே
  நம்பிக்கை கொள்வதே
  அறிவுடமை" என்றான் இவன்

"அதுவும் சரி " என்றேன் நான்

 உடன்
 முரண் கருத்துக் கொண்ட
 இருவரும் ஒன்றாகி
 என்னுடன் முரண்படத் துவங்கினர்

" இரண்டும் சரியாய் இருக்க
 எப்படிச் சாத்தியம்  ?
 ஒன்று மட்டுமே
 நிச்சயம் சாத்தியம்
 அது எது ? " என
 இருவரும் முகம் சுழிக்கத் துவங்கினர்

 இது எதிர்பார்த்ததுதான்
 எனவே நான் சங்கடப்படவில்லை

 இருவரையும் இமை மூடச் சொல்லி
 "இப்போது என்ன தெரிகிறது " என்றேன்

 முன்னவன்
 மெல்லச் சிரித்தபடி
 "எதுவும் இல்லை " என்றான்

 பின்னவன்
 "இருள் தெரிகிறது " என்றான்

 இப்போது
 நான் மெல்லச் சிரித்தேன்

 இருவர் முகத்திலும்
 தெளிவு படரத் துவங்கியது

Tuesday, November 11, 2014

நான் என்னைக் கடப்பதிலேயே

நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்

என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடப்பதிலேயே
மிகக் கவனமாய்
தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன் 

Monday, June 16, 2014

தினம் நன்மை தடையின்றித் தொடர

மாடிமனை கோடியெனத்
தேடியோடிச் சேர்த்ததெல்லாம்
மனதுக்குள்ளே என்னமாற்றம் செய்யும் ? -அது
இன்னுமின்னும் எனக்கேட்டே கொல்லும்

பகலிரவாய் நூறுபெண்ணை
வகைவகையாய் அனுபவித்தும்
சுகம்போதும் எனமனமா சொல்லும் ?அது
அடுத்தொன்றைத் தேடித்தான் செல்லும்

நடுக்கமுடல் எடுத்தபின்னும்
நரைதிரையும் நிறைந்தபின்னும்
இருந்ததெல்லாம் போதுமென்றா எண்ணும் ?-மனது
இருக்கநூறு காரணங்கள் சொல்லும்

மொத்தமாக கத்துக்கிட்ட
வித்தைகளும் தத்துவமும்
சித்தத்திலே என்னவினை செய்யும் ?-அது
கூடுதலாய் குழப்பத்தான் செய்யும்

குட்டியிலே சங்கிலியில்
வளர்ந்தவுடன்  சணல்கயிற்றில்
கட்டிவைத்தால் கூடயானை அடங்கும்-மாறிச்
செய்துவைத்தால் சங்கடந்தான் மிஞ்சும்

மனமதனை அடக்கிவிட்டு
அறிவதனை வளர்தெடுத்தால்
தினம்நன்மை தடையின்றித் தொடரும்-மாறின்
சங்கடமே தொடர்கதைபோல் வளரும்

Monday, May 19, 2014

மிக எளிமையாய் ஒரு புதிய பிரணவம்

இதற்கு முன்பு
எத்தனைமுறைத் தொடர்புகொண்டிருந்தபோதும்
பிறரைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும்
முன் அபிப்பிராயங்கள் ஏதுமின்றி
முதல் தொடர்பு  இது எனும்
எண்ணத்துடனேயே தொடர்பு கொள்கிறேன்
தொடர்பு இயல்பானதாகத் தொடர்கிறது

இதற்குப் பின்பு
எத்தனைமுறை சந்தித்திக்க இருக்கிறபோதும்
பிறரைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும்
பின் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி
இறுதி சந்திப்பு இது எனும்
எண்ணத்துடனேயே சந்தித்து மகிழ்கிறேன்
சந்திப்பு உணர்வுபூர்வமானதாகத் தொடர்கிறது

இதற்கு முன்பு
எத்தனைப் படைப்புகளைத் தந்திருந்தபோதும்
ஒவ்வொரு புதுப்படைப்பின் போதும்
அது குறித்த அகந்தை ஏதுமின்றி
முதல் படைப்பு இது எனும்
எச்சரிக்கையுடனேயே படைக்கத் துவங்குகிறேன்
படைப்பு சுகமான அனுபவமாய்த் தொடர்கிறது

