Showing posts with label கவிதை -. Show all posts
Showing posts with label கவிதை -. Show all posts

Wednesday, April 19, 2017

யார் யார் காரணமோ அவர்கள் வாழ்க

யார் யார் காரணமோ
அவர்கள் வாழ்க

முந்தைய ராஜாராணிக்கதைகளில்
மன்னனின்
சிறு பலவீனத்தைப் பயன்படுத்தி
நாட்டை நாசகாடாக்கும்
சதிகாரர்கள் போல்

புரட்சித் தலைவியின்
ஏதோ ஒரு
பலவீனப்படுத்தைப் பயன்படுத்தி
தமிழகத்தையே சூறையாடிய
ஒரு சதிகாரக் குடும்பத்தை

சட்டமும் நீதியும் தண்டித்தும்
அடங்காது விஷ நாகமாய்
வேறு உருவில் சீறி
மீண்டும் தமிழகத்தை கொள்ளையிடத் துணிந்த
ஒரு மனச்சாட்சி அற்றக் குடும்பத்தை

உல்கின் மூத்தக் குடிமக்கள்
எனப் பெருமிதம்கொண்டத் தமிழினத்தை
உலகின் "பெரும் குடி "மக்களாக்கி
தன் ஆலைச் சரக்கு விற்பனைக் களமாக்கிய
ஒரு சுய நலக்கூட்டக் கும்பலை

அதிகார வட்டத்திலிருந்து
விலக அல்லது வெளியேற்ற
யார் காரணமோ
யார் யாரெல்லாம் காரணமோ
அவர்கள் எத்தன்மையுடையவராயினும்
அவர்கள் வாழ்க

Wednesday, February 1, 2017

சின்னச் சின்ன அடிகள் வைத்து

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
தொடர்ந்து   ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது

சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
அணுவா  லானது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்

முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே

தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

Monday, August 3, 2015

பொன் செய்யும் மருந்து...

ஒருஏக்கர் நிலத்தினிலே
வீடும் வேண்டாம்- தூக்கம்
வாராம இரவெல்லாம்
முழிக்கவும் வேண்டாம்

ஒழுகாத ஒருவீடு
இருந்தா போதும் -அதுல
கும்பகர்ணன் போலனித்தம்
அசந்தா போதும்

ஒருமூட சோத்துநெல்லு
வேணவே வேணாம்-வயிறு
பசிக்காம கொறிக்கிச்சுகிட்டு
 கிடக்கவும் வேண்டாம்

ஒருபொழுது சோறுதண்ணிக்
 கூடப் போதும்-தினமும்
பசியெடுத்து ருசித்து
தின்னா போதும் போதும்

பட்டுச்சொக்கா போட்டிக்கிட்டு
மினுக்கவும் வேண்டாம்-அதுக்கு
ஏத்தாப்பல செலவழித்துத்
தவிக்கவும் வேணாம்

கட்டுச்செட்டா ரெண்டுடுப்பு
இருந்தா போதும்-பார்ப்போர்
மதிக்குமாறு உடுத்தினாலே
போதும் போதும்

தலைவனாக தலைநிமிர்ந்து
 நடக்கவும் வேண்டாம் -அதைத்
தங்கவைக்க பித்தலாட்டம்
செய்யவும் வேண்டாம்

நிலைகுலையா மனிதனாக
உலவினால் போதும்-ஊரில்
தெரிஞ்சசனம் மதித்தாலே
போதும் போதும்

கவிஞனென்று ஊருலகே
போற்றவும் வேண்டாம்-தினமும்
அதுக்காக எதைஎதையோ
எழுதவும் வேண்டாம்

எளிமையுடன் நல்லதையே
எழுதினால் போதும்-அதுக்கு
கிடைக்கின்ற மதிப்பதுவே
போதும் போதும்

Friday, July 31, 2015

கலைகளின் தெய்வமே சரஸ்வதி

ஒருநொடி உனதிரு அருள் விழி
எந்தனைக் கண்டிட அருள்புரி
அருவியும் மருகிடும் வகையினில்
கவியது பெருகிடத் தினமினி

ஒருமொழி திருமொழி எனும்படி
முதலடி தொடுத்தெனை நடத்துநீ
கருவது ஊற்றெனப் பெருகிட
கவியென உலகிதே போற்றிட

தினமொரு கணமது உன்வழி
நினைவுகள் கடந்திட துணைபுரி
மனமது மலரென மலர்ந்திட
கவியது மழையெனப் பொழிந்திட

உனதொரு அருளினை அண்டியே
பிதற்றுமென் கவிமன நிலையறி
உனதடி சரணமே சரணமே
கலைகளின் தெய்வமே சரஸ்வதி

Monday, July 27, 2015

எங்கள் அப்துல் "கலாமே '


தமிழில்
இருக் "கலாம் "
வந்திருக் "கலாம் "
போயிருக் "கலாம் "
செய்திருக் "கலாம் "
முடித்திருக் "கலாம் "
நினைத்திருக் "கலாம் "

இப்படி நூறு வார்த்தைகள் உண்டு
ஆயினும்
இவைகள் அனைத்தும்
தெளிவற்றவை
உறுதியற்றவை
நேர்மறைத் தன்மையற்றவை

ஆயினும்
தமிழுக்கு
தமிழனுக்கு
இந்தியனுக்கு

உறுதியை உறுதி செய்வதாய்
நேர்மறைத்தன்மை ஊட்டுவதாய்
இளைஞர்கள் நரம்புகளை முறுக்கேற்றுவதாய்
ஒளிகூட்டுவதாய்
வழிகாட்டுவதாய்

ஒரே ஒரு "கலாமாய் " வந்தவரே
அப்துல் "கலாமாய் " ஒளிர்ந்தவரே

இந்த நூற்றாண்டில்
இந்தியனின்  உன்னத உயர்வுக்கு
காரணமாய இருந்தவரே
தொடர்ந்து இருப்பவரே

இன்னும் சிலகாலம்
இருந்து வழிகாட்டியாய்
இருந்திருக் "கலாம் "என
இந்தியரெல்லாம்
கண்ணீர்விடவைத்து....

அந்தப் பொறாமைப் பிடித்த காலன்
தன் கோரமுகத்தை
அழிக்கும் புத்தியை
உங்கள் விசயத்திலும்
காட்டிவிட்டானே  "பாவி "

அந்தக் காலனை
முன்னே வரவைத்து
காலால் எட்டி உதைத்து
காலம் வென்றவர்கள் பட்டியலில்
முண்டாசுக் கவிஞர் வரிசையில்
எங்கள் அப்துல் "கலாமே '
நீங்களும் சேர்ந்துவிட்ட இரகசியம்
அறிய மாட்டான் அந்த அப் "பாவி "

விழித்து இருக்க
வருவதே கனவென
புதிய வேதம் சொன்னவரே

நீங்கள் ஒளிகூட்டிக் கொடுத்த
தீபமதைக் கையிலேந்தி
புதிய உலகை நிச்சயம் படைப்போம்

இறுதி மூச்சு வரை
ஓயாது உழைத்த பெருந்தகையே

இனியேனும் கொஞ்சம் ஓய்வெடுப்பீர்

நீங்கள் காட்டிய வழியில்
வீறு போடத் துடித்திருக்கும்
இளைஞர் படைதனைக் கண்டு

இனியேனும் இரசித்து மகிழ்ந்திருப்பீர்

Tuesday, November 4, 2014

உலகத் தலைமை கொள்வோம்

உலகை வென்ற தமிழா -நீயும்
ஓய்ந்து கிடத்தல் முறையா ?-இமயச்
சிகரம் வென்ற தமிழா -நீயும்
சிதறிக் கிடத்தல் அழகா ?

சைகை மொழியை உலகே-மெத்தச்
சார்ந்தி ருந்த வேளை-பொங்கும்
வைகைக் கரையில் மொழிக்குச்- சங்கம்
நிறுவி நின்ற  தமிழா         (உலகை )

நிலத்தின் வகைகள் அறிந்து-அதனை
ஐந்து வகையாய் உணர்ந்து-நாளும்
இயற்கை யுடனே இணைந்து-வாழும்
முறையைத் தெளிந்த தமிழா    (உலகை )

காதல் வீரம் தன்னை-இரண்டு
கண்ணைப் போலக் கொண்டு-நமது
சீலம் தன்னை உலகு  -நன்கு
அறிய வாழ்ந்த தமிழா

சிதறிக் கிடத்தல் ஒன்றே -நம்மை
சிறுமைப் படுத்தும் சாபம்-அதனை
உதறி ஒன்றாய் எழுவோம்-நிலையாய்
உலகத் தலைமை கொள்வோம்

Tuesday, February 18, 2014

இணைத்துக் கொள்வதில் உள்ள சுகம்


நான் விழிக்கும் முன்பே
கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின் அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின் சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது

Sunday, February 16, 2014

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

காதல் உணர்வு  பூக்கையில்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே

வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அற்புதக்  குழந்தையே

மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
 கூர்மிகுக்  கோடாலியே

தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே

குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு  பான மே

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச்  தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை மிகச் சரியாய் விளக்கவோ

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல் ?
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்

Monday, February 10, 2014

எதிர்மறையே எப்போதும் முன்னே வா.

..பசியே வா
ஊழிக்கால நெருப்பாய்
குடல் முழுதும் பரவி
முற்றாக என்னை எரி
எனக்கு ருசியின் அருமையை
முழுமையாய் ருசிக்க வேண்டும்

பிரிவே வா
இதயத்தோடு
இரண்டறக் கலந்தவைகளையெல்லாம்
கிழித்துத் தூர எறி
நான் அருகாமையின் சுகத்தை
அணுஅணுவாய் ரசிக்க வேண்டும்

பகையே வா
உன் போர்த்தந்திரங்களையெல்லாம்
வெறியோடு பயன்படுத்தி
என்னை நிர்மூலமாக்க முயற்சி செய்
இருக்கும் பலம் போதாது
நான் இன்னும் பலம் பெற வேண்டும்

அஞ்ஞானமே வா
நீர் மறைத்த நிலமாய்
ஞானத்தை என்னிடமிருந்து
முற்றாக மறைத்துவை.
அசுர வெறியோடு தோண்டித் தேடி
நானாக அதை அடைதல் வேண்டும்

எதிர்மறையே வா
பகலுக்கு முன்வரும் இரவாய்
சுகத்திற்கு முன் வரும் துயராய்
எப்போதும் நீயே முன்னே வா
நேர்மறையின் அருமையையும் பெருமையையும்
உனைவைத்தே நான் முழுமையாய்உணர  வேண்டும்

Tuesday, February 4, 2014

கவிதை சிறக்கவும் காலம் வெல்லவும்


நிலையான உறவுக்கும்
நெருக்கமான நட்புக்கும்
பின்னிப்பிணைந்த நெருக்கமும்
மூச்சுவிடாத பேச்சும்
நிச்சயம் தேவையில்லை என்பதும்
இதழ் விரித்த சிறு புன்னகையும்
மனம் திறந்த ஒரு சொல்லும்
போதும் என்பது கூட
உறவும் நட்பும்
உருக்குலைந்த பின்புதான்
புரிந்து தொலைக்கிறது

உறுதியான உறுப்புக்கும்
பலமான உடலுக்கும்
அண்டாச் சோறும்
அடுக்குக் குழம்பும்
அவசியம் தேவையில்லை என்பதும்
சரிவிகித சிற்றுண்டியும்
சத்துள்ள பழவகையும்
போதுமென்பது கூட
குடலும் உடலும்
கெட்டுத் தொலைந்த பின்புதான்
புத்திக்குப் புரிகிறது

ஆனந்த வாழ்வுக்கும்
அமைதியான மனதிற்கும்
வங்கிக் கணக்கில் இருப்பும்
வகைதொகையில்லாச் சொத்தும்
என்றேன்றும் தேவையில்லை என்பதும்
போதுமென்ற மனமும்
ஆரோக்கிய உடலும்
போதுமென்பது கூட
ஏழை எளியவர்களின்
முகம் பார்த்தபின்புதான்
மூளைக்கு உறைக்கிறது

கவிதை சிறக்கவும்
காலம் வெல்லவும்
வார்த்தை ஜாலங்களோ
பாண்டித்திய மாயங்களோ
அவசியத்  தேவையில்லை என்பதும்
எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமுமே
பிரதான மென்பது கூட
ஔவையையும் பாரதியையும்
படித்தறிந்த பின்புதான்
புரியவே துவங்குகிறது

Friday, January 31, 2014

பண்டித விளையாட்டா படைப்பு ?

.. "இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லை ?
கற்பனை வறண்டு போனதா ?
சமூக அக்கறை குறைந்து போனதா ?"
போகிற போக்கில்
கேள்வியை விதைத்துப் போகிறான் நண்பன்.
அவனுக்கு எப்படிப் புரியச் சொல்வது ?

கொத்துகிற தூரத்தில் சீறுகிற நாகமாய்
நித்தம் எதிர்கொள்ளும்
அவலங்களும் அசிங்கங்களும்
கணந்தோறும் காயப்படுத்தும்
சிறுமைகளும் துரோகங்களும்
என்னை எப்போதும்
சுடும் நெருப்பில் நிறுத்திப்போக
அதன் தாங்கவொண்ணா பாதிப்பில்
ஒரு பாம்பாட்டியின் லாவகத்தோடு
அவைகளைச் சொற்களுக்குள் அடைக்க முயல
அவைகள் அடங்காது சீறிக் கொத்த
ஒவ்வொரு கணமும்
நான் நொந்து வீழ்வதும்
ஒவ்வொரு நாளும்
வேதனையில் சாவதும்
எப்படிச் சொன்னால் அவனுக்குப் புரியும் ?

திடுமென
சீறிக் கிளம்பும் காட்டாற்று வெள்ளம்போல்
உணர்வுகள் பொங்கிப் பெருக
நிலை தடுமாறிப் போக
தலையணைக்குள் மெத்தையினை
திணிக்கமுயலும் முட்டாள்போல்
உண்ர்வுகளை வார்த்தைக்குள்
திணிக்க முயன்று தோற்கிற கணங்களை
வார்த்தைகள் கிழிிந்து சிரிக்கிற அவலங்களை
எப்படி அவனுக்கு விளக்கித் தொலைப்பது ?

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளைப் பிரித்துப் போட்டுக் காட்டும்
பண்டித விளையாட்டா படைப்பு ?

இனியும் தங்க முடியாதென
வெளியேறத் துடிக்கும் உயிர்க்கருவும்
இனியும் தாங்க இயலாதென
உந்தித் தள்ளுகிற உள்ளுணர்வும்
இணைவாகச் சேரும் காலத்தையும் கணத்தையும்
எது நிர்ணயம் செய்யக்கூடும்?

பல சமயங்களில்
கறுத்துக் கனத்த கருமேகங்களை
ஒன்று சேர்த்த பெருங்காற்றே
அதனைக் கலைத்துவிட்டுப் போவதும்
எங்கோ தலைதெறிக்கப் போகும்
ஒரு சிறு வெண்மேகம்
சாறல் உதிர்த்துப் போவதும்
விரதங்களும் வேண்டுதல்களும்
வேண்டிய மட்டும் செய்துமுடித்து
இணைகிற இணைப்பு வீணாகிப்போக
வேண்டா வெறுப்பாகப் புணரும் நாளின்
கரு தங்கிச் சிரிப்பதையும்
எப்படி எனப் புரிந்து போனால்
அவனுக்கு எல்லாம் புரிந்து போகுமோ ?

Sunday, January 26, 2014

கண்ணாடி பிம்பக் கறை

தேடித் தேடி ஓடியும்
கிடைக்காத பொருள்
வெறுமையை விதைத்துப் போக

வேண்டாம் வேண்டாம் என
ஒதுக்கத் தொடரும் பொருள்
சலிப்பைத் தந்து போக

அளவாகக் தேட
அளவாகக் கிடைத்த பொருள்
உண்மை மதிப்பில் இருக்க

தேடாதே இருக்க
தானாக மடிவிழுந்த பொருள்
சுய மதிப்பிழந்து தவிக்க

பொருளுக்கென தனியான
மதிப்பேதும் இல்லையெனத்
தெளிவு கொள்கிறேன் நான்

கண்ணாடி பிம்பத்தில்
கறைதுடைக்கும் மடமையை
தவிர்க்கத் துவங்குகிறேன் நான்

Monday, January 13, 2014

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

புராணப் புனைவுக் கதைகள்
தந்த நம்பிக்கையில்
கொண்டாடும் நாட்களை விட

சிறப்பென  உலகு சொல்லும்
நாட்களை மதித்துக்
கொண்டாடும் நாட்களை விட

அறிந்தோ அறியாமலோ சேர்ந்த
கழிவுகளைக் கழித்துக்
கொண்டாடும் இந்த நாளே

நம் உலக வாழ்வுக்கு
கண்கண்ட சக்தியைக்  வணங்கிக்
கொண்டாடும்  இந்த நாளே

விலங்கினமாயினும்
நம்முடன் உழைத்துத் தவித்ததைக்
கொண்டாடும் இந்த நாளே

நம்முடனே நித்தமிருந்து
நம் உயர்வுக்கு உதவுவோரைக் கண்டுக்
கொண்டாடும் இந்த நாளே

உலகத் திருநாள் எதனினும்
உன்னதத் திருநாள் என்பதை
விளக்கிச் சொல்ல வேண்டுமோ ?

தமிழனின் உன்னதத்தை உலகினுக்கு
உணர்த்திடும் திருநாள் என்பதை
எடுத்துச் சொல்ல வேண்டுமோ ?


(பதிவுலக உறவுகள் அனைவருக்கும்
அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் )

Saturday, January 4, 2014

அது "வாகிப் போகும் அவன்

காலத்திற்கான குறியீடு
தானே என்னும் கர்வத்தில்
கொஞ்சம் முன்பின்னாக
அந்த மணிகாட்டி நடக்க
எரிச்சலில் நிறுத்திவைத்தேன் அதை

காலம் சிரித்தபடி எப்போதும்போல்
நகர்ந்து கொண்டிருக்க
ஒரு நொடியில்
பயனற்றதாகிப் போனது
அந்தக் குறிகாட்டி

மன உணர்வுகளின்
உன்னத வெளிப்பாடு
என்மூலம் மட்டுமே
நிச்சயம் சாத்தியம் என
எகத்தாளமிட்டது கவிதை

ஒரு பார்வையற்றவனின்
உன்னத இசையில்
பெருங்கூட்டமே கண்கலங்கி நிற்க
 கர்வம் தொலைத்த கவிதைச் சொன்னது
" நான் அற்பச் சுமைதாங்கி மட்டுமே"

பதவியும் வசதியும்
தந்த கர்வத்தில்
எல்லாம் நானே என
எல்லாம் எனக்குள் என
எகிறிக் குதித்தான் அவன்

கவனியாதிருந்தும்
சீராயிருந்த மூச்சுக்காற்று
சட்டென சுழிமாறிப் போக
உடல்விட்டு திசை மாறிப்போக
ஒரு நொடியில்"அது "வாகிப் போனான் அவன்

குறியீடுகள் சுமைதாங்கிகள்
அளவீடுகளின் எல்லையினை
குழப்பமின்றி  அறிந்தவன்
வாழத்தெரிந்தவானாகிப்போக
அதை அறியாதவனே  அற்பனாகிப்போகிறான்

Friday, December 27, 2013

குழந்தைகளோடு இணைந்திருங்கள்

அதிகாலைச் சூரியனோடு
கைகோர்த்து நடை பயிலுங்கள்
அது உடலினை உறுதி செய்யும்

மாலை நேரத் தென்றலோடு
மனம் திறந்து பேசுங்கள்
அது மனப்பளுவைக் கனவாக்கிப் போகும்

முழு நிலவின் ஒளியோடு
கரையக் கற்றுக் கொள்ளுங்கள்
அது பல உன்னதங்களை அறிமுகம் செய்து போகும்

பூத்துச் சிரிக்கும் மண  மலரோடு
சினேகம் செய்து கொள்ளுங்கள்
அது வாழ்வின் அர்த்தத்தை தெளிவாக்கிப் போகும்

நீலக் கடலின்  பிரமாண்டத்தில்
இலயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அது  பேரறிவை  உணரச் செய்து போகும்

காட்டோடும் மலையோடும்
தனித்திருக்கப் பழகுங்கள்
அது   அமைதியின்  அருமை  உணர்த்திப் போகும்

இவை எதற்கும் நேரமில்லையெனில்
கவலை கொள்ளவேண்டாம்
குழந்தைகளோடு  இணைந்திருக்க  முயலுங்கள்
நிச்சயம்  அது
இவை அனைத்தையும்  ஒன்றாகச் சேர்த்துத் தரும்

Wednesday, December 25, 2013

சிகரம் தொட்டு மகிழ்வோம்

மனவெளிச் சாலைகளில்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பதும் எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்  எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகளை நொறுக்கி
சிகரம் தொட்டு  மகிழ்வோம்

Tuesday, December 17, 2013

அனுமார் வால்

"சொல்ல வேண்டியவைகளையெல்லாம்
நிறையச் சொல்லிவிட்டார்கள்
எழுத வேண்டியவைகளையெல்லாம்
தெளிவாக எழுதிவிட்டார்கள்
நீயேன் உன்னையும் கஷ்டப்படுத்திக்கொண்டு
அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்திக்கொண்டு  ".....

மனதின் மூலையில் புகையாய்
 கிளம்பிய சலிப்புப் புகை
மனமெங்கும் விரைந்து பரவி
என்னைத்  திணறச் செய்து போகிறது
நான் மிகச் சோர்ந்துச் சாய்கிறேன்

என் மனைவியிடம்  நெருங்கியமர்ந்த பேத்தி
" ஏன் பாட்டி உங்கள் காலத்தில்
நிஜமாகவே பீட்ஸா கிடையாதா
 சுடிதார் கிடையாதா ?
அட்டாச்சுடு பாத் ரூம் கிடையாதா ?"
என ஆச்சரியமாய்க் கேட்கிறாள்

" இல்லை அவையெல்லாம்  அப்போது
தேவையாய்த தெரியவில்லை " எனச் சொல்லி
பாட்டி எப்படியோ சமாளிக்கிறாள்
நான் அதிர்ந்து போகிறேன்

ஒரு கால் நூற்றாண்டில் தேவைகள்
 எப்படியெல்லாம மாறிவிட்டன ?

வாழ்வின் போக்கில்
உணவு உடை இருப்பிடம் மட்டுமின்றி
கலை பண்பாடு கலாச்சாரம
அனைத்திலும்தான்
எத்தனை எத்தனை  மாறுதல்கள் ?

வசதி வாய்ப்புகளே    தேவைகளை முடிவு செய்ய

தேவைகளை விளம்பரங்கள் முடிவு செய்ய...

சந்தர்ப்பங்கள் தர்மத்தை முடிவு செய்ய...

செல்வமும் செல்வாக்கும்  நீதியை முடிவு செய்ய ..

உறவுகளைக் கூடப்  பயன் முடிவு செய்ய...

உணவினைக்  கிடைக்கும் நேரம் முடிவு செய்ய...

உடலுறவைக் கூடக்  கிழமை முடிவு செய்ய..

காலம் புதுப் புதுச் சூழலை உருவாக்கிப்போக ..

புதுச் சூழல் புதுப் புதுப் பிரச்சனைகளை உண்டாக்கிப்போக ...

சட்டெனப் பற்றிய சிந்தனை நெருப்பு
கொழுந்து விட்டு   எரியத் துவங்க

 புகை மூட்டமில்லா வெளிச்சத்தில்
  பதிவு செய்யப்படவேண்டிய பட்டியல்
அனுமார் வாலாய் நீளத் துவங்குகிறது

என்னுள்ளும் இதுவரை குட்டையாய்
 அடங்கிக் கிடந்த உற்சாகம்
கங்கைபோல்  பரந்து விரியத் துவங்குகிறது

Friday, December 13, 2013

வரம்வேண்டா தவம்

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும்
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய்  நினைப்பதில்லை

 வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

Thursday, December 12, 2013

வெற்றி வெற்றியே

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
துணிந்து  ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
அணுவா  லானது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

Tuesday, December 10, 2013

பாரதிக்கு தமிழன்னை பாடும் பாட்டு

தர்பார் மண்டபங்களில்
மன்னனைக்  குளிர்விக்கும்
வெற்றுச் சாமரமாய் இருந்த என்னை

அந்தப் புரங்களில்
மன்னனுக்கு உண்ர்வூட்டும்
ஆண்மை லேகியமாய் இருந்த என்னை

கோவில் சன்னதிகளில்
ஆண்டவனுக்கும் அடியார்களுக்கும்
இடைத் தரகனாய் இருந்த என்னை

குறு நில மன்னர்கள்
வீட்டுத் திண்ணைகளில்
புலவர்கை திருவோடாய் இருந்த என்னை

அடிமையாய்க் கிடந்த என்னை
அடைக்கப்பட்டுக் கிடந்த என்னை
சிறைபட்டுக் கிடந்த என்னை
சிறப்பிழந்துக்  கிடந்த என்னை

கைவிலங்கொடித்துக் காத்தவனே
ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
பாழ்பட்டுப்  புதையுண்டுப்  போகாது
பாமரருடன் இணைத்து ரசித்தவனே

தன்னிகரில்லாக்  கவிஞனே
என தவப்புதல்வனே
உன்னை  இந்நாளில் நினவு கூர்வதில்
நானும் மகிழ்வு கொள்கிறேனடா
உன்னைப் புதல்வனாய்ப் பெற்றதற்கு
நாளும் பெருமை கொள்கிறேனடா