Wednesday, June 13, 2018

காலா







ஒவ்வொரு முறை இங்கு (யு.எஸ் )
வரும்போதும் அவசியம் பார்க்கவேண்டும் என
நான் எண்ணும் ஒரு திரைப்படம்  வெளியாகும் .
ஒருமுறை கபாலி ,ஒருமுறை
பாகுபலி 2 ,இப்போது  காலா

நான் சிறுவயதில் மதுரையை ஒட்டிய ஒரு
சிறிய கிராமத்தில்வளர்ந்தவன் .
அங்கு சினிமா என்றால்
எங்கள் ஊரில் டெண்ட்   கொட்டகையில்
வெளியாகும் சினிமாதான்

அதுவும் காலாண்டு   அரை அரையாண்டு
முழு ஆண்டுதேர்வு விடுமுறைக்கு
தலா ஒருபடம் வீதம் வருடத்திற்குமூன்று படம்
மற்றும் தீபாவளி பொங்கல் பண்டிகைக்கு
வெளியாகும் ஒரு சிறப்புத் திரைப்படம்.
அதுதான் வாய்க்கும்
(இந்தச் சிறப்புத் திரைப்படம் கூடுமானவரையில்
ஒரு புரட்சித்தலைவரின் படமாகத்தான் இருக்கும் )

இந்தப் படம் பார்க்கக் கூட அதிக மெனக்கெட
வேண்டியிருக்கும்விடுமுறை முடிந்து
பள்ளிக்கூடம் போனதும் லீவில்
என்ன படம் பார்த்தாய் என்பதுதான் உடன் படிக்கும்
மாணவர்களின் முதல் கேள்வியாயிருக்கும் .
பார்க்கவில்லை என்றால்அதுவே ஒரு தகுதிக்
 குறைவு போல் மதிக்கப்படும்

அதற்காகவே வீட்டில்   அழாத குறையாக அடம் பிடித்து
ஒரு திரைப்படம்  எப்படியும் பார்த்து விடுவோம்
வீட்டிலும் இதை சாக்காக வைத்து பல்ப் துடைப்பது
மாடி கூட்டுவது ,கொல்லைப்புற அறையைச் சுத்தம்
செய்ய வைப்பது முதலான பல வேலைகளை
வாங்கி விடுவார்கள்   என்பது வேறு விஷயம்

அப்படிப் பார்த்துப் போய்ப் கதை சொன்னால் கூட
நம்பாமல் கதை யாரிடமோ கதையை கேட்டு
கதை விடுகிறாய் என சொன்னதற்காக சினிமா
டிக்கெட்டைக் கூட பத்திரமாய் கொண்டு போய்
காண்பித்த நிகழ்வெல்லாம் இப்போதும் நினைவில்
இருக்கிறது

இப்படி சினிமா பார்த்துப் போய் பெருமையைப்
பீத்தலாம் எனப் போனால் வசதியான வீட்டுப்
பசங்க இரண்டொருவர் டவுனில் படம் பார்த்து விட்டு
அந்தப் பெருமையைப் பீத்த நாங்கள்
ஒன்று மத்தவர்களாய்கவனிக்கப்படாமல் அவர்கள்
பீத்தலுக்கு அடிமையாகிஅவர்கள் சொல்கிற
கதையைக் கேட்க வாய்ப்பிளந்துக்கிடப்போம்

அதிலும் சுப்பையான்னு ஒரு பையன் .ஒரு சினிமா
கதையைப் பகுதி பகுதியாய்  நான்கு ஐந்து நாள்
சுவாரஸ்யம் குறையாமல் சொல்வான்
முத்து  மண்டபம்  என்று ஒரு சஸ்பென்ஸ் படம்
அதில் கொலைகாரன் யாரென்று சொல்லாமல்
எங்களை ஐந்து நாள் திண்டாடவிட்டு பின் ஒரு நாள்
இரக்கப்பட்டு முடிவைச் சொன்னான் .அதுவும்
அவன் புத்தகத்திற்கு அட்டைப்போட்டுக் கொடுத்த பின்பு

இப்படி வளர்ந்த சூழ் நிலையில் பின் உயர் நிலைப்
பள்ளி வந்ததும்   டவுனில் சினிமா பார்ப்பதற்காக
காசு சேர்த்த கதை ,காலைப்  பத்து மணி
காட்சிக்குப் போய்தொடர்ந்து இரண்டு காட்சிக்கு
 டிக்கெட் கிடைக்காது போயும் மனம் தளராது
நள்ளிரவுக்கு காட்சிப் பார்த்து
ஊருக்கு நடந்தே திரும்பிய கதை ,பெண்கள் மற்றும்
சிறுவர்களுக்கென இருந்த 70 பைசா டிக்கெட்
எடுப்பதற்காக  (பெரியவர்களுக்கு 80 பைசா )  முட்டி
மடித்து குள்ளமாய் நடந்த கதை ,என எம் வாழ்வோடு
பின்னிப்பிணைந்த சினிமா தொடர்பான
நினைவுகள் எல்லாம் இந்தக் காலா படம் பார்க்க
அந்தத் திரைப்படத் தியேட்டர் வாயிலில் காரை விட்டு
இறங்கியதும்  தொடர்ச்சியாய் வந்து போனது
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை

                                                                  ( தொடரும்   )

   

25 comments:

Avargal Unmaigal said...

காலா பார்த்துவிட்டீங்களா? மதுரையில் கூட்டத்தோட பார்ப்பதற்கும் இங்கே கூட்டம் இல்லாமல் பார்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டே

Yaathoramani.blogspot.com said...

கூட்டம் இல்லாதது மட்டும் இல்லை.டிக்கெட் விலையும்.

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

சுவையாக சினிமா பார்த்த அனுபவங்கள். அழகாக மிக அழகாக நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக்கால அனுபவங்களை பகிர்ந்து கொள்வது ஒரு சுகமான உணர்வுகள்தான். அதன் பின் காலா படம் பார்த்து விட்டீர்களா? தொடர்கிறேன்.. நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வருண் said...

என்ன ரமணி சார், $20 கொடுத்து காலா வும் பார்த்துட்டீங்களா?!!!!!

என்னால நம்பவே முடியலை சார்.

நீங்க கபாலி பார்த்துவிட்டு எழுதிய விம்ர்சனத்தை வச்சு நீங்க காலா பக்கமே போக மாட்டீங்கனு நெனச்சேன். நீங்க என்னடானா காலாவும் பார்த்துட்டு காலா வோட சேர்ந்து நின்னு போஸ்லாம் கொடுக்கிறீங்க. :)

நான் எல்லாம் எனக்குப் பிடிக்காத நடிகர்கள் படம் எல்லாம் $20 கொடுத்து சத்தியமா பார்க்க மாட்டேன். நீங்க என்னனா உங்களுக்கு சுத்தமாப் பிடிக்காத ரஜினி படத்தையும் விட மாட்டேன்கிறீங்க. ஒரு வேளை உங்க மகன்(ள்) அல்லது மருமகன்(ள்) யாரும் ரஜினி விசிறியா? :)

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான அனுபவங்கள். அப்போதெல்லாம் இவ்வளவு தியேட்டர்களும் கிடையாது, இவ்வளவு படங்களும் வெளியாகாதே...!

ஸ்ரீராம். said...

நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்களில் இரண்டு பழக்கம் எனக்கும் உண்டு. 1) நான் அந்த வருடத்தில் பார்த்த படங்களில் டிக்கெட்டை எல்லாம் எனக்கு கிடைத்த அந்த வருட டயரியில் சேர்த்து வைத்திருப்பேன். பென்சிலில் தேதியும் படத்தின் பெயரும் அதில் எழுதி விடுவேன். டயரின் பின் அட்டையில் படங்களில் லிஸ்ட் இருக்கும்!!!!!

ஸ்ரீராம். said...

2) நான் பார்த்த திரைப்படத்தின் கதையை என் நண்பர்களுக்குச் சொல்வேன். கொஞ்சம் என் கற்பனையும் இருக்கும்! நண்பர்களுக்கும் அது தெரியும். சில நண்பர்கள் "நீ சொன்ன சில காட்சிகள் படத்தில் இல்லை" என்பார்கள். என்னுடைய புத்தகக் கட்டை நண்பர்கள் டர்ன் போட்டு ஸ்கூல் வரை தூக்கி வருவார்கள்!!!!!

KILLERGEE Devakottai said...

தங்களது அனுபவங்கள் எனக்கும் பல நினைவுகளை தூண்டி விட்டது.

G.M Balasubramaniam said...

சினிமா தியேட்டர்களின் ஊர் என்று சொல்லலாம் பெங்களூரை ஆனால் இப்போது பல தியேட்டர்கள் காணாமல் போய்விட்டன எம் ஜி ரோடில் ஞாயிறு அன்று ஏதாவது ஆங்கிலப்படம் பார்க்கும் வழக்கம் இருந்தது ஒரு முறை எந்தந்தையை த கோர்ட் ஜெஸ்டர் என்னும் படத்துக்கும் கூட்டிப்போனது நினவுக்கு வருகிறது இப்போதெல்லாம் தியேட்டர்க்குப்போய்படம்
பார்ப்பதே அரிதாகி விட்டது

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் தங்களின் அனுபவத்தை சொல்லிச் செல்லும் விதம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

எனக்கும் இதில் நிறைய அனுபவங்கள் உண்டு. திருச்சியில் ‘பிரபாத்’ என்று ஒரு தியேட்டர் இருந்தது. சமீபத்தில் ஓர் ஐந்து ஆண்டுகளுக்குள் மட்டுமே இடித்துள்ளார்கள்.

அந்தக்காலத்தில், அந்தத் திரையரங்கில், பெரும்பாலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களே வெளியிடப்பட்டு வந்தன.

என் பள்ளி நாட்களில் (11 வயது முதல் 16 வயது வரை) என் வீட்டிலிருந்து, அன்றைய சிவாஜி ரசிகர்களான நாங்கள், பொடி நடையாகவே புறப்பட்டு, முன்கூட்டியே நீண்ட நேரம் க்யூவில் நின்று, மிகக்குறைவான டிக்கெட் ஆன 29 பைசா டிக்கெட் வாங்கி, வெள்ளித்திரைக்கு அருகே முதல் வரிசையில் அமர்ந்து, கழுத்து வலிக்க வலிக்க நிறைய படங்கள் பார்த்து விட்டு வந்த அனுபவங்கள் நிறையவே உண்டு. திரும்பவும் நடந்தேதான் வீட்டுக்கு வருவோம்.

ஆரம்பம் முதல் கடைசிவரை ஒரு ஸீன் விடாமல் கதையாக பிறரிடம் சொல்லிச் சொல்லி மகிழ்வோம்.

சமீபத்தில் நான் துபாய் சென்றிருந்த போது 12.12.2014 ரஜினியின் பிறந்த நாள் அன்று ‘லிங்கா’ படம் ரிலீஸ் ஆனது. அன்றைய தினமே அங்குள்ள தியேட்டரில் அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தோம். அதைப்பற்றி கூட என் பதிவினில் எழுதியுள்ளேன்.

http://gopu1949.blogspot.com/2014/12/blog-post.html

அன்றைக்கு நான் துபாயில் லிங்கா படம் பார்த்த தினத்தன்று, தாங்கள் இங்கு சொல்லியுள்ள அனைத்து பழைய நினைவலைகளும், எனக்கும் என் மனதில் தோன்றியது. காலம் மாற மாற, நாம் காணும் காட்சிகளும் மாறிக்கொண்டேதான் உள்ளன.

தொடரட்டும் தங்களின் இந்தப்பதிவு.

அன்புடன் VGK

K. ASOKAN said...

சுவையான அனுபவம் பாராட்டுகள்

K. ASOKAN said...

அருமையான அனுபவம் பாராட்டுகள்

Yaathoramani.blogspot.com said...

Asokan Kuppusamy //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்ட்த்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான விரிவான
பின்னூட்ட்த்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

KILLERGEE Devakottai /

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்ட்த்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

வித்தியாச்மான சுவாரஸ்யமான தகவலுடன் கூடிய
தங்கள் உற்சாகமூட்டும் அருமையான விரிவான
பின்னூட்ட்த்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //
நான் பார்த்த திரைப்படத்தின் கதையை என் நண்பர்களுக்குச் சொல்வேன். கொஞ்சம் என் கற்பனையும் இருக்கும்! நண்பர்களுக்கும் அது தெரியும். சில நண்பர்கள் "நீ சொன்ன சில காட்சிகள் படத்தில் இல்லை" என்பார்கள்.//

கட் செய்திருப்பார்கள் எனக் கூட
சொல்லிச் சமாளித்திருக்கலாமோ ?
வித்தியாச்மான சுவாரஸ்யமான தகவலுடன் கூடிய
தங்கள் உற்சாகமூட்டும் அருமையான விரிவான
பின்னூட்ட்த்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். said...
சுவாரஸ்யமான அனுபவங்கள். அப்போதெல்லாம் இவ்வளவு தியேட்டர்களும் கிடையாது, இவ்வளவு படங்களும் வெளியாகாதே...!//

நம் காலத்தில் இதை விட்டாலும்
வேறு பிரச்சனை இல்லாத பொழுது போக்கு
இல்லை எனக் கூடக் கொள்ளலாம் இல்லையா

Yaathoramani.blogspot.com said...

வருண் //நான் கபாலிவிமர்சனத்தில் இரஜினி சார்
பிடிக்காது எனச் சொல்லி இருக்கிறேனா
எனக்கே சந்தேகமாக உள்ளது
மீண்டும் ஒருமுறை தேடிப்பிடித்து
படிக்க வேண்டும்

நீங்கள் சொல்வது போல்
20டாலர் கொடுத்து நான் பார்க்க
சான்சே இல்லை. எல்லாம் மகள்
மருமகன் விருப்பம் போலவே

உடன் வரவுக்கும் மனம் திறந்த
விரிவான அருமையான
விமர்சனத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //ஆரம்பம் முதல் கடைசிவரை ஒரு ஸீன் விடாமல் கதையாக பிறரிடம் சொல்லிச் சொல்லி மகிழ்வோம்.//

இன்றுஒரு சிறந்த படைப்பாளியாக
பரிமளிப்பதற்கு இது கூட மிக
முக்கிய காரணமாய்
இருக்கலாம் இல்லையா?

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன்//
சமீபத்தில் நான் துபாய் சென்றிருந்த போது 12.12.2014 ரஜினியின் பிறந்த நாள் அன்று ‘லிங்கா’ படம் ரிலீஸ் ஆனது. அன்றைய தினமே அங்குள்ள தியேட்டரில் அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தோம். அதைப்பற்றி கூட என் பதிவினில் எழுதியுள்ளேன்.


http://gopu1949.blogspot.com/2014/12/blog-post.html மீண்டும் ஒருமுறை படித்து மகிழ்ந்தேன்
இணைப்பைக் கொடுத்தமைக்கு
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன்//

தொடரட்டும் தங்களின் இந்தப்பதிவு.

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சிகரம் பாரதி said...

காலா பார்க்க அமெரிக்கா போனீங்களா? காலா பாக்குறதே கொடுமை. அதுல அமெரிக்கா போயி... ஏங்க... ஏன்...

Yaathoramani.blogspot.com said...

காலா பார்க்க அமெரிக்கா வரவில்லை.அமெரிக்கா வர காலா வந்தது அவ்வளவே.

Post a Comment