இதற்குப் பின்பு
எத்தனைப் படைப்புகளைத் தர இருக்கிறபோதும்
ஒவ்வொரு படைப்பின் போதும்
அது குறித்த கற்பனைகள் ஏதுமின்றி
இது இறுதிப்படைப்பு எனும்
அதீத அக்கறையுடனேயே படைக்கத் துவங்குகிறேன்
படைப்பு கனமான ஒன்றாகவே அமைகிறது

இதற்குப் முன்பு
எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருந்தபோதும்
காலை கண்விழிக்கும் ஒவ்வொரு நாளும்
கடந்தகாலச் சுமைகள் ஏதுமின்றி
புதிதாகப் பிறந்திருக்கிறேன் எனும்
புத்துணர்ச்சியுடனேயே நாளைத் துவங்குகிறேன்
இந்த நாள் சிறந்த நாளாகவே தொடர்கிறது

இதற்குப் பின்பு
எத்தனை ஆண்டுகள் வாழ இருக்கிறபோதும்
கடமையைத் துவங்கும் ஒவ்வொரு நாளும்
எதிர்காலக் கவலைகள் ஏதுமின்றி
இதுவே எனக்கான கடைசி நாளெனும்
எச்சரிக்கையுடனேயே நாளைத் தொடர்கிறேன்
இந்த நாளும் பயனுள்ள நாளாகவே முடிகிறது

Friday, April 25, 2014

ஏஜெண்டுகள் தேவை

கம்பெனியின் பெயர் :  

ஆண்டவன் கம்பெனி

கல்வித் தகுதி :  

அது ஒரு பொருட்டில்லை

வயது  :  

அதுவும் ஒரு பொருட்டில்லை


தகுதி :  

பெருந்தன்மையான மனம் மற்றும்
வள்ளல் குணமுடையோர் மட்டும்


வேலையின் தன்மை :
 
தகுதி உடையோருக்குத் தேவையானவைகள்
உங்கள் மூலம் அனுப்பிவைக்கப்படும்
சேர்க்கவேண்டியவர்களிடம் அதை மிகச்
சரியாகச் சேர்த்துவிடவேண்டும்

தவிர்க்க வேண்டியவர்கள்:

தனது குறைந்தபட்சத் தேவைகள் தவிர்த்து
அதிகம் சேர்க்க விரும்புபவர்கள்

கூடுதல் தகவல் :

கடவுள் நம்பிக்கை ஒரு தகுதி இல்லை
பகுத்தறிவு வாதிகளும் விண்ணப்பிக்கலாம்
தனக்கென ஒதுக்கும் பட்சத்தில் கொடுப்பது நிறுத்தப்படும்
விளக்கங்கள் தரப்படமாட்டாது

தகுதியுடையோருக்கெல்லாம் வாய்ப்பளிக்க
வாய்ப்பு இருப்பதால் தகுதியுடையோர் அனைவரும்
நிச்சயம் விண்ணப்பிக்கலாம்

கம்பெனி நம்பகத்தன்மை குறித்து
விசாரிக்க முகவரி:

கர்ணன்,காம்
பாரி.காம்
எம்.ஜி,ஆர்.காம்


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

அவரவர் மனச்சாட்சி

விளம்பர உதவி :

யாதோரமணி,ப்ளாக் ஸ்பாட்.காம்

Tuesday, October 16, 2012

"அது "

\உள்ளே
அறிந்தும் அறியாததுமாய்
வெளியே
புரிந்தும் புரியாததுமாய்
சந்தியா காலமாய்
மாயா ஜாலம் காட்டுகிறது
"அது "

விழியற்றோர் கைகள் எட்டும் மட்டும்
பார்வையுடையோர் தெரிகிற மட்டும்
பயணிக்க முடிந்தோர் எல்லை வரையிலும்
கற்பனையுடையோர் முடிந்த மட்டும்
அறிய முயன்ற போதும்
புரிந்து கொள்ள முயன்ற போதும்

அறிந்த புரிந்த
எல்லையைப் போலவே
அறியாத புரியாத எல்லையும்
அகன்று விரிந்து கொண்டே போகிறது

தொடர்ந்து
உள்ளே
அறிந்தும் அறியாததுமாய்
வெளியே
புரிந்தும் புரியாததுமாய்
சந்தியா காலமாய்
மாயஜாலம் காட்டிக்
குழம்பவிட்டுச் சிரிக்கிறது
"எது "வென
எவரும்
என்றும்
 அறிந்து கொள்ளவே  முடியாத
"அது